* பஞ்சமா பாதகங்கள் எவை? -அயன்புரம் த. சத்தியநாராயணன்.

குரு துரோகம், பசுவதை, பெண்களை வன்கொடுமை செய்தல், மது அருந்துவது, இவர்களுடன் நட்புடன் இருத்தல் ஆகியவையாகும். இத்துடன் மரம் வெட்டுவது, நம்பிக்கை துரோகம், திருடுவது, பிராம்மணரைக் கொல் வது ஆகியவற்றையும் பஞ்சமா பாதகத்தில் சேர்த்துள்ளார்கள். நடப்பு காலத்தில் மரம் வெட்டியவர்கள் தாழ்நிலைமைக்குச் சென்றுவிட்டார்கள் என்பது நாம் அறிந்தது தான்.

* பிரம்மை- மாயை ஆகிய இரண்டும் ஒன்றா? -ஆனந்தி சாந்தி மதுரை.

மாயை என்பது, ஒன்று இருப்பதுபோல நினைக்கிற மட்டில் இருப்பதாகவே தோன்றும். நிஜம் அறிந்தபின் அதன் உண்மைத்தன்மை புலனாகிவிடும். உதாரணமாக, கானல் நீர் உண்மையான நீர்போல தூரத்தில் காட்சியளிக்கும். ஆனால் அருகில் சென்று எடுத்துக் குடிக்கமுடியாது. ஒரு கயிறைப் பாம்பென எண்ணிவிடுகிறோம். அதனைக் கண்டு அச்சமடைகிறோம். ஆனாலும் அதன் உண்மை தெரிந்தபிறகு, அந்த பிரம்மை, மாயை நீங்கித் தெளிவுபெறுகிறோம். சர்க்கரையால், பாகற்காய்போல் செய்து வைத்திருந்தாலும், குழந்தைகள் அதனை இனிப்பென எண்ணாமல் பாகற்காய் என எண்ணி, அதன் பிரம்மையில் ஓடிவிடுவர். ஆக, பிரம்மை, மாயை என இரண்டுமே ஒன்றுதான். உண்மை தெரிந்தபிறகு, அவை இரண்டும் காணாமல் போய்விடும்.

* கவலையைத் துறக்க என்ன வழி? -ஆர்.கே. லிங்கேசன், கன்னியாகுமரி.

கவலைக்கு மூல காரணம் என்ன? மனம் எப்போதும் அலை பாய்வதால்தான் கவலை ஏற்படுகிறது. மனிதனின் கடைசி மூச்சு வரைக்கும் எண்ணங்கள், யோசனைகள் இருந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு முடிவே கிடையாது. இந்த மனதின், புத்தியின் வாயுவேக ஓட்டத்தைக் கட்டுப்படுத்த, சுவாமி யின் பாதங்களைப் பற்றுவதே வழி. தினமும் பூஜை, புனஸ் காரம் என்றிருங்கள். மாதம் ஒருமுறை உபவாசம் மற்றும் மௌன விரதமிருங்கள். படிப்படியாக தெய்வ அனுக்கிரகத்தால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால், அங்கே தன்னிச்சையாக கவலைகளும் ஒடுங்க ஆரம்பிக்கும். நாளடைவில் எல்லாவற்றையும் பகவான் பார்த்துக்கொள்வார் என அதிதீவிர நம்பிக்கை ஏற்பட்டுவிடும். பின் கவலைகளுக்கு வேலையே இல்லை. கவலையைத் துறக்க இது ஒன்றுதான் வழி.

* மகான் தரிசனம்- ஆலய தரிசனம். இதில் என்ன வேறுபாடு? -கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.

ஆலயம் என்பது தெய்வங்களின் முழு சாந்நித்யம். ஆற்றல் கருணை, அருள் நிறைந்த இடம். ஆலயத்திற்குள் சென்று வணங்கி வந்தவுடன், நமக்கே ஒரு ஆனந்த அனுபவம் கிடைக்கும். மகான் என்பதற்கு ஆச்சாரியார், குரு என பதிலுண்டு. எவர் சாஸ்திரங்களின் அர்த்தங்களை ஆராய்ந்து, பிறருக்கு அதனை உபதேசிப்பது மட்டுமல்லாமல், தானும் அதன்படியே வாழ்ந்து காட்டுகி றாரோ அவரே ஆச்சாரியார்; அவரே மகான் ஆவார். மகான்கள், ஆத்மா அல்லது பிரம்மம் என்பதோடு சேர்ந்த ஞானிகளாக இருப்பார்கள். இவர்கள் தெய்வத்துடன் மனதை அடக்கி தொடர்புகொண்டவர்களாக இருப்பர். மகான்கள் தரிசனம் என்பது, தெய்வத் தொடர்புகொண்டவர்களின் தரிசனமாகும். ஆலய தரிசனம் என்பது நேரிடையான தெய்வ தரிசனமாகும். மகான்களின் தரிசனத்தின்போது, சில இன்னல்கள், கஷ்டங்களுக்கு நேரிடையான பதில் மற்றும் பரிகாரம் கிடைக்கும். ஆலய தரிசனத்தில் தெய்வ அருளும், சில சகுன, நிமித்தங்களும் மறைமுகமாகக் கிடைக்கும். இதுதான் மகான் தரிசனத்திற்கும், ஆலய தரிசனத்திற்குமுள்ள வேற்றுமை.

ss

*எங்கள் வீட்டில் நெடுநாள் பூஜிக்கப்படாத வேல் உள்ளது. அதை யெடுத்து மறுபடி பூஜை செய்யலாமா?-மல்லிகா அன்பழகன், சென்னை-78.

உங்கள் கேள்வியில் வேல் எந்த அளவு உள்ளது என்பதுபற்றி குறிப்பிடவில்லை. வீட்டில் பூஜைக்கு விரல் உயர விக்ரகம், வேல் மட்டும்தான் ஏற்றது. மிகப்பெரிய அளவில் வேல் இருந்தால் அதனை கோவில் வழிபாட்டுக்குக் கொடுத்துவிடுங்கள். மேலும் எந்தவொரு பொருளும் வருடக் கணக்கில், ஒரே இடத்தில் அடைந்துகிடந்து, பின் பயன்பாட்டிற்கு வரும்போது, அதன் யோக பாவத்தை யோசிக்கவேண்டும். அது எவ்வளவு விருத்தி தருகிறதென கவனிக்கவேண்டும். கொஞ்சநாள் பூஜை செய்துபாருங்கள். உங்கள் வீட்டில் ஏதேனும் இடர்ப்பாடு தெரிந்தால், அதனை கோவில் உண்டியலில் சேர்த்துவிடுங்கள். வேல்பூஜை: முடிந்தால் தினமும் வேலுக்கு அபிஷேகம் செய்யலாம். காய்ச்சாத பால், பன்னீர், விபூதி, சந்தனம் ஆகிய பொருட்களை அபிஷேகத்திற்குப் பயன்படுத்தலாம். அபிஷேக நீரை சற்று பருகியும், கொஞ்சம் தலையிலும் தெளித்துக்கொள்ளலாம். மீதி நீரை கால்படாத இடத்தில், செடியில் ஊற்றிவிட வேண்டும். பின் வேலுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூ சாற்றி, கற்பூர தீபராதனை காட்டவேண்டும். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் வீட்டில் உங்களால் முடிந்த பிரசாதங்களை வைத்து வழிபடவும். இந்த வழிபாட்டால் செல்வம் பெருகும். கடனிருக்காது. நோய் நொடி வராது. இதில் கவனிக்கவேண்டிய ஒன்றுள்ளது. முருகன் படம் வைத்து வணங்குவது எப்போதும் உள்ளது. ஆனால் இந்த வேல் வழிபாடு சற்று உயர்வானது. எல்லாரும் வீட்டில் வேல் வைத்து வணங்கக்கூடாது. வயதானவர்கள், மடத்தில் இருப்பவர்கள், பிரம்மாச்சாரிகள், ஞானிகள் போன்றவர்கள்தான் வேல் வழிபாடு செய்யவேண்டும். வேல் என்பது சக்தி சொரூபம்; ஆக்ரோஷமானது. எனவே கூடியமட்டும் வீடுகளில் வேல் வைத்து வணங்குவதை யோசித்து செய்யுங்கள்.

Advertisment

* ஆன்மிகச் செய்திகளைப் படித்தாலும் மனதில் வைத்துக்கொள்ள முடியவில்லை. இது ஏன்? -எஸ். வஜ்ரவடிவேல், கோவை.

உண்மைதான். இதுவே ஒரு கோவிலுக்குச் சென்று நேரிடையாக வழிபடும்போது, அது மனதில் நீங்கா இடம்பெற்றுவிடும். தெய்வ சாந்நித்யம் நிறைந்த கோவில்களுக்குச் சென்றுவருவதே மிகப்பெரிய கொடுப்பினைதான். எனவே, எத்தனைக் கோவில்கள் பற்றிப் படித்தாலும், நேரில்சென்று தரிசனம் செய்வதே மிக மேன்மையானது. இவ்வாறு தரிசனம் செய்த கோவில்களை எத்துணைக் காலமானாலும் மறக்க இயலாது. கோவிலுக்கு கண்டிப்பாகச் சென்று வழிபடவேண்டுமென்று சொல்கிறார்கள். அதன் காரணமென்ன? ஆதியில் சில மகரிஷிகள், தங்கள் மந்திரசக்தியால், எங்கும் நிறைந்த பரம்பொருளை சில விக்ரங்களில் விசேஷ சாந்நித்யம் கொள்ளச் செய்தனர். அப்படிப்பட்ட மூர்த்திகளைச் சுற்றி கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. வீட்டில் எத்துணை பூஜை செய்தாலும், கோவிலுக்குச் செல்வதை கண்டிப்பான பழக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும். எங்கேயும் உள்ள மின்சாரத்தை வெளிப்படுத்த ஆங்காங்கே "பவர் ஹவுஸ்' இருப்பதுபோல, எங்கும் நிறைந்துள்ள, ஈஸ்வர சக்தியை வெளிப்படுத்த ஆங்காங்கே மந்திரப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமாக ஆலயங்கள் எழுப்பப்பட்டு, அவற்றில் பூஜாக்கிரமங்கள் உருவாகியுள்ளன. கோவில்கள் என்பது அனைத்து சக்திகளின், மந்திரங்களின் மொத்த இருப்பிடம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று எனக் கூறியிருக்கிறார்கள். எனவே படிப்பதோடு நிறுத்திவிடாமல், முடிந்தபோது, ஏன்- தினமுமே ஆலய தரிசனத்தை மேற்கொள்ளுங்கள்.

* கோவில்களில் திருமணம் நடத்தப்படுவது ஏன்? -யாழினி பர்வதம், சென்னை- 78.

Advertisment

எல்லாக் கோவில்களிலும் ஆண்டுக்கொருமுறை திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இறைவனையும் அவன் சக்தியையும் பிரித்துவைக்க முடியாது. எனவே இறைவனை அம்மை- அப்பராக வணங்குகிறோம். விளக்குச் சுடரில் தீயும் உள்ளது; உஷ்ணமும் உள்ளது. அந்தத் தீயையும், சூட்டையும் பிரிக்கமுடியாது. அதுபோல் இறைவனிடமிருந்து சக்தி யையோ, சக்தியிடமிருந்து இறைவனையோ பிரிக்கமுடியாது. ஆண்டவன் நித்ய கல்யாணரூபி. நமக்கு ஓராண்டென்பது, தேவர்களுக்கு ஒருநாள். எனவே ஆண்டுக்கொருமுறை இறைவனுக்குத் திருக்கல்யாணம் நடத்துவது, தேவர்களைப் பொருத்தவரை தினமும் நடத்துவதற்கு சமம். இந்த திருக்கல்யாணம் என்பது சிவனையும் சக்தியையும் பிரியாது வைத்து, அவர்கள் அருள்பெறும் நன்னாளாகும். இந்த திருக்கல்யாணத்தை தரிசிப்பதால், மக்களின் மணவாழ்க்கை சிறப் பாக அமையும்.

* திருக்கார்த்திகையில் பொரி உருண்டை செய்வதற்கான காரணமென்ன? -மதிபாலா, நாமக்கல்.

திருக்கார்த்திகையன்று, பொரி உருண்டை படைத்து வழிபடுவது காலம் காலமாக இருந்துவரும் பழக்கமாகும். இதில் அரிசிப் பொரி, அவல் பொரி என இரண்டிலும் உருண்டை பிடித்து வைத்து வணங்குவர். இரண்டுமே சிறப்புதான். மேலும் யாகம், வேள்வி போன்ற தெய்வீக விஷயங்களிலும் பொரி பங்கு பெறுவதைப் பார்த்திருப்பீர்கள். சில இடங்களில் பொரி வீசுவதையும் கவனித்திருப்பீர்கள். பொரிக்கும், அக்னி சம்பந்தமான விஷயங்களுக்கும் ஒரு சம்பந்தம் உள்ளது. திருக்கார்த்திகை என்பது அக்னி, தீபம் சம்பந்தப்பட்ட விழாவாகும். எனவே பொரி உருண்டை பிடித்து வணங்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் கார்த்திகை என்பது பனி ஆரம்பிக்கும் மாதம். மற்றும் தொடர்ந்து வரும் காலத்தில், புது நெல் அறுவடைக்குத் தயாராகிவிடும். எனவே பழைய நெல், பழைய அரிசியை இவ்வாறு பொரியாக வறுத்து பயன்படுத்தி வந்ததாகவும் கொள்ளலாம்.

* சிலருக்கு கருநாக்கு- சொன்னால் பலித்துவிடும் என்கிறார்களே உண்மையா? -எஸ். மிருதுளா, அபிராமபுரம்.

ஜோதிடத்தில் லக்னத்துக்கு இரண்டாமிடம் வாக்கு ஸ்தானம் எனப்படும். நமது சிந்தனையின் ஒலி வடிவமே வாக்கு எனப் படும். சிந்தனையின் தரத்தைக்கொண்டே நமது செயல்பாடுகள் அமைகின்றன. நமது சிந்தனை நல்லவிதமாக இருந்தால், நமது வாக்கும் நல்வாக்காக இருந்து, செயல்களும் நல்லவிதமாக இருக்கும். நமது சிந்தனைகள் தீயதாக இருந்தால், நமது வாக்கும் தீமை தரும் விதத்தில் அமைந்து, செயல்களும் தீமையாக அமைந்துவிடும். ஜோதிடப்படி வாக்கு ஸ்தானமான 2-ஆமிடத்தில் பாவிகள் இருந்து, பாவர் சம்பந்தம், நீசம் போன்றவை கூடியிருந்தால், அந்த ஜாதகர் பார்வையும், வாக்கும் மிகத் தீமையானதாகவே இருக்கும். இவர்கள் பிறரைக் கெடுதலாகச் சொன்னால், அது பலித்துவிடும் வாய்ப்பும் உண்டு. இதற்கு மூலகாரணம், இவர்களின் கெட்ட புத்தியே ஆகும்.

* தெய்வ குற்றம் என்றால் என்ன? -சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

பொதுவாக தெய்வ குற்றம் எனும்போது, நமது கஷ்டகாலத்தில் வேண்டிக்கொண்ட காணிக்கை மற்றும் பிரார்த்தனைகளை ஒழுங்காக செலுத்தாதது ஆகும். கஷ்டம் ஏற்படும்போது, நிறைக்க வேண்டிக்கொள்கிறோம். கஷ்டம் தீர்ந்தவுடன் மறந்துவிடுகிறோம். மேலும் குலதெய்வத்தை முற்றிலும் மறந்து விட்டாலும் தெய்வக் குற்றம் கண்டிப்பாக உண்டாகும். வீட்டில் ஒன்றுமாற்றி ஒன்றென பிரச்சினைகள் தொடர்ந்துவந்து பாடாய்ப்படுத்தினால தெய்வக் குற்றம் ஏற்பட்டுள்ளதென்று அறிந்துகொள்ளலாம். குலதெய்வம் தெரியாதவர்கள் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வணங்கவும். தெய்வக் குற்றம் நீங்கிவிடும்.