"இருள் நீங்கி இன்பம் பயக்கும்

மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு.'

-திருவள்ளுவர்

மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கி இன்பநிலையைக் கொடுக்கும் என்பதாம்.

Advertisment

தசரத மன்னனின் பட்டத்து மகாராணி மூன்று பேரில் மிக இளையவளும், அழகு, வீரம், விவேகம், துணிச்சல் போன்ற அனைத்தும் கொண்டவளுமான கைகேயி, தசரதனிடம் மட்டுமல்லாமல், அவரது மற்ற இரு மனைவிகளான கௌசல்யை, சுமத்திரை ஆகியோரின் உள்ளத்திலும் அன்பால் இடம்பிடித்தாள். அத்தகைய கைகேயியின் சுட்டுவிரல் இரும்பாகப் போகும்படி சாபமிட்டது யார்? எதற்காக சாபமிட்டார்? கேகய நாட்டின் மன்னன் அஸ்வபதி, சரஸ்வதிதேவியின் சிறந்த பக்தனாக இருந்தான். நீண்ட வருடங்களாக குழந்தைப் பேறின்றி இருந்த மன்னனின் கோரிக்கையை ஏற்று சரஸ்வதிதேவியே அவனுக்கு மகளாகப் பிறந்தாள். சரஸ்வதி என்ற இயற்பெயருடன் வளர்ந்த அந்தப் பெண் குழந்தையே பின்னாளில் கைகேயி என்றழைக்கப்பட்டாள்.

uu

Advertisment

அஸ்வபதி மன்னன் வேதம், ஜோதிடம், வானியல், நிர்வாகம், போர்க்கலை போன்ற அனைத்திலும் திறமைசாலியாக இருந்தான். மேலும் தன்னைக்காண வருபவர்களின் முன் ஜென்மப் பலன்களைக் கண்டறியும் அபூர்வசக்தியும் அவனிடம் இருந்தது. அதனால் அவனைத்தேடி பல்வேறு நாட்டு மன்னர்களும் தங்கள் பிரச்சினைகளுக்காக வந்தனர். இந்நிலையில், கைகேயி சிறு பெண்ணாக அரண்மனை யில் தனது தோழிகளுடன விளையாடிக் கொண்டிருந்தாள்.

ஒருசமயம் துர்வாசர் கேகய நாட்டின் அரண்மனைக்கு வந்தபோது, கைகேயி தனது தோழியர்களிடம், "அதோ போகிறாரே, அவர்தான் துர்வாசர்'' என்று தன் சுட்டுவிரலால் காண்பித்தாள். அதைக்கண்ட துர்வாசர், "அவளது சுட்டுவிரல் இரும்பாகப் போகட்டும்' என்று சபித்தார். அதனால் கைகேயியின் சுட்டுவிரல் மட்டும் இரும்பாக மாறியது. ஆனால் அந்த சாபமே அவளுக்கு பின்னா ளில் நன்மையாக முடியுமென்று அப்போது அவளுக்குத் தெரியாது.

இந்நிலையில் அரசன் அஸ்வபதிக்கு வயதாகத் தொடங்கியதால் அவனது கலையை கைகேயி கற்றுக்கொண்டு செய்துவந்தாள். அப்போது அயோத்தி மன்னர் தசரதர் தனக்கு குழந்தை இல்லையே என்ற கவலையால் அஸ்வபதியிடம் பரிகாரம் கேட்பதற்காகச் சென்றார்.

தசரதரின் பூர்வஜென்ம வரலாற்றை அறிந்து கைகேயி வழி கூறியதுடன், "கடந்த பிறவியில் மூன்று பெண்களை மணந்தது போன்றே இந்தப் பிறவியிலும் என்னையும் சேர்த்து உங்களுக்கு மூன்று மனைவிகள்'' என்றாள். "என்னை மணம் புரிந்தபிறகே உங்களுக்கு தெய்வமே குழந்தைகளாகப் பிறக் கும் யோகம் உள்ளது. என்னை மணம் புரிந்திட எனது தந்தையிடம் சம்மதம் பெறுங்கள்'' என்று கூறினாள்.

uu

அஸ்வபதி மண்ணும், "எனது பேரனுக்கு அரசு பட்டம் சூட்டுவதற்கு ஒப்புக்கொண்டால் திருமணத்திற்கு சம்மதம் தருகிறேன்'' என்றான்.

அதற்கு தசரத மன்னர் ஒப்புக்கொண்டதால் கைகேயியிக்கும் தசரதருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் தசரத மன்னர் சம்பாசுரன் என்னும் அசுரனுடன் போர்புரியச் சென்றார். அப்போது தசரதரின் தேருக்குச் சாரதியாக கைகேயி இருந்தாள். போரின்போது திடீரென தேரின் அச்சு முறிந்த நிலையில், தன் விரலையே அச்சாணியாகக் கொடுத்து, தன்னுயிரைப் பற்றிக் கவலைப் படாமல் தசரதரின் உயிரை கைகேயி காத்தாள். அதனால் தசரதர் அவளைப் பாராட்டி இரண்டு வரங்களையளித்தார். தேவைப்படும்போது பெற்றுக்கொள்வதாக கைகேயி கூறினாள்.

அந்த கைகேயிதான் நாட்டின் நலன்கருதி, தனக்கு கொடிய அவச்சொல ஏற்பட்டாலும் பரவாயில்லையென்றும், பதவியேற்பதால் ஒருவேளை தனது மகன் உயிரிழந்தாலும் பரவாயில்லையென்றும் மனதை திடப்படுத்திக்கொண்டு, தான்பெற்ற மகன் பரதனைவிட இராமனிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருந்த கைகேயி இராமனை 14 வருடங்கள் காட்டுக்குச் செல்லவேண்டுமென்றும், பரதன் நாடாள வேண்டுமென்றும் தசரதனிடம் வரம் வாங்கினாள். சாபங்களே, பின்னாளில் வரங்களாக மாறிவிட்டன.

இராமாயணத்தில், வானர அரசனான வாலி மிகுந்த பலசாலியாகவும், பெரிய சிவபக்தனாகவும் திகழ்ந்தான். அவனும், அவன் தம்பி சுக்ரீவனும் ஆரம்பத்தில் ஒன்றாகவே எந்த சண்டையுமின்றி இருந்த நிலையில், அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அதற்கு ஒரு முனிவரின் சாபம் காரணமாக அமைந்தது.

சூரியபகவானின் தேரோட்டியான அருணன் ஒருசமயம் மோகினி வடிவமெடுத்து சிவபெருமானை வழிபாடு செய்தான். அந்த மோகினி வடிவத்தின்மீது மோகம் கொண்ட இந்திரன் மோகினியுடன் சேர்ந்தபோது பிறந்த குழந்தையே வாலியாகும். இதையறிந்த சூரியபகவான் தனக்கும் மோகினி வடிவத்தைக் காட்டும்படி அருணனிடம் கூறினார். அப்போது சூரியனுக்கும் மோகினிக்கும் பிறந்தவனே சுக்ரீவனாவான். அதன்பின்னர் கிஷ்கிந்ததையின் அரசனாக வாலியும் இளவரசனாக சுக்ரீவனும் ஒற்றுமையாக இருந்து நல்லாட்சி நடத்தினர்.

அப்போது ஒருசமயம் மாயாவி என்னும் அசுரன், வாலியைத் தாக்கிவிட்டு பாதாள லோகத்திற்குள் சென்று ஒரு குகைக்குள் ஒளிந்துகொண்டான். அவனைத் துரத்திச்சென்ற வாலி, தனது தம்பி சுக்ரீவனை குகைக்கு வெளியே யாரும் உள்ளே வராதபடி காவலுக்கு நிற்கச் சொல்லிவிட்டு குகைக்குள் சென்றான்.

uu

குகைக்குள் சென்ற அசுரனும் வாலியும் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் வெளியே வரவில்லை. அதனால் வாலி உயிருடன் திரும்ப வாய்ப்பில்லையென்று கூறிய வானர சேனைகள், சுக்ரீவனை தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி கேட்டுக்கொண்டனர். மறுத்த சுக்ரீவன் மேலும் சில மாதங்கள் அங்கேயே இருந்தான். ஒருநாள் குகைக்குள்ளிருந்து ரத்தம் ஆறாகப் பெருகிவருவதைக் கண்டு, வாலி இறந்து விட்டானோ என்று கருதினான். எனவே குகைக்குள்ளிருந்து அசுரன் வெளியேவந்து தங்கள்மீது தாக்குதல் நடத்தாமலிருக்க ஒரு பெரிய பாறையைப் பெயர்த்து குகையின் வாயிலை இறுக மூடினர். அதன்பின்னர் வானர வீரர்களின் அரசனாக சுக்ரீவன் பதவியேற்றான்.

இந்நிலையில் குகைக்குள் அசுரனைக் கொன்ற வாலி, குகையை விட்டு வெளியேறுவதற்காக வந்தபோது, குகையின் வாயில் மூடியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். அதனால் சுக்ரீவன்மீது ஆத்திரமடைந்த வாலி பாறையை உடைத்தெறிந்து ஊருக்குள் வந்தான். வாலியை உயிருடன் பார்த்த சுக்ரீவன் மகிழ்ச்சியடைந்தான்.

ஆனால் சுக்ரீவன்மீதிருந்த கடும் கோபத்தால் அவனை பலமாகத் தாக்கி அடித்து உதைத்து நாட்டைவிட்டுத் துரத்தினான் வாலி.

அதையடுத்து உயிருக்கு பயந்த சுக்ரீவன் வாலி வரமுடியாத ரிஷ்யமுக பர்வத்தத்தில் இருந்த மதங்க முனிவரிடம் தஞ்சம் புகுந்தான். ரிஷ்யமுக பர்வதத்திற்கு சுக்ரீவன் சென்றதற்கான காரணமுண்டு. வாலியும் சுக்ரீவனும் ஒற்றுமையாக இருந்தபோது, ஒருசமயம் வாலிக்கும் துந்துபி என்பனுக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. அதில் துந்துபியைக் கொன்று தலையைச் சுற்றி தூக்கியெறிந்தான் வாலி. அது மதங்க முனிவர் ஆசிரமத்தில் போய் விழுந்ததால் கோபமடைந்த மதங்க முனிவர், "இந்த மலைக்கு வந்தால் உனது தலை சுக்குநூறா கும்' என வாலிக்கு சாபமிட்டார். அதனால் உலகின் எந்த மூலைக்கும் எளிதில் செல்லக்கூடிய வாலி, இந்த மலைக்கு மட்டும் செல்லமாட்டான். எனவே சுக்ரீவன் தனது அண்ணன் நெருங்கி வரமுடியாத மதங்க முனிவர் வசித்துவந்த மலைக்குச் சென்று தங்கினான்.

இப்படி சாபங்களை வரங்களாகவும், வரங்களை சாபங்களாகவும் மாற்றியருள் கின்ற மகிமைமிக்கதும், இராமாயணக் காலத்திற்கு தொடர்புடையதுமான உன்னதமான திருத்தலம்தான் ஒலகடம் உலகேஸ்வரர் திருக்கோவில்.

இறைவன்: உலகேஸ் வரர், உலக விடங்கர்.

இறைவி: உலக நாயகி யம்மை உலகேஸ்வரி.

புராணப்பெயர்: ஒலகடம்.

ஊர்: ஒலகடம்.

விசேஷ மூர்த்தி: வன்னி மர விநாயகர்.

தலவிருட்சம்: வில்வமரம், வன்னி மரம்.

தீர்த்தம்: காவிரி தீர்த்தம்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இவ்வாலயம் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமையுடையது. காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றான, தேவார வைப்புத் தலமாகப் போற்றப்பட்டு, சிவாகமவிதிப்படி காலபூஜைகள் முறைப்படி நடந்துவருகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என முப்பெரும் சிறப்புகளுடன் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதுதான் ஒலகடம் உலகேஸ்வரர் திருக்கோவில் "தெங்கு பலாகதலி தேமாங்கனி சொரியும்

கொங்கு வளமுதிரும் கொங்குஎன்றே- கூடுதுறை

உடகரை நாட்டும் பொன்னி வடகரை உறையும்

ஒலகடம் மேவிய உலகேஸ்வரரே'

சங்க இலக்கத்தில் "உலகடம்' என்றும், கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கொங்குச் சோழர்களின் ஆட்சியில் "உலகவிடங்கம்' என்றும் அழைக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலமாகும்.

உலகவிடங்கர் என்பது ஒலகடம் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள, இறைவனது திருநாமம். விடங்கம் என்பது உளி என்று பொருள்படும். உளியால் செதுக்கப்படாத சுயம்பு மூர்த்தியாகத் தானே தோன்றியவர்; உலகத்திற்கெல்லாம் நாயகனாக, தலைவனாக என்றுமுள்ள பரம்பொருள் என்பதால், உலம மக்களைக் காக்கும் ஈஸ்வரனாக உலக விடங்காராக இத்தல இறைவன் விளங்குகி றார். கொங்கு நாட்டின் மிகப்பழமையான விடங்கத்தலம் இதுவே. உலகவிடங்கம் என்பதே ஊரின் பெயராகக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளது.

காவிரிக்கரையின் வடபகுதியில் அமைந்திருப்பதால் "வடகரை உலகவிடங்கம்' என்ற பெயரும் இதற்குண்டு.

இராமாயணத்தில், லட்சுமணனின் உயிரைக் காப்பதற்காக அனுமன் இமயமலை யிலிருந்து மூலிகைச் செடிகள் நிரம்பிய சஞ்சீவி மலையை ஏந்திக்கொண்டு வான்வெளியில் உலகவிடங்கர் திருக்கோவிலுக்கு மேலாக வரும்போது அனுமனின் கை அசைவற்றுப் போய்விட்டது. உடனே அனுமன் கீழே நோக்க, அங்கே உலகேஸ்வரி சமேத உலகவிடங்கர் கோவில் இருப்பதையறிந்து, கீழே இறங்கி, மூன்றுமுறை இத்தல இறைவனின் இருப்பிடத்தை சஞ்சீவி மலையுடன் வலம்வந்து வணங்கி, பின் புறப்பட்டுச் சென்றதாக தலபுராணம் சொல்கிறது.

சிறப்பம்சங்கள்

ப் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

ப் பல்வேறு நாட்டவர், வணிகர், வேளாளர், வேட்டுவர், ஊராளிகள் இக்கோவிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். கி.பி. 10-ஆம் நூற்றாண்டுமுதல் 13-ஆம் நூற்றாண்டுவரை இப்பகுதியில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் கொங்கு பாண்டியர் சுந்தரபாண்டியன், கொங்கு சோழ வீர ராஜேந்திரன், கொங்கு சோழ விக்ரம சோழன் காலத்தில் திருப்பணிகள் மேற்கொண்டுள்ளனர் என்று கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

ப் நாகதோஷங்களால்- குறிப்பாக ராகு- கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டு திருமணத்தடை உள்ளவர்கள், இக்கோவில் நுழைவாயிலில் நாகர் சிலைக்கு மத்தியில் அருள் பாலித்துவரும் தோஷநிவர்த்தி விநாயகரை (வன்னிமர விநாயகர்) ஒன்பதுமுறை வலம்வந்து வணங் கிப் பலன் பெறுகின்றனர். ஆலய மதிற்சுவரை ஒட்டினாற்போல் சிறு மேடையொன்றில் இந்த விநாயகர் அருள்பாலிக்கிறார்.

ப் அனுதினமும் காலை, மாலை வேளைகளில் பூஜைகள், பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி பூஜைகள், விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், ஆடிவெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் நடைபெறும். சிவராத்திரி நாளில் ஆயிரத்திற்கும் மேலான பக்தர்களால் கோவில் திருவிழாக் கோலத்தில் மிளிரும்.

ப் இக்கோவிலில் ஆநிரைக் கவர்தல் அல்லது மீட்டல் நிகழ்வை நினைவுருத்தி நிற்கும் வண்ணம் ஒரு நடுகல் உள்ளது. இந்த நடுக்கல்லில் ஒரு வீரன் பசு ஒன்றைக் கையில் பிடித்து நிற்க, வீரனின் வலப்பக்கமாக ஒரு பெண் சிறிய மண்கலத்தைக் கையில் பிடித்து, அதைக் கீழே தொங்கவிட்டவாறு நிற்க, இடப்பக்கமாக மேற்புறத்தில் சூரியனும், சந்திரனும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. சூரிய, சந்திரர் உள்ளவரை இவ்வழிபாடு நடைபெற வேண்டுமென்ற கருத்தை உணர்த்துவது சிறப்பம்சம்வாய்ந்தது.

ப் நவலி ஒன்பது, கண்டம்- கழுத்து, நமது உடம்பின் ஒன்பது துவாரங்களின் நரம்பு முடிச்சுகளும் நம் கழுத்தின் பின்புறத்தில் தண்டுவடத்தில் அமைந்துள்ளன. ஒன்பது துவாரங்களையும் ஒரே நேரத்தில் செயலிழக்கச் செய்வதற்கு, இந்த நரம்பு முடிச்சைக் கொண்ட கழுத்தைத் தன் கையாலேயே தானே மிக விரும்பி மகிழ்வுடன் ஒரே வீச்சில் துண்டம் செய்வது நவகண்டம். அரிகண்டம் என்பது ஒரு வீரன் வாளால் தன் தலையை மட்டும் தன் கையாலேயே ஒரே வீச்சில் துண்டித்து பலி கொடுத்துக்கொள்வது. இத்தகைய நவகண்டக்கல் இவ்வாலயத்தில் உள்ளது சிறப்பம்சம்வாய்ந்தது.

ப் கல்யாண ஷண்முக சுப்ர மணியர் வள்ளி, தெய்வானையுடன் மனம்போல் மாங்கல்யம் தரும் வண்ணம் அருள்பாலிப்பது விசேஷமான ஒன்று.

ப் சனிபகவானின் திசை மேற்கு. இவ்வாலயத்தில் கிழக்கு நோக்கி அனுக் கிரக சனிபகவானாகக் காட்சிதருவது சிறப்பு. கிரகப் பெயர்ச்சிக் காலங்களில் சிறப்பு ஹோமம், அபிஷேக வழிபாடுகள் விமரிசையாக நடக்கும். குருப் பெயர்ச்சிக் காலத்தில் தட்சிணா மூர்த்திக்கும் நவகிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெறும். சங்கடஹர சதுர்த்தியன்று க்ஷேத்திர விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் உண்டு.

ப் மரங்களின் அடியிலுள்ள விநாயகர் சிலைக்கு அருகிலும், சிவன், அம்மன் கோவில்களிலும் இரண்டு பாம்புகள் பின்னிக்கொண்டிருப்பது போன்ற கற்சிலைகள் நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம். இச்சிலைகளை வணங்கி நம் முன்னோர்கள் கர்மங்கள் அனைத்தையும் விலக்கிக்கொண்டனர். ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு ரோகக்காரகன் (நோய்க்கு காரணமானவன்), சத்ருகாரகன் (பகைக்கு காரணமானவன்), ருணகாரகன் (கடன் தொல்லைக்குக் காரணமானவன்) என்று பெயர்.

செவ்வாய் கிரகமானது ஆயில்ய நட்சத்திரத்தில் நீசமடையக்கூடியவர்.

அதாவது செவ்வாய் ஆயில்ய நட்சத்திரத்தில் செயலற்றுப் போகக்கூடிய கிரகம். ஆயில்ய நட்சத்திரத்தின் குறியீடு பின்னிக்கொள்வது அல்லது தழுவிக் கொள்வது என்பதாகும். இந்த நட்சத்திரத்தின் உருவம் பின்னிக் கொண்டிருக்கும் பாம்பின் உருவமாகும். அதனால், பின்னிக்கொண்டிருக்கும் பாம்பின் கற்சிலையை தினமும் வழிபடுவதால் நம்முடைய பாவங்கள் நம்மைவிட்டு நீங்குவதோடு நோய்க்கு காரணமான செவ்வாய் கட்டுப்படுவான் என்பது ஆரோக்கியத்தின் ரகசியமான ஒன்று. இந்தவகையில் இவ்வாலயத்தில் அமைந்தி ருப்பது சிறப்பானது.

ப் ஒருசமயம் சிதம்பரத்தில் குயவர் குலத்தில் தோன்றிய திருநீலகண்டர் என்பவர் நடராஜப் பெருமானை வழிபட்டு தம் குலத்தொழிலாகிய மண்பாண்டங்களைச் செய்து விற்றுவந்துள்ளார். சிவனடியார்கள் யாசிப்பதற்குப் பயன்படும் திருவோடுகளை பக்தியுடன் தயாரித்து இலவசமாக வழங்கிவந்துள்ளார். திருநீலகண்டர் ஒருநாள் பரத்தையின் இல்லம் சென்று வந்தார். இதனையறிந்த அவர் மனைவி கோபம்கொண்டு, "இனி எம்மைத் தீண்டாதீர்' என கூறினார். இதனால், "இனி இந்த உலகில் எந்தப்பெண்ணையும் மனதால்கூட தீண்டுவதில்லை' என திருநீலகண்டரும் உறுதிபூண்டார். ஆண்டுகள் கடந்தன.

இந்நிலையில் இவர்களின் இல்வாழ்க்கை சிறப்பை அறிந்துகொள்வதற்கா சிவ பெருமான் சிவயோகியார் வேடம்கொண்டு திருநீலகண்டரின் வீட்டிற்கு வந்தார்.

அவரிடம் ஒரு பழைய திருவோட்டைக் கொடுத்த இறைவன், "இது ஒரு அற்புதத் திருவோடு. கவனத்துடன் பாதுகாத்து வா. நான் கேட்கும்போது திரும்பத் தந்துவிடு'' என்று கூறினார். சிலகாலம் கழித்து சிவபெருமான் அந்த திருவோட்டை மறையச் செய்தார். பின்னர் துறவி கோலத்தில் வந்து திருநீலகண்டரிடம் திருவோட்டைக் கேட்டபோது, அதைக்காணாத திரு நீலகண்டர், "வேறொரு புதிய திருவோடு செய்துதருகிறேன்'' என சிவயோகியிடம் வேண்டினார்.

அதைக்கேட்ட சிவயோகியார்.

"நீ பொன்னால் செய்து திருவோடு கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். என் ஓட்டினை நீ தொலைத்துவிட்டது உண்மையாயின் உன் மனைவியின் கைப்பற்றி நீரில் மூழ்கி சத்தியம் செய்'' என கூறினார். வேறுவழியின்றி மனைவியைத் தீண்டாத உண்மையைக் கூறினார் திருநீலகண்டர். பிறகு மூங்கில் குச்சியின் இரு முனைகளையும் இருவரும் பற்றிக்கொண்டு குளத்தில் மூழ்கி எழுந்தனர். என்ன ஆச்சரியம்! இருவரும் முதுமை நீங்கி இளமையடைந்திருந்தனர். துறவி மறைந்து, விண்ணில் பார்வதியுடன் பரமேஸ்வரன் தோன்றி அருள்புரிந்துள்ளார். இந்த அற்புத நிகழ்வு நடந்த இடம் தில்லை திருப்புலீச்சுவரம்.

"பிரிந்த தம்பதியினரை ஒன்று சேர்ப்பதிலும், குடும்ப உறவுகளின் ஒற்றுமை யுணர்வை பலப்படுத்தும் விதத்திலும், சிவனருள் பெற்ற செம்மல் திருநீலகண்டர், அவர்தம் துணைவியார் இருவரும் ஒலகடம் உலகேஸ்வரர் ஆலயத்தில், "சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஈசனை தரிசிக்க வருபவர்கள் பேறு பெற்றவர்கள்' என்ற எண்ணத்தில், கைகூப்பிய வண்ணம் அருட்காட்சி தருகின்றனர்'' என்று பெருமித்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகரான ஈஸ்வர குருக்கள். மேலும் அவர் கூறுகையில், "தை மாதம் விசாக நட்சத்திரத்தன்று திருநீலகண்டர் குருபூஜை விமரிசையாக ஊர்வாசிகள் நடத்துவார்கள்'' என்றார்.

காவிரி வடகரையில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய நிலையில் ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உட்பக்கம் இருபுறமும் சூரிய சந்திரர்கள் உள்ளனர். கருவறையில் ஈசனும், அம்மன் உலகநாயகி தெற்கு நோக்கியும் அருள்கின்றனர். பரிவார மூர்த்திகளும் சிறப்புடன் உள்ளனர்.

ஒற்றுமையுணர்வை ஊக்குவித்து உலக மக்களைக் காக்கும் ஈசனாம் ஒலகடம் உலகேஸ்வரரை பிரதோஷநாளிலே வலம்வந்து வழிபட்டு வளம் பெறுவோம். உன்னதமான பலன்களுடன் உளம் கனிவோம்.

காலை 7.00 மணிமுதல் பகல் 11.30 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், உலகேஸ்வரர் திருக்கோவில், ஒலகடம் அஞ்சல், பவானி வட்டம், ஈரோடு மாவட்டம்- 638 314. ஈஸ்வர குருக்கள், அலைபேசி: 95970 97614, 98426 39376. அவிநாஷ் ஐயர், அலைபேசி: 96002 22724. ஸ்ரீதர் (செயல் அலுவலர்) அலைபேசி: 99656 87200.

அமைவிடம்: பவானி வட்டம், அந்தியூரிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவிலும், பவானியிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. ஒலகடம் பேருந்து நிறுத்தத்திலிருந்து இரண்டு நிமிடம் நடைப்பயணம் மேற்கொண்டால் காந்தி சிலை பின்புற சாலையில் உள்ளது. பேருந்து வசதி நிறையவுள்ளது.

படங்கள்: போட்டோ கருணா