ரியலூர் மாவட்டக் கோவில்களில் தொல்பழைமையும் புதுமைப் பொலிவும் கொண்டது திருமழபாடி திருக் கோவிலா கும். ஊருக்குக் கிழக்கில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் இயற்கை அழகு பொருந்திய தாகவும், சோலைகள் சூழ்ந்ததாகவும் அமைந் துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றா லும் பெருமைபெற்ற இவ்வாலய இறைவன் அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை ஸ்ரீவைத்தியநாத சுவாமி. இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனிமாத புனர்பூச நட்சத் திரத்தில் நடைபெறும் நந்தியெம்பெருமானின் திருமணக்காட்சி மிகவும் பிரசித்திப்பெற்ற திருவிழாவாகும். நந்தி கல்யாணம் பார்ப்பவர் களுக்கு முந்தி கல்யாணம் நடக்கும் (அதாவது அடுத்த ஆண்டு நந்தி கல்யாண நிகழ்வுக்கு முன்னதாக நடக்கும்) என்பது ஐதீகமாக இருப்பதால், ஆண்டுதோறும் இத்திருமண நிகழ்வைக் காண கன்னியரும் காளையரும் .இவ்வாலயத்தில் குவிகின்றனர்.

ஊர் சிறப்பு

கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் சிவாலய இறைவன். மார்க்கண்டேய முனிவருக்காக கைகளில் மழுவேந்தி திருநடனக்காட்சி ஆடி அருள் பாலித்ததால் மழுவாடி என்று பெயர் ஏற்பட்டு பின்னர் மழபாடி என்று திரிந்ததாக புராணரீதியாகவும், கொல்லிமலையைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிசெய்த மழவ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாதலால் மழவர்பாடி என்ற பெயர் ஏற்பட்டதுடன், அவர்களில் சிறந்த வீரர்களைக்கொண்ட படைப்பிரிவின் பாசறை அமைந்திருந்தமையால் மழபாடி என்ற பெயர் ஏற்பட்டதாக வரலாற்று ரீதியாகவும் இருவேறு காரணங்கள் கூறப் படுகின்றன. சோழர்கால கல்வெட்டுகளில் வடகரை ராஜராஜ வளநாட்டுப் பொய்கை நாட்டு உட்பிரிவான மிய்பிலாற்று திருமழபாடி என்றும், ராஜேந்திர சிம்ம வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருமழபாடி என்றும் இவ்வூர் குறிப்பிடப்பெற்றுள்ளது. இவ்வூரோடு இணைந்து ஸ்ரீ கண்டராதித் தர் சதுர்வேதிமங்கலம் என்ற பேரூரும் இருந்துள்ளது. தற்போது இது கண்டராதித்தம் என்ற பெயரில் திருமழபாடியுடன் இணைந்த கிராமமாக விளங்குகிறது.

Advertisment

mm

தலச் சிறப்பு

தேவாரப் பாடல்பெற்ற 274 சிவாலயங் களில் காவிரியின் வடகரைத் தலங்களில் இது 54-ஆவது தலம். இந்து தொன்மவியலின் அடிப்படையில் மனித முகமும், சிங்க உடலும் கொண்ட புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுயம்பு மூர்த்தியான இறைவன் அருள்பாலிக்கும் தலம், இம்மிருகம் சிவபெருமானின் பெரும் பக்தனாகவும், குபேர வனத்தினைப் பாதுகாக்கும் செயலைச் செய்துவருவதாகவும் புராணக் கதைகள் கூறுகின்றன. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கொள்ளிடம் ஆறு இக்கோவிலின் முன்பு வடக்குநோக்கி உத்தரவாகினியாக திரும்பிச் செல்லும் தலம், சிவனின் வாகனமாகவும், சிவனை காவலருமான நந்தியெம்பெருமானுக்கு திருமணம் நடைபெற்ற தலம், நான்கு வேதங்களையும் குறிக்கும்விதமாக பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நான்கு நந்திகளை ஒரே இடத்தில் கொண்ட தலம், நவகிரகங்கள் இல்லாத தலம், அதற்கு பதிலாக சுவாமி சந்நிதியின் எதிரிலுள்ள மூன்று குழிகளில் தீபமேற்றி வழிபட நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீக்கும் தலம், சிபிச் சக்கரவர்த்தி மன்னனின் நவகிரக தோஷத்தை நீக்கிய தலம், ஒரே கல்லால் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் கல்திருமேனியைக்கொண்ட தலம், நான்கு திசைகளிலும் நான்கு ஐயனாரை காவல் தெய்வங்களாகக்கொண்ட தலம் என்ற சிறப் புக்களைக் கொண்டது. இறைவன் அருள்மிகு வைத்தியநாதசுவாமி. இவர் வயிரத்தூண்நாதர், வச்சிரதம்பேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். உற்சவர் சோமாஸ்கந்தர், இறைவி சுந்தராம்பிகை மற்றும் பாலாம்பிகை, தல விருட்சம்- பனை மரம், தீர்த்தம்- சிவகங்கை தீர்த்தம், லட்சுமி தீர்த்தம் மற்றும் கொள்ளிடம் ஆறு.

Advertisment

தலவரலாறு

இவ்வாலய ஈசன் புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். பிரம்மனின் சத்தியலோகத்திலிருந்து அவரது அனுமதி யின்றி ஒரு லிங்கத்தை எடுத்துவந்த புருஷாமிருகம் அதை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டடது. இதையறிந்து கோபமுற்ற பிரம்மன் பூலோகம் வந்து அந்த லிங்கத்தைப் பெயர்த்தெடுக்க முனைந்தான். ஆனால் அது அவனின் கைகளுக்கு வர மறுத்தது. இது கல் தூணோ இல்லை வைரத் தூணோ? இதை ஏன் எடுக்க முடியவில்லை என்று பலவாறாக யோசித்து குழம்பிய பிரம்மன், பின்னர் இது சிவனின் திருவுளம் போல என்றெண்ணி தன் முயற்சியைக் கைவிட்டு சத்தியலோகம் புறப்பட்டுச் சென்றார்.

mm

காலமும் கட்டுமானமும்

புராண காலத்தில் புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இவ்வாலய லிங்கத் திருமேனிக்கு இப்பகுதி அடியார்களால் ஓர் சிற்றா லயம் எழுப்பப்பட்டு, பிரம்மன் கூற்றுப்படி தமிழில் வைரத்தூண் நாதர் என்றும், வடமொழியில் வச்சிரதம்பேஸ்வரர் என்று பெயர்களால் அழைக்கப்பட்டது. கி.பி 6-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிசெய்த சிம்மவர்மன், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மகேந்திர வர்மன், நரசிம்மவர்மன் போன்ற பல்லவ மன்னர்களால் செங்கற் கோயிலாகக் கட்டப் பட்டது. அதன்பின்னர் கி.பி. 894-ல் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கற்கோவிலாக (கற்றளி) மாற்றப்பட்டது. காலப்போக்கில் பழுதடைந்த இக் கோவிலை புதுப்பித்துக் கட்டுமாறு மாமன் னன் இராஜசோழன் கட்டளையிட்டதன் பேரில். கி.பி. 1026-ல் அவரது மகன் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் அப்பணி நிறைவேற்றப்பட்டது. தற்போதுள்ள கருவறை, அர்த்தமண்டபம், இரண்டு அடுக்கு திருச்சுற்று நடைமாளிகை, மதில்சுவர், கோபுரவாயில் முதலியன முதலாம் இராசேந்திரசோழன் காலத்தில் கட்டப் பட்டவை. இரண்டாம் திருச்சுற்று கோபுரம், மடப்பள்ளி, சுந்தராம்பிகை அம்மன் சந்நிதி உள்ளிட்டவை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டவை. போசள மன்னன் வீரசிம்மனின் படைத்தளபதி வல்லதண்ட நாயக்கர் என்பவன் கி.பி. 1236-ல் கோவில் விமானத்தைப் புதிப்பித்துக் கட்டியதுடன், அலுவலக மண்டபத்தையும் கட்டியுள்ளான். இவ்வாலய கூத்தபிரான் சந்நிதி மூன்றாம் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது. அலுவலக மண்டபத்தை இணைத்து வடக்கில் கட்டப்பட்டுள்ள மண்டபம் கி.பி. 1490-ல் கோனேரியான் என்னும் சிற்றரசனால் கட்டப்பட்டது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கடைசியாக 8-2-2015 காலை 5.00 மணிக்கு யாகசாலை பூஜை கள் துவங்கி, பரிவார பூர்ணாஹுதி நடந்து, ராஜகோபுர கலசங்கள், வைத்தியநாத சுவாமி, அம்பாள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்திகள்

இவ்வாலயத்தில் ஆதித்த சோழன் தொடங்கி பல்வேறு சோழ அரசர்கள், சுந்தரபாண்டியன் போன்ற பாண்டிய மன்னர்கள், போசள மன்னர்கள், கோனேரிராயன் என்னும் சிற்றரசன் மற்றும் விஜய நகர நாயக்க மன்னர்கள் காலத்திய 30 கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. இவைபடி எடுக்கப்பட்டு தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதியில் பிரசுரிக்கப்பட் டுள்ளது. அவற்றில் சோழர்கால கல்வெட்டு களில் வடகரை ராஜராஜ வளநாட்டுப் பொய்கை நாட்டு உட்பிரிவான மிய்பிலாற்று திருமழபாடி என்றும், ராஜேந்திர சிம்ம வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருமழபாடி என்றும் இவ்வூர் குறிப்பிடப்பெற்றுள்ளது. இவ்வூரோடு இணைந்து ஸ்ரீ கண்டராதித்தர் சதுர்வேதிமங்கலம் என்ற பேரூரும் இருந்துள்ளது. தற்போது இவ்வூர் கண்ட ராதித்தம் என்ற பெயரோடு மழபாடியோடு இணைந்து திகழ்கிறது. இங்குள்ள செம்பியன் மாதேவிப் பேரேரி சோழர்களால் வெட்டுவிக்கப்பெற்றதோடு, ஏரியிலிருந்து பிரிந்து செல்லும் வாய்க்காலுக்கு ராஜராஜன் வாய்க்கால், குலமாணிக்க வாய்க்கால், சுந்தரசோழன் வாய்க்கால், உத்தமசோழன் வாய்க்கால் என்று மன்னர்கள் பெயர்கள் சூட்டப்பட்டதையும், குலோத்துங்க சோழப்பெருவழி என்ற நெடுஞ்சாலை இவ்வூர் வழி சென்றதையும், சோழமாதேவி வீதி, கண்டராதித்தர் வீதி என்ற இரண்டு வீதிகள் இருந்ததையும் கல்வெட்டுச் செய்திகள்மூலம் அறியமுடிகிறது. இத்திருக்கோவிலில் மிக தலையாய சிறப் புடைய கல்வெட்டு முதலாம் ராஜேந்திர சோழனின் 14-ஆம் ஆண்டு 70-ஆம் நாளில் வெட்டுவிக்கப்பெற்ற சாசனமேயாகும். ராஜராஜ சோழன், சிதைந்த திருமழபாடி கோவிலைப் புதுப்பிக்க விரும்பி ஓர் ஆணை பிறப்பித்தான். அதன்படி கோவில் விமானத் தைப் பிரித்து மீண்டும் கற்றளியாக புதுப்பிக்க வேண்டி இருந்ததால், விமானத்திலுள்ள கல்வெட்டு சாசனங்களைப் படியெடுத்து புத்தகத்தில் பதிவுசெய்யவேண்டும்; புதிய கற்கோவில் எடுத்தபிறகு மீண்டும் அக்கல் வெட்டுகளை அங்கு பொறிக்கவேண்டும் என்பதாகும். திருமழபாடி கோவில் திருப் பணியை மன்னன் ராஜேந்திர சோழன் கி.பி 1026-ல் நிறைவுசெய்ததாக கல்வெட்டுகள் சொல்கின்றன. புத்தகத்தில் பதிவு செய்யப் பெற்ற பழைய கல்வெட்டு செய்தி நகல்களை தன்னுடைய தண்டநாயக்கர் (சேனாதிபதி) ராமன் அருள்மொழியான உத்தமசோழ பிரம்மராயன் மேற்பார்வையில் ஓலை அனுப்பி, திருமழபாடி கோவிலின் அலுவல ரான குளவன் சோழன் அரங்கலமுடையன் பட்டலாகன், திருமழபாடி பிச்சன் கண்டரா தித்த சதுர்வேதிமங்கள சபையோர், பெரும் புலியூர் சபையோர் ஆகியோர் முன்னிலையில் கல்வெட்டுகள் ஒப்பிட்டுப் பார்த்தபின், கல்வெட்டில் பொறிக்கவேண்டும் என்பது ராஜேந்திர சோழனின் ஆணை. இந்த ஆணை திருமழபாடி மூலவரின் கருவறைச் சுவற்றில் 83 வரிகளில் பதிவு செய்யப்பெற்றுள்ளது. அதில் 73 வரிகள் ராஜேந்திர சோழனின் ஆணையும், 74-ஆம் வரிகளிலிருந்து ராஜராஜசோழரின் ஆணையும் இடப்பெற்றுள்ளது. இந்த அனைத்து செய்திகளையும் தற்போதுள்ள கல்வெட்டுகளில் காணலாம்.

gg

பாடியோரும் வழிபட்டோரும்

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோர் தம் தேவாரத்தில் இத்தல இறைவனைப் பற்றிப் பாடியுள்ளனர். "மழ பாடி எம்கோன் மிகுந்து மிளிர்கின்ற, மழபாடி எம்கோனை நாள்தோறும் கும்பிடவே குறி கூடுமே, மழபாடியை தம்கையால் தொழு வார் தகவாளரே, மழபாடியை தலையால் வணங்க தவம் ஆகுமே' என திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களிலும், மழபாடி என்றும், மணாளன் என்றும், மழபாடி வைரத்தூண் என்றும்; அப்பர் இரண்டு பதிகங்களிலும், "மழபாடியுள் மாணிக்கமே' எனவும்; சுந்தரர் ஒரு பதிகத்திலும் இத்தல இறைவனைப் போற்றியுள்ளனர். திருஞானசம்பந்தரும், அப்பரும் ஆலயத்திற்கு வந்து இறைவனை தரிசித்து, பின்னர் பாடினர். ஆனால் சுந்தரரோ திருமழபாடி என்ற தலம் இருப்பது தெரியாமல் ஆற்றின் தென்கரைத் தலங்களையே பாடி வழிபட்டு சென்றுகொண்டிருந்தார். திருவலம்பொழில் தலத்தில் அவர் தங்கியிருந்தபோது இரவில் அவர் கனவில் தோன்றிய இறைவன் "சுந்தரா, என்னை மறந்தாயோ' என்று குரல்கொடுக்க திடுக்கிட்டு எழுந்த சுந்தரர், அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெரு மானின் குரல் என்பதை உணர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் மழபாடியில் சிவன் கோவில் இருக்கிறது என்பதைக் கூறினார்கள். அதன்பிறகு திருமழபாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் "தங்களை மறந்துவிட்டு வேறு யாரை நினைப்பேன்' என்னும் கருத்தில்- 'பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே!'.. என்று பதிகத்தைப் பாடி முடித்தார். இவைதவிர பதினா றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப்பிகாசர் என்பவர் மார்க்கண்டேய முனிவருக்கு இவ்வாலய இறைவன் மழுகொண்டு ஆடிய நிகழ்வைக் குறிக்கும்விதமாக மழுவாடி புராணம் என்ற நூலை எழுதியுள்ளார். இத்தனை சிறப்புக்குரிய இத்தலத்தை புருஷாமிருகம், பிரம்மா, சிலாத முனிவர், செப்பேசர் என்கிற திருநந்திதேவர், திருமால், இந்திரன், மார்க்கண்டேயர், அகத்தியர், பராசரர், வசிஷ்டர், சந்திரன், லக்குமிதேவி ஆகியோர் வழிபட்டுள்ளனர். தட்சன் தனது 27 பெண்களையும், சந்திரனுக்கு மணம்செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர், தனது தந்தை தட்சனிடம் முறையிட்டனர். இதையடுத்து "எல்லாரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்திற்கு ஆளாவாய்' என சந்திரனை தட்சன் எச்சரித்தான். ஆனாலும் சந்திரன் முன்புபோலவே ரோகிணியிடம் மட்டும் அன்போடு பழகிவந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தட்சன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்காக இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவமிருந்தான் சந்திரன். இறைவன் சந்திரனின் முன்பாகத் தோன்றி, முற்றிலும் அழிந்து விடாத வகையில் "தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய்' என்று அருள்பாலித் தார். சந்திரனின் நோய் போக்கியதால், இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர்பெற்றார். இதேபோல், முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமிதேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சந்நிதிக்கு எதிரே, லட்சுமிதேவி நீராடிய குளம், "லட்சுமி தீர்த்தம்' என்ற பெயரிலேயே இன்றும் உள்ளது. இத் தீர்த்த நீரை உடலில் தெளித் துக்கொண்டால் சரும நோய் நீங்குமென்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆலய அமைப்பு

இவ்வாலயம் கிழக்கு திசை நோக்கி ஏழு நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சிதருகிறது. பெரிய வெளிப்பிராகாரத் தாண்டி உள்ளே செல்ல, கொடிமரம், பலிபீடம். அதனைக் கடந்து சென்றதும் வெளிப் பிராகாரத்தில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்திலிருந்து தான் சுவாமி புறப்பாடு நடைபெறும். .அதன் வலப் புறத்தில் வாகனங்கள் வைக்கப் பட்டிருந்தன. கோவில் சுற்றில் வலப்புறம் சூரியன், சந்திரன், அகோரவீரபத்திரர், விநாயகர், வள்ளி, தெய்வானையுடன்கூடிய சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. தொடர்ந்து மடப்பள்ளி. நடராஜர் மண்டபம் அருகில் நடராஜர் சந்நிதி, அருகில் நந்திகேசுவரர் தனது மனைவி சுயம்பிரகாசையுடன் காட்சி தருகிறார்.

அம்மனுக்கு இரண்டு சந்நிதிகள் உள்ளன. ஒன்று நடராஜர் சந்நிதிக்குப் பக்கத்திலும், மற்றொன்று வடபுறத்திலும் உள்ளன. முகமண்டபத்தைக் கடந்து உள்ளே செல்ல, இரு புறமும் துவாரபாலகர்கள் காவல்புரிய கருவறையில் வைத்தியநாதசுவாமி பிணிநீக்கும் பெரும் மருத்துவனாக காட்சி தந்து அருள்பாலிக்கிறார். கருவறை நிலை வாயிலின் மேலே அகத்தியர், புருஷாமிருகம், வசிஷ்டர் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. வைத்தியநாத சுவாமி, சுந்தராம்பாள் சந்நிதிகள் கிழக்கு நோக்கி உள்ளன. உட்பிராகார சுற்றில். சிவசூரியன், காத்யாயணி, சப்தமாதர்கள், ஏழு கன்னியர் கள், 63 நாயன்மார்கள், தொகையடியார்கள், தலவிநாயகர் ஆகியோரும், தொடர்ந்து ஒரே கல்லாலான சோமாஸ்கந்தரும், இருபுறமும் விநாயகரும், வள்ளி, தெய்வானையுடன்கூடிய சுப்பிரமணியரும் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து காசி விசுவநாதர்- விசாலாட்சி, கைலாசநாதர், மகாவிஷ்ணு- மகாலட்சுமி, அய்யாறப்பர், சரஸ்வதி, சுந்தரர்- பரவை நாச்சியார், சொக்கநாதர்- மீனாட்சி சந்நிதிகள் அமைந்துள்ளன. திருச்சுற்றின் திருமாளிகைப்பத்தி இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. தலவிருட்சமான பனைமரம் நெடிதுயர்ந்து நிற்கிறது. இந்தக் கோவிலில் காத்தியாயினி அம்மன் மயில் வாகனத்தில் காட்சிதருவது குறிப்பிடத்தக்க விசேஷம். கருவறைக் கோட்டத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். ஒருவர் தட்சிணாமூர்தியாகவும், மற்றொருவர் ரிஷபாரூடராகவும் காட்சியளித்து அருள்பாலிக்கின்றனர். பின்புறத்தில் அண்ணாமலையாரும், இடப்புறத்தில் பிரம்மாவும் அவரின் எதிரில் அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நான்கு வேதங்களைக் குறிக்கும் நான்கு நந்திகளும் வித்தியாசமான அமைப்புடன் உள்ளன. தொடர்ந்து சிவதுர்க்கை, ஜுரகேசுவரர், விஷ்ணு துர்க்கை, கஜசம்காரமூர்த்தி, கல்யாண பாலம்பிகை, காலபைரவர், பைரவர் இடம்பெற்றுள்ளனர். பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. தல விநாயகர் தெற்குப் பார்த்துக் காட்சிதருகிறார். முற்காலத்தில் உத்தரவாகினியாகப் பாய்ந்த ஆற்றை தெற்குநோக்கித் திருப்பியதாகவும் அதன்காரணமாகவே விநாயகர் தெற்குப் பார்த்துக் காட்சிதருவதாகவும் சொல்லப் படுகிறது. இந்தத் தலத்தில் இருந்த நவகிரகங்களை ஈசன் தம் நெற்றிக்கண்ணால் அழித்துவிட்டாராம். சரும நோயினால் அவதிப்பட்ட சந்திரன், இந்தத் தலத்து இறைவனை வழிப்பட்டான். சந்திரனுக்குக் காட்சியளித்த இறைவன், நவகிரகங்களுக்கு பதில் முகமண்டபத்திலுள்ள மூன்று குழிகளையே நவகிரகங்களாக பாவித்து நெய்விளக்கேற்றி வழிபடும்படி கூறினார். சந்திரனும் அப்படியே செய்து சருமநோய் தீரப்பெற்றதாகத் தலவரலாறு. பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் அந்த மூன்று குழிகளை நவகிரகங்களாகக் கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின் றனர். இறைவனின் சந்நிதியை ஒட்டி இடப்புறத்தில் சுந்தராம்பிகை அழகான நுழைவாயிலைக்கொண்ட தனிக்கோவிலில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இறைவியின் விமானம், சந்நிதி ஆகியவை சப்தஸ்தானத் தலங்களில் காணப்படும் அமைப்பிலிருந்து சற்று மாறுபட்டுக் காணப்படுகிறது.

உற்சவங்களும் திருவிழாவும்

தினசரி நான்குகால புஜை நடைபெறும் இவ்வாலயத்தில் சிவாலயங்களுக்கேயுரிய அனைத்து உற்சவங்களுடன். மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை. ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழி தரிசனமும் சிறப்பாக நடைபெறுகின்றது. மழுவாடி என்ற புராணப் பெயர்கொண்ட இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவருக்கு மழுவேந்திய கோலத்தில் காட்சிதரும் நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி விசாகத் தில் நடத்தப்படுகிறது. மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. 10 நாட்கள் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்று இறுதிநாள் தேரோட்டமும் நடைபெறும். பங்குனி மாத புனர்பூசத்தில் நந்தியெம்பெருமான் திருமண விழா பெருந்திருவிழாவாக நடத்தப்பெறுகிறது.

பிரார்த்தனைகள்

சரும நோய்களைப் போக்கும் வரப் பிரசாதி இத்தல அம்பிகை. நாள்பட்ட சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பங்குனி மாதம் நான்கு அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இந்தத் தலத்துக்கு வந்து, ஆற்றிலும் கோவில் தீர்த்தத்திலும் நீராடிவிட்டு, ஈரத்துணியுடன் ஒன்பது முறை அம்பாளை வலம்வந்து, உப்பும் மிளகும்போட்டு வேண்டிக்கொண்டால், நாள்பட்ட சரும நோய்களும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் நீங்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டும் பக்தர்கள், கோவிலிலுள்ள சோமாஸ் கந்தருக்கு வெள்ளை வஸ்திரமும் ரோஜாப்பூ மாலையும் சாற்றி, 11 நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடுமையான சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள ஜுரஹரருக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் படைக்கின்றனர். இது மட்டு மல்லாமல் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வைத்தீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்திக்கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே நிறைவேற்றலாம் என்பதும் இத்தல சிறப்பாகும்.

அமைவிடம்: திருவையாறிலிருந்து வடமேற்கில் 13 கிலோமீட்டர் தூரத்திலும், திருமானூரிலிருந்து மேற்கில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திலும் அரியலூரிலிருந்து தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும், கீழப்பழுவுரிலிருந்து தென்மேற்கில் 13 கிலோமீட்டர் தூரத்திலும், புள்ளம்பாடியிலிருந்து தென்கிழக்கில் 20 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு செல்ல திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையிலிருந்து பேருந்து வசதி உள்ளது. திருச்சி- விழுப்புரம் ரெயில் வழித் தடத்தில் அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் பேருந்துமூலம் ஆலயத்திற்குச் செல்லலாம்.