முக்கண்ணராகிய ஈசன், முகத்தில் இரண்டு கண்களும் நெற்றியில் ஒரு கண்ணும் கொண்டவர். அவரைப்போலவே மூன்று திருநயங்களோடு காட்சிதரும் முகுந்தனை தரிசிக்க வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் செல்லவேண்டிய தலம் பரங்கிப் பேட்டை வரதராஜப் பெருமாள் ஆலயம்.
ஆதியில் முத்துகிருஷ்ணபுரி, வருணபுரி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இத்தலத்தில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. கஜேந்திரன் மோட்சம்பெற்ற திருத்தலமாக இது கருதப்படுகிறது. திருவஹீந்திரபுரம் தேவநாத சுவாமியின் அபிமானத் தலம் என்றும் கூறப்படுகிறது.
பல்லவர் ஆட்சிக்காலத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம்; முகலாயர் காலத்தில் முன்மண்டபம் கட்டப் பட்ட கோவில். தலவிருட்சம் அரளி. தீர்த்தம் சந்திர புஷ்கரணி.
நெற்றிக்கண் என்பது சிவனது அம்சம். இங்கு கருவறையில் எழுந்தருளியுள்ள வரதராஜப் பெருமாளுக்கு நெற்றிக்கண்ணும் இருப்பதால், "இருவராகிய ஒருவர்' என்னும் திருநாமமும் இவருக் குண்டு. இப்பெருமாளை வணங்குவோருக்கு எமபயம் என்பதே கிடையாதாம். திருமணத்தடை, கடன் தொல்லை, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வீண் பழிக்கு ஆளானவர்கள் இத்தலத்திற்கு வந்து பெருமாளை மனமுருகி சேவித்தால் நற்பலன்கள் ஏற்படுகிறதாம்.
சித்திரை மாதம்முதல் ஆடி மாதம்வரை மூலவருக்கு தைலக்காப்பு சாற்றப்படுகிறது. கோடைகாலம் என்பதால் இந்த ஏற்பாடு.
ஹஸ்த நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சித்திரை தமிழ் வருடப்பிறப்பன்று நடைபெறும் கருட சேவையில் ஏராளமான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். சித்ரா பௌர்ணமியன்று சுவாமி மாடவீதி வழியாகப் புறப்பட்டு பக்தர்களுக்கு சிறப்புக் காட்சி தருவார்.
வைகாசி மாதம் சஷ்டி திதியில் வசந்த உற்சவம் நடைபெறும். வைகாசி மாதம் தொடங்கி ஆனி, ஆடி மாதம்வரை நாற்பத்தெட்டு நாட்கள் விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம் செய்யப்படுகிறது. ஆடிப்பூரத்தன்று கஜேந்திர வரதருக்கு விசேஷ திருமஞ்சனம், கோகுலாஷ்டமியில் சுவாமி புறப் பாடு, மாலை உறியடி உற்சவம் நடைபெறும்.
புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி சீனிவாசப் பெருமாள் திருக்கோலத்தில் மூலவரான வரதராஜப் பெருமாள் மஞ்சள் பட்டுடுத்தி பக்தர்களுக்குக் காட்சிதருகிறார். இந்த மாதத்தில் திருப்பதியில் பெருமாளுக்கு என்னென்ன சேவைகள் செய்யப் படுமோ அவையனைத்தும் இங்கு செய்யப்படுகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/andal_10.jpg)
நவராத்திரி உற்சவத்தில் பத்தாம் நாள் கஜேந்திர வரதர் குதிரை வாகனத்தில் சென்று அம்பு போட்டுவிட்டு வருவார். தீபாவளி, திருக்கார்த்திகை தினங்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. மார்கழி யில் தனுர்மாத பூஜை, வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் திறப்பு, மாசிமக தீர்த்தவாரி, பங்குனி யில் திருக்கல்யாணம் ஆகியவை தனிச்சிறப்பு வாய்ந்தவை.
இத்தலத்திலுள்ள கஜேந்திர புஷ்கரணியை ருண, ரண நிவாரணி என்கிறார்கள். அதாவது இதில் நீராடினால் கடன் பிரச்சினைகள், நோய்கள் ஆகியவற்றிலிருந்து விடுபடலாம் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கவல்லது. இதை வரதராஜப் பெருமாளுக்கு முன்னால்தான் அருந்தவேண்டும். இதை எடுத்துச்சென்று வீட்டில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் பலன் கிடைக்காது என்கிறார்கள்.
இத்தலத்தில் சஞ்சீவிராயர் என்னும் திருநாமத் தில் சேவை சாதிக்கும் அனுமனிடம், கஜேந்திரனைப் பற்றி வரதராஜப் பெருமாள் உபதேசித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் ஆண்டுக்கொரு முறை வரதராஜப் பெருமாள், கோவிலின் எதிரே இருக்கும் ஆஞ்சனேயர் ஆலயத்திற்கு எழுந்தருள்வார்.
நெற்றிக்கண்ணோடு இருக்கும் வரதராஜப் பெருமாளை வாழ்க்கையில் ஒருமுறை தரிசித் தாலும் நிச்சயம் பரமபதம் அடையலாம் என்கிறார்கள். இந்தக் கோவிலில் வெளி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால், சில வினாடிகளிலேயே மனபாரம் குறைகிறது; மனமகிழ்ச்சி நிறைகிறது என்பது அனுபவப் பூர்வமான உண்மை.
முக்கண் பெருமாளை தரிசிக்க ஒருமுறை நீங்களும் பரங்கிப்பேட்டை வரலாமே...
காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பேருந்து நிலையம் அருகே இக்கோவில் உள்ளது. பரங்கிப்பேட்டைக்குச் செல்ல கடலூரிலிருந்தும் சிதம்பரத்திலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/andal-t.jpg)