கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண் டாம்' என்பது முன் னோர்கள் வாக்கு. காரணம், உள்ளத் தைப் பண்படுத்தி, வாழ்வை நெறிப்படுத்தி, அலைபாயும் மனதை நிலை நிறுத்தி நமது ஆன்மாவை இறைவனோடு இணைப்பவை திருக்கோவில்கள். நமது பண்பாட்டு சின்னங்களாக- கலை இலக்கியக் கருவூலங்களாக விளங்கி வருபவை கோவில்கள்.
அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்று கும்பகோணம் அருகில் திருநறையூர் என்று அழைக்கப்பட்டு, தற்போது நாச்சியார்கோவில் என விளங்கி வருகிறது. இதற்குக் காரணம், வைகுண்ட வாசனான சீனிவாசப் பெருமாள் திருமகளைக் கரம்பிடித்த இடமிது.
இவ்வூரை ஒட்டி ஓடுகிறது மணி முத்தா எனும் புண்ணிய நதி. இந்த நதிக் கரையில் ஒரு காலத்தில் மேதாவி மகரிஷி என்பவர், சுகவனம் என்னும் பெயரில் குடில் அமைத்து இறைவனை நினைத்துத் தவமிருந்து வந்தார். ஒருநாள் காலை அவர் மணிமுத்தா நதியில் குளித்துக்கொண்டிருந்தபோது, அவரது கைகளில் சிறு சிலை ஒன்று கிடைத்தது. அதில் ஒரு பக்கம் சக்கரத்தாழ்வார், மறுபக்கம் யோகநரசிம்மர் உருவங்கள் இருந்தன. மெய்சிலிர்த்துப் போனார் மேதாவி மகரிஷி. அதேநேரம் வானிலிருந்து ஒரு குரல் அசரீரியாக, "முனிவரே, இந்த சிலையை இப்பகுதியில் அமைத்து பூஜைசெய்து வாருங்கள்' என்றது. அதன்படியே அவர் தினசரி மணிமுத்தா நதியில் நீராடி சக்கரத்தாழ்வாரையும் யோக நரசிம்மரையும் பூஜைசெய்து வந்தார்.
பெருமாளின் தீவிர பக்தரான அவர், தனக்கு வைகுண்டவாசனின் துணைவியான திருமகளே மகளாக வந்து சேரவேண்டு மென்று மனமுருக வேண்டினார். அவரது எண்ணத்தை உணர்ந்தாள் திருமகள். பெருமாள் ஆதிசேஷன்மீது யோகநிலையில் சயனித்திருந்த போது, ஒருநாள் திடீரென திருமகள் புறப் பட்டு பூலோகம் வந்துசேர்ந்தாள். மேதாவி மகரிஷி ஆசிரமத்திற்கு அருகிலிருந்த வஞ்சுள மரத்தடியில் சிறுமியாகத் தோன்றினாள்.
சிறுமியைப் பார்த்ததும் முனிவரின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அவர் சிறுமியிடம், "அம்மா நீ யார்?'' என்று கேட்டார். "எனக்கே நான் யாரென்று தெரியாது. விதி உங்களிடம் என்னைக் கொண்டுவந்து சேர்த்துள்ளது'' என்றாள். வஞ்சுள மரத்தின்கீழ் தோன்றியதால் வஞ்சுளவல்லி என்று பெயர் வைத்து சீரும் சிறப்புமாக வளர்த்துவந்தார். காலம் ஓடியது.
சிறுமியாக இருந்தவள் பருவப் பெண்ணாக வளர்ந்தாள். அவளது அழகு, குணம், மென்மையான பேச்சு, தந்தையான முனிவருக்கு செய்த பணிவிடைகள் அனை வரையும் வியக்கவைத்தது. அதேநேரத்தில், துணைவியார் தம்மைவிட்டுப் பிரிந்த கவலை பெருமாளை வாட்டியது. உலக மக்களுக்கெல் லாம் செல்வத்தை வாரிவழங்கவேண்டிய லட்சுமிதேவி இல்லாதது கண்டு தேவர்கள், முனிவர்கள் வாட்டமுற்றனர். திருமகளைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்துவருமாறு திருமாலிடம் விண்ணப்பம் செய்தனர்.
அதையேற்ற மாயவன்- வாசுதேவன், சங்கர் ஷணன், பிரத்யும்னன், அனிருத்தன், புருஷோத்த மன் என ஐந்து அவதாரங் களாக உருவெடுத்து திசைக்கு ஒருவராக தேவியைத் தேடுவதற்குப் புறப்பட்டார்கள்.
அப்போது தனது வாகனமான கருடனிடமும் தேவியைத் தேடுமாறு உத்தரவிட்டார்.
இப்படி அறுவரும் பூலோகம் வந்து பல்வேறு திசைகளிலும் தேடிக்கொண்டிருந்தனர். வானில் பறந்தபடி தாயைத் தேடியலைந்த கருடபகவான், மேதாவி மகரிஷி ஆசிரமத்தில், மகரிஷியின் மகளாக வளர்ந்து வருவதைக் கண்டார்.
அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன் அதை இராமனிடம் கூறுவதற்கு எந்த மனநிலையில் புறப்பட்டாரோ, அதே மனநிலையில் கருடன் இந்த தகவலை விரைந்து சென்று பெருமாளிடம் தெரிவித்தார். மனம் பூரித்த பெருமாள் அந்த ஐந்து நபர்களாகவே மேதாவி மகரிஷி ஆசிரமம் வந்தார்.
அவர்களைக் கண்டதும் மகரிஷிக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்களை குடிலுக்கு அழைத்து வேண்டிய உபசாரங் களைச் செய்தார். அனை வருக்கும் வஞ்சுளவல்லி உணவு ஏற்பாடு செய்தாள்.
ஐவரும் கருடனும் மணிமுத்தா நதியில் நீராடிவிட்டு குடி லுக்கு உணவருந்தச் சென்றனர். அப்போது முனிவர், பெருமாள் கைகழுவுவதற்காக தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். பெருமாள், "முனிவரே, ஆண்கள் கொடுக்கும் நீரைக்கொண்டு நான் கையைத் தூய்மை செய்வதில்லை. பெண்கள் கொடுக்கவேண்டும். அப்போதுதான் உணவருந்துவேன்'' என்று கூறினார். முனிவர் குடிலுக்குச் சென்று மகள் வஞ்சுளவல்லி நாச்சியாரிடம் தண்ணீர் கொண்டு கொடுக்குமாறு கூறினார்.
தாயாரும் தண்ணீர்க் குவளையுடன் சென்று திருமாலின் கையில் கொடுத்தார். அப்போது இருவரும் நேருக்கு நேர் பார்த்து மெய்ம்மறந்தனர். பல ஆண்டுகள் தன் தேவியைப் பிரிந்திருந்த திருமால் காதலுடன் கைகளைப் பற்றினார். இதைக்கண்டு திடுக்கிட்ட வஞ்சுளவல்லி தந்தையை சத்தமிட்டு அழைத்தார். இந்த ஆடவர் தன்னிடம் வரம்புமீறி நடந்துகொள்கிறார் என்று கூற, முனிவர் மனித உருவத்திலிருந்த திருமாலிடம், "ஒரு பெண்ணிடம் இப்படி நடந்துகொள்ளலாமா? இது முறையா'' என்று கேட்க, அப்போது வைகுந்தவாசன் ஐவரும் ஒருவராகிக் காட்சிகொடுத்தார்.
அரங்கனின் சுய உருவத்தைக் கண்ட முனிவர், "வந்திருப்பது தாங்களென்று அறியாமல் எதிர்த்து வாதிட்டதை மன்னிக்கவேண்டும்'' என்று இறைவனின் பாதம் பணிந்து வணங்கினார். வரதன் புன்சிரிப்புடன் முனிவருக்கு ஆசிவழங்கி னார். அப்போது திருமால், "முனிவரே, திருமகளே மகளாக வரவேண்டுமென்னும் தங்களின் தவத்தை மெச்சி, எம்மைப் பிரிந்து திருமகள் உமது மகளாக இங்குவந்து சேர்ந்தார். உங்கள் எண்ணம் நிறைவேறியது. தற்போது நாங்கள் இருவரும் ஒன்றுசேரும் நேரம் வந்துவிட்டது. அதனால் தேவியைத் தேடி இங்குவந்து சேர்ந் தோம்'' என்று கூற, "எமது மகளை உமக்கு மணமுடிக்க வேண்டு மானால் சில வரங்களைத் தரவேண்டும்'' என்று நிபந்தனை விதித்தார் முனிவர். (அப்போதெல் லாம் பெண் வீட்டார் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு திருமணத்திற்குமுன் நிபந்தனை விதித்தனர். தற்போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு நிபந்தனை விதிக்கும் காலமாக மாறிவிட்டது).
"தங்கள் விருப்பப்படியே'' என்றார் திருமால். அப்போது முனிவர், "திருமகளை மணமகளாக ஏற்று, எமக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு தாங்கள் தரிசனம் தரவேண்டும். எமது மகளாக அவதரித்த வஞ்சுளவல்லிக்கே இத்தலத்தில் தாங்கள் முன்னுரிமையளிக்க வேண்டும். அவரது பெயராலேயே இத்தலம் அழைக்கப்படவேண்டும். இத்தலத்தை நாடிவரும் எறும்புமுதல் அனைத்துயிர் களுக்கும் அவர்களது வேண்டுதலை நிறைவேற்றியருள வேண்டும்'' என்று கூற, பெருமாள் வரங்களை சந்தோஷத்துடன் அளித்தார்.
தற்போதும் திருவிழாக் காலங்களில் வீதியுலா வரும்போது முதலில் அன்ன வாகனத்தில் வஞ்சுளவல்லித் தாயாரும், அவரைப் பின்தொடர்ந்து கல் கருட வாகனத்தில் சீனிவாசப் பெருமாளும், இவருக்குப்பின் மேதாவி மகரிஷியும் அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்கள். இவ்வாலய மூலவர்களாக வஞ்சுளவல்லித் தாயாரைக் கரம்பிடித்த நிலையில் வாசுதேவன் மற்றும் சங்கர்ஷணன், பிரத்யும்னன், புருஷோத்தமன், அனிருத்தன் இவர்களுடன் பிரம்மதேவன், மேதாவி முனிவர் ஒருசேர பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்கள். வேறெந்தக் கோவிலிலும் இல்லாத அதிசய தரிசனத்தை இங்குவரும் பக்தர்கள் தரிசிக்கலாம்.
வஞ்சுளவல்லித் தாயாருக்கும் பெருமாளுக்கும் திருமணம் நடைபெற்றதை அறிந்த பிரம்மதேவன், இறைவனையும் தாயாரையும் தரிசிப்பதற்காக புறப் பட்டு வந்துள்ளார். அப்படி வந்தவர் பெருமாளிடம் தமக்கும் அவர்களுக்கருகில் ஒரு இடமளிக்குமாறு விண்ணப்பிக்க, அவரையும் அருகில் அமர்த்திக்கொண்டார் பெருமாள்.
மணிமுத்தா நதி என்ற பெயர் உருவானதற்கு ஒரு முக்கிய சம்பவத்தைக் கூறுகிறார்கள் வைணவ பக்தர்கள். திருப்பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து திருமகள் உட்பட பலர் தோன்றினர். வைரமகுடம் என்னும் திருமுடியும் தோன்றியது. அதை கர்நாடக மாநிலத்திலுள்ள திருநாராயண புரம் எம்பிரானுக்கு அணிவிப்பதற்காக கருட பகவான் எடுத்துக்கொண்டு மேற்குநோக்கிப் பறந்து சென்றுகொண்டிருந்தார். அப்படி செல்லும்போது அந்த மகுடத்திலிருந்து சில மணிகளும் முத்துக்களும் இந்தப் பகுதியில் விழுந்தன. அதன்காரணத்தினாலேயே இந்த நதிக்கு மணிமுத்தா நதி என பெயர் உருவானதாகக் கூறுகிறார்கள்.
கருட பகவானுக்கு இங்கு முன்னுரிமை வழங்கப்படுவதற்கு காரணம் உண்டு. ஒரு ஊரில் சிற்பி ஒருவர் ஆகம விதிப்படி ஒரு பெரிய கல்லில் கருடன் உருவத்தை செதுக்கி வந்துள்ளார். அதன் இரு சிறகு களையும் இறுதியாக செதுக்கி முடித்தார். அனைத்து சாமுத்திரிகா லட்சணங்களும் பொருந்தக்கூடிய நிலையில் செய்யப்படும் சிற்பங்கள் உயிர்பெற்றுவிடும் என்பதற்கு உதாரணமாக, இந்த கல் கருடன் உயிர்பெற்று சிறகை விரித்து மேலே பறந்துசெல்ல, அதைக்கண்டு பயந்துபோன சிற்பி தன் கையிலிருந்த உளியை கருடன்மீது வீசியுள்ளார். கருடனின் மூக்கில் அடிபட்டு கீழே விழுந்தது. அதன்பிறகு பெருமாள் அருளால் உயிர் பெற்று இவ்வாலயம் வந்து அருளாசி வழங்குகிறார்.
இவ்வாலயத்தில் நடைபெறும் கருடசேவை உலகப் புகழ்பெற்றது. மேலும் சோழநாட்டுத் திருப்பதிகள் என்று அழைக்கப்படும் 40 ஆலயங்களில் 20-ஆவது ஆலயமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
சோழ மன்னர்கள் நூற்றுக்கணக்கான சிவத்தலங்களை உருவாக்கியுள்ளனர். அந்த வம்சத்தில் வந்த கோச்செங்கட்சோழன் வைணவத் தலமான இந்தக் கோவிலை எழுப்பியுள்ளார் என்பது வியப்புக்குரியது.
திருச்சி- உறையூரைத் தலைநகராகக் கொண்டு கோச்செங்கட்சோழனின் தந்தை சுபதேவர் ஆட்சிசெய்து வந்தார். அவரது மனைவி கமலவதி அம்மையார் கர்ப்பவதியானார். பிரசவ காலம் நெருங்கியபோது, மன்னரின் ஆஸ்தான ஜோதிடர் இளவரசன் பிறக்கப்போகும் நேரத்தைக் கணித்துப் பார்த்தார். "பட்டத்தரசி பிரசவிக்கும் நேரம் இன்னும் கொஞ்சம் நீடிக்கவேண்டும். அதன்பிறகு குழந்தை பிறந்தால் அகிலம் போற்றும் அரசனாவான்'' என்று கூறியுள்ளார். இந்த தகவல் அரசிக்கு எட்டியது. உடனே அவர் தன் பணிப் பெண்களை அழைத்து, தன்னை தலைகீழாக, கால்களை சேர்த்துக் கட்டி தொங்கவிடுமாறு கூறினார். அதன் படியே செய்தனர். குறிப்பிட்ட நேரம் முடிந்தது. நல்ல யோகவேளை பிறந்ததும் கால் கட்டுகளை அவிழ்த்து படுக்க வைக்குமாறு கூறினார். அரசிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் கண்கள் செந்நிறமாக இருந்தன. அதன் காரணமாக அந்த குழந்தைக்கு கோச் செங்கட்சோழன் என்று பெயர் உண்டாயிற்று.
இவர் அரசு பட்டம் ஏற்ற பிறகு, பல்வேறு நாடுகளைப் பிடித்து பெரும் அரசனாகத் திகழ்ந்ததோடு, ஏகப்பட்ட கோவில்களைக் கட்டி, அவற்றைப் பராமரிக்க- பூஜைசெய்ய நிலங்களையும் அளித்தார். அப்படிப்பட்ட கோச்செங்கட்சோழன் ஒருமுறை தனது பரிவாரங்களுடன் காசி யாத்திரை புறப்பட்டுச் சென்றார். யாத்திரை முடிந்து திரும்பி வரும்போது அண்டை நாட்டு மன்னர்கள் போர்தொடுத்து அவரது நாட்டைக்கைப்பற்றி விட்டிருந்தனர். இந்த தகவலறிந்த கோச்செங்கட்சோழன் கவலையுடன் மணிமுத்தா நதியோரம் அமைந்துள்ள வஞ்சுளவல்லி நாச்சியார் ஆலயத்திற்கு வந்தார்.
அவரது தோற்றத்தையும் முகவாட்டத் தையும் கண்டு வருத்தமுற்ற வைணவ ஆச்சாரியார்கள், அவருக்கு ஆறுதல் கூறினர். அவர்களின் ஆலோசனைப்படி இவ்வாலய சீனிவாசப் பெருமாளையும் வஞ்சுளவல்லித் தாயாரையும் மிகுந்த பக்தியோடு சோழமன்னன் தரிசனம் செய்தார். அப்போது அவர் முன் தோன்றிய பெருமாள் மன்னனுக்கு வாள் ஒன்றையும் புரவி (குதிரை) ஒன்றையும் பரிசாகக் கொடுத்ததோடு, "இனி நீ படையைத் திரட்டிச் செல். நீ வெற்றிபெறுவாய். உன் நாடு உனக்குக் கிடைக்கும்'' என்று வரமளித் துள்ளார். அதன்படியே கோச்செங்கட் சோழன் தன் நாட்டை மீட்டான். அதன்பிறகு சீனிவாசப் பெருமாள்- வஞ்சுளவல்லித் தாயார்மீது மிகுந்த பக்தி ஏற்பட்டு, இங்குள்ள ஆலயத்தை முதன்முதலில் மாடக்கோவில் வடிவத்தில் கட்டி, வழிபாடுகள் நடத்த பல்வேறு கிராமங்களின் வருமானத்தை அளித்ததாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. வயது முதிர்ந்த காலத்தில் தனது மைந்தனிடம் நாட்டின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, நாரத முனிவரிடம் உபதேசம் பெற்று, இந்த நகரத்திலேயே முனிவர்களுடன் இருந்து பெருமாளை வழிபட்டு நற்கதி அடைந்தார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திருமங்கையாழ்வார் தமது பாசுரத்தில் பாடியுள்ளார்.
கோச்செங்கட்சோழனுக்குப்பிறகு ஜடா வர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் ஆலயம் புனரமைக்கப்பட் டுள்ளது.
இவ்வாலயத்தில் அமைந்துள்ள கல் கருடபகவான் நான்கு டன் எடை கொண்டவர். இவர் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் சந்நிதியிலிருந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுக்க வீதியுலா வருவார். கோவிலுக்குள் இருந்து இவரை நான்குபேர் மட்டுமே வெளியே சுமந்துவருவார்கள். கோவிலைவிட்டு வெளியே வரவர இவரது சுமை அதிகரிக்கும். 4 பேர், பிறகு 8, 16, 32, 64, 128 என்ற எண்ணிக்கையில் சுமந்து செல்வார்கள். அந்த அளவுக்கு கருட பகவானின் சுமை அதிகரிக்கும். தெருக்களை வலம்வந்து மீண்டும் கோவிலை நெருங்கும்போது, சுமப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே போகும். கருட பகவானின் சுமையும் குறையும். நான்குபேர் மட்டுமே கொண்டுசென்று சந்நிதியில் அமர்த்துவார்கள். மூலவராக உள்ள கல் கருடபகவான் உற்சவராகவும் வீதியுலா வருவது வேறெங்கும் இல்லாத அதிசயம் என்கிறார்கள் இவ்வாலய அர்ச்சகர்கள்.
இவ்வாலய கருடபகவான் உடலில் அனந் தன், வாசுகி, ஆதிசேஷன், பத்மநாபன், கம்பலன், திருதராஷ்டிரன், சங்கபாலன், தட்சகன், காளியன் ஆகிய ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாக அலங்கரிக்கின்றன. இதன் காரணமாக நாகதோஷம், திருமணத்தடை நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க இவ்வாலய கருட பகவானுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்தால் கைமேல் பலன் கிட்டும்.
இவ்வாலய சீனிவாசப் பெருமாளுக்கு துளசி மாலை, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள் பக்தர்கள்.
ஆறுகால பூஜை நடைபெறும் இவ்வாலயத்தில், பகலில் பூஜை நடைபெறும் போது, சில ஆண்டுகளுக்குமுன்பு இவ்வாலய நந்தவனத்திலுள்ள மரத்தில் வசித்துவந்த இரண்டு கருடன்கள் ஆலயத்தை சுற்றிவந்து பக்தர்களுக்குக் காட்சிகொடுப்பதும், பூஜை முடியும்வரை மதில்மேல் அமர்ந்திருப்பதும் வழக்கம். இது ஆண்டுக்கணக்கில் தினசரி நடைபெற்று வந்துள்ளது. 1999-ஆம் வருடம் ஜனவரி மாதம் 18-ஆம் நாள் பூஜை நடைபெறும்போது அந்த கருடன் கள் இரண்டும் வரவில்லை. இதனால் வருத்தமுற்ற அர்ச்சகர்கள், பக்தர்கள் நந்த வனத்தில் கருடன்கள் வசித்துவந்த மரத்திற் குச் சென்று பார்த்தனர். அங்கே இரண்டு கருடன்களும் ஒருசேர முத்தியடைந்திருந் தன. இது அனைவரையும் கண்கலங்க வைத்த நிகழ்ச்சி என்கிறார்கள் இவ்வூர் மக்கள்.
திருமணப்பேறு, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, தொழிலில் அபிவிருத்தி பெற நினைப்பவர்கள் ஏழு வியாழக்கிழமை கள் கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்ய வேண்டும். அமிர்தகலசம் செய்வித்து பூஜை செய்தால் அவர்கள் நினைத்தது உடனடி யாக நிறைவேறும். சுவாதி தினத்தில் கருட பகவானை தரிசிப்பது சிறந்த பலனைக் கொடுக்கும். இவ்வாலயத்தைச் சுற்றிலும் ஐந்து குளங்கள் உள்ளன. வகுளமரம் (மகிழமரம்), அரசமரம், வில்வமரம், நீர் நொச்சி என்றழைக்கப்படும் வஞ்சுளமரம் தல விருட்சங்களாக உள்ளன. வகுள மரத்தடியில் தாயாரை மேதாவி மகரிஷி கண்டெடுத்ததால் இந்த மரத்தைச் சுற்றி வலம்வருவோருக்கு உலகைச் சுற்றிய பலன் கிடைக்கும். சீனிவாசப் பெருமாள்- லட்சுமி தாயாரின் அருளும் கிடைக்கும்.
இவ்வாண்டு பங்குனித் திருவிழாவின் போது கோவிலின் முகப்பு மண்டபத்தில் 30-க்கும் மேற்பட்ட அடியார்கள் பெருமாள், தாயாரின் பெருமைகளைப் பாடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தலைமையாக விளங்கிய- மதுரை மாவட்டத்திலுள்ள வில்லூர் நடாத்தூர் கருணாகர சுவாமிகளிடம் பெருமாளின் கீர்த்தியைப் பாடுவது குறித்துக் கேட்டோம்.
"நாம் தமிழ்ப் பாசுரங்கள் நான்காயிரத் தையும் பத்து நாட்களில் பாராயணம் செய்துள்ளோம். மார்கழி, பங்குனி ஆகிய இவ்வாலய விழாக் காலங்களில் பண்டிதர்களை அழைத்துவந்து பெருமாளையும் தாயாரையும்பற்றி மனமுருகப் பாடி சேவைசெய்கிறோம். மக்களின் வாழ்வு வளம்பெற வேண்டும்; அனைவரையும் நேசித்து, தீய வழியை மறந்து நல்லவழியில் செல்லவேண்டும்; அதற்கு இறைவன் வழிகாட்டவேண்டும் என்பதே எங்களின் நோக்கம்'' என்கிறார் டாக்டர் கருணாகர சுவாமிகள்.
கோவில் பெயரிலேயே பல ஊர்கள் அமைந்துள்ளன. வஞ்சுளவல்லி நாச்சியாரின் பெயரில் அமைந்துள்ள இகோவில், கும்பகோணத்திலிருந்து நன்னிலம் செல்லும் வழியில் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. ஆலயத் தொடர்புக்கு: 0435- 2467167.