தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் நகரை நடுநாயகமாகக் கொண்டு, அதன் நான்கு திசையிலும் உள்ள முருகப் பெருமானின் பெருமையை உணர்ந்து வணங்குவோம்.
திருப்பாலைத்துறை ஆறுமுகன்
பாபநாசம் நகரின் கிழக்குப் பகுதி திருப்பாலைத்துறை ஆகும். இந்த ஊரை திருநாவுக்கரசு சுவாமிகள் "பாலைத்துறை' என பதிகம் பாடி சிறப்பித்துள்ளார். இறைவன்: பாலைவன நாதர்; இறைவி: தவள வெண்ணகை அம்பாள். இக்கோவிலின் சுவாமி கருவறைக்குப் பின்னால் ஆறுமுகர் சந்நிதி உள்ளது. இங்கு முருகப் பெருமான் குழந்தை வடிவில் சிறு மயில்மேல் அமர்ந்துள்ளார். மயிலின் கழுத்து வடக்கு நோக்கியுள்ளது. முருகனின் முக அழகு நம் மனதைக் கொள்ளை கொள்ளும். இருபுறமும் வள்ளி, தெய்வானை நின்று அருள் பாலிக்கின்றனர். இவ்வாலயத்தில் நூற்றுக் கணக்கான முருகன் சிற்பங்கள் உள்ளன.
ஆறுமுகர் சந்நிதி முன்னேயுள்ள மகா மண்டப மேற்கூரையில் நான்கு புறமும் முருகனின் திருவிளையாடல்கள் கருங்கல் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப் பட்டுள்ளன. முருகனின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம், கிரவுஞ்ச வதம் என அத்தனை நிகழ்வுகளும் செதுக்கப்பட்டுள்ளன. முருகனின் சிறப்புத் தலம் எனக் கூறப்படும் தலங்களில்கூட காணமுடியாத சிற்பங்களை இங்கு கண்டு மகிழலாம்.
நல்லூர் முருகன்
பாபநாசத்திலிருந்து கிழக்கே மூன்று கிலோமீட்டர் சென்றால் நல்லூர் கல்யாண சுந்தரேசுவரர் ஆலயத்தைக் காணலாம். இறைவன்: கல்யாண சுந்தரேசுவரர்; இறைவி: கிரிசுந்தரி. இங்குள்ள முருகன் சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இவர் திருப்புகழ் பாடல்பெற்ற முருகன் ஆவார்.
வில்லேந்திய முருகன்
நல்லூரிலிருந்து தென்கிழக்கில் நான்கு கிலோமீட்டர் சென்றால் ஆவூரை அடையலாம். இது மாடக்கோவில். இறைவன்: பசுபதீசுவரர்; இறைவி: சௌந்தர நாயகி. இது சிறு மலைமேல் பஞ்சபைரவர் ஆட்சிபுரியும் தலம். பிதுர் நன்மை தரும் தலம். இதன் பிராகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். இவர் ராமருக்கு இணையாக வில்லேந்தி அருள்கிறார். இந்த வில்லானது அனைத்து வினைகளையும் களையும்; வில்லங்கங்களை விலக்கும். வணங்கி அருள்பெறுங்கள்.
வில்வமர முருகன்
பாபநாசத்திலிருந்து மேற்கே வந்தால் பாபநாசம் 108 சிவாலயம் உள்ளது. இது கீழை இராமேசுவரம் என்று அழைக்கப்படும் புனிதத் தலம்.
இந்தக் கோவிலில் 106 சிவலிங்கங்களையும் பார்த்தபடி வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் அருள்பாலிக்கின்றனர்.
சந்நிதியின் பின்பக்கம் வில்வமரம் உள்ளது.
இதனால் இவர் வில்வமர முருகன் என்று அழைக்கப்படு கிறார். வேலும், வஜ்ரவேலும் ஏந்தியவர்.
கார்த்திகை முருகன்
108 சிவாலயத்திற்கு மேற்கே ஐந்து கிலோ மீட்டர் சென்றால், சக்கரப்பள்ளி என்ற ஊர் உள்ளது. இதுவும் பாடல் பெற்ற தலம். விஷ்ணுவுக்கு சிவன் சக்கரம் வழங்கிய ஊர். இங்கு கார்த்திகேயன் என்ற பெயரில் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார் முருகன். கார்த்திகை வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
சங்கு சக்கர முருகன்
பாபநாசத்திற்கு மேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில், திருச்சேலூர் எனும் கோவில் தேவராயன் பேட்டை உள்ளது. இறைவன்: ஸ்ரீமச்சபுரீசுவரர்; இறைவி: ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை. இக்கோவிலில் உள்ள சண்முகர் 12 திருக்கரங் களுடன் அருள்பாலிக்கிறார்.
இவர் ஒரு கையில் சங்கும், மற்றொரு கையில் சக்கரமும் ஏந்தி அருள்பாலிக்கிறார்.
இந்த முருகனை தரிசிக்க தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சங்கும் சக்கரமும் காலமெல்லாம் வெற்றியைத் தேடித்தரும்.
தண்டபாணி கோவில்
தஞ்சை- குடந்தை பேருந்து தடத்தில், அய்யம் பேட்டையில் இறங்கி சாவடி என்ற பகுதிக்குச் சென்றால் தண்டபாணி ஆலயத்தைக் காணலாம். முருகனுக்காக உள்ள தனிப் பெரிய கோவில். கொடிமரத்துடன் உள்ள கோவில். பழனியில் உள்ள தண்டபாணி இங்கும் உள்ளதாக பக்தர்கள் கூறுகிறார்கள். 3-9-2017 அன்று குடமுழுக்கு நடந்துள்ளது. தண்டபாணியை வணங்கினால், நமக்கு வரவிருக்கும் தண்டணைகள் தவிடு பொடியாகிவிடும். தடைகளும் நீங்கும்.
காவளூர் முருகன்
அய்யம்பேட்டையின் தெற்கே நான்கு கிலோமீட்டர் சென்றால் காவளூர் வரும். இங்கு முருகனுக்கு தனிப்பெரும் ஆலயம், பூமி மட்டத்திலிருந்து 15 அடி உயரத்தில் உள்ளது. இது திருப்புகழ் பாடல்பெற்ற தலம். 12 படிகளும் 12 ராசிகளாக உள்ளதாக ஐதீகம். மூலவர் கருங்கல் திருமேனி. திருச்செந்தூர் முருகனின் சாயலில் இருக்கிறார்.
அருகே வள்ளி, தெய்வானை உள்ளனர். எதிரே தோகை நீட்டிய மயில், பலிபீடம். கோவிலில் செவ்வாய்க்கு தனிச்சந்நிதி உண்டு. அதனால் இது வைத்தீஸ்வரன் கோவில் தகுதியும் பெற்றுள்ளது. மாலை 5.00 மணி முதல் 7.00 மணிவரை அர்ச்சகர் இருந்து பணி செய்வார். தஞ்சையிலிருந்து காவளூருக்கு 8-ஆம் எண் டவுன் பஸ் உள்ளது.
பட்டுக்குடி முருகன்
அய்யம்பேட்டை கணபதி அக்ரகாரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் வடக்கே சென்றால் கொள்ளிடக்கரை கிராமம் பட்டுக்குடி உள்ளது. இங்குள்ள சிவன் பசுபதீசுவரர். சிவன் கருவறைக்கு வலது புறம் ஆறுமுகன் பெரிய கருங்கல் திருமேனியுடன் உள்ளார். அருகில் வள்ளி, தெய்வானை. பார்க்கப் பார்க்கத் திகட்டாத திருமேனி. இக்கோவிலிலும் குருக்கள் மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை இருப்பார்.
முருகனைப் பார்க்கவேண்டுமென்னும் தீவிர விருப்பம் உள்ளவர்கள் இப்படிப்பட்ட ஆலயங்களைக் கண்டு தரிசிப்பது பெரும்புண்ணியமாகும்.
ஆடுதுறை முருகன்
பட்டுக்குடியிலிருந்து ஆடுதுறை எனும் வடகுரங்காடுதுறைக்கு வரலாம். கபிஸ்தலம்- உள்ளிக்கடை நெடுஞ்சாலையில் உள்ளது. இதுவும் தேவாரப் பாடல் பெற்ற சிறப் புத்தலம். வாலி வணங்கி அருள்பெற்ற தலம். இங்கு சக்தி வாய்ந்த முருகப் பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
வைகாவூர் முருகன்
சுவாமிமலைக்கு வடக்கே சென்றால் திருவைகாவூர் என்ற தலத்தை அடையலாம். இது சிவராத்திரி பிறந்த தலம். இறைவன்: ஸ்ரீவில்வவன நாதர். இங்கு அழகே உருவான வள்ளி, தெய்வானையுடனான மயில்முருகன் ஆறுமுகத்துடன் பெரிய திருவுருவில் அருள்பாலிக்கிறார். இவருக்கு தனிக்கோவில் இருப்பது முருகனுக்குப் பெருமை தருவதாக உள்ளது. திருவைகாவூருக்கு கும்பகோணத்தி லிருந்து டவுன் பஸ் உண்டு.
பெரிய முருகன்
பாபநாசத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் கிழக்கே வந்தால் பட்டீஸ்வரத்தை அடைய லாம். இது திருஞானசம்பந்தருக்கு முத்துப் பந்தல் தந்த தலம். இந்த தலத்தின் பின்புறம் ஏழு அடி உயர சண்முகர் அருளுகிறார். முன்பக்கம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகங்கள் உள்ளன.
பின்புற முகம்காண பெரிய நிலைக் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இவரே பெரிய சண்முகர்.
திருக்கருகாவூரில் சோமாஸ்கந்த முருகன் உள்ளார்.