உயிர்கள் அனைத்தையும் பெற்றெடுப்பவள் பெண். அதனால்தான் பெண்களை தெய்வமாக மதிக்கவேண்டுமென்று முன்னோர்கள் உணர்த்தியுள்ளனர். அதன் அடிப்படையில் பெண் தெய்வங்களைத் தாய் தெய்வமாகக் கருதி வழிபட்டுவருகிறோம். அதேபோன்று கன்னிப்பெண் தெய்வங்களையும் வழிபட்டுவருகிறோம். இப்படி மக்களைக் காத்துவரும் பெண் தெய்வங்கள் தமிழகத்தில் ஏராளம் ஏராளம். அம்மன் என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படும் பெண் தெய்வங்கள் அனைத்து பகுதிகளிலும் உண்டு.
தமிழக கிராமங்களில் பெருந்தெய்வ வழிபாடுகளைவிட சிறுதெய்வ வழிபாடுகள் அதிகம். மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலக்காரியம்மன், திரௌபதையம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீரசின்னம்மா, உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம் மன், ராக்காச்சியம்மன், எல்லையம்மன், அங்காளம் மன், பேச்சியம்மன், இசக்கி யம்மன், எல்லைப் பிடாரியம் மன், ஜக்கம்மன் என எண்ணற்ற பெயர்களில் பெண் தெய்வங் கள் உள்ளன. அனைத்து தெய்வங் களும் சக்தியின் அவதாரமாகவே கருதி வழிபட்டுவருகிறோம்.
இப்படிப்பட்ட தெய்வங் களுக்கு வேண்டுதல்கள் அடிப் படையில் முடி காணிக்கை, தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெயர் வைத்தல் போன்றவற்றைச் செய்கிறோம். குடும்பத்தில் ஆண்- பெண் இருபாலருக்கும் திருமண வயது வந்ததும், திருமணம் நிச்சயம் செய்யும்முன்பு இந்த தெய்வங்களின் முன்புசென்று உத்தரவு கேட்பர். அந்தக் கோவில்களில் தலவிருட்சமாக உள்ள மரங்களின் இலைகளைப் பறித்து அம்மன்முன்பு ஒற்றையா இரட்டையா என போட்டுப் பார்த்து, எண்ணிக்கை அடிப் படையில் ஒற்றை வந்தால் அம்மன் உத்தரவு கொடுத்தது என்றும், இரட்டைபடையில் வந்தால் அம்மன் அனுமதி தரவில்லை என்றும் கூறி காரியத்தை நிறுத்திவிடுவார்கள். அதேபோல் அம்மன் ஆலயத்தில் அமர்ந்து, தாங்கள் விரும்பும் திசையிலிருந்து பல்லி எழுப்பும் சத்தத்தையும் அம்மன் உத்தரவாக எண்ணி திருமணத்தை முடிவுசெய்வார்கள். ஒவ்வொரு குடும்பத்தினரின் அனைத்துத் தீர்வுகளுக்கும் அம்மனையே சாட்சியாக வைத்து நிகழ்ச்சிகளைத் தொடங்கி நடத்து வார்கள். அப்படிப்பட்ட சக்திவாய்ந்த அம்மன் களில் ஒருத்தி முக்குளத்தியம்மன்.
திட்டக்குடி நகரின் தென்மேற்கு மூலையில், வெள்ளாற்றங்கரையில் அமைதி தவழும் அடர்ந்து படர்ந்த ஆல, அரச மரங்களின் நிழலில் வடக்குநோக்கி அமர்ந்து, தன்னை நாடிவரும் பக்தர்களின் அனைத்து தேவை களையும் கருணையுடன் பூர்த்திசெய்து வருகிறாள் முக்குளத்தியம்மன். இவளை பேச்சுவழக்கில் முக்களத்தியம்மன் என்றும் அழைக்கிறார்கள். இவ்வாலயத்தில் பரம்பரை வழியில்வந்த மறைந்த குமாரசாமி பூசாரி, அவருக்குப்பிறகு அவரது மகன் குமரன், அவரது மகன் மனோஜ் குமார் ஆகியோர் பூசாரிகளாகத் தொடர்ந்து அம்மனுக்கு வழிபாடுகளை முறையாக செய்து வருகிறார்கள்.
இந்த அம்மனுக்கு திருவிழாக் காலங்களில் பவனிவருவதற்கு புதியவடிவில் தேர், சிங்கம், காளை ஆகிய வாகனங்களை பெரும் பொருட் செலவில் உருவாக்கி தேரோட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளையும் அனைத்து விழாக் களையும் செய்துவருகிறார்கள் பரம்பரை தர்மகர்த்தா ரவி மற்றும் கோவில் பூசாரிகள், இப்பகுதியின் நகரமன்ற கவுன்சிலர் செந்தில் ஆகியோர்.
திட்டக்குடி பல நூற்றாண்டுகளுக்குமுன் உருவான பழமையான ஊர். முற்காலத்தில் வசிஷ்ட மாமுனிவர் இங்குவந்து குடிலமைத்துத் தங்கி சிவபெருமானையும் அம்பாளையும் தினசரி பூஜைசெய்து வந்துள்ளார். அவரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த நகரத்தின் மையத்திலுள்ள வசிஷ்டேஸ்வரர் ஆலயம். காலப்போக்கில் வைத்தியநாதேஸ்வரர் என்று மருவி அழைக்கப்படுகிறது. இவ்வூரில் வசிஷ்டர் குடியிருந்ததால் வசிஷ்டர்குடியென்று அழைக்கப்பட்டு, பிறகு வதிட்டக்குடி என்று மருவி, தற்போது திட்டக்குடி என்று அழைக்கப் படுகிறது.
இந்நகரின் மையத்திலுள்ள வைத்திய நாதேஸ்வரர் பிரம்மாண்டமாக கோவில் கொண்டுள்ளார். இவருக்கு வலப்பக்கம் அம்மன் அசனாம்பிகை என்னும் பெயருடன் விளங்கிவருகிறாள். பொதுவாக பெரிய ஆலயங் களுக்கு அந்த ஊரின் நான்கு புறங்களிலும் எல்லை தெய்வங்கள் உண்டு. அப்படிப்பட்ட தெய்வங்களில் ஒன்றுதான் சிவாலயத்தின் நேர்க்கோட்டில் மேற்குப் பகுதியில் அமர்ந்துள்ள முக்குளத்தியம்மன்.
இப்பகுதியை ஆட்சிசெய்த ஒரு அரசனின் மகளான இளவரசிக்கு திருமணத்திற்குமுன்பு தொழுநோய் பிடித்தது. இதனால் அந்த மன்னன் மிகவும் கவலைக்கு உள்ளானார். அந்த மன்னனிடம் அவரது அமைச்சர்கள், "வசிஷ்டமா முனிவர் இப்பகுதியில் குடிலமைத்து இறைவனைப் பூஜைசெய்து வருகிறார். அவரிடம் சென்று முறையிட்டால் இளவரசியின் நோய்க்கு தீர்வு கிடைக்கும்' என்று கூறினர். அந்த மன்னன் தன் மகளுடன் சென்று முனிவரை சந்தித்து, மகளின் நோய்தீர வழிசொல்லுமாறு வேண்டிக்கேட்டார். அப்போது முனிவர், "ஊரில் மூன்று புண்ணிய தீர்த்தக்குளங்கள் உள்ளன. அந்த மூன்று குளங்களிலும் இளவரசி மூழ்கிக் குளித்துவிட்டு, அந்தக் குளக்கரையிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யவேண்டும். எந்த குளத்தில் மூழ்கியெழும்போது நோய் நீங்குகி றதோ அங்கு அமைந்துள்ள தெய்வத்திற்கு சிறப் பாக வழிபாடு நடத்துங்கள்' என்று ஆலோசனை கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த மன்னன் மகள் ஒவ்வொரு குளத்திலும் மூழ்கியெழுந்து தெய்வங்களை வழிபட்டாள். மூன்றாவதாக இந்த அம்மன் ஆலயம் எதிரே இருந்த குளத்தில் மூழ்கியெழுந்தபோது இளவரசிக்கு தொழுநோய் முற்றிலும் மறைந்து, அழகு தேவதையாக வெளியே வந்தாள். குளக்கரையிலிருந்த அம்மனின் சக்தியே தொழுநோய் குணமாகக் காரணமென்று உணர்ந்து மெய் சிலிர்த்த அந்த மன்னனின் குடும்பத்தினர் இந்த அம்மனுக்கு பெரும் வழிபாடு செய்தனர். மூன்றாவது அம்மனின் ஆலயக் குளத்தில் குளிக்கும்போது நோய் நீங்கப்பெற்றதால் இவ்வாலய அம்மனுக்கு முக்குளத்தி அம்மன் என்ற பெயர் உருவானது.
இவ்வாலய அம்மன் காளி சக்தியின் அம்சமாக உள்ளவள். இதற்கு சான்றாக மூலவராக உள்ள அம்மனின் காதில் வளையம்போல ஒரு குழந்தையை வைத்துள்ளாள். இதற்கு புராணக் கதை ஒன்றுள்ளது. பொதுவாக அரக்கர் கள் காளியை பெரிதும் வழிபடுவார் கள். வேண்டிய வரத்தைப் பெறுவதற் காக எதைவேண்டுமானாலும் பலியிடு வார்கள். அப்படியொரு அரக்கன் காளியிடம் வலிமையான வரங்களைப் பெறுவதற்காக சிறு குழந்தைகளை காளிக்கு பலியிடத் தொடங்கினான்.
அப்போது ஒரு குழந்தையை பலியிடுவதற்குமுன்பு அந்தக் குழந்தை "அம்மா' என்றழைத்ததாம். குழந்தையின் வார்த்தையைக் கேட்டு மனம் நெகிழ்ந்த அன்னை, அப்படியே கீழே கிடந்த குழந்தையை எடுத்து தன் வலது காதில் அணிந்துகொண்டு, குழந்தையை பலியிட முனைந்த அந்த அரக்கனை வதம் செய்தாள்.
இங்குள்ள முக்குளத்தியம்மன் தாய்ப்பாசம் மிக்கவள். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு தாயாக இருந்து அவர்களது இன்னல்களைத் தீர்த்து சுகவாழ்வு அளித்து வருகிறாள். "அம்மா' என்றழைத்து வைக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் பாசத்துடன் நிறைவேற்றித் தருகிறாள். சிறு குழந்தைக்கு கருணை காட்டியதுபோல் அனைத்து பக்தர்களுக்கும் கருணை காட்டிவரும் முக்குளத்தி அம்மனுக்கு மாசி மாதம் காப்புகட்டி, மகா சிவராத்திரியன்று தேரோட்டத் திருவிழா மிக பிரம் மாண்டமாக நடக்கும்.
தேரோட்டத்தின்போது அம்மன்போல தத்ரூப மாக வேடமிட்டு ஆடிப் பாடியபடி அம்மனுக்கு முன்பாக செல்வார்கள். ஒன்பது நாள் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும். ஒன்பதாம் நாள் பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபடு வார்கள். (சாந்த சொரூபி என்பதால் அம்மனுக்கு எப்போதும் பலிபூசை கிடையாது).
அன்று அம்மனின் காவல், ஏவல் தெய்வமான கருப்புசாமிக்கு ஆட்டுக்கிடா பலிபூசை நடக்கும். பலி கொடுக்கும்போது அந்த ஆட்டின் ரத்தத்தை எடுத்து பொங்கல் சோற்றில் பிசைந்து ஒரு சட்டியில் வைத்திருப் பார்கள். இரவு அந்த ரத்த சோற்றை எடுத்துக் கொண்டு அம்மனைத் தோளில் சுமந்தபடி குலவை யிட்டுக் கொண்டு நகரத்தின் நான்கு வீதிகளிலும் பூசாரி களுடன் பக்தர்களும் ஓட்டமாக ஓடுவார்கள். அந்த நேரத்தில் தெருக்களில் மக்கள் நடமாட்டமிருக்காது. நிசப்த மாக அவரவர் வீடுகளில் இருந்துகொள்வார்கள். அந்த ரத்த சோற்றுச் சட்டியுடன் ஓடிவரும் இளைஞர்கள் அப்படியே கோவில் வளாகத்தில் சாமியுடன் நின்றுவிடுவார்கள். அங்கிருந்து மேற்கே நூறு மீட்டர் தூரத்தில் எல்லை சந்தி என்று சொல்லப்படும் சந்திக்கல் உள்ளது. அங்கு அம்மனின் சூலத்தை மட்டும் எடுத்துச்சென்று, சந்திக் கல்லின்மீது ரத்த சோற்றுச் சட்டியை ஓங்கி அடிப்பார்கள். அதன்பிறகு ஆலயத்திற்கு வருவார்கள். பூசாரிகளின் குடும்பப் பெண்கள் மட்டும் பொங்கலிட்டு படையலுக்குத் தயாராக வைத்திருப்பார்கள். அந்தப் படையலை அம்மன்முன்பு வைத்து வழிபாடுசெய்து திருவிழாவை நிறைவுசெய்வார்கள்.
இந்த ஒன்பது நாட்களும் கோவில் பூசாரிகள், தர்மகர்த்தா உட்பட அம்மன்மேல் பக்தியுள்ள ஆண்- பெண்கள் மிகவும் தூய்மையுடன் இருந்து திருவிழாவில் கலந்துகொள்வது மெய்சிலிர்ப்பை உண்டாக்கும். விரதமிருப்பவர்கள் வீடுகளில் சமைக்கும்போது சாம்பார், பொரியல் போன்றவற்றில் எண்ணெய் ஊற்றி கடுகு போன்றவற்றைப் போட்டுத் தாளிக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட உணவைதான் அந்த ஒன்பது நாட்களும் விரதமிருப்பவர்கள் மட்டுமல்ல; குடும்பத்தினர் அனைவருமே உண்பார்கள்.
கோவிலில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, அமாவாசை போன்ற சிறப்பான நாட்களில் பக்தர்கள் கூட்டம் வந்துகொண்டே இருக்கும். இங்குவரும் பக்தர்கள் எலுமிச்சம் பழம், தேங்காய், பத்தி, சூடம், பூ ஆகியவற்றுடன் வந்து பூசாரிகளிடம் கொடுத்து தங்கள் வேண்டுதல்களைச் சொல்லி அர்ச்சனை செய்வார்கள்.
அதேபோன்று வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.
நவராத்திரியின்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங் காரத்தில் அம்மனின் தோற்றம் பார்ப்போரை பரவசப்படுத்தும். ஆடிமாதக் கடைசி வெள்ளிக்கிழமை பெண்கள் நடத்தும் குத்துவிளக்குப் பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறும்.
முக்குளத்தியம்மன் கோவில் 2002-ஆம் ஆண்டு புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு விரைவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி யுடன், நகரமக்களின் ஒத்துழைப்புடன், பக்தர்களின் ஆதரவு டன் கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த ஆயத்தமாகி வருகிறார்கள்.
அமைவிடம்: திட்டக்குடி பஸ் நிலையத்திலிருந்து ஐந்து நிமிட நடைப்பயண தூரத்தில் உள்ளது முக்குளத்தியம்மன் கோவில். தொடர்புக்கு: 96293 19985.