வ்வூரிலிருந்த புத்த மடத்தில் தங்கி யிருந்தார் புத்தர். அவரிடம் உபதேசம் பெற பொதுமக்கள் வந்தவண்ணமிருந்தனர்.

ஒருநாள்...

ஒரு இளைஞன் மிகுந்த மன வாட்டத் துடனும், முக வாட்டத்துடனும் வந்து புத்தரை வணங்கினான்.

"சாமீ... நான் ரொம்பத் தொலைவுலருந்து உங்களைப் பார்க்க வந்திருக்கேன்!''

Advertisment

"என்ன விஷயம்?''

"சாமீ! எனக்கு வாழ்க்கைல தொடர்ந்து துன்பமும், துயரமுமாத்தான் இருக்கு.

என்னால அதைத் தாங்கமுடியல. செத்துப் போறதைத்தவிர வேற வழியில்லனு நினைக் கிறேன். அதுக்கு முன்னால உங்களைப் பார்த் திட்டு சாகணும்னு நினைச்சு வந்திருக்கேன்.''

Advertisment

"உன் விருப்பம்போல செய்! ஆனா... அதுக்கு முன்னால நான் சொல்றதைச் செய்'' எனச் சொல்லி விட்டு... மடத்துக்குள் போனார் புத்தர்.

இளைஞன் மிக ஆர்வமாக எட்டிப் பார்த்தான்.

ஒரு குவளையில் தண்ணீரும், கைப்பிடி உப்பும் கொண்டுவந்து அவனிடம் கொடுத்த புத்தர். "இந்தக் குவளை நீரில் இந்த உப்பைக் கரைத்துக் குடி'' என்றார்.

அவனும் அப்படியே கரைத்து, அந்த உப்புநீரைக் குடித்தான். இரண்டு மடக்கு நீருக்குமேல் அவனால் குடிக்க முடியவில்லை. அவனது முகம் அஷ்ட கோணலானது.

"சாமீ! என்னால இந்த தண்ணிய குடிக்க முடியல.''

"அப்படின்னா... குடிக்காத!'' எனச் சொல்லிவிட்டு உள்ளே போன புத்தர், கைப்பிடி உப்பை மட்டும் கொண்டு வந்து அவனிடம் கொடுத்து, "என் கூட வா'' என அவனை அழைத்துச் சென்றார்.

மடத்தின் அருகிலிருந்த குளக்கரைக்கு வந்தனர். கரையில் நின்றுகொண்ட புத்தர்... "குளத்துக்குள்ள இறங்கி. தண்ணியில அந்த உப்பைக் கரைச்சிட்டு... அந்தத் தண்ணியைக் குடி'' என்றார்.

உப்பைக் குளத்தில் கரைத்தவன், தாகம் தீர நீரை அள்ளியள்ளிப் பருகினான்.

"கரைக்கு வா'' என்றார்.

வந்தவனிடம் உபதேசித்தார் புத்தர்... "நீ குவளை நீரில் கரைத்தது கைப்பிடி உப்பைதான். ஆனால் அந்த நீரை உன்னால் குடிக்க முடியல. நீ குளத்தில் கரைத்ததும் கைப்பிடி உப்பைதான். ஆனா... குளத்து நீர் எப்பவும்போல சுவையாவே இருந்தது... அப்படித் தானே?''

"ஆமாம். சாமீ! ஆனா நீங்க என்ன சொல்றீங் கன்னு என்னால புரிஞ்சுக்க முடியல!''

ss

"உன்னோட மனசை குவளை நீர் மாதிரி வச்சிருந்தா, துன்பம்- துயரம்ங்கிற உப்பு சேரும்போது... மனசால் தாங்கமுடியாது; உன்னோட மனசை குளத்து நீர் மாதிரி வச்சுக்கிட்டா, துன்பம்- துயரம் அதில் கலந்தாலும் மனசு பாதிக்காது. அதனால் குளத்து நீர் மாதிரி உன்னோட மனசை விசாலமா வச்சுக்க'' என்றார் புத்தர்.

புத்தரின் ஞான ஒளிவீச்சில் அந்த இளைஞன் வாழ்க்கைச் சூட்சுமம் புரிந்தவனாக, புதிய மனிதனாக தன்னை உணர்ந்து, புத்தரை வணங்கிவிட்டுச் சென்றான்.

சிவாஜிக்காக எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், "அவன்தான் மனிதன்' படத் திற்காக கவியரசர் கண்ணதாசன் எழுதி, டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல் "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடா தாரே கண்ணா' எனத் தொடங்கும்.

இந்தப் பாடலில் இறுதிச் சரணத் தின் இறுதி வரிகளில்-

"உள்ளத்திலே உள்ளதுதான்

உலகம் கண்ணா...

இதை உணர்ந்து கொண்டேன்

துன்பமெல்லாம் விலகும் கண்ணா.'

-என்று எழுதியிருப்பார்.

உங்களின் வாழ்க்கையும், உங்களின் உலகமும் உங்களின் உள்ளத்தைப் பொருத்தே அமைகிறது.

பரந்த மனப்பான்மையுடன் வாழ்வோம்...

ஏனென்றால்...

எண்ணம்போல்தானே வாழ்க்கை!

(பெருகும்)