சரஸ்வதி பூஜை 25-10-2021
விஜயதசமி 26-10-2021
முன்னொரு காலத்தில் அசுரர்களின் அரசனாக மகிஷாசுரனும், தேவர்களின் அரசனாக இந்திரனும் இருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் நூறாண்டுகள் பெரும் போர் நடைபெற்றது. அந்தப் போரில் மகாவீரம் படைத்த அசுரர்களால் தேவர் படை தோற்கடிக்கப்பட்டது. இதனால் மகிஷாசுரன்- இந்திரன், சூரியன், அக்னி, வாயு, சந்திரன், எமன், வருணன் மற்றும் பல தேவர்களையும் அகற்றிவிட்டான். அவர்களின் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு ஆட்சிபுரிந்தான். இதனால் அதிகாரமிழந்த தேவர்கள் சொர்க்கத் திலிருந்து விரட்டப்பட்டு, மனிதர்களைப் போல பூமியில் அலையும் நிலை ஏற்பட்டது.
எனவே தேவர்கள் அனைவரும் பிரம்மா, விஷ்ணு, சிவனைச் சரணடைந்து முறையிட்டனர்.
அதைக்கேட்டு மும்மூர்த்திகளும் கடுங்கோபம் கொண்டனர். அவர்களது கோபத்திலிருந்து மகத்தான ஒளி வெளிப் பட்டது. அதுபோன்றே மற்ற தேவர்களின் கோப சரீரங்களிலிருந்தும் மகத்தான ஒளி வெளிப்பட்டது. பின் அந்த பிரமிப்பான ஒளியனைத்தும் ஒன்றுசேர்ந்தது. அந்தப் பேரொளியின் பிழம்பு மலைபோல் ஜொலித் தது. அந்த ஜுவாலையில் திசைகள் அனைத்தும் நிறைந்தன. மும்மூர்த்திகள் மற்றும் அனைத்து தேவர்களின் சரீரங்களிருந்தும் வெளிப்பட்ட அந்த ஆற்றல் வாய்ந்த ஒளியனைத் தும் ஒன்றுசேர்ந்து ஒரு பெண் வடிவம் கொண்டது.
பெண்வடிவம் கொண்ட அம்சம் சிவனுடைய ஒளியினால் அவளது முகம் தோன்றியது. எமனுடைய ஒளியினால் கேசம் தோன்றியது. விஷ்ணுவின் ஒளியி னால் புஜங்கள் தோன்றின. சந்திரனு டைய காந்தியால் இரு ஸ்தனங் கள் தோன்றின. இந்திரனுடைய ஒளியால் இடை தோன்றியது. வருணனுடைய ஒளியால் தொடைகளும் முழங்கால்களும் தோன்றின.
பூமியின் காந்தியால் அவளுக்கு பிருஷ்டபாகம் தோன்றியது. பிரம்மாவின் ஒளியால் இரு பாதங் கள் தோன்றின. சூரிய ஒளியால் கால் விரல்களும், வசுக்களின் ஒளியால் கைவிரல்களும், குபேரனின் ஒளியால் மூக்கும் தோன்றின. பிரஜா பதியின் ஒளியால் பல்வரிசைகள் உண்டாயின. அக்னியின் ஒளியால் மூன்று கண்கள் தோன்றின. சந்தியை களின் ஒளியால் இரு புருவங்களும், வாயுவின் ஒளியால் இரு காதுகளும் தோன்றின. இவ்விதமாக தேவர் களின் ஒளியால் தேவியின் ஆவிர் பாகம் ஏற்பட்டது.
அம்பாளின் ஆயுதங்கள் அனைத்து தேவர்களின் ஒளியால் ஆவிர்பவித்த அந்த தேவி சிறந்த தேஜஸுடன் விளங்கினாள்.
அவளைக்கண்டு, துன்பம் கொண்டி ருந்த தேவர்கள் அனைவரும் பரமானந்தம் அடைந்தனர்.
பரமசிவன் தனது சூலத்திலிருந்து இன்னொரு சூலத்தைத் தோற்றுவித்து அவளுக்குக் கொடுத் தார். திருமால் தனது சக்ராயுதத்திலிருந்து மேலும் ஒரு சக்கரத்தை உருவாக்கி அளித்தார். வருணன் சங்கம் சமர்ப்பித்தார். அக்னி சக்தி ஆயுதத்தை அளித்தார். வாயு பகவான் வில்லையும், பானங் கள் நிறைந்த இரண்டு அம்பறாத்தூணிகளை யும் கொடுத்தார்.
இந்திரன் தனது குலிசத்திலிருந்து தோற்று வித்த வஜ்ராயுதத்தையும், தனது வாகனமான ஐராவத யானையிலிருந்து தோற்றுவித்த மணியையும் தந்தார். எமன் கால் தண்டத்தி னின்று ஒரு தண்டத்தைத் தந்தார். வருணன் பாசத்தை வழங்கினார். பிரம்மா அக்ஷ மாலை யையும் கமண்டலத்தையும் கொடுத்தார். சூரியன் தனது கிரணங் களால் அவளுடைய மலர்க் கால்கள் பிரகாசிக்கும்படி அளித் தார். காலன் கத்தியையும் நிர்மலமான கேடயத் தையும் கொடுத்தார். பாற்கடலரசன் நிர்மல மான ஹாரத்தையும், என்றும் புதிதாய் இருக்கும் ஆடைகளை யும் கொடுத்தார்.
விஸ்வகர்மா சூடா மணி, குண்டலங்கள், கடகங்கள், வெண்மை யான அர்த்த சந்திர பிரபை, எல்லா தோள் களுக்கும் தோள்வளை கள், நிர்மலமான நூபுரங்கள், ஒப்பற்ற அட்டிகைகள், அனைத்து விரல்களுக் கும் ரத்தினமிழைத்த மோதிரங்கள், பிரகாசம் பொருந்திய பரசு, இன்னும் பல அஸ்திரங்களையும் பிளக்க முடியாத கவசங்களையும் கொடுத்தார்.
கடலரசன் வாடாத தாமரை மாலையைத் தலையிலணியவும், மிகவும் சோபையுள்ள மற்றொன்றை மார்பிலணியவும் தந்தார். குபேரன் குறையாத மதுப் பாத்திரத்தைக் கொடுத்தார். ஆதிசேஷன் மகா மணிகளால் அலங்கரிக்கப்பட்ட நாக ஹாரத்தை அளித்தார். மற்றுமுள்ள தேவர்களாலும் அவ்வாறே ஆபரணங்களும் ஆயுதங்களும் அளிக்கப்பட்டன.
இவ்வாறு உற்பவித்த தேவி பயங்கரமான சப்தத்தால் ஆகாயத்தை நிறைத்தாள். அந்த சப்தத்தின் எதிரொலியால் உலகங்கள் கலங்கின. பெருங்கடல்கள் கரைபுரண்டன. பூமி நடுங்கியது. மலைகள் குலுங்கின. சிங்க வாகனத்தில் எழுந்தருளிய தேவியை தேவர்கள் ஜெயஜெய என துதித்தனர்.
மகிஷாசுர சேனைகள் வதம் தேவியின் அடங்கா பேரொலியைக் கேட்ட அசுரர்கள், "ஆஹா... இது என்ன சத்தம்!' என்று ஒலியெழுந்த திக்கை நோக்கி விரைந்தனர்.
அவளது பாரத்தால் பூமி சலிக்கவும், கிரீடம் வானத்தின் முகட்டைத் தொடவும், வில்லின் நாணொலியால் பாதாளம் நடுங்கவும், ஆயிரம் புஜங் களுடன் தோன்றிய தேவியை மகிஷாசுரன் கண்டான்.
அவனது படைத் தளபதியான சிக்ஷிரன் என்னும் அசுரன், சதுரங்க பலங்களுடன் சாமரன், ஆறாயிரம் தேர்களுடன் உதக்ரன், கோடிக்கணக் கான தேர்களுடன் மகாஹனு, ஐந்து கோடி தேர்களுடன் அஸி லோமா, ஆறு லட்சம் தேர்களுடன் பாஷ்கலன், ஆயிரக்கணக்கான யானை, குதிரைப் படைகளும், கோடி தேர்களும் சூழ்ந்த பரிவாரிதன், ஐம்பது கோடி ரதங்களால் சூழப்பெற்ற பிடாலன் போன்ற அசுரர்கள் அந்தப் போரில் ஈடுபட்டனர்.
ஆயிரம் கோடி தேர், யானை, குதிரைகள் சூழ அங்கு மகிஷாசுரன் தோன்றினான். தோமரம், பிந்திபாலம், சக்தி, முசலம், கத்தி, பரசு, பட்டிசம் முதலிய ஆயுதங்களைக் கொண்டு அவன் போரிட்டான். இவ்வளவு ஆயுதங்களையும் சண்டிகாதேவி விளையாட் டாக அழித்தாள்.
யுத்தகளத்தில் அம்பிகை விட்ட பெருமூச்சானது அவளது படைகளாகப் பெருகின. இதுபோல தோன்றிய நூறாயிரம் தேவ சேனைகள் போரில் ஈடுபட்டன. தேவி அசுரர்களின் படையை விளையாட்டாக அழித்தாள்.
மகிஷாசுரனின் சேனாதிபதியான சிஷிரன் தேவியைக் கொல்ல முயன்றான். அவள் அசுரனின் தேரை அழித்து, தேரோட்டியைக் கொன்றுவிட்டு, அவனை நோக்கி சூலத்தை எறிந்தாள். அந்த சூலத்தால் சிக்ஷிரன் நூறு துண்டுகளாக சிதறி மடிந்தான்.
அடுத்து சாமரன் யானைமேல் ஆரோ கணித்து வந்தான். தேவிமீது ஆயுதங்களை எறிந்தான். அவன் தேவியின் சிங்கத்தால் தலை துண்டிக்கப்பட்டான். மரங்களாலும் கற்களாலும் உதக்ரன் கொல்லப்பட்டான். உத்ததனை கதையாலும், பாஷ்கலனை பிந்திபாசத்தாலும், தாமிரனையும் அந்தகனை யும் அம்புகளாலும் கொன்றாள். பிடாலன், துர்த்தரன், துர்முகன் போன்ற அசுரர்களை யும் அம்புகளால் கொன்றாள்.
மகிஷாசுர வதம்
மகிஷாசுரனின் சேனை தேவியால் முழுவதும் அழிக்கப்பட்டபின், அவன் எருமை உருவில் வந்து பயமுறுத்திப் போரிட்டான். அம்பிகையின் சேனையைப் பெருமளவு அழித்தான். அதனால் கோபம்கொண்ட தேவி, அவன்மீது பாசத்தை வீசிக் கட்டினாள். உடனே அவன் எருமை வடிவை விடுத்து சிங்க வடிவம் கொண்டான். அம்பிகை சிங்கத்தின் தலையை வெட்டியபோது புருஷ வடிவம் கொண்டான். அந்த வடிவை அம்பிகை தாக்கியபோது யானை உருக்கொண்டான். யானையின் துதிக்கையை அம்பிகை வாளால் வெட்டினாள். அப்போது மகிஷாசுரன் மீண்டும் எருமை வடிவம் கொண்டான். அதனால் கடுங்கோபம் கொண்ட தேவி, அந்த அசுரன்மீது பாய்ந்து அவனை வீழ்த்தி, அவன் கழுத்தில் காலால் மிதித்து நின்று கொண்டு சூலத்தால் அவனைத் தாக்கினாள்.
அவன் விடுபட முயன்றபோது அவன் தலையை வாளால் வெட்டினாள். இவ்வாறு மகிஷாசுரன் எனும் அரக்கன் தேவியால் கொல்லப்பட்டான். அவனுடன் அனைத்து அசுர சேனைகளும் மடிந்தன.
தேவர்கள் மகரிஷிகளுடன் தேவியைப் போற்றினர். கந்தர்வர்கள் பாடினார். அப்சர கணங்கள் ஆடினர். மகிஷாசுரனைக் கொன்றதால் தேவிக்கு மகிஷாசுரமர்த்தினி என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது.
மகிஷாசுரமர்த்தினி தேவி எப்போதும் நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் சித்தமாக இருக்கிறாள். இதற்கு நன்றிகூறும் விதமாகவும், மக்களின் மனதில் நம்பிக்கை, தெளிவு, புத்துணர்வு ஏற்படவும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசிமாத வளர் பிறையில் நவராத்திரி எனும் விழா கொண்டாடப்படுகிறது. ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபட்டு, பத்தாவது நாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் அம்பிகை வணங்கப்படு கிறாள்.
நவராத்திரி கொண்டாடும் விதம்
நவராத்திரி என்றாலே பெண்கள் பரபரப்படையும் விழாவாகும். இது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. தென் தமிழ்நாட்டிலும், மைசூரிலும் தசரா என்னும் பெயரில் கொண்டாடுகின்றனர். மற்ற இந்திய மாநிலங்களில் துர்க்கா பூஜை என்பர். அதிலும் வங்கத்தில் துர்க்கா பூஜை மிகமிகப் பிரசித்தம்.
நவராத்திரி விழாவானது அளப்பரிய வெற்றியும் செல்வமும் அறிவும் தரும் விழாவாகும். எனினும் ஒவ்வொரு இனத் திற்கும் ஒவ்வொரு வழக்கமுண்டு. சிலர் கொலுப்படியில் பொம்மைகள் வைத்து வழிபடுவர். சில இல்லங்களில் கொலு வைக்காமல் அம்பாள் பூஜைமட்டும் செய்வர். சிலர் அம்பாள் விக்ரகம் வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் என கோவிலில் செய்வதுபோலவே செய்து வணங்குவர். இந்த செயல்பாடுகளின் முறைகள், அவரவர் மாமியார் வீட்டில் எதனைப் பின்பற்றுகிறார்களோ அதனையே பின்பற்றவேண்டும். ஒருவேளை உங்கள் குடும்பத்தில் கொலுவைக்கும் வழக்கம் இல்லாதிருப்பின், உங்கள் குலகுரு அல்லது குடும்பப் பெரியவர்களிடம் ஆலோசித்து அனுமதி பெற்று கொலுவைப்பது நல்லது. இது மிகவும் கவனத்துக்குரியது.
கொலுப்படி விவரம்
பொதுவாக ஒன்பது படிகள் வைப்பது வழக்கம். சிலர் ஐந்து அல்லது மூன்று படிகள் வைப்பர். முதல் படியில் ஓரறிவு உயிரினங்களான மரம், செடி, கொடி பொம்மைகளையும், இரண்டாவது படியில் ஈரறிவு ஜீவன்களான நத்தை போன்றவற்றையும், மூன்றாவது படியில் கரையான், எறும்பு போன்ற பொம்மைகளையும், நான்காவது படியில் நண்டு உள்ளிட்ட பொம்மைகளையும், ஐந்தாவது படியில் பறவை பொம்மைகளையும், ஆறாவது படியில் மனிதர்களின் பொம்மைகளையும், ஏழாவது படியில் சித்தர்களின் பொம்மைகளையும், எட்டாவது படியில் அஷ்டலட்சுமி பொம்மைகளையும், ஒன்பதாவது படியில் அம்பாளின் திருவுருவச் சிலை அல்லது பொம்மையையும் அமைப்பது காலந்தொட்டு இருந்துவரும் வழக்கம்.
கொலு அமைக்காமல் பூஜை செய்பவர்களும் முடிந்தவரை ஒரு சிறிய மண்பாத்திரத்தில் மண் நிரப்பி, அதில் நவதானியங்களைத் தூவி ஒருபுறமாக வைத்து தண்ணீர் தெளித்து வரவும். இந்த நவதானிய வளர்ச்சியின் செழிப்பானது அந்த வருடத்தின் விருத்தியை சொல்லாமல் சொல்லும். லலிதா சகஸ்ரநாமம், அம்பாள் அஷ்டோத்திரம், அபிராமி அந்தாதி, துர்க்கா அஷ்டகம் போன்றவற்றைப் படித்து அம்பிகையை வழிபடவேண்டும்.
நவராத்திரி பிரசாதங்கள்
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் காலையில் அம்பாளுக்குப் பிரியமான ஒவ்வொருவித பிரசாதங்களைத் தயாரித்து வணங்கவும். சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கற்கண்டு பாயசம், அக்கார அடிசல், கேசரி, அவல் பாயசம், முந்திரி- பாதாம் பாயசம், பாசிப்பருப்பு பாயசம், கடலைப் பருப்பு பாயசம், சேமியா- ஜவ்வரிசி பாயசம் என இதுபோன்ற இனிப்புப் பிரசாதம் படைத்து வழிபடலாம். பிரசாதத்தில் இனிப்பு சற்று அதிகமாக இருக்கவேண்டும்.
சாத வகைகளில் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, தயிர்சாதம், வெண்பொங்கல், எள்ளு சாதம் என ஏதாவது ஒன்றைத் தயாரித்து வணங்கலாம். இதில் காரம், புளிப்பு சற்று அதிகமாக இருப்பது அவசியம்.
மாலை வேளைகளில் வெள்ளைக் கொண்டைக்கடலை சுண்டல், கருப்பு கொண்டைக்கடலை சுண்டல், பாசிப்பயறு சுண்டல், கடலைப்பருப்பு சுண்டல், மொச்சை சுண்டல், தட்டாம்பயறு சுண்டல், கொள்ளு சுண்டல் என ஏதேனும் ஒன்றைத் தயாரித்து பூஜைசெய்தபின்பு விநியோகம் செய்யலாம்.
விஜயதசமியன்று அல்லது உங்களால் முடிந்த நாளில், வயதுக்கு வராத ஒரு பெண் குழந்தைக்கு பாவாடை, சட்டை, தாம்பூலம், வளையல், பாசிமணி மாலை, சிறு கண்ணாடி, பொட்டு என இதுபோன்ற பொருட்களைக் கொடுப்பது நலம். அந்த சிறு குழந்தை அவற்றை அணிந்துகொண்டு மகிழும்போது, அம்பாளே மகிழ்ந்த நிலை ஏற்படும்.
இதுபோல சுமங்கலிப் பெண்களுக்கும் புடவை, தாம்பூலம் கொடுத்து, அவர்களை அம்பாளாக பாவித்து பாதபூஜை செய்து, அவர்களிடமிருந்து அட்சதை பெறவேண்டும். கன்னிப் பெண்களுக்கும் பாவாடை, தாவணி, தாம்பூலம் வழங்கி அம்பாளின் ஆசிர்வாதம் பெறலாம்.
இந்த பூஜை செய்வதன்மூலம் அனைத்தும் அளவின்றிக் கிடைக்கும். முதலில் மனநிம்மதி பெறலாம். இது மனிதர்களுக்கு மிகவும் அவசியம். தாராளமாக அன்னம் புழங்கும். தடையில்லா செல்வவளம் கொழிக்கும். புகழ், பதவி உயர்நிலை, லாபம், வாரிசுகளின் நிலை உயர்தல், நல்ல ஆரோக்கியம், மேன்மை என பிறர் கண்களுக்குப் புலப்படும் யோகங்கள் கிட்டும்.
இதுமட்டுமல்ல; நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்தால் வெளியே கூறமுடியாத இன்னல்கள் இற்றுப்போகும். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களுக்கு மேல்நிலையில் உள்ளவர்கள் தரும் சகிக்கமுடியாத துன்பங்கள் மறைந்துவிடும். உங்களைப் பழிவாங்கத் துடிக்கும் எதிரிகள் காணாமல் போய்விடுவர். இந்த விரதத்தைக் கைக்கொண்டு நவராத்திரி கொண்டாடுவோருக்கு வாழ்வுநிலை பலபடி உயரும் என்பது மட்டுமல்ல; வாழ்வின் பாதுகாப் புக்கும் அம்பாள் உத்தரவாதம் அளிப்பாள்.
எல்லா பூஜைகளிலும் முதன்மை வாய்ந்தது நவராத்திரி பூஜைதான். இந்த பூஜை செய்யும்போது உங்கள் மனதில் ஒரு நம்பிக்கையும் தைரியமும் பொங்குவதை நீங்களே உணர்வீர்கள். வீட்டில் ஒரு தெய்வீகம் பரவும். மனம் இலகுவாகும்.
இவ்வளவு சக்திவாய்ந்த விரதத்தை பெரும் பொருட்செலவில்தான் செய்யவேண்டுமென எண்ணவேண்டாம். உங்களால் எது முடிகிறதோ அதனை மிக உள்ளன்போடு அம்பாளுக்கு அர்ப்பணியுங்கள். சிரத்தைதான் முக்கியம்.
அன்புள்ள அவசியம்.
இந்த 2021-ஆம் ஆண்டில் அக்டோபர் 16-ஆம் தேதி அமாவாசை வரும். மறுநாளிலிருந்து ஆரம்பித்து அக்டோபர் 25-ஆம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை கொண்டாடப் படும். ஆயுதபூஜை முடிந்தவுடன் கொலு வைப்பவர்கள் ஒரு பொம்மையை சாஸ்திரத்திற்கு சாய்த்துவைப்பர். பிறகு கொலு பொம்மைகளை பத்திரமாகப் பெட்டியில் அடுக்கிவைப்பர்.
ஒன்பது நாட்கள் பூஜைசெய்ய முடியாதவர்கள் கண்டிப்பாக சரஸ்வதி பூஜை -ஆயுதபூஜை கொண்டாட வேண்டும். புத்தகங்களை அடுக்கி, வெண்ணிறப் புத்தாடை சாற்றி, சரஸ்வதி படத்துடன் அவல், பொரி, கடலை, வெல்லம் சேர்த்து, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், வடை படைத்து வணங்குவர். வட இந்தியாவில் துர்க்கையை பூஜித்து கடலில் கரைக்கும் வழக்கம் உள்ளது.
இப்போதிருந்தே நவராத்திரி பூஜை நிறைவாகக் கொண்டாட வேண்டுமென்று அம்பாளிடம் வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் அவள் அனுமதி கொடுத்தால் மட்டுமே அவளை வணங்கமுடியும். அவள் அருளால் அவன் தாள் பணியமுடியும்.