ஔவை குரு மடத்திலிருந்து தன் தொண்டிற்கான பயணத்தைத் தொடங்கும் பொழுது, அவரை வளர்த்தெடுத்த குரு மடத்தார் சில சடங்குகளைச் செய்து வழி அனுப்புவார்கள். அது என்னவெனில், ஆதித் தமிழ்ச் சமுதாயத்தில் தாய்தான் தன் குடும்பப் பொறுப்புகளைச் செய்துவந்தாள். அதன் நினைவாக பெண் தெய்வத்தை முதன்மை தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆதியிலிருந்து இன்றுவரை இருந்துவருகிறது.
அதனைத் தொடர்ந்தே முருகு வழிபாடும் இருந்து வந்தது.
மலர்ந்த பூக்களில் பெண் தெய்வத்தின் முகம்!
ஆதித்தாய் கடவுளாகக் கொண்டாடப் படும்போது, அதன் உருவகமாக சங்க காலத்தில் செவ்வரளிப் பூக்களைப் பருத்தி நூலால் கோர்த்து, பெண் முகத்தினைப்போல் செய்து வணங்கும் பழக்கமிருந்தது. பெண்ணின் முகமும் அதன் மீது மகுடமும் சேர்ந்தாற்போல் செவ்வரளிப் பூக்களால் கோர்த்து செய்யப்பட்ட உருவ அமைப்பிற்கு "பூக்கொப்பரை' எனப் பெயரிட்டு வணங்கினர்.
இவ்வழிபாடு செய்யப்படும் நாளுக்கு முதல்நாள் செவ்வரளி மொட்டுகளைக் கொணர்ந்து, அவற்றை சிவப்புச் சாயம் ஏற்றப்பட்ட பருத்தி நூலால் கோர்த்து, பெண் ணின் முகத்தைப்போல உருவாக்கியபின், இரவுப்பொழுதில் பருத்தி ஆடையைப் போர்த்தி, அதன்மீது தண்ணீர் தெளித்து வைத்துவிடுவார்கள். மறுநாள் வழிபாட் டன்று, போர்த்திய பருத்தித் துணியை எடுத்துப் பார்த்தால், பூக்கள் மலர்ந்து அழகிய பெண் தெய்வத்தின் முகமாக அது காட்சியளிக்கும். இதற்குத் "தையல் நாயகியாள் பூக் கொப்பரை' என்று பெயர். இதேபோல் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்காக, கடம்ப மலர்களால் ஆண் தெய்வ உருவமானது மகுடம் தரித்ததுபோல் உருவாக்கப்படும் அமைப்பை "முருக பூக்குடலை' என அழைத்து வழிபட்டார்கள்.
மதுப் பொங்கல் படையல்!
இவ்விரு கடவுளர் உருவகங்களை குரு மடத்தின் மையப்பகுதியில் வைப்பார்கள். மா, பலா, வாழை போன்றவற்றின் முதிர்ந்த கனிகளை எடுத்து, அதிலிருந்து உண்ணும் பகுதிகளை எடுத்து, சுத்தமான கல்லுரலில் இட்டு, வெண்காலி மர உலக்கையால் இடிப்பார்கள். மூன்று கனிகளும் நன்றாகக் கசிந்து கலந்தபின், அவற்றை எடுத்து புதிதாக செய்யப்பட்ட மண் குழிசியிலிட்டு, அதன் வாய்ப்பகுதியை சுத்தமான பருத்தித் துணியி னால் மூடி, வடிகட்டி வைத்தவிடுவார்கள். மறுநாள் வெயிலும், பனியும் அதன்மீது விழுமாறு வெட்டவெளியில் வைத்துப் பாதுகாப்பார்கள். அது புளித்துப் பொங்கி பருத்தித் துணிக்கு மேலே வரும். அப்போது அந்தக் குழிசியைச் சாய்த்து, அதிலிருந்து வழியும் திரவத்தை வாயகன்ற மற்றொரு பாத்திரத்தில் வடித்தெடுத்துக் கொள்வார் கள். அதனோடு நீர் சேர்த்து, குத்தியெடுத்த நெல் பச்சரியைச் சேர்த்து பொங்கல் சமைப்பார்கள். அதில் கருப்பட்டி போன்றவற்றைச் சேர்க்கமாட்டார்கள். இவ்வாறு செய்த பொங்கலுக்கு "மதுப் பொங்கல்' என்று பெயர். இதனை எடுத்து தையல்நாயகி தெய்வத்திற்கான பூக்கொப்பரைமுன்பு படையல் செய்வார்கள். இதேபோல் தேனுடன் தினைமாவு கலந்து முருகப் பூக்குடலைமுன்பு படையல் செய்வார்கள். குரு மடத்தாரின் தலைமை குரு, வெள்ளி யாலான வீரத்தண்டை இரண்டு செய்து, தையல்நாயகி தெய்வத்தின் பூக்கொப்பரைக் கடியிலும், வெண்காலி மரத்தால் செய்யப் பட்ட கைத்தடி மற்றும் ++++++ என அடையாள மிட்ட சங்கு முருகு வளையல்களை முருக பூக்குடலைக்கடியிலும் வைப்பார்கள். தாயாரும் மகனும் அருகருகே இருப்பதுபோல் பாவித்து, குரு மடத்திலிருக் கும் பணிப்பெண்கள் அவற் றைச் சுற்றிவந்து கும்மியடித்து கும்மிப் பாட்டு பாடுவார்கள். அக்கும்மிப் பாடல், ஔவை யின் எதிர்கால சேவை குறித்து பாராட்டும் விதத்தில் இருக்கும். கும்மியடித்ததும் அனைவரும் குலகையிட்டு அவர்களை வணங்குவர்.
கண்ணீர்விடாமல் வென்றெடுக்கும் திறமை!
ஔவையானவர் பிறந்தது ஓரிடத்தில், வளர்வது குரு மடத்தில், வாழ்வது தமிழுல கிற்கு என்ற முறையில், அவருக்கு கீழ்க் காணும் வகையில் குரு மடத்தார்கள் மரியாதை செய்துவைப்பார்கள்.
பதின்மூன்றாம் அகவையில் கண்டறியப் பட்ட ஔவை குணத்தார், பெற்றோரால் பூசிக்கப்பட்டு, சுற்றத்தாரால் மலர்மாலை சூட்டப்பட்டு, புடைசூழ குரு மடத்திற்கு அழைத்துவரப்பட்டு, குருவிடம் ஒப்படைக் கப்படுவார். அவரைப் பெற்றெடுத்த தாய்- தந்தையர், இத்தாய்த் திருநாட்டிற்காக ஔவை யானவர் செய்யவிருக்கும் தொண்டினை பெரும்பாக்கியமாகக் கருதினர். அன்றிலிருந்தே குரு மடத்தார்கள், ஔவையாருக்கான தனி மரியாதையுடன் அவரைப் பேணிப் பாதுகாத்து வளர்த்துவந்தனர். அவர்கள் கற்கும் திறனுக்கேற்ப அனைத்துத் துறைகளையும், எவ்வளவு முடியுமோ அவ்வள வும் கற்றுத் தந்துள்ளனர்.
ஔவையார் தங்களது இருபத்தொன் றாவது அகவையில், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் திறம் மிக்கவர்களா கவும், ஆன்றோர் களாகவும், நல்ல சமுதாயத் தொண்டர்களாக வும் உருவாகி விடு வார்கள். குறிப்பாக, சங்ககாலப் பெண்களுக்கு வழிகாட்ட, அவர்களது அறிவுக்கூர்மை, தமிழறிவு, பண்பாடு, ஆளுமை போன்றவற்றை மேம்படுத்தும் பயிற்சியாளராக இருந்து, குரு மடத்தார்கள் அவர்களது திறனை மேம்படுத்துவார்கள். எந்தச் சூழலிலும் கண்ணீர் விடாத அளவுக்கு, அனைத்துச் சூழல்களையும் வென்றெடுக்கும் திறம் படைத்தவர்களாகத் தங்களைத் தயார்ப் படுத்தியிருப்பர். அந்த அளவுக்கு குரு மடத்தார் அவர்களின் அறிவுக் கூர்மையைத் தீட்டியிருப் பார்கள். இதனை நிலைநிறுத்தும் அடையாள மாக, குரு மடத்தின் தலைமை குரு இரண்டு வீரக்கழல் தண்டைகளை ஔவையாருக்கு பரிசளிக்கக் கொணர்ந்திருப்பார். தனது வளர்ப்புப் பிள்ளையானவள், தமிழுலகில் எங்கெல்லாம் தன் தூய பணியால் ஆன்றாண் மையுடன் வெற்றிவாகை சூடவேண்டும் என வாழ்த்தி, அதன் அடையாளமாக வாகை மலர்களாலான மாலையைச் சூட்டி ஆசீர்வதிப்பார்.
ஐந்திணைக்கும் சொந்தமானவள்!
ஔவையானவர் ஒரு திணைக்கு மட்டும் சொந்தமானவள் அல்ல. தமிழகத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளுக்கும் சொந்தமானவள். எனவே, அவளை "புவி மகளே, தமிழ் மகளே' என வாழ்த்தி, மடத்து அனைத்துக் குருமார்களும் ஐந்திணைகளுக்குரிய ஐவகை மலர்களாலான மாலைகளைச் சூட்டி ஆசிர்வதிப்பார்கள். பெரும்பாலும் ஔவை, இல்லற தர்மத்தைத் துறந்த அறவோர் தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்பவராக விளங்கப்போவதால், ஐந்திணைகளில் மலரும் மணமற்ற மலர்களாலான மாலை களையே சூட்டி வாழ்த்துவார்கள்.
பெரும்பாலும் மலையில் குறிஞ்சி மலர்களும், மலைசார்ந்த பகுதிகளில் செங்காந்தள் மலர்களும் மலரும். இவற்றில் அகத்திணைகளில் குறிஞ்சித்திணைக்கு, அக ஒழுக்கத்திற்கு குறிஞ்சி மலர் சுட்டிக் காட்டப்படுவதால், ஔவைக்கு அதே பகுதியில் பூக்கும் செங்காந்தள் பூக்களாலான மாலையைச் சூட்டிவந்தனர்.
இதேபோல, முல்லைத் திணைக்குரிய காடும் காடு சார்ந்த பகுதிகளில் முல்லை மலர்களும், தோன்றி மலர்களும் மலரும். இவற்றில் முல்லை அக ஒழுக்கத்திற்கு குறிப்பிடப்படுவதால், ஔவைக்கு மணமற்ற தோன்றிப் பூக்களாலான மாலைகளைச் சூட்டி வாழ்த்தினர். அடுத்து மருதநிலப் பகுதிகளில் மலரும் தாமரை, குவளை மலர்களில், மணமில்லா குவளை மலர் மாலையை ஔவையாருக்கு அணிவிப்பது வழக்கம். நெய்தல் நிலத்தில் தாழம்பூக்களும், கடம்பப் பூக்களும் மலரும். இவற்றில் தாழம்பூக்கள் அதிக மணமுள்ளவையாதலால், ஔவைக்கு கடம்ப மலர்மாலை அணிவித்து வாழ்த்தி னர்.
பாலை நிலத்தில் மராம்பூ, வாகைப் பூக்கள் மலரும். இவற்றில் புறத்திணைகளில் வெற்றியைக் குறிக்கும் வாகைத்திணைக்குரிய வாகைப்பூமாலை சூடி, தங்களின் வளர்ப்பு மகளான ஔவையை ஒரு வெற்றிச் செல்வி யாகப் பார்த்து, தமிழ்ப் பெண்டிர்களால் பெருந்தெய்வப் பிராட்டியாராக வணங்கப் படும் அளவுக்கு உருவாக்கி, குரு மடத்தார் அழகு பார்த்து ஆராதித்தனர்.
இன்றுவரையிலும், தமிழ் நாட்டுப் பெண்களால் ஆனி, ஆடி, தை, மாசி மாதங் களில் செவ்வாய்ச் சாமியாக, செவ்வாய்க் கிழமை இரவுப்பொழுதினில் ஔவைப் பிராட்டியாரை வணங்கிவரும் பண்பாடு நிலைத்திருக்கிறது. பழைய பண்பாடுகளை நன்குணர்ந்த குடும்பத்தார்கள், இன்றளவும் ஔவைப் பிராட்டியார் வழிபாட்டில் மேற்சொன்ன ஐந்துவகை மலர்களையும் சேகரித்து வணங்கிவரும் பழக்கம் உள்ளது.
கெண்டைக்கால்களில் வீரக்கழல்கள்!
குருமார்கள் இவ்வைந்து வகை மலர்மாலைகளைச் சூட்டி வாழ்த்தியபின் ஔவையார், பிறந்த வீட்டிற்கு மரியாதை செய்யும் வகையில், தையல்நாயகியாரின் பூக்கொப்பரையையும், குரு மடத்தார் கற்றுத்தந்த வீரத்துணிவுமிக்க பயிற்சியின் அடையாளமாக விளங்கும் முருகப் பூக்குடலையையும், குருநாதர் கற்றுத்தந்த முறைப்படி வணங்கி வழிபடுவார்.
ஔவை வணங்கியபின், தலைமை குருநாதர் வீரக்கழல்களை எடுத்து, குருமடத்தில் வளரும் மடவைப் பெண்களிடம் கொடுத்து, அனைவரின் குலகை வாழ்த்தொலியுடன் ஔவையாருக்கு அணியச்செய்வார். ஔவை யின் கெண்டைக் கால்களில் வீரக்கழல்கள் அணிவிக்கப்பட்டதும், வேலப் பூக்குடலை பூக்களைத்தூவி, குருநாதர் ஔவையின் கைகளில் முருகு சங்கு வளைகளை அணிவித்து, வெண்காலியில் வெள்ளைப் பூண்களால் அழகுசெய்யப்பட்ட கைத் தடியை ஔவையிடம் தந்தருள்வார்.
முருகப் பெருமானின் ++++++ ஆறு முத்திரைகள்கொண்ட வளையல் அணிவிப்பதற்கு வளைகாப்பு என்று பெயர். ஔவை செல்லும் இடமெல்லாம் முருகப் பெருமான் வந்து பாதுகாப்பளிப்பார் என்ற நம்பிக்கையுடன் அந்த வளைகாப்பு அணிவிக்கப்படும். இப்பழக்கம், இன்று வரையிலும் பெண்டிர்கள் கருசுமந்து மகப்பேற்றிற்காகத் தங்கள் தாய்வீட்டிற்குச் செல்லும்போது, முருகப்பெருமான் அவர்கள் கூடவே இருந்து தாயையும் சேயையும் காத்தருள்வார் என்ற நம்பிக்கையுடன் செய்யப்படும் சடங்காக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை வளைகாப்பு என்றழைக்கிறோம்.
வரும் இதழில் ஔவையாரை வழியனுப்பி வைப்போம்...
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்