"துறந்தாரின் தூய்மையுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.'
-திருக்குறள்
எல்லை கடந்து நடந்துகொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக்கொள்பவர்கள் இல்வாழ்க்கையில் இருந்தாலும் தூய்மையான துறவிகளைப்போல தூயரே.
காட்டில் கனிந்த பழங்கள் நிறைந்திருந்தன. இதைக்கண்டு மரத்திலேறி சில பழங்களைப் பறித்துத் தின்றான் இளைஞனான நகுலன். மிகக்கனிந்த பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப்பறிக்க முயன்றபோது பாரம் தாங்காமல் கிளை முறிந்தது. சுதாரித்தவன் மற்றொரு கிளையைப் பிடித்துத் தொங்கினான். தரை வெகுகீழே இருந்தது.
பயந்துபோன அவன் கண்களை மூடியபடி, "காப்பாற்றுங்கள்' என்று அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து; வழக்கும் நிலை ஏற்பட்டது. தற்செயலாக அங்குவந்தார் ஒரு முதியவர்.
அவன் தொங்குவது கண்டு சிறிய கல்லை அவன் மீது எறிந்தார். கல் பட்டதால் வலியெடுக்க கீழே பார்த்த வன், "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே.... அறிவில்லையா உமக்கு?'' என்று கோபத்துடன் கேட்டான் அவன். பதில் பேசாமல் மற்றொரு கல்லை எறிந்தார் முதியவர்.
கடுங்கோபமுற்ற நகுலன், "கீழே வந்தால் உம்மைச் சும்மா விடமாட்டேன்...'' என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்.
இன்னும் கோபமுற்ற நகுலன் பெருமுயற்சியெடுத்து கிளைமேல் ஏறி மரத்தின் மையப்பகுதிக்கு வந்தான். தணியாத கோபத்தில் இறங்கிய வன் ஓங்கிய கையுடன், "ஏன் அப்படிச் செய்தீர்? உதவிதானே கேட்டேன்...'' என திட்ட ஆரம்பித்தான்.
முதியவர் மிகவும் அமைதியாக, "அப்பா... உயிர் பயத்திலிருந்த உன் மனம் முதல் கல்லெறிந்தபோது. பயம் நீங்கி என்மீது கவனம் திரும்பியது.
மற்ற கல் கோபத்தை உருவாக்கினாலும், வீசிய என்னை ஏதேனும் செய்யவேண்டுமென கவனத்தை திசைதிருப்பி ஒருமுகப்படுத்தியது. உனக்குள் இருக்கும் பலத்தைத் திரட்டி, நீயே முயன்று மரத்திலிருந்து இறங்கி என்முன் உயிருடன் நிற்பதற்கான உத்வேகத்தை அந்த கல்லெறிதானே தந்தது'' என்றார். நகுலனுக்குப் புரிந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி சொன்னான்.
"துயரம், அவமானம், தோல்விகள் எல்லாமே வாழ்க்கை முன்னேற்றத்தின் அடிக்கல் மட்டுமல்ல; ஏணிப் படிக்கட்டுகளும் கூடத்தான்'' என்றார் முதியவர்.
பின்னடைவுகள் பல சந்தித்து, முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் உள்ள தடைக்கற்களை வெற்றிப் படிக்கற்களாய் மாற்றியருளும் உன்னதமான ஒரு திருத்தலம்தான் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: அமிர்தகடேஸ்வரர்.
இறைவி: வித்யூஜோதி நாயகியம்மை.
உற்சவர்: சோமாஸ்கந்தர்.
விசேஷ மூர்த்தி: கழுகு வாகனத்தில் சனிபகவான்.
ஆகமம், பூஜை: காமிகம்.
புராணப் பெயர்: திருக்கடம்பூர்.
ஊர்: மேலக்கடம்பூர்.
தீர்த்தம்: சக்தி தீர்த்தம், சிவதீர்த்தம்.
தலவிருட்சம்: கடம்ப மரம்.
சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவத் தலங்களுள், காவிரி வடக்கரைத் தலங்களில் 34-ஆவது தலமாகத் திகழ்கிறது. அப்பர், சம்பந்தரால் பாடப்பட்ட பெருமையுடயது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்பு களுடன் இன்னும் பல்வேறு சிறப்புக் களைப் பெற்றதொரு திருத்தலம்தான் அமிர்த கடேஸ்வரர் திருக்கோவில்.
"நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன் கடன் அடியேனைத் தாங்குதல்
என் கடன்பணி செய்து கிடப்பதே.'
-அப்பர்.
"பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக்கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே'.
தமிழகக் கோவில்கள், பெருங்கோவில், மாடக்கோவில், தாழக்கோவில், கரக் கோவில், ஞாழற்கோவில், கொகுடிக் கோவில், ஆலக்கோவில், மணிக்கோவில், மலைக் கோவில், இளங்கோவில் எனும் பத்து வகை கட்டுமானங்களைக் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளன. அவற்றுள் இக்கோவிலா னது "கரக்கோவில்' வகையைச் சார்ந்ததாகும். இந்த அமைப்பு தமிழ்நாட்டில் இங்கு மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜராஜ சோழனின் பரந்துவிரிந்த சோழ தேசத்தின் ஒரு சிற்றரசாக மேலக்கடம்பூர் விளங்கியது. இப்பகுதியை சம்புவராயர்கள் ஆட்சிசெய்தனர். மேலக்கடம்பூர் என்றதும் எங்கேயோ கேள்விப் பட்ட ஊர் போன்று தோன்றுகின்றதா?
வந்தியத்தேவன், நந்தினி, பழவேட்டரையர் கள், வீர நாராயண ஏரி, கடம்பூர் மாளிகை, ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகள் (ரவிதாசன், பரமேஸ்வரன், சோமன்); கடம்பூர் சம்புவரையர், அவர் மகன் கந்த மாறன், மகள் மணிமேகலை மனக்கண்முன் வருவோர்கள். ஒருநாள் இரவு அந்த கடம்பூர் மாளிகையில் வல்லவரையன், வந்தியத்தேவன் நள்ளிரவில் திருட்டுத் தனமாகப் பார்த்த தேவராளன், தேவராட்டி வெறி நடனம், குரவைக் கூத்து, மதுராந்தகன் பங்கேற்பு, ரகசிய மந்திர ஆலோசனைக் கூட்டம், அந்த இருளில் சுவற்றின்மேல் மங்கிய நிலவொளியில் தோன்றி மறைந்த முன்குடுமி வைணவன் ஆழ்வார்க்கடியான் தலை... இவையெல்லாம் "பொன்னியின் செல்வன்' வரலாற்று நாவலில் இடம்பெற்றவை.
அதில் (கீழ்க்கடம்பூர், கடம்பூர், காட்டுமன்னார் கோவில்- மேலக்கடம்பூர்) இடம்பெற்ற எல்லைப் பகுதிக்குட்பட்ட இடத்தில்தான் மேலக்கடம்பூர் அமிர்த கடேஸ்வரர் கோவில் உள்ளது. கி.பி. 6 முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை திருக்கடம்பூர் என்றிருந்தது. அதன்பின் மேலக்கடம்பூர் என்றானது.
தலவரலாறு
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்து அமுதக் கலசம் பெற்றனர்.
முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடாமல் அமுதுண்ண அமர்ந்தனர்.
இதனால் கோபம்கொண்ட விநாயகர் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதக்கலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்துவந்தார் வழியில் கலசத்திலிருந்து ஒரு துளி அமிர்தம் கடம்பவனக் காட்டில் விழுந்து சுயம்பு லிங்கமாக மாறியது. அந்த சிவலிங்கமே இவ்வாலயத்தில் மூலவராக வீற்றிருக்கும் அமிர்தகடேஸ்வரர் ஆவார். கடம்பவனமே "கடம்பூர்' என்றானது.
இப்பகுதியை ஆண்ட சம்புவராயர்களாலோ, ராஜராஜ சோழனாலோ இவ்வாலயம் கட்டப்படவில்லை. சிற்பக்கலையிலும் இசையிலும் அதிக ஆர்வம்கொண்ட சாளுக்கிய வம்சத்து சோழ அரசனான முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி. 1,100-ல் கட்டப்பட்டதாக தலபுராணம் சொல்கிறது. நான்கு சக்கரங்களுடன். கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டப்பெற்ற அழகிய தேர்வடிவக் கோவில். மேலும் கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் முண்டா மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பு என்று பெயர். கரம்+கோவில் கடம்பினைத் தலமரமாகக்கொண்ட கரக்கோவில் என பொருள் தருகிறது. வடமொழியில் விஜயம் என குறிப்பிடப்படும் ஒரே கோவில் இதுதான்.
தேவர்களின் தலைவனான இந்திரனின் தாய் அதிதி, தினந்தோறும் இவ்வாலயம் வந்து இத்தல இறைவனைப் பூஜித்துவந்தாள். தன் தாய் தினமும் பூலோகம் சென்றுவருவதைப் பார்த்த இந்திரன், தன் தாயின் கடமையை எளிதாக்க எண்ணி இத்தல இறைவனையும், பிற தெய்வங்களையும் அழகிய தேரில் வைத்து தேவலோகம் எடுத்துச்செல்ல முற்பட்டான். தல விநாயகரின் அனுமதி பெறாமல் செய்ய முற்பட்டதால், விநாயகர் விசுவரூபம் எடுத்து அவன் தேரினைக் காலால் அழுத்த, தேர் கல்லாய் சமைந்தது.
பிழையை உணர்ந்த இந்திரன் விமோசனம் கோரினான்.
அதற்கு விநாயகர், "ஒரு நாழிகைப் பொழுதில் ஒரு கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தேரை விடுகிறேன்'' என்றார். இந்திரன் செய்த ஒவ்வொரு லிங்கமும் சேதமடைந்தது. இதையடுத்து அவன் ஈசனை வழிபட, அவரோ, "ஒரு கோடி முறை என் நாமத்தை உச்சரித்து ஜெபம் செய். பின்னர் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்'' என்றார். இந்திரனும் அப்படியே செய்தான். இதையடுத்து இந்திரனுக்குக் காட்சிதந்த ஈசன், "உன் தாய்க்கு பதிலாக தினமும் நீயே இங்குவந்து என்னைப் பூஜிக்கலாம். அதற் கான பலன் உன் தாய்க்குக் கிடைக்கும்'' என்றருளினார். இந்திரன் பிரதிஷ்டை செய்த லிங்கம் "ருத்ர கோடீஸ்வரர்' என்ற பெயரில் இவ்வாலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கீழக் கடம்பூரில் உள்ளது. அப்பர் தேவாரத்தில், "கடம்பூர் இளங்கோயில் தன்னில் கயிலாய நாத னைக் காணலாமே' எனப் போற்றுகிறார்.
சிறப்பம்சங்கள்
* சுயம்பு மூர்த்தியான இவ்வாலய சிவலிங்கம் நவபாஷாணத்தால் உருவானதாகக் கல்வெட்டு கூறுகிறது.
* இறைவி வித்யூஜோதி நாயகி அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாக வும், உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமி யாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சிதருகிறாள். இதனால் இவளை "வித்யூஜோதி நாயகி' (வித்யா- சரஸ்வதி, ஜோதி- லட்சுமி, நாயகி- துர்க்கை) என்றழைக்கின்றனர். இவளுக்கு ஜோதி மின்னம்மை என்றும் பெயருண்டு.
* இந்திரனின் ஆணவத்தைப் போக்கிய விநாயகர் ஆரவார விநாயகர் என்னும் பெயருடன் தனிச்சந்நிதியில் உள்ளார். அமிர்த கலசத்தைத் தூக்கிச் சென்றும், தேர்ச் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இந்தப் பெயர் வந்ததாம். இவர் தலையை இடப்புறமாக சாய்த்தபடி கோபமுகத்துடன் காட்சி தருகிறார். இந்த விநாயகர் சிலை வாதாபியிலிருந்து (சாளுக்கிய தேசம்) நரசிம்மவர்மன் காலத்தில் அவனது சேனாபதி பரஞ்சோதியால் (பின்னர் சிறுத்தொண்டர்) கொண்டுவரப்பட்டதாம்.
ப் செவ்வாய் பகவான் வழிபட்டதோடு அவரது அதிதேவதையாகிய முருகப்பெருமான் இங்கு வழிபட்டு வில் பெற்ற சிறப்புத் தலமாகும். எனவே இத்திருத்தலம் செவ்வாய் தோஷப் பரிகாரத்திற்குச் சிறந்ததாகும். தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தி ஒவ்வொரு மாதமும் பிரதோஷ உற்சவம் மிகவும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப் படுகிறது. இதற்கென்று தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி என்னும் உற்சவமூர்த்தி உள்ளது. இந்த மூர்த்தி வேறெந்த ஆலயத்தி லும் காணக்கிடைக்காத அபூர்வ பஞ்ச லோக சிலையில் ஆனதாகும். பிரதோஷ உற்சவத் தின்போது மட்டும் இந்த மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்படுகிறது.
இந்த மூர்த்தியானவர், செவ்வக பீடத்தில் மையமாகவுள்ள தாமரை மலரின் நடுவே, மேல்நோக்கிப் பார்க்கும் காளையின்மீது சதுர தாண்டவ கோலத்தில் காட்சிதருகிறார்.
வீசிய பத்து கரங்களில் வீரவெண்டயம், பிரம்மகபாலம், அரவம், கட்டங்கம், தண்டம், குத்தீட்டி ஏந்தியுமுள்ளார். இவரது வலக்கை கஜஹஸ்த அமைப்பிலும் இடக்கை பிரபஞ்சம் தாங்கியும் உள்ளது.
இந்த தாண்டவமூர்த்தியின் காலடியில் திருமால் மத்தளம் இசைக்க, வீரபத்திரர் சூலம்கொண்டு ஆட, விநாயகர் பைரவர், நந்தி, மகாகாளர், பிருங்கி, காரைக்கால் அம்மையார், சிவகணங்கள் மற்றும் நாட்டியப் பெண்கள் சேர்ந்தாட, முருகன் மயில்மீது பறக்க, கந்தவர்கள் மலர்தூவ என்று எண்ணற்ற சிற்பங்களும் வடிக்கப் பட்டுள்ளன. திருவாசியில் அக்னிக்கு பதிலாக அரச இலைகளும், தலைக்குப் பின்புறம் ஒளிவட்டமும், மணிமுடியும் வங்கதேச பாணியில் அமைந்துள்ளது. சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள இச்சிலை, பிரளய காலத்தில் சிவன் நந்திமீது நின்று சதுரத் தாண்டவம் ஆடியதைக் குறிக்கிறது. உற்சவமூர்த்தியான இவரை பிரதோஷம் அன்று மட்டுமே தரிசிக்க இயலும்.
முதலாம் ராஜேந்திரன் தனது வடநாட்டுப் படையெடுப்பின்போது பாலர் தேசத்து மகிபாலரை வென்று அங்கிருந்த இம்மூர்த்தியினை வெற்றிச் சின்னமாகக் கொண்டுவந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
* பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின்மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது இரவில் சந்திர ஒளி விழுவதும் சிறப்பு.
* சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. இராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தைக் கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர் இராமாயண காலத்திற்கும் முற்பட்டவர். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
* இரண்டு கால பூஜைகள் அனுதினமும் நடக்கின்ற இத்தலத்தின் சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆரூத்ரா தரிசனம் மற்றும் புரட்டாசியில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய உற்சவம் போன்றவை நடைபெறு கின்றன.
* தேர்வடிவக் கோவில் கி.பி. 1113-ல் முதலாம் குலோத்துங்க சோழனால் 43-ஆம் ஆட்சியாண்டில் கட்டப்பெற்றது. பல வருடங்களுக்குமுன் தேவகோட்டை செட்டியார்கள் திருப்பணியின்போது, ஈசானிய மூலையிலிருந்து அம்மன் சந்நிதி உட்பிராகாரத்தில் தெற்கு நோக்கிக் கட்டப்பெற்றது. இக்கோவிலில் பல கல்வெட்டுகள் படியெடுக்கப் பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானது "புகழ் மாது விளங்க' எனத் தொடங்கும் முதலாம் குலோத்துங்க சோனுடையது. இக்கோவிலைக் கட்டுவித்து இறையிலி நிலங்கள் வழங்கி யமை குறித்தும், மற்றொன்று கடம்பூர். கோவிலைச் சேர்ந்த மகேஸ்வரர்கள் ஆறு பொற்காசு களைப் பெற்றுக்கொண்டு நந்தா விளக்கெரியவிட ஒப்புக் கொண்டமை குறித்தும், மேலும் கடம்பூரினை "உத்தம சதுர்வேதி மங்கலம்' என சிறப்புப் பெயர்பெற்ற தகவல்களையும் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
* நவகிரகங்கள் ஒவ்வொரு நாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படை யில் சிவன் ஒவ்வொரு நாளும் அந்தந்த கிரகங் களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரமணிந்து தரிசனம் தருகிறார். எனவே இத்தலம் கிரக தோஷப் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
* துர்க்கை கட்டைவிரல் இல்லாமல் சங்கு, சக்கரத்துடன் சிம்ம வாகினியாகவும் மகிஷாசுரமர்த்தினியாகவும் இருக்கிறாள். இவளுக்குக் கீழே மேருமலை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் உள்ளது.
* திருஞான சம்பந்தர், திருநாவுக் கரசர், மாணிக்கவாசகர், அருணகிரி நாதர், இராமலிங்க அடிகளார், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம், தண்டபாணி சுவாமிகள் போன்ற அடியார்கள் பாடி வழிபட்ட தலம்.
* சிவபெருமானை கயிலைமலைக்குச் சென்று வழிபடும் தேவர்கள், எண்குல மலை தேவர்கள், அதன் தலைவன் மலையரசன், திங்கள், கதிரவன், தேவர்தலைவன், சித்தர்கள் முதலானோர் "கடம்பூர் கோவிலும் கயிலை ஒத்தது' என இங்குவந்து வழிபாடு செய்து பலன் பெற்றார்கள் என்று செயல் அலுவலர் கூறுகிறார்.
* மலைநாடு கண்ட சோழனின் 36-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட காசில் இரண்டு மீன்களும், ஒரு புலி அமர்ந்திருப்பதும், ஒரு வில்லும், இரண்டு விளக்குகளும் உள்ளன. இக்காசில் மலைநாடு கொண்ட சோழன் என பொறிக்கப்பட்டுள்ளது. இது மலபார் பகுதிகளை வென்றபோது வெளியிடப்பட்டதாகும். இக்காசின் மறுபக்கம் தட்டையாக உள்ளது.
* இக்கோவிலின் அதிட்டானம் பத்மபந்தமாகவும், உபபீடமானது மஞ்ச பத்ரமாகவும் உள்ளது.
* உபானம், உபோபானம், பத்மோபானம், சூத்ரகம்பு, ஜகதி, ஊர்த்துவ பத்மம், கம்பு, அத பத்மம், கடக வருத்தம், குமுதம், கண்டம், ஊர்த்துவகம்பு, அத பத்மம், மகாபட்டிகை, வாஜனம் என்னும் 18 அதிட்டான அங்கங்களுடன் திகழ்கின்ற ஆலயம்தான் மேலக்கடம்பூர் சிவாலயம்.
* கங்கைக்கு சமமான புண்ணிய தீர்த்தம் சக்தி தீர்த்தம். இங்கு அஸ்தியினைக் கரைத்து புண்ணியம் பெறலாம்.
* கடம்பவனத் தலமாதலால் சதய நட்சத்திர அன்பர்கள் வழிபட வேண்டிய தலம்.
* முருகப்பெருமான் சூரனை அழிக்கவில் பெற்ற தலம். இத்தலத்தில் வில்லேந்திய வேலவன் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் அருட்காட்சி தருகிறார்.
* ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் விளங்கும் இவ்வாலயத்தில், சிவாலயத் துக்குரிய அனைத்தும் சந்நிதிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.
"மிர்தம்' என்றால் மரணம்; "அமிர்தம்' என்றால் மரணமற்ற நிலை. அதனால் அமிர்தத்தால் உருவான அமிர்தகடேஸ்வரர் ஆயுள் பலம் தருவார் என்பதால், பன்னிரு ராசி நேயர்களும் பலன் பெறும் வகையில் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதா பிஷேகம் போன்ற நிகழ்வுகள் நடத்த ஏற்ற தலம். தலையெழுத்தை நல்லபடியாகவும், வருங்காலம் சிறப்பாக வாழவும் எமன், சித்ரகுப்தனுடன் சிவலிங்க வழிபாடு செய்யும் பிரம்மனிடம் விண்ணப்பம் வைக்கலாம் என்றும்; கல்வி கேள்விகளில் சிறப்படைய காளை வாகனத்தில் அமர்ந்திருக் கும் தட்சிணாமூர்த்தி மற்றும் வீணாதர தட்சிணாமூர்த்தியிடம் விண்ணப்பம் வைக்கலாம் என்றும்; தலவிருட்சம் கடம்ப மரம்- சதய நட்சத்திர விருட்சம் என்பதால் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மகர, கும்ப ராசி நேயர்கள், சனிக்கிழமை பிறந்த வர்கள் கழுகு வாகனத்தில் அருளும் சனி பகவானிடம் விண்ணப்பிக்கலாம் என்றும்; திருமணம், புத்திரதோஷம் உள்ளவர்கள் அம்பாளுக்கு மஞ்சள் கிழக்கு வைத்து விண்ணப்பிக்கலாம் என்றும், மொத்தத்தில் சகல தோஷமும் நிவர்த்தியாகும் வகையில் தங்களது மனபாரத்தை இறக்கிவைத்து மகிழ்ச்சியை வரவழைக்கின்ற தலம் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய பிரதான அர்ச்சகரான சரவண சிவம் சிவாச்சாரியர்.
மேலும் அவர் கூறுகையில்- "பொன்னியின் செல்வன்' வரலாற்று நிகழ்களமான இத்தல விமானம் முழுக்க இராமாயணம், சிவனின் திருவிளையாடல்கள், நாயன்மார் கதைகள், கிருஷ்ணலீலைகள், விதவிதமான யாளி மிருகங்கள், கட்டை விரல் உயரமே உள்ள சிங்கங்கள் என அசத்தலான சிற்பங்கள் உள்ளன.
எறும்புக்கு சர்க்கரை பிடிக்கும்; அதற்காக மூச்சு திணறும் வகையில் தலைமீது கொண்டு போய் கொட்டமுடியுமா? காண்போர்க்கு அந்த நிலைதான். இதையெல்லாம் மனிதர்கள் தான் செய்திருப்பார்களா? அப்படி செய்திருந் தால் அவர்கள் எப்படிப்பட்ட கலாரசிகர் களாக இருந்திருப்பார்கள்! தானும் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்பதை சாளுக்கிய சோழ வம்சத்தில் வந்த முதலாம் குலோத்துங்க சோழன் நிரூபித்துவிட்டாரே! நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்து இத்தலத்தை இதுவரை பார்க்கவில்லையென்றால் அதைவிட பேரிழப்பு வேறு ஏதுமில்லை என்கிறார்.
காலை 8.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் 6.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத்தொடர்புக்கு: செயல் அலுவலர் ஆலய காரியதரிசி, ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் திருக்கோவில், மேலக்கடம்பூர் (அஞ்சல்), காட்டுமன்னார் கோவில் வட்டம், கடலூர் மாவட்டம்- 608 304.
பூஜை விவரங்களுக்கு: சரவணசிவம் சிவாச்சாரியார், அலைபேசி: 77087 68804.
அமைவிடம்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலிலிருந்து எய்யலூர் செல்லும் சாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு, முட்டம் வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேலக்கடம்பூர். பேருந்து வசதி உண்டு.
அர்ச்சகரிடம் தகவல் தெரிவித்து செல்லவும். பூஜைப் பொருள்கள் கொண்டு செல்லவும். அருகில் கடைகள் இல்லை.
படங்கள்: போட்டோ கருணா