"பெருமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்து
மக்கட்பேறு அல்ல பிற.'
(குறள்- 61)
பல பேறுகளைப் பெற்றிருந்தாலும் மக்கட்பேறு சிறந்தது என்னும் பொருளில், திருவள்ளுவர் சொன்னதன் வண்ணம், இந்திரன், குபேரன் போன்ற தேவர்களுக்கு ஒப்பான ஐஸ்வர்யங்களை உடையவரும், பேராற்றல் படைத்தவரும், போரில் எதிரிகளை அழிப்பதில் வல்லவராகவும், நீதிநெறி தவறாமல் அரசாள்வதில் சிறந்தவராகவும், பல சாஸ்திரங்களைக் கற்றவராகவும் விளங்கிய தர்மாத்மாவான தசரத மகா சக்கரவர்த்திக்கு, இக்ஷ்வாகு வம்சத்தைக் காக்க தனக்கு பிள்ளைகள் இல்லையே என்னும் கவலை வெகுவாக வாட்டியது. ஒருநாள் தன் மனக்கவலையை மந்திரிகளின் முதல்வரான சுமந்திரரிடம் தெரிவித்தார். மன்னரைப் பலவாறு தேற்றிய மந்திரி, தான் முன்பு சனத்குமாரர் மூலம் அறிந்த கதையின் விளக்கத்தைக் கூறினார்.
திரேதாயுகத்தில் அங்க நாட்டை யாண்ட ரோமபாதர் என்னும் மன்னரின் ஆட்சியின்போது, மன்னன் நீதிநெறி தவறி அதர்மத்தைக் கடைப்பிடித்ததால், வான்மழை பெய்யாமல் நாட்டில் வறுமையும் பஞ்சமும் ஏற்பட்டது. அந்த சமயத்தில் நாட்டின் அவல நிலைமையை மாற்றவும், வான்மழையைப் பெய்விக்கவும் வால்மீகி இராமாயணத்தின் பாலகாண்டதில்-
"ருஸ்யஸ்ருங்கோ வநசரஸ்
தப ஸ்வாத்யாயதத்பர
அநபிக்ஞ ஸ தாரீணாம்
விஷயாணாம் ஸுகஸ்ய ச'
எனக் கூறியவண்ணம் நற்பண்பு களுடன் வாழ்ந்த, வேத வித்தகர் ரிஷ்ய சிருங்க மகரிஷியை முறைப்படி அழைத்து வந்து, அவரது காலடி அங்கதேசத்தில் பட்டவுடன் நாட்டில் மழைபெய்து வறுமை நீங்கிய கதையை விளக்கத்துடன் தசரத மகாசக்கரவர்த்திக்கு மந்திரி எடுத்துரைத் தார்.
மன்னரின் மனக்கவலையைப் போக்க காஷ்யப (காச்யபர்) மகரிஷியின் பேரனும், விபாண்டக மகரிஷியின் புதல்வரு மான ரிஷ்யசிருங்க மகரிஷியை, மிக்க மரியாதையுடன் அழைத்துவந்து வேண்டிய யாகங்களை முறைப்படி செய்யலாமென ராஜரிஷியான வசிஷ்டரால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி வசந்த காலத்தில் அயோத்தி மாநகரின் ச்ரயூ நதியின் வடக்குக் கரையில் மிகப்பெரிய யாகசாலை அமைக்கப்பட்டு, தனது சகல பாவங்களைப் போக்கக்கூடிய அசுவமேத யாகத்தை, அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட வண்ணம் பல முனிவர்கள், வேத விற்பனர் கள் (ரித்விக்குகள்) ரிஷ்ய சிருங்க மகரிஷி தலைமையில், காசிதேசம், அங்க தேசம், சிந்து தேசம், சௌராஷ்டிர தேசம்,
தென்னாட்டு தேசம் என பலநாட்டு மன்னர் களின் முன்னிலையில் நடத்தப்பட்டது.
அசுவமேத யாகத்திற்குப்பிறகு புத்திர சந்தானத்தை (குழந்தை செல்வம்) தரக்கூடிய "புத்திரகாமேஷ்டி' யாகத்தை ரிஷ்யசிருங்க மகரிஷியால் வேத முறைப்படி சிறப்பாக நடத்தப்பட்டது. இதைக் கவிச்சக்கரவர்த்தி கம்பன்-
"முகமல ரொளிர்தர மொய்த்து வானுளோர்
அகவிரை நறுமலர் தூவி யார்த்தெழத்
தகவுடை முனியுமத் தழ- னாப்பனே
மகவரு ளாகுதி வழங்கி னானரோ' (266)
எனப் பாடியுள்ளார்.
(ரிஷ்யசிருங்க மகரிஷியை கம்பன் "கலைக்கோட்டு முனி' என அழைக்கிறார்).
புத்திரகாமேஷ்டி யாகத்தின் பலனாக சித்திரை மாதம், சுக்லபட்ச நவமி, புனர்பூச நட்சத்திரம்கூடிய சுபதினத்தில் பகவான் இராமரும்,
அடுத்து லட்சுமணர், பரதர், சத்ருக்னர் என பிள்ளைகளும் பிறந்தனர். இதனால் தசரத மகாசக்கரவர்த்தி மகிழ்ச்சியடைந்தார்.
விபாண்டக மகரிஷியும், ரிஷ்யசிருங்க மகரிஷியும் தவம்புரிந்த இடம்தான் இன்றைய கர்நாடக மாநிலத் தில் சிக்மகளூர் மாவட்டத்திலுள்ள புனித சிருங்கேரி மலை. ரிஷ்யசிருங்க மகரிஷி வாழ்ந்த இடமென்ப தால், பின்னாளில் இவ்விடத்திற்கு சிருங்கேரி என்னும் பெயர் வந்தது. இத்தலத்தில்தான், ஸ்ரீ பவானி மலஹா நிகரேச்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. விபாண்டக மகரிஷி மூலவர் மலஹாநிகரேச்வரர் லிங்கத் திருமேனியுடன் இரண்டறக் கலந்தார். பழமையும் சிறப்பும்வாய்ந்த இக்கோவிலுள் மகா கும்பாபிஷேகத்தை சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் தனது சீடரான ஸ்ரீவிதுசேகர பாரதீ ஸ்வாமிகளுடன் அண்மையில் வேதமுறைப்படி சிறப்பாக நடத்தினார்.
விபாண்டக மகரிஷியும், ரிஷ்யசிருங்க மகரிஷியும் தவம்புரிந்து வாழ்ந்த இந்தப் புனித இடத்தில்தான் ஸ்ரீ ஆதிசங்கரர் தனது முதல் மடத்தை ஸ்தாபித் தார். சிருங்கேரியில் ஸ்ரீ சாரதாம்பாள் கொலு வீற்றிருக்கும் கோவில் இடத்திலிருந்து சற்று தொலைவில் 100 படிக்கட்டுகள்கொண்ட சிறிய குன்றின் மேல்தான் ஸ்ரீபவானி சமேத ஸ்ரீ மல மஹாதீகரேச்வரர் திருக்கோவில் திரேதாயுத காலத்திலிருந்து அமைந்துள்ளது. "மலம்' என்றால் பாவம் அல்லது மனதிலிருக்கும் அழுக்கு. ஹானிகரம் என்றால் நீக்குதல் என்று பொருள். நம்முடைய பாவங்களை நீக்குபவராதலால் மலஹாநிகரேச்வரர் என்னும் திருப்பெயருடன் பக்தர்களுக்கு இங்கு அருள்பாலிக்கிறார். விபாண்டக மகரிஷிக்குப் பின்பு ரிஷ்யசிருங்க மகரிஷி பூஜித்த புராணகால பழமை வாய்ந்த இத்திருக்கோவில், இன்று சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சார்பில் நிர்வகித்து வரப்படுகிறது.
பல நூற்றாண்டுகளுக்குமுன்பு மரத்தினாலான கோவிலாக இருந்ததை விஜயநகர சாம்ராஜ்ஜிய மன்னர்களின் காலத்தில் கற்கோவிலாகக் கட்டப்பட்டது. அதன்பின்பு கௌதி நாயக்க மன்னர்களின் (ஃங்ப்ஹக்ண்) ஆட்சியின்போது திருப்பணிகளும் கோவில் விஸ்தரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக சோமசேகர நாயக்கர் மன்னர் (1664-1675) தனது ஆட்சிக்காலத்தில், பல திருப்பணிகளையும், கோவிலை நிர்வகிப்பதற்காக பல கிராமங்களை யும் தானமாகக் கொடுத்தார். அதன் பின்பு மைசூர் பகுதியை ஆண்ட ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆகியோர் அன்றைய சிருங்கேரி ஜகத்குரு ஸ்வாமிகளிடம் மிகுந்த பக்தியையும், மரியாதையையும் கொண்டிருந்ததால், மடத்திற்கும் இக்கோவிலுக்கும் திருப்பணிகளைச் செய்துள்ளனர். அதேபோன்று மைசூர் சமஸ்தானப் பகுதியை ஆண்ட சாமராஜ உடையார் வம்சத்தினர் திருப்பணிகளைச் செய்துள்ளனர். அந்த காலகட்டத்தில் சமஸ்தான ஸ்தானிகராக (திவான்) இருந்த பூர்ணய்யா 1803-ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத் தைப் போக்க, சிருங்கேரி பீடத்தின் 30-ஆவது பீடாதிபதி மூன்றாம் ஸ்ரீ சச்சிதானந்த பாரதீ ஸ்வாமிகளை (1770-1814) வேண்ட அவரால் மலஹா நிகரேச்வரர் கோவிலில் சிறப்புப் பூஜையும், ஜெபமும் செய்யப்பட்டது.
இதன் பயனாக நாடு செழிந்த போது திவான் பூர்ணய்யா ஸ்ரீ ஸ்வாமி களுக்கு தன் நன்றியைத் தெரிவித்து, "ஆசார்யாள் தாம் செய்த பிரார்த்தனை யின்மூலம் ஸ்ரீ மலஹாநிகரேசுவரரு டைய திவ்யானுக்ரஹம் கிடைக்க செய்ததால் நாடு செழிப்புற்றது என கடிதம் எழுதினார்.
கோவில் விஸ்தரிப்பு பணி சிருங் கேரி மடத்தில் அருளாட்சி புரிந்த மகான்களால் வெவ்வேறு காலகட்டத் தில் செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக 24-ஆவது பீடாதிபதியான ஸ்ரீ அபிநவ நரசிம்மபாரதி (1599-1622) ஸ்வாமிகள் கோவில் கற்தூணில் மஞ்சள் கொம்பினால் ஓர் கணபதி உருவத்தை தம் கைப்பட வரைத்தார். அந்த உருவம் பின்னா ளில் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து பருத்து கல்லிலேயே செதுக்கப்பட்டதுபோல் இன்னும் தெய்வீக காங்கியத்துடன் ஸ்தம்ப கணபதியாக அருள்பாலிக்கிறார்.
25-ஆவது பீடாதிபதியான முதலாம் ஸ்ரீ சச்சிதானந்த பாரதி சுவாமிகள், சிவப்ப நாயக்க மன்னரின் (1645-1660) உதவியுடன் ஸ்ரீபவானி தேவியை இக்கோவிலில் பிரதிஷ்டை செய்து தனிச்சந்நிதியைக் கட்டினார். ஆண்டுதோறும் கிரிஜா கல்யாண உற்சவமும், ரதோத்ஸவமும், தீபோத்ஸவமும் நடக்கும் சம்பிரதாயத்தை ஏற்படுத்தினார்.
சமீபகாலத்தில் 33-ஆவது பீடாதிபதி ஸ்ரீசச்சிதானந்த சிவ அபிநவ நரசிம்மபாரதி சுவாமிகள் (1879-1912) மார்கழி மாதத்தில்வரும் திருவாதிரை திருநாளில் (ஆர்த்ரோத்ஸவம்), உற்சவர் நடராஜ மூர்த்தி திருவுலா வரும் சம்பிரதாயத்தை ஏற்படுத்தினார். 35-ஆவது பீடாதிபதியாக அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் அருளாட்சி செய்த சமயத்தில், 1963-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து 1985-ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
தற்போதைய பீடாதிபதியான ஸ்ரீபாரதி தீர்த்த மஹா சுவாமிகளின் முயற்சியால் ஸ்ரீபவானி தேவி சந்நிதிக்கு புதியதாக கல் விமானமும், சுமார் 65 அடி உயரத்தில் பெரிய ராஜகோபுரமும் கட்டப்பட்டது. மகர- கிருஷ்ண பட்ச சப்தமியன்று (12-2-2023) காலை 10 மணியளவில் ஸ்ரீமலஹாநிகரேசுவரர் ஸ்வாமி விமானத் திற்கும், ஸ்ரீ பவானி தேவி விமானத்திற் கும், புதியதாகக் கட்டப் பட்ட ராஜகோபுரத் திற்கும் வேதமுறைப் படி வெகுவிமர்சையாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மகாகும்பாபிஷேக தினத்தன்று காலையில் 1,008 சஹஸ்ர கலசாபி ஷேகத்தை மூலவர் சந்நிதியில் ஸ்ரீசந்நிதானம் ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள் நிகழ்த்தினார். அபிஷேக ஆராதனைக்குப் பின்னர் மூலவர் லிங்கத்திருமேனிக்கு தங்கக் கவசம் சாற்றப் பட்டு, தங்கத்தினால் கட்டப்பட்ட பெரிய முத்துமாலை மற்றும் சிவ அஷ்டோத்திரம் பொறித்த தங்கக்காசு மாலையை ஸ்ரீ மகா சந்நிதானம் ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் சமர்பித்தார். அந்த சமயத்தில் வேத பண்டிதர் கள் மலஹாநிகரேச்வர் அஷ்டகத்தை பாராயணம் செய்தனர்.
இதுபற்றி மடத்தின் தலைமை நிர்வாகி யான பத்மஸ்ரீ டாக்டர் வி.ஆர். கௌரிசங்கர் தெரிவிக்கையில், "மலைநாடான சிருங்கேரி யில் ஆண்டுக்கு சுமார் ஆறு மாதங்கள் தொடர்மழை இருக்கும். அப்படி இருப்பினும் இறைவன் அருளாலும், குருநாதர் அருளா லும் இக்கோவிலின் ராஜகோபுரப் பணியானது மிக குறுகிய சுமார் ஏழுமாத காலத்தில் பெரிய கோபுரம் விரைவாக சிறந்த முறையில் கட்டப்பட்டது. மகா கும்பாபிஷேகத்தை ஓட்டி லக்ஷ மோதகத்தால் (ஒரு லட்சம் கொழுக்கட்டை) மகா கணபதி ஹோமம் 9-2-2023 அன்று நடைபெற்றது. அதற்கு முன்தினம் மகாகும்பாபிஷேகம் சிறப்பாக எவ்வித இடையூறுமின்றி நடைபெற வேண்டு மென ஸ்ரீ சந்திதானம் ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகளால் சங்கல்ப பூஜை செய்யப் பட்டது. இதை ஒட்டி உலக நன்மைக்காக அதி ருத்ர மஹாயாகமும், சதுர்வேத பாராயண மும், பதினெட்டு புராணங்களின் பாராயண மும், பஞ்சாக்ஷரீ, ஸ்ரீவித்யா ஜெபமும், முடிவில் மஹாரதோத்ஸமும், தெப்போத்ஸமும் சிறப் பாக நடைபெற்றது'' என தெரிவித்தார்.
நாம் தெரிந்தும், தெரியாமலும் பல பாவங் களை நம் வாழ்நாளில் செய்திருப்போம். அவற் றைப் போக்க "கைலாச கிரி' என அழைக்கப் படும் இத்தலத்திற்கு சென்றுவருவோம்!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!