"நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு.'

-திருவள்ளுவர்

செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீயசெயல்களை ஆற்றிட முனையும்போது அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.

சோழ நாட்டில் கொள்ளிட நதியோரம் மண் பானைகளை செய்துகொண்டிருந்தார் குயவர். ஒரு புறம், பானை, குடம், சட்டி கலயங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அருகில் ஆடு ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அவ்வப்போது "மே... மே...' என அது சத்தமிட்டது.

mm

மெல்ல நடந்து அந்த வழியாக வந்தார் துறவி. பானை உருவானதை பார்த்தபடியே தரையில் அமர்ந்தார். அவருக்கு மண் கலயத்தில் குடிக்க தண்ணீர் கொடுத்தார் குயவர். அதைக் குடித்தபடி "ஆட்டை நீ வளர்க்கி றாயா'... என்று கேட்டார்.

"நான் வளர்க்கவில்லை... ஏதோ காட்டாடு இந்த இந்தப் பக்கமாக வந்தது. அதைக் கட்டிப் போட்டிருக்கிறேன்'.... என்றார் குயவர். "எதற்காக' என்று கேட்க... பண்டிகை வரப்போகுதே இறைவனுக்கு பலி கொடுக்கத்தான்... "என்ன பலியா' என வியப்புடன் வினாவினார் துறவி.

Advertisment

ஆமாம்... திருவிழா அன்று பலி கொடுத்தால் விசேஷம். பலியை ஏற்று மகிழ்ந்து வரம் கொடுப்பார் இறைவன்; சுபிட்சம் கிடைக்கும். இது கேட்டதும் கோபம் கொண்டார் துறவி. கையிலிருந்து மண் கலயத்தை ஓங்கித் தரையில் அடித்தார். அது துண்டுகளாகச் சிதறியது.

துறவியின் செயலை வெறுத்துப் பார்த்தார் குயவர். சிதறிய சில்லுகளை ஒன்றுவிடாமல் சேகரித்து குயவரிடம் நீட்டினார் துறவி. "என்ன இது'.... கோபத்துடன் கேட்டார் குயவர். "உனக்குத்தான் பிடிக்குமே'... "என்ன உளறுகிறீர். என் கலயத்தை உடைத்து பொறுக்கிக் கொடுக்கிறீர். இது எனக்குப் பிடிக்கும் என்கிறீர்; வம்புக்கு இழுக்குறீரா அல்லது பித்துப் பிடித்துவிட்டதா...' உஷ்ணம் தெறிக்க ஆத்திரப்பட்டார் குயவர்.

"அப்படி எதுவுமில்லை, உண்மையான அன்புடன்தான் கொடுக்கிறேன்.' பதற்றமின்றி கூறினார் துறவி.

Advertisment

mm

"அந்தக் கலயத்தில் என் உழைப்பு அடங்கியிருக்கிறதே.... அதை உடைக்க எப்படி சம்மதிப்பேன், உடைந்தது எனக்குப் பிடிக்கு மென்று யார் கூறியது' என்றார் குயவர்.

"இறைவன் படைத்த உயிரினத்தை கதறக் கதற பலியிடலாம். அதை மகிழ்ந்து ஏற்று இறைவன் வரம் தருவான் என நீ நம்புகிறாய். எந்தத் தாயாவது குழந்தை கதறுவதை சகிப்பாளா... உன்னிடம் இறைவன் எதைக் கேட்கிறார்; நீ எதை அளிப்பாய்; அவர் உருவாக்கியதை அவருக்கே படைப்பாயா.... அன்பு என்ற மலரால் பூஜை செய். உயிரினங் களுடன் கருணையுடன் வாழ்ந்தால்

சிறப்பு பெறுவாய்...' "மென்மையாக கூறி புறப் பட்டார் துறவி. அறிவுரையைக் கேட்டதும் கட்டியிருந்த ஆட்டை அவிழ்த்துவிட்டார் குயவர்.

கீழ்த் திருப்பதி யில் அனந்தன் என்ற ஏழுமலையான் பக்தர் ஒருவர் வாழ்ந்துவந்தார். இருட்டு விலகாத இளங்காலைப் பொழுதிலே துயில் நீங்கி தோட்டத்திற்குச் சென்று பூக்களைப் பறிப்பார். பிறகு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து மாலைகளைத் தொடுப்பார். ராமானுஜ ஏரியில் நீராடி திருமலைக்கு நடந்துசென்று பெருமாளின் சந்நிதானம் அடைந்து பக்தியுடன் திருமாலுக்கு மாலைகளை சமர்ப் பிப்பார். இந்த பக்தித் தொண்டில் ஒருநாள்கூட அடியவர் பின்வாங்கியதில்லை.

dsf

உருக்குலையாத உறுதிகொண்ட பக்தர்களாக இருப்பினும் இறைவன் அவர் களை சோதித்தே ஆட்கொள்வான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதானே!

வழக்கம்போல் அனந்தன் இளங்காலையில் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தபோது பெருமாள் ஒரு பாம்பாக வந்து அவனைத் தீண்டினார். பாம்பு என்றால் படையும் நடுங்குமே! ஆனால் அடியவர் (அனந் தன்) எவ்வித சலனமுமின்றி மலர்களைக் கொய்தார். பின் திண்ணையில் அமர்ந்து மாலையும் தொடுத்தார்.

அப்போது அசரீரி வாக்கு. "அனந்தா சர்ப்பம் தீண்டியது தெரியுமா? தெரியாதா?' என்று கேட்டது.

"தெரியும்' என்றார் அடியவர். "எவ்வித சலனமுமின்றி எவ்வாறு இருந்தீர்' என்றார் பெருமாள்.

"பாம்பு தீண்டியதை அறிவேன். ஆனால் அது விஷமுள்ளதா, சாதாரண பாம்பா என்று தெரியவில்லையே! அதனால் பயப்பட வில்லை' என்றார் அடியவர்.

"விஷமுள்ள பாம்பாக இருந்தால்' என்றது அசரீரி.

"விஷமில்லாத பாம்பெனில் எப்போதும்போல் நீராடி மாலையுடன் மலைக்கு வந்து உம்மை தரிசிப்பேன். விஷமுள்ள பாம்பாக இருந்தால் நீராடுவதுகூட என் வேலையில்லை. பிணமாகிக் கிடக்கும் என்னை மற்றவர்கள் குளிப்பாட்டுவார்கள். உம்மை வைகுண்டத் திலேயே வந்து தரிசிப்பேன்' என்றார். அடியவரின் உறுதிப்பாட்டினை எண்ணி பெருமாளே ஒரு கணம் ஆடிப்போனார். அன்றுமுதல் அனந்தன் அனந்தாழ்வார் என்று போற்றப்பட்டார். ஏற்றுக்கொண்ட லட்சியத்தில்தான் எத்தனை நெஞ்சுரம்.

dd

மரண தண்டனைக்குரிய கைதிக்காக வாதாடிக் கொண்டிருந்த வழக்கறிஞரின் மனைவி மரணம் அடைந்த செய்தி தந்திமூலம் வந்தது. அதைப் படித்துவிட்டு வழக்கைத் தொடர்ந்தார் வழக்கறிஞர். முடிந்துபோன மனைவிக்காக பதறுவதைவிட காப்பாற்ற வேண்டிய உயிருக்காக கடமை ஆற்றும் வழக்கறிஞரின் உள்ள உறுதிப்பாட்டினை என்னென்று சொல்வது?

பதறாத காரியம் சிதறாது. பரபரப்பு காரியத்தைக் கெடுத்து விடுகிறது. சமநிலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் சமவெளியில் உருவான நாகரீகம் போன்றது. நம்மவர்களில் பலர் கஷ்டங்களால் சாவதைவிட கஷ்டங்கள் பற்றிய கற்பனையிலேயே சாகிறார்கள். ஆபத்துக்களைவிட ஆபத்துகள் பற்றிய கற்பனைதான் ஆபத்தானவை.

சுகமும் துக்கமும் ஆபத்தானவைதான்.

சமநிலைதான் சரியான வழி. குயவரைப் போல் மன அழுத்தம் இல்லாமல்; உள்ள உறுதிப் பாட்டுடன்கூடிய அனந்தனைப்போல், வழக்கறிஞரைப் போல் சமநிலையுடன் வாழ்வதே சிறந்த உயர்ந்த வழி. அத்தகைய உள்ள உறுதிப்பாட்டுடன்கூடிய சமநிலை யைத் தரவல்லதொரு உன்னதமான திருத் தலம்தான் சீர்காழி வட்டம், மகேந்திரப் பள்ளியில் உள்ள ஸ்ரீ திருமேனியழகர் திருக் கோவில்.

இறைவன்: திருமேனியழக

ர் இறைவி: அருள்மிகு வடிவாம்பிகை.

திருமுறை: மூன்றாம் திருமுறை 31-ஆவது பதிகம்.

அருளிச் செய்தவர்: திருஞானசம்பந்தர்

புராணப் பெயர்: திருமயேந்திரப்பள்ளி.

ஊர்: மகேந்திரப்பள்ளி, சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்.

தீர்த்தம்: மயேந்திர தீர்த்தம்.

தலவிருட்சம்: கண்ட மரம், தாழை மரம்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இவ்வாலயம் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் வடகரை தலங்களில் 6-ஆவது தலமாகவும், இந்திரன், மகேந்திரன், சந்திரன், சூரியன் வழிபட்ட பெருமையுடன், மூர்த்தி, தலம், தீர்த்தமெனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் திருக்கோவில்.

dd

"சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்

இந்திரன் வழிபட இருந்த எம் மிறையவன்

மந்திர மறைவளர் மயேந்திர பள்ளியுள்

அந்தமில் அழகனை அடிபணிந் துய்ம்மினே''

-திருஞானசம்பந்தர்.

மேகத்தைத் தொடும்படி உயர்ந்த கோபுரங்களும், அழகிய மாளிகைகளும், நீர்முள்ளியும், தாழையும் தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும், வண்டுகள் உலவுகின்ற சோலை களுடைய திருமயேந்திரப்பள்ளி என்றும்; கொங்கு, வேங்கை செழுமையான மலர்களையுடைய புன்னை, தேன் துளிகளை யுடைய கொன்றை, சிறந்த மலர்களையுடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும், மாமரங்களும், கரும்புகள் நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளி என்றும்; வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பி வரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்களும் உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும், அகிற்கட்டைகளால் தூபம் இடுகின்றபோது உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய திருமயேந்திரப்பள்ளி என்றும்; இறைவனை வழிபட மலர்களைக் கையால் ஏந்தி வருவதுபோல பல முத்துக் குவியல்களை அழகிய கடலானது அலைகளால் கரையினில் சேர்க்கும் திருமயேந்திரப்பள்ளி என்றும்; இத்தலத்தை தனது பதிகப் பாடல்களில் திருஞானசம்பந்தர் வெகு அழகாக வர்ணிக்கிறார்.

தல வரலாறு

தேவர்களின் தலைவனான இந்திரன் கவுதமமுனிவரின் மனைவி அகலிகைமீது ஆசைகொண்டான். ஒருமுறை முனிவரை வெளியே அனுப்பிவிட்டு, அகலிகையுடன் சந்தோஷமாக இருக்க சூழ்ச்சி செய்தான். எனவே இந்திரன், முனிவரின் வடிவமெடுத்து அகலிகையை பார்க்கச் சென்றான். வந்திருப்பது தன் கணவர் அல்ல என்பது தெரிந்திருந்தும் இந்திரன்மீது கொண்ட ஆசையினால் தவறு செய்ய தானும் சம்மதித்தாள். இதற்குள் முனிவர் திரும்பிவர இந்திரன் பூனை வடிவமெடுத்தான். அகலிகை பயந்து நின்றாள். நடந்ததையறிந்த முனிவர் கோபம்கொண்டு இந்திரன் உடல்முழுவதும் ஆயிரம் மாதர்களுக்கான குறிகள் உண்டாகட்டும் என சாபமிட்டார். அதன்பின் அகலிகையை கல்லாகும்படி சபித்தார். தவறை உணர்ந்த அகலிகை சாபவிமோசனம் கேட்க "இராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும்'' என்றார் முனிவர்.

இந்திரன் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு வேண்டி பாவ விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன் பல தலங்களில் லிங்கப்பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டான். அதில் ஒன்றுதான் மகேந்திரப்பள்ளியாகும். சிறப்புமிக்க (மகா) இந்திரன் வழிபட்டதால் "மகேந்திரப்பள்ளி' என்ற பெயர் பெற்றதாக தலபுராணம் சொல்கிறது.

பிற்காலத்தில் இவ்விடத்தில் கோவில் எழுப்பப் பட்டது.

சிறப்பம்சங்கள்

ப் இறைவனின் திருநாமம் ஸ்ரீ திருமேனியழகர். இறைவியின் திருநாமம் அருள்மிகு வடிவாம்பாள். தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களில் 6லிஆவது வடகரைத்தலமாக திகழ்கிறது. 7-ஆம் நூற்றாண்டு வரை மயேந்திரப்பள்ளி என்றிருந்து அதன்பின் மகேந்திரப்பள்ளி ஆனது.

ப் பண்டை நாளில் மன்னன் ஆண்டுவந்த பகுதியான கோயிலடி பாளையத்தை ஆங்கிலேயர் ஆட்சியில் கிளைவ் குண்டு வைத்து தகர்த்ததாகவும் அப்பகுதி இன்றும் தீவுக்கோட்டை என்று வழங்கப்படுகிறது. தீவுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராஜர் திருமேனிதான் கோவிலில் தரிசனத் திற்காக வைக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஆறுமுறை நடராஜர் அபிஷேகம் முறைப் படி நடக்கின்றது.

ப் சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோர் வழிபட்டு பேறுபெற்ற இத்தலத் தில் தமிழ்நாடு அரசு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தினசரி இரண்டுகால பூஜைகள் நடை பெறுவதுடன் சிவாலயத்திற்குரிய அனைத்து விஷேங்களும் நடக்கும்.

ப் பங்குனி மாதத்தில் ஏழு நாட்கள்

சிவலிங்கத்தின்மீது சூரிய ஒளி விழுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது சுவாமியை அழகர் என குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

ப் முருகப்பெருமான் சிங்கார வேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவரும் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தலத்து முருகப்பெருமானை புகழ்ந்து பாடியுள்ளார்.

ப் மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை மற்றும் பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி பூஜைகள் முறைப்படி நடக்கின்றது.

ப் மயேந்திர தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி இறைவனை வழிபடுவோர் தீராத நோயும் நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம்.

ப் சொல்லின் தயேந்திர குள்ளத் தடம் பொலிலங்கு மயேந்திரப் பள்ளி இன்ப வாழ்வே'' என்று திரு அருட்பாவில் வள்ளலார் இத்தல ஈசனைப் புகழ்ந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ப் விசுவாவசு ஆண்டு துவக்கத்தில் குருப்பெயர்ச்சி நாளில் இத்தல யோக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்தால் பலவித நன்மைகள் உண்டாகும்.

ப் மகேந்திரப்பள்ளியில் மிக அழகான மூர்த்தமுடைய விஜய கோதண்ட ராமசாமி திருக்கோவிலும், திரௌபதியம் மன் திருக்கோவிலும் அருகிலுள்ளது. இவ்வூரிலிருந்து கொள்ளிட நதி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பூம்புகார் கடலில் கலக்கிறது.

ப் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி காலகட்டங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ப் தமிழ்மாதப் பிறப்பன்று இத்தல விநாயகருக்கும், சூரியன் ஒரு ராசியை விட்டு அடுத்த ராசிக்கு செல்லும் நாளில் (தமிழ் மாதப்பிறப்பு விநாயகருக்கும், சூரியனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

ப் சீர்காழி வட்டத்திலுள்ள ஆதி நவகிரக தலங்களில் மகேந்திரப் பள்ளி குரு ஸ்தலமாக விளங்குவதால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கவும் பதவி உயர்வு பெறுவதற்கும் இத்தல தட்சிணா மூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாய் அருட்காட்சியளிக்கிறார்.

சீர்காழி வட்டத்திலுள்ள ஆதி நவகிரக ஸ்தலங்கள்

1. சூரியன்- திருக்கோலக்கா

2. சந்திரன்- தில்லைவிடங்கன்

3. செவ்வாய்- வைத்தீஸ்வரன் கோவில்

4. புதன்- திருவெண்காடு

5. குரு- மகேந்திரப்பள்ளி

6. சுக்கிரன்- ஸ்ரீசட்டைநாதர் (சீர்காழி)

7. சனி- நிம்மே-

8. ராகு- நாகேஸ்வரமுடையார் திருக்கோவில் (கடைவீதி, சீர்காழிநகர்)

9. கேது- செம்மங்குடி.

சண்டிகேஸ்வரர் தம் மனைவியுடன் அருட் காட்சி தருவது, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதுடன் தம்பதி ஒற்றுமை பலப்படும்.

ஏழு அஷ்டமியன்று இத்தலத்திலுள்ள பைரவரை வழிபாடு செய்தால்; நாட்பட்ட பிரச்சினை, வம்பு, வழக்குகள் தீர்வதுடன் அச்சமில்லா வாழ்வுக்கு நல்ல தீர்வினைத் தருவார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய பிரதான அர்ச்சகர் செந்தில்குருக்கள். மேலும் அவர் கூறுகையில்-

இத்தலத்தில் நவகிரகங்கள் கிடையாது.

அதன் செயல்களை ஈசனே பார்த்துக்கொள்வதாக ஐதீகம். அதேசமயம் இத்தலத்திற்கு ஒரே ஒருமுறை வந்து வழிபாடு மேற்கண்ட பின், அவரவர் இருக்கும் ஊரிலேயே கீழ்க்கண்ட வேலைகளை செய்யலாம்.

நவகிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய விலங்குகளுக்கு உணவு கொடுப்பதால், கிரகங் களின் தோஷங்கள் நீங்கி அதன் தாக்கம் குறைவதாக ஆகமங்கள் கூறுகின்றன. அவையாவன.

சூரியன்

நவகிரகங்களில் தலைமை கிரகமான சூரியபகவானால் உண்டாகக்கூடிய தோஷங்கள் நிவர்த்தியாக, குதிரைக்கு கொள்ளு போன்ற உணவு அளிக்கலாம். அதனால் சூரியனால் ஏற்படும் கெடுபலன்கள் குறைந்து நல்வாழ்வு கிட்டும்.

சந்திரன்

சந்திர தோஷம் இருந்தால் நீரில் வாழும் உயிர்களுக்கு குறிப்பாக பொரி, பிஸ்கட், அரிசி சாதம் போன்ற உணவு கொடுப்பதால் தாக்கம் குறைந்து நற்பலன் உண்டாகும்.

செவ்வாய்

செவ்வாய் வீரம், கம்பீர, இரத்தம், உணர்ச்சி யைத் தூண்டுதல், ஆண்மை, வீரியம் போன்றவற்றின் கிரகமாகப் பார்க்கப்படுகிறது. செவ்வாயின் பாதிப்பு தாக்கம் குறைந்திட ஆடுகளுக்கு கேரட் காய்கறிகள், முருங்கை மர இலை, கீரைகள் போன்ற உணவுகளையும், குரங்குகளுக்கு வாழைப்பழம் உட்பட அனைத்து வகை பழங்கள், பிஸ்கட், தேங்காய் பருப்பு போன்ற உணவு அளிப்பது நல்ல பலனைத் தரும்.

புதன்

புதன் கிரகத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை குறைப்பதற்கு, தினந் தோறும் பறவைகளுக்கு உணவளிப்பது நல்லது. மேலும் பறவைகளுக்கு தானியங்கள் மற்றும் குடிப்பதற்கு தண்ணீரும் வைக்கும்போது வாழ்க்கை வளமிக்கதாக மட்டுமல்லாமல் இறுதிக்காலம் வரை கஷ்டம் என்பதே வராது.

வியாழன்

குரு தோஷம் இருந்தால் திருமணத்தடை மற்றும் கல்வியில் பாதிப்புகள் ஏற்படும். மாணவர் களுக்கு நல்ல கல்வியறிவு கிடைத்திடவும் பருவம் அடைந்தவருக்கு குருபார்வை கிட்டவும் வாரம் ஒருமுறை யானை அல்லது பசு போன்றவற்றுக்கு உணவளிப்பது நல்ல பலன் தரும்.

திருமண தோஷ நிவர்த்திக்கு யானைக்கு கரும்பு, வாழைப்பழம். உட்பட அனைத்து வகை பழங்கள், தென்னங்கீற்றுகள் போன்ற உணவு கொடுப்பது மிகவும் சிறந் தது. பசுக்களுக்கு தவிடு, புண்ணாக்கு, வாழைப்பழம், அகத்திக்கீரை போன்ற உணவுகளைக் கொடுக்கலாம்.

சுக்கிரன்

ஒருவருக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் நிலையே கருதப்படுகிறது. சுக்கிரனால் உண்டாகும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு புறாவிற்கு தானியங்கள் அளித்துவருவது நன்மையைக் கொடுக்கும்.

சனி

சனீஸ்வரன் நினைத்தால் ஒரேநாளில் ஆண்டியையும் அரசன் ஆக்குவார்.

அரசனாக இருந்தவர்களை ஆண்டியாகவும் ஆக்கிவிடுவார். சனிபகவானை போன்ற வள்ளல் யாரும் இல்லை. எனவே அவரது ஆசிபெற தினமும் காகத்திற்கு உணவு, எள்கலந்த சாதம் வழங்குவது சிறந்தது. அதேபோல் கருப்பு நிற விலங்குகள் பறவைகளுக்கும் உணவளிப்பது நல்லது.

ராகு- கேது

ராகு- கேது தோஷம் உள்ளவர்கள் பைரவரின் வாகனமான நாய்க்கு உணவளித்து வருவது சிறந்த பலன் தரும். எறும்பு போன்ற ஊர்வனவற்றுக்கு அரிசி மாவு, சர்க்கரை போன்ற உணவளிப்பது பெரும் நன்மை தரும்.

திருக்கோவில் அமைப்பு

சீர்காழி வட்டத்தில் காவிரி வடகரையிலும், கொள்ளிட நதியின் தென்கரையிலும்; இத்தலத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கொள்ளிடம் (பூம்புகார்) கடலில் கலக்கின்ற இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.

மூன்று நிலைகளைக்கொண்ட ராஜகோபுரத்துடன், ஒரே ஒரு பிராகாரத்துடன் நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்புறம் மயேந்திர தீர்த்தக்குளம் உள்ளது. ஆலயத்தின் உள்ளே செல்லும்போது மதிற்சுவரில் இரண்டு பக்கம் சுவாமியைப் பார்த்தபடி சூரியன், சந்திரன் வணங்குகின்ற சுதைச் சிற்பம் அழகுற அமைந்துள்ளது. மதிற் சுவருக்கும் ராஜகோபுரத்துக்குமிடையே சிறிய நடைபாதையும், இருபுறமும் பூச்செடி களுடன் வில்வமரம் அழகிய நந்தவனம் உள்ளது. குளத்தின் அருகில் தலவிருட்சம் தாழைமரம், கண்ட மரம் உள்ளது.

ராஜகோபுரம் வழியே உள்ளே சென்று வெளிப்பிராகாரம் வலம்வந்தால் ராகு- கேதுக்களுடன்கூடிய நிருதி விநாயகர், காசி விஸ்வநாதர், ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமால், சிவலிங்கம், திருமேனிகள் உள்ளன.

முருகப்பெருமான் அருணகிரிநாதர் திருப் புகழில் சிறப்பித்த பெருமை யுடன் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடன் நான்கு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். கோஷ்ட தெய்வங்கள் முறைப்படி உள்ளன.

ஈசான்ய திக்கில் சூரியன், சந்திரன், பைரவர் சன்னதிகள் உள்ளன. பரிகாரம் முடிந்து உள்ளே சென்றால் வௌவால் நெத்தி மண்டபத்தின் வலப்புறம் தெற்கு நோக்கி நின்ற நிலையில் வடிவாம்பாள் சன்னதி உள்ளது. மேலும் உள்ளே சென்றால் வலப்புறம் நடராஜர் சபையில் சிவகாமி, நடராஜர், மாணிக்கவாசகர் காட்சிதருகின்ற னர். மூலவர் கிழக்கு நோக்கியபடி அழகிய திருமேனியுடன் திருமேனியழகர் ஜொலிக்கி றார்.

திருக்கோவில் அமைப்பு

நடை திறப்பு: காலை 9.00 மணிமுதல் 11.30 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஆலய குருக்களிடம் தகவல் சொல்லிவிட்டு செல்லவும்.

ஆலயத் தொடர் புக்கு: செயல் அலுவலர்,

அருள்மிகு திருமேனி யழகர் திருக்கோவில் மகேந்திரப்பள்ளி

அஞ்சல் ஆச்சாள்புரம் (வழி) சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் 609 101.

பூஜை விவரங்களுக்கு: செந்தில் குருக்கள், செல்: 97511 00938.

அமைவிடம்: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலை விலும் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ளது மகேந்திரப்பள்ளி.

குறைந்த அளவே பஸ்கள் உள்ளன.

படங்கள்: போட்டோ கருணா