இந்து மதத்திலே தெய்வத்தின் மீதான சில பண்டிகைகள் அவ்வப் போது வந்துபோகின்றன. அந்தந்த காலகட்டத்தில் வரும் பண்டிகைகளை மக்கள் அவ்வப்போது கொண்டாடுவதும் வழக்கத்தில் உள்ளன. இந்த பண்டிகைகள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்தை அடிப்படையாக வைத்தே கொண்டாடப்படுகின்றன. என்ன காரணம் என்பதைக்கூட தெரிந்துகொள்ளாமல் மக்கள் ஏதோ பண்டிகை வருகிறது, அந்த நேரத்திலே கடவுளை நினைத்துப் பிரார்த்தனை செய்துவிடலாமென்று "ஏனோதானோ' வென்று பண்டிகையைக் கொண்டாடிவிடுகின்றனர். அப்படி இருக்கக்கூடாது. எந்தக் காரணத்துக்காகக் கொண்டாடப்படுகிறது என்பதைத் தெரிந்து அறிந்து பண்டிகைகளைக் கொண்டாடவேண்டும்.
உதாரணமாக "மாசிமகம்' என்ற ஒரு பண்டிகை மாசி மாதம், மக நட்சத்திர பௌர்ணமி நாளில் வருகிறது. இந்தநாளில் இறைவனை பல்லக்கில் வைத்துத் தூக்கிக்கொண்டு போய் கடற்கரையில் வைத்துத் திருமஞ்சனம், அலங்காரம், ஆராதனை என்று பூஜைசெய்து அனைவரும் இறைவனை தரிசித்து பலன்பெற்று மீண்டும் அந்த உற்சவமூர்த்திகளை கோவிலுக்குக் கொண்டுவந்து சேர்ப்பார் கள். இந்த மாசிமக உற்சவம் கடற்கரையில் நடந்துமுடிகிறது.
புராணக் காலத்தில் ஒருசமயம் மேரு மலையை சமுத்திரத்தில் வைத்து, வாசுகி என்ற பாம்பைக்கொண்டு, ஒருபுறம் தேவர்களும், எதிர்புறம் அசுரர்களும் சேர்ந்து, மேருமலையைக் கடைந்தார்கள். அப்போது அந்த மேருமலையிலிருந்து ஒருசில தெய்வீகப் பொருட்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. குறிப்பாக பசு, பாரிஜாதமலர், ஆலகாலவிஷம் என்று பல பொருட்கள் வெளிவந்தன. இப்படி வெளிவந்த தெய்வீகப் பொருட்களிலே, செல்வத்திற்கு அதிபதியான திருமகள் என்று அழைக்கக்கூடிய "மகாலட்சுமி'யும் ஒருவர். மகாலட்சுமி பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். தாமரை நிறம். கவர்ச்சியான கண்கள். அழகுத் திருமுகம். பார்க்கப் பார்க்க திகட்டாத அழகு என்றால் அப்படியொரு அழகு. மகாலட்சுமியின் அப்படிப்பட்ட அழகிலே மயங்காத ஆடவர்களே இல்லை. இதனால் மகாலட்சுமிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது தன்னுடைய அழகிலே மயங்காத ஒருவனாக இருக்கவேண்டும். தன்னைக் கண்டும் காணாததுபோல அலட்சியமாக அவன் இருக்கவேண்டும். தன்னை ஒரு பொருட்டாகவே அவன் என்னைக் கருதக் கூடாது. என்னை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது. இப்படி எந்த ஒரு ஆண்மகன் இருக்கிறானோ அவனே எனக்கு மணாளனாக வரவேண்டும். அவனையே நான் கணவனாக அடையவேண்டும் என்று விரும்பினாள்.
அவள் நினைத்ததுபோலவே ஒருவன் அவளுக்கு அமைந்தான். தேவர்களும், வானவர்கள், தானவர்கள் அனைவரும் மகாலட்சுமியின் அழகைக்கண்டு மயங்கிய போதும், திருமாலான மகாவிஷ்ணு மட்டும் மகாலட்சுமியை ஏறெடுத்தும் பார்க்க வில்லை. அவளைக்கண்டு மயங்கவில்லை. மகாலட்சுமியைக் கண்டுகொள்ளவே யில்லை. முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டார். இதைப்பார்த்த மகாலட்சுமி, மனதில் மகிழ்ச்சியடைந்து, தன் எண்ணப் படி தனக்கு இந்த மகாவிஷ்ணுவே தகுதியான கணவன் என்று ஒரு பெரிய பூமாலையை எடுத்துக்கொண்டு ஓடோடிவந்து மகாவிஷ்ணுவின் கழுத்தில் போட்டுவிட்டு, அவர் காலில் விழுந்து வணங்கினாள். இதை சற்றும் எதிர்பாராத திருமால் தன்னை சுவிகரித்துக்கொண்டு, மகாலட்சுமிக்கு அவரும் மாலையொன்றை அணிவித்து திருமகளை தனது மனைவி யாக ஏற்றுக்கொண்டு தன்னுடன் இணைத் துக்கொள்கிறார். தேவர்கள், தானவர்கள், வானவர்கள் பூமாலை சொரிகின்றனர்.
பிறகு மகாவிஷ்ணு தனது மனைவியான மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு தன்னுடைய இருப்பிடமான வைகுண்டத் திற்குப் புறப்படுகிறார். அப்போது சமுத்திரத்திலிருந்து வெளியேவந்த சமுத்திரராஜன் திருமாலை வணங்கிவிட்டு "பிரபு' தாங்கள் என் பெண்ணான மகாலட்சுமியை இப்போது அழைத்துக் கொண்டு வைகுண்டம் போய்விட்டால், நான் என் மகளைப் பார்க்கவேண்டுமென் றால் எப்போது எப்படிப் பார்ப்பேன்' என்று ஆதங்கத்தோடு கேட்கிறார்.
அதற்கு மகாவிஷ்ணு "சமுத்திரராஜனே! இன்று மாசிமகம் பௌர்ணமி திருநாள். இதேநாளில் நான் உன் மகளோடு இந்த சமுத்திரக்கரையில் எழுந்தருளுவேன். அப்போது நீ உன் மகளைப் பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறி மறைந்தார்.
எனவே இந்த மாசிமகம் பௌர்ணமித் திருநாளில் சமுத்திரக்கரையில் திருமாலும், திருமகளும் எழுந்தருளுவதாகக் கருதி, அன்றைய தினம் கடற்கரையில் பெருமாளையும், தாயாரையும் பல்லக்கில் வைத்துத் தூக்கிக்கொண்டுவந்து, அலங்கார, ஆராதனை, பூஜைகள்செய்து பெருமாளின் அருளைப் பெறுகின்றனர். அன்றைய தினம் சமுத்திரராஜனும் தன் மகளான திருமகளைக் காண்பதாக ஐதீகம்.
எனவே மாசிமகம் பௌர்ணமி நாளில் கடற்கரையில் திருமாலையும், திருமகளையும் கண்டு தரிசித்து ஆசி பெறவேண்டும். அப்படி பெற்றால் குடும்பம் குதுகலமாக இருக்கும். செல்வம் வந்துசேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடற்கரை இல்லாத இடத்தில் ஆற்றங்கரையிலோ, ஆற்றங்கரை இல்லாத இடத்தில் குளக்கரையிலோ, அதுவுமில்லாத இடத்தில் கிணற்றடியிலோ, எதுவுமே இல்லாத இடத்தில் ஒரு சொம்பு தண்ணீர் நிறப்பியோ, திருமாலையும் திருமகளையும் போற்றி வணங்கி, அவர் களின் அருளைப்பெறலாம்.