கடவுளர்களின் கைகளிலிருக்கும் ஆயுதங்களை வழிபடும் பழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. குலதெய்வ வழிபாட்டு முறையிலிருந்து இது தோன்றியதாகக் கூறப்படுகிறது. சிவபெருமான், பராசக்தி கைகளிலுள்ள சூலம், முருகனின் வேல், மகாவிஷ்ணுவின் சக்கரம் என ஒவ்வொரு தெய்வங்களும் தங்கள் கைகளில் ஆயுதம் ஏந்தியிருப்பார்கள். அந்த ஆயுதங் களின்மூலம் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர்.
இதன்காரணமாக இறைவனின் கைகளிலுள்ள ஆயுதங்கள் தனித்துவம் பெறுகின்றன.
அந்தவகையில் மகாவிஷ்ணுவின் கையிலுள்ள சக்கரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திருமால் வாமன அவதாரம் எடுத்தபோது, பவித்திர கர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்கிரனின் கண்ணை அழித்தது சுதர்சன சக்கரம். இராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி ஆகியவர்களை தண்டிக்க கருட வாகனத்தில் இலங்கை சென்ற திருமால், தனது சுதர்சன சக்கரத்தை ஏவி அவர்களை அழித்தார் என்கிறது புராணத் தகவல். மகாபாரத யுத்தத்தின்போது ஜெயத்ரதனை வெல்ல முடியாத நிலையில், பெருமாளின் சக்கரம் வானில் சுழன்றெழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டுபோனது. இதன்மூலம் ஜெயத்ரதன் அழிக்கப்பட்டு பாண்டவர்களின் வெற்றிக்கு வித்திடப்பட்டது. கஜேந்திர மோட்சத்தில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட முதலையை சுதர்சன சக்கரம் சென்று சீவித்தள்ளி யானையைக் காப்பாற்றியது. இப்படி பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும்போதெல் லாம், அந்த இடையூறுகள் பெருமாளுக்கே ஏற்படுவதுபோல் எண்ணி விரைந்துவந்து காப்பது சக்கரம் எனக் கூறப்படும் சக்கரத்தாழ்வார்.
பெருமாளின் பஞ்சாயுதங்களில் சுதர்சன சக்கரம் முதன்மை யானது. தீயவற்றை அழிப்பதற்காக பெருமாளோடு தயாராக எப்போதும் இருப்பது. பகவான் திருமால் மனதால் நினைக்கும் பணியை உடனே முடிப்பவர். அதனால் தான் சக்கரத்தாழ்வாரை விஷ்ணுவின் அம்சம் என விவரிக்கிறது சில்பசாஸ்திரம் எனும் நூல். சக்கரத்தாழ்வாராக விளங்கும் சக்கரம் திருமாலுக்கு இணையானது என்று கூறுகிறார் வேதாந்த தேசிகர். அழிக்கமுடியாத பகையை அழித்து நீக்கமுடியாத பயத்தை நீக்கவல்லவர்.
பெரும்பாலும் மனிதர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கடன், வியாதி, எதிரி ஆகியவற்றை அழித்து மன அமைதியைத் தருபவர் சுதர்சன சக்கரமூர்த்தி. மேலும் கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தைத் தருபவர். கெட்ட கனவுகள்,
மன சஞ்சலம், சித்தப்பிரம்மை, பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்ற பாதிப்புகள், தொந்தரவுகள் ஆகியவற்றி லிருந்தும் விடுபடச் செய்கிறார். மேலும் ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களிலுள்ள அதிபதிகளின் தசை களில், புதன், சனி தசை நடப்பவர் கள் சுதர்சனரை வழிபட்டால் கிரக தோஷத்திலிருந்து விடுபடலாம்.
திருமாலுக்கு ஐந்து ஆயுதங்கள் உள்ளன. அதில் சக்கரத்தாழ்வாருக்கு பதினாறு ஆயுதங்கள் உள்ளன. இதில் அவரது வலக்கை களில் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதமுகாக்கினி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவற்றையும்; இடக்கைகளில் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியவற்றையும் கொண்டுள்ளார். இப்படி பக்தர்களின் எதிரிகளுக்கு எதிரியாக விளங்கி, பக்தர்களைக் காத்து சந்தோஷத்தைத் தரும் சக்கரத்தாழ்வாரை அவரது ஜெயந்திநாளில் வழிபட்டுப் பல்வேறு வளங்களைப் பெறுகிறார்கள். சனிக்கிழமைகளில் இவருக்கு துளசிமாலை சாற்றி, துளசியால் அர்ச்சனைசெய்து 12, 24, 48 போன்ற எண்ணிக்கையில் வலம்வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும். நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடைகளெல்லாம் விலகி நல்வழி கிடைக்கும்.
நவகிரக தோஷம் நீங்க சிவன் கோவில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு. அந்த வழிபாடு களில் பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் தோஷங் களைப் போக்கிக்கொள்கிறார்கள். அதேபோல திருமால் கோவில்கொண்டுள்ள ஆலயங்களுக்குச் சென்று, சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் தீபமேற்றி, "ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம' என்னும் மந்திரத்தை உச்சரித்தால் நவகிரக தோஷம் விரைவில் விலகுமென்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. சுதர்சனருக்குரிய நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்றைய தினங்களில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலைசூட்டி வழிபட்டால் நினைத்த காரியங்களில் வெற்றிகிட்டும்.
சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சனர், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வான், திருவாழி ஆழ்வான் என பல்வேறு பெயர்கள் உள்ளன. பெரும்பாலான ஆலயங்களில் மகாவிஷ்ணு கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும், அதிகப்படியான கோவில்களில் சங்கு, சக்கரம் ஏந்திய திருக்கோலத்தில் தான் காட்சியளிப்பார். "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கை யன்' என்று திருப்பாவையில் திருமாலைப்பற்றிப் பாடுகிறார் ஆண்டாள் நாச்சியார். திருமாலை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்றும், திருமாலின் வாகனமான கருடனை கருடாழ்வார் என்றும், நம்மாழ்வார் ஞானம்பெற்ற புளியமரத்தை திருப்பலி ஆழ்வார் என்றும், பஞ்சாயுதங்களில் முதன்மையான சக்கரத்தை திருவாலி ஆழ்வார், சக்கரத்தாழ்வார் எனவும் போற்றுகின்றன வைணவ சாஸ்திரங்கள்.
பெருமாள் கோவில்களில் எட்டுக் கரங்கள்கொண்ட சுதர்சனத்தையும், 16 கரங்கள்கொண்ட மூர்த்தியையும், 32 கரங்கள்கொண்ட மகா சுதர்சனரையும் தரிசிக்கலாம். எட்டு அல்லது 16 கரங்களுடன் வீறுகொண்டெழும் தோற்றத்துடன் அறுகோண சக்கர வடிவத்தில் சக்கரத்தாழ்வார் காட்சிதருவார். அறுகோணத்தின் மத்தியில் உக்ர வடிவ சுதர்சனரும், திரிகோண சக்கரம் எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அமர்ந்துள்ளனர். இதில் சுதர்சனர் கைகளில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம் அக்கினி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என 16 கைகளில் 16 வகையான ஆயுதங்களுடன் மகாவிஷ்ணு சுதர்சன மூர்த்தியாகக் காட்சிதருகிறார். இவரை வழிபடுவதன்மூலம் பல்வேறு பேறுகள் கிடைக்கும்.
திருமணத்தடைகள் விலகும். ஏழ்மை ஒழிந்து செல்வங்கள் குவியும். எதிர்பாராத பட்டங்களும் பதவிகளும் தேடிவரும். இவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத் திற்குத் தடையாக இருப்பவர்களை விலக்கி வெற்றிபெற வழிவகுப்பார். நோயினாலோ விபத்தினாலோ, நஞ்சாலோ, பகைவரின் அச்சுறுத்தலாலோ ஏற்படக்கூடிய மரணபயம் விலகும். புத்தியில் தெளிவுண்டாகும். ஞான வைராக்கியம் பிறக்கும். இவ்வளவு சிறப்பு பெற்ற சக்கரத்தாழ்வாருக்கு மிகப்பெரிய சிறப்பு திருப்பதியில் நடைபெறுகிறது.
திருப்பதி அருகிலுள்ள திருச்சானூரில் தாயார் அலர்மேலு மங்கை அவதரித்தார். பத்மாவதித் தாயார் என்றும் போற்றப் படுகிறார். தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவர் இறங்கிவந்து அலர்மேலு மங்கைத் தாயாருடன் ஏகாந்த நிலையில் இருந்துவிட்டு, பின் விடிவதற்குள் திருமலை செல்வதாக ஐதீகம். கார்த்திகை மாத பஞ்சமிநாளில் திருச்சானூர் திருக்குளத்தில் பத்மாவதித் தாயார் ஆயிரம் இதழ்கள்கொண்ட தாமரை மலரில் அவதரித்தார். அதன் அடிப்படையில் பத்மாவதித் தாயாரின் அவதார தினத்தைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் கார்த்திகை மாத பஞ்சமிநாளில், பஞ்சமி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. அதேபோன்ற விழாவை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள எம். குன்னத்தூர் கிராமத்தில் நடத்துகிறார் கள். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத பஞ்சமிநாளில் இந்தத் திருவிழா மிகச்சிறப் பாக நடைபெற்றுவருகிறது.
இவ்வூரில் கோவில்கொண்டுள்ள அலர்மேலு மங்கை சமேத சீனிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து, கடந்த 28-11-2022, திங்கட்கிழமை, பஞ்சமி திதி, உத்திராட நட்சத்திரம், சித்தயோகம்கூடிய சுபயோக தினத்தில் பகல் 12.00 மணியளவில், உற்சவர்களான சீனிவாசப் பெருமாளையும் அலர்மேலு மங்கைத் தாயாரையும் ரதத்தில் ஊர்வலமாகக் கொண்டுசென்று, ஊருக்கு அருகிலுள்ள அய்யனார் குளத்தின் கரையில் நிறுத்தி, எதிரிலுள்ள குளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.
இதுகுறித்து கோவில் அர்ச்சகர் அரி கிருஷ்ணன், "திருப்பதியில் நடப்பதுபோன்ற விழாவை எங்கள் ஊரிலும் ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக நடத்திவருகிறோம்.
இவ்விழாவில் பல மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்துகொள்கிறார்கள். முதல்நாள் இரவே வந்து பக்தர்கள் தங்குவார்கள். அவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான முறையில் இடவசதி செய்துதருகிறோம். அப்படி வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவர். குழந்தைவரம் வேண்டி அது கிடைத்தவர்கள், அந்த குழந்தைகளைக் கொண்டுவந்து எடைக்கு எடை துலாபாரமாக பணம் செலுத்துவர்.
திருப்பதி பெருமாளுக்கு வேண்டுதல் வைத்து, அதை நிறைவேற்றமுடியாத நிலையில் இருப்பவர்கள் இங்குவந்து நிறைவேற்றிக்கொள்கிறார்கள். எங்கள் ஊர் ஸ்ரீனிவாசப் பெருமாள், அலர்மேலு மங்கைத் தாயார் ஆலயம் ஒரு குட்டித் திருப்பதியாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராம நவமி, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை விழா, மாசிமக உற்சவம், கருடசேவை போன்ற பெருமாளுக்கு உகந்த அனைத்து விழாக்களும் மிகச்சிறப்பாக நடத்தி வருகிறோம்'' என்றார்.
இவ்வூரைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல், "ஆண்டுதோறும் கார்த்திகைப் பஞ்சமி திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு, எங்கள் ஊர்மக்கள், கோவில் நிர்வாகம் ஒத்துழைப்போடு, பல ஆண்டுகளுக்குமுன்பு. எமது சொந்த செலவில் அன்னதானம் வழங்கித் தொடங்கப்பட்டது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பஞ்சமித் திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சிறந்த சமையல் கலைஞர்களைக்கொண்டு அறுசுவை உணவு தயாரித்து அன்னதானம் வழங்கப்படுகிறது'' என்றார்.
பிரகலாதனின் தந்தை இரணியன், "உனது நாராயணன் எங்கே இருக்கிறார்?' என்று கேட்க, பிரகலாதன், "தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார். எங்கும் எதிலும் நிறைந்திருப்பார்' என்று கூறுவான். அப்படி எங்கும் நிறைந்திருக்கும் வேங்கடவனும் தாயாரும், சீனிவாசப் பெருமாள், அலர்மேல் மங்கையாக அருளாட்சி செய்கிறார்கள் குன்னத்தூரில்.
"பல்வேறு மாவட்டங்களில் வாழும் ஏழ்மை நிலையிலுள்ள பெருமாள் பக்தர்கள், பெரும் செலவுசெய்துகொண்டு திருப்பதி போன்ற ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும் தயாரையும் வழிபட இயலாதவர்கள் தங்கள் வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் எங்கள் ஊர் சீனிவாசப் பெருமாளை வந்து தரிசனம் செய்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை வணங்கிய பலனை அடைகிறார்கள். விழாக்காலங்களில் மட்டுமல்ல; சனிக்கிழமை உட்பட பெருமாளுக்கேற்ற அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் இவ்வாலயம் வந்து பெருமாளையும் தாயாரையும் வழிபட்டுச் செல்கிறார் கள். பெருமாள் அருள்பெற எங்கள் ஊருக்கு வாருங்கள்'' என்று அழைக் கிறார்கள் குன்னத்தூர் ஊராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் செண்பகம், தம்பிதுரை தம்பதிகள்.
அப்படிப்பட்ட ஒரு குட்டித் திருப் பதியாக விளங்கும் குன்னத்தூருக்கு நாமும் ஒரு முறையாவது சென்று சீனிவாசப் பெருமாளையும் அலர் மேலு மங்கைத் தாயாரையும் தரிசித்து வரவேண்டுமென்ற ஆவல் எழுகிறதுதானே? உளுந்தூர்பேட்டையிலிருந்து வடமேற்கில், சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிலும், உலகளந்த பெருமாள் அருளாட்சி செய்யும் திருக்கோவிலூரிலிருந்து தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது எம். குன்னத்தூர். இங்கு சென்றுவர உளுந்தூர்பேட்டை- திருக்கோவிலூர் என இரு ஊர்களிலிருந்தும் அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. கோவில் தொடர்புக்கு, அலைபேசி: 99446 32715.