இன்றைய உலகில் பலபேர் பல விஷயங்களுக்காக நிதி இல்லாமல் தவிப்பதை கண்கூடாக பார்க்கி றோம். அந்தளவிற்கு நிதியின் தேவை அதிகரித்துவிட்டது.
சிலருக்கோ நிதியை சேகரிப்பதில் சிக்கல். பலருக்கு நிதியை பாதுகாப்பதில் சிக்கல். இதற்கெல்லாம் விடை தருகின்றார் விடைவாகனரான ஸ்ரீ நிதீஸ்வரர். எங்கு? அன்னம்புத்தூரில்.... இந்த அன்னம்புத்தூரில்தான் அன்னவாகனரான பிரம்மாவும், நிதிக்கு அதிபதியான குபேரனும் ஸ்ரீ நிதீஸ் வரப் பெருமானை வழிபட்டு திருவருள் பெற்றுள்ளனர்.
அதன் விவரங்களை பார்ப்போமா...?
பிரம்மா அன்னவாகனன் என்றழைக்கப்படும் படைப்பு கடவுளான பிரம்மதேவரும், காக்கும் கடவுளான திருமாலும் ஈசனோடு போட்டியிட்டு, அவரது அடி- முடியைத் தேடிச் சென்றனர்.
ஸ்ரீ ஹரியோ வராக உருவம் எடுத்து, பூமியை ஆழத்தோண்டினார்.
சிவனது அடியை காணக்கிடைக்காமல் உண்மையை ஒப்புக்கொண்டு, சர்வேஸ்வரரிடம் பணிந்து நின்றார்.
அன்னப்பறவையாய் உருமாறிய பிரம்மதேவன், மகாதேவரது முடியை கண்டுவிட்டதாக பொய் கூறினார்.
இதனால் பெருங்கோபம் கொண்ட பரமேஸ்வரர் பிரம்மாவை அன்னப்பறவையாகவே இருக்கும்படி சபித்தார்.
விமோசனம் தேடிய பிரம்மா... இப்பூலகை அடைந்து, பொய்கை ஒன்றை உண்டாக்கி, அந்த நீரினால் இத்தலத்தின் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து, பலகாலம் மகேசரை மனமுருகி வேண்டி நின்றார்.
மகிழ்ந்த ஈசர், ரிஷபாரூடராய் திருக் காட்சி தந்து, பிரம்மனது அன்ன உருவினை நீக்கி, அருள்புரிந்தார். மீண்டும் பிரம்மாவுக்கு உயிர்களைப் படைக்கும் உன்னதப் பணியை அளித்தார். பிரம்மா அன்னபறவை உருவில் இங்கு சிவபெருமானை வழிபட்ட காரணத்தால் இத்தலம் அன்னம்புத்தூர் என்று ஆனது.
குபேரன்
பதும நிதி, மகாபதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி மற்றும் சங்க நிதி ஆகிய எட்டுவகையான நிதிகளுக்கும் தலைவன் குபேரன். இதனால் "நிதிபதி' என்றும் போற்றப்பட்டான். எட்டு திக்பாலர்களுள் ஒருவராகவும், வடதிசைக்கு அதிபதியாகவும் திகழ்ந்தான் குபேரன்.
தனக்கு எப்போதும் அள்ள அள்ள குறையாத செல்வம் வேண்டியும், எக்காலத்திற்கும் தனாதிபதியாக விளங்கிட வேண்டியும், இத்தல பெருமானை வழிபட்டு, நீங்காத செல்வம் நிலைபெற்றிருக்கும் வரத்தினை குபேரன் பெற்றதாக தல மகாத்மியம் எடுத்துரைக்கின்றது. இதனால் இப்பதி இறைவன் ஸ்ரீ நிதீஸ்வரர் என்றே அழைக் கப்படுகின்றார்.
ஆலயம்
ஊருக்கு மேற்கே ஆலயம் ஏரியின் எதிரில் அமைந்துள்ளது. இராஜகோபுரம் காணப்படவில்லை. கிழக்கு நோக்கியபடி சுவாமி சந்நிதியும், தெற்கு பார்த்தவாறு அம்பாள் சந்நிதியும் உயரமான மேடைமீது அமைந்துள்ளன. முழுவதும் கல் கட்டடமாக வடிவமைக்கப்பட் டுள்ளது.
கருவறையுள் கிழக்கே முகம் கொண்டு ஒளிர்கின் றார் ஸ்ரீ நிதீஸ்வரர். பிரம்மனும், குபேரனும் வணங்கிய ஈசனை நாமும் வணங்குகின் றோம் என்று நினைக்கும்போதே மெய் சிலிர்க்கின்றது. ஆலய மகாமண்டபத்தில் வீற்றருளும் கணபதி கையில் பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கின்றார். பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட பாட்னாவில் இருந்து இந்த கணபதியின் சிலை கொண்டுவரப்பட்டு இங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தென்முகச் சந்நிதியில் நின்ற வண்ணம் திருவருள் புரிகின்றாள் ஸ்ரீ கனக திரிபுரசுந்தரி. உண்ணாமுலை அம்மன்போல் இரண்டு கரங்களை மட்டுமே கொண்டுள்ளால் இந்த நாயகி.
ஆலய வளாகத்துள்ளே தென்மேற்கு மூலையில் ஸ்ரீ லட்சுமி கணபதியும், வடமேற்கில் வள்ளி- தெய்வானையுடன் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியரும் தனித்தனியே சந்நிதி கொண்டுள்ளனர். தென்புறம் தனியாக உள்ள சந்நிதியில் மிகப்பழமை வாய்ந்த துர்காதேவியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. முன்னே புதிய சிலையும் உள்ளது.
கிழக்குப்புறத்தில் ஸ்ரீ பைரவருடன் ஸ்ரீ தனாகர்ஷண பைரவரும் வீற்றருள் கின்றனர்.
அமைதியான சூழலில் இயற்கை எழில் கொஞ்ச அமைந்துள்ளது. ஆலயத்தின் பின்புறம் பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. தல விருட்சமாக கொன்றை மரம் திகழ்கிறது.
மாமன்னன் இராஜராஜசோழன் தனது 23-ஆம் ஆட்சியாண்டில், இக்கோவிலைக்கண்டு, வியந்து, வணங்கி, பல திருப்பணிகள் செய்து, நிபந்தங்கள் கொடுத்து, ஸ்ரீ நிதீஸ்வரப் பெருமானை வழிபட்டுள்ளதை இவ்வாலய சோழர்கால கல்வெட்டு உறுதிசெய்கின்றது.
1,000 ஆண்டுகளுக்கும்மேல் பழமை வாய்ந்த இவ்வாலயம், முற்றிலும் சிதிலமடைந்து மண்மேடாகிவிட்டது.
அதன்பின், தற்போது பக்தர்களின் முழு அர்ப்பணிப்பால், கற்கோவில் உருவாக்கப் பட்டு 2014-ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
விசேஷங்கள்
நவராத்திரி உற்சவம் இங்கு வெகுசிறப்பு டன் அனுசரிக்கப்படுகின்றது. அதில் சப்தமி மற்றும் அஷ்டமியில் சண்டி ஹோமமும், பத்தாம் நாள் பாரிவேட்டையில் அம்பாள் திருவீதியுலாவும் விமர்சியாக நடத்தப் படுகின்றது. பங்குனி பூசத்தில் வருஷாபிஷேக மும், அன்று மாலை திருக்கல்யாணம் உற்சவ மும், சுவாமி- அம்பாள் திருவீதியுலாவும் நடைபெறுகின்றன. திருக்கல்யாணத்திற்கு பெருமாள் ஆலயத்திலிருந்து அம்பாளை வரிசை தட்டுடன் அழைத்துவரும் சம்பிரதாயமும், வாசலில் மாலை மாற்றும் வைபவமும் சிறப்புற நடைபெறுகின்றது.
அதோடு, மாத பிரதோஷங்கள், சிவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், கிரக பெயர்ச்சிகள் போன்ற அனேக விசேஷங் களும் இங்கு பிரசித்தம்.
தினமும் காலை 7 மணிமுதல் 12 மணிவரையும்; மாலை 5 மணிமுதல் 8 மணிவரையும் ஆலயம் திறந்திருக்கும். தினமும் இரண்டுகால பூஜைகள் நடைபெறு கின்றன.
பரிகாரங்கள்
ப் பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமை களில் அம்பாள் பாதத்தில் வெண்ணெய் வைத்து அர்ச்சனைசெய்து, ஆலயத்தை மூன்றுமுறை வலம் வந்து, அந்த வெண்ணை யைப் பெற்று தம்பதிகளாக சாப்பிட... குழந்தைபேறு கிடைப்பது உறுதி.
ப் கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் ஸ்ரீ நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபட.... விரைவில் திருமணம் கைகூடும்.
ப் பெண்கள் பூப்படையாத குறை தீர ஐந்து வியாழக்கிழமைகளில் சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனைசெய்து, வெள்ளி நாணயத்தை பிரசாதமாகப்பெற்று செல்கின்றனர் பக்தர்கள். அதோடு இந்த பரிகாரத்தினால் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளும் தீரும்.
ப் வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, பூச நட்சத்திரம், அக்ஷய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் சுவாமிக்கு ஸ்வர்ணபுஷ்ப அர்ச்சனைசெய்து வழிபட.... கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
அதோடு மன அமைதி, வீடு- வாகன யோகம், திருமண வரம், குழந்தை வரம், தொழில் அபிவிருத்தி, உத்தியோகம் ஆகியவற்றையும் பெற்றிடலாம்.
ப் குருவின் இரண்டு தெய்வங்களில் ஒருவரான பிரம்மா இங்கு வழிபட்டதால் குருப்பெயர்ச்சி பரிகார பூஜைகள் இங்கு வெகுவிமர்சையாக அனுசரிக்கப்படுகின்றன. அதில் பங்குபெற்று பல நன்மைகளை அடைந்திடலாம்.
ப் ஸ்ரீ லட்சுமி கணபதியை சதுர்த்திகளில் வழிபட.... கல்வி உயர்வும், குடும்பத்தில் லட்சுமி கடாட்சமும் பெருகும்.
ப் மேற்கு முகமாக வீற்றருளும் ஸ்ரீகால பைரவரை ஆறு தேய்பிறை அஷ்டமி, ராகு காலங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 நெய் தீபமேற்றி செவ்வரளியால் அர்ச்சனை செய்து வழிபட.... விரைவில் பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். பில்லி, சூனியம், ஏவல் யாவும் அகலம்.
ப் வளர்பிறை அஷ்டமி மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தன ஆகர்ஷண பைரவருக்கு எட்டு நெய் தீபமேற்றி, செவ்வரளியால் அர்ச்சனைசெய்து வழிபட... அனைத்து வகையான செல்வங்களும் கிடைக்கப்பெறும்.
ப் ஒருவரது ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் மற்றும் குரு சாபத்தால் பாதிக்கப் பட்டவர்கள் ஸ்ரீநிதீஸ்வரருக்கு வியாழக் கிழமையில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சித்து, ஐந்து நெய் தீபமேற்றி, ஐந்துமுறை ஆலய வலம்வந்தால்.... பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கபெற்று, அவர்களின் விதி புதிதாக மாற்றி எழுதப்படுகிறது. அதோடு, அவர் களின் இல்லத்தில் நிலவும் வறுமையும் நீங்கி செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ஐதீகம்.
வழி: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில்...... திண்டிவனம்- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அன்னம்புத்தூர் அமைந்துள்ளது. டிரஸ்டி:- செல்: 94440 36534.