விசேஷ அலங்காரம் என்பது மூலவர் மற்றும் உற்சவர் மாதிரியான தோற்றத்தை விக்ர கங்கள் இல்லாமலே தயாரிப்பது தான். திருப்பதி பெருமாள் போன்ற தோற்றத்தை, மூலவர் மாதிரியான விக்ரகங்களில் அதன் பூரண அழகைக் கொண்டு வர இயலும். அதைப்போன்று திருப்பதி உற்சவர் மாதிரியான அதே தோற்றத்தையும் இந்த விசேஷ அலங்காரத்தில் செய்ய லாம். இதைப்போன்ற அலங் காரங்கள் திருமணம், வீட்டு விசேஷங்கள், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, வரலட்சுமி விரதம் போன்ற தினங்களில் மற்றும் திருக்கோவில்களில் விசேஷமான நாட்களில் விஸ்வ ரூப அலங்காரங்கள் (20- 50 அடிவரை) மற்றும் வேறு சில இறைவனின் அவதாரங்களை நினைவுபடுத்துவதற்காக பல திருக்கோவில்களில் சிறப்பாக செய்யப்படுகின்றன. இதைப் போன்ற அலங்காரங்கள் இறைவனின் நாமம் சொல்லும் அனைத்து இடங்களி லும் செய்யப்படுகிறது. இந்த விசேஷ அலங் காரங்கள் பெரும்பாலும் கும்பாபிஷே கம் செய்யும் திருக்கோவில்களில் மிகவும் விமரிசையாகச் செய்யப்படுகின்றது. வயோதிகர்கள் மற்றும் தொலை விலுள்ள திருத்தலங்களைக் கண்டு தரிசிக்க முடியாதவர்கள் இந்த விசேஷ அலங்காரத்தின்மூலம் கண்டு தரிசிக்கலாம். இந்த அலங்காரம் திருக்கோவில்களில் இருப்பதைப் போன்ற கவசங்களைக் கொண்டும், கார்ட்டன் துணிகளைக் கொண்டும் செய்யப்படுகிறது. திருமுக மண்டலத்திற்கு சந்தனம் சாற்றி மூலவர் மற்றும் உற்சவர் விக்ரகங்களைப் போன்று செய்யப்படுகிறது.
இதில் மூலவர் விக்ரகங்களுக்கு சாற்றப் படும் கவசங்களைப்போலவே அமைத்தும், உற்சவர் விக்ரகங்களின் திருமுக மண்டலத்தைப்போன்றே தயார் செய்தும் அமைப்பதாகும். இதைப்போன்ற அலங் காரங்கள் முழுவதும் காட்டன் துணி மற்றும் மூங்கில் கட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்படுவதாகும். இவை திருக்கோவில்களில் விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு, விநாயகர் சதுர்த் தியை முன்னிட்டு விசேஷ அலங்காரமாக 16 முகங்கள் கொண்ட ஷோடச கணபதியை அலங்காரம் செய்கிறோம்.
ஏனெனில் இதைப்போன்ற விக்ரகங்களை ஆலயங் களில் காண இயலாது. ஆகையால் 16 விதமான விநாயகர் ஒருசேர அமைந்த ஷோடச கணபதியைக் காணும் வாய்ப்பு இத்தகைய அலங்காரங்கள்மூலம் அமைகிறது. மேலும், கோவில் கும்பாபிஷேகம் போன்ற நாட்களில் யாக குண்டம் மற்றும் அந்த திருக்கோவி-ல் எழுந்தருளியிருக்கும் இறைவனின் வடிவை சில ஆலயங்களில் காணவியலாது. ஆகையால் அவரைப்போன்ற வடிவங்களை அமைப்பது பக்தர்களுக்கு நன்மையைத் தரும்.
"அருணாம் புயத்துமென் சித்தாம்
புயத்து மமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தலைய நல்
லாள் தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம்
புயமுங் கராம்புயமும்
சரணாம் புயமுமல் லாற்கண்டி
லேனொரு தஞ்சமுமே.'
"என் இதயத் தாமரையில் வீற்றிருக்கும் அபிராமி அன்னை வாசம் செய்வதோ செந்தாமரை. அவளது அன்பு தவழும் முகமோ பசுந்தாமரை. ஒளிவீசும் கண்களோ கருணைத் தாமரை. மார்பகங்களோ மொட்டுத்தாமரை. காப்பதோ அருள்பா-க்கும் கரத்தாமரை. நான் தஞ்சமென்று சரணடைவதோ தாயின் திருவடித் தாமரைகளேயன்றி வேறொன்றுமில்லை'என்று அம்பாளின் வடிவழகையும், முத்திரைகள், ஆசனங்களை யும் வர்ணிக்கிறார் அபிராமபட்டர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/andnal.jpg)
கை முத்திரைகள்
கைப்பிடி அமைப்பின் மாற்றங்களை முத்திரை என்று அழைப்பதுண்டு. முத்திரை என்பது கைவிரல்களை நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல் ஆகிய நிலைகளைக் கொண்டுள்ளவையாகும். தன் எண்ணத்தை மனிதன் இயற்கையாக எங்ஙனம், எப்பொழுது, எவ்விடத்தில் இயக்குகிறான் என்பதை உற்றுநோக்கி, அவற்றை முறைப் படுத்தி மெருகூட்டிப் பொருட்காட்டி, நம் கலைகள் அனைத்தும் உலகில் தலைசிறந்த நிலையில் உள்ளன என எடுத்துக் காட்டியுள்ள னர் நம் முன்னோர்கள். ஹஸ்தங்கள் நன்கு தெரிந்தால்தான் நாம் எந்த அலங்காரத்திற்கு எந்த ஹஸ்தங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற முறையை தெரிந்துகொள்ள முடியும்.
மேலும், இந்த முத்திரைகள் பரதநாட்டியத் திலும் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. உலகிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் கையால் முத்திரைகள் காட்டி பிறருக்குப் புரிய வைக்க முடியும். அதேபோல இறைவன் தன் அன்பையும் பரிவையும், தன் குழந்தைகளான பக்தர்களிடத்தில் அர்ச்சாவதார மூர்த்தியாக (விக்ரக ரூபத்தில்) முத்திரைகள்மூலம் காட்டி யருள்கிறார். ஆக, பரத நாட்டியமும், சுவாமி அலங்காரமும் மிக நெருங்கிய தொடர்பு டையவை என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
சுவாமி அலங்காரத்தில் பயன்படுத்தும் ஆயுதங்கள் ஆயுதங்கள் என்பது ஒருவரை அழிப்பதற்கு மட்டும் இறைவன் கைக் கொள்வதில்லை. பலரைக் காப்பதற்கும், அச்சத்தைப் போக்குவதற்கும் பயன் படுத்துகிறார். அத்துடன் ஒவ்வொரு இறை வடிவங்களின் வேறுபாட்டைக் காட்டு வதற்காக சின்னங்களாக அமைத்தது தான் ஆயுதங்களாகும். இதை நன்கு தெரிந்துகொள்வது அனைத்து அலங் காரங்களுக்கும் பயனுடையதாக அமையும்.
சக்கரம்: இது பெருமாளின் வலப்புறம் பின்கையில் ஏந்தும் ஆயுதமாகும். இது பெருமாள் மட்டுமன்றி துர்க்கை, விநாயகர், விஷ்ணு துர்க்கை, விஷ்ணு கணபதி மற்றும் வைஷ்ணவி என பல தெய்வங்களின் கரங்களிலும் காணலாம்.
சங்கு: இது பெருமானின் இடப்புற பின்கையில் ஏந்தும் ஆயுதமாகும். இதற்கு பாஞ்சஜன்யம் என்று பெயர். இது பக்தர்களின் பயத்தைப் போக்குவதற்கும், அசுரர்களின் பயத்தை அதிகரிக்கவும் அமைக்கப்பட்டதாக சொல்வதுண்டு. இது சக்கரத்துடன் இணைந்தே காணப்படும். பார்த்தசாரதி பெருமாள் மற்றும் சில பெருமாள் கரங்களில் மட்டும்தான் தனித்துக் காணப்படும்.
பத்மம்: பத்மாவதி தாயாரின் பின்னிரண்டு கைகளில் காணலாம். பத்மத்தின் மிருதுவான தன்மை இறைவனின் இதயத்தை எடுத்துக் காட்டும். இது பத்மாவதிக்கு மட்டுமல்லாமல், மற்ற தெய்வங்களுக்கும் அமைக்கப்படுகிறது.
அங்குசம்: இது விநாயகாரின் ஆயுத மாகக் கூறப்படுகிறது. யானைப்பாகன் அங்கு சத்தால் யானையை அடக்குவான். அதைப் போல் இறைவன் நம்மை- நம் மனத்தை அடக்கு கிறான் என்று கூறும் ஆயுதமாகும். இது விநாயகரின் வலது பின்கரத்தில் காணப்படும்.
மேலும் பல தெய்வங்களுக்கும் அமைக்கப் படுகிறது.
பாசம்: பாசக்கயிறு என்பது, பந்தபாசங் களில் சிக்காமல் நம்மைக் காக்கவும், தீய எண்ணங்களை இந்த பாசக்கயிற்றால் எடுக்கவும் விநாயகர் தன் இடது பின்கரத்தில் வைத்திருக்கிறார் என்று கூறுவர். இந்த பாசம் அங்குசத்துடன் சேர்ந்தே காணப்படும்.
அம்பிகை கரங்களிலும் பல ஆலயங்களில் காணலாம்.
கொடி: சேவல்கொடி முருகப்பெருமானுக் குரியது. அதுபோல் திருநாமம், சங்கு, சக்கரம் பொறித்த கொடி ஆசார்யர்களுக்கு உரியதாகும்.
கேடயம்: இது வீரத்தின் அடையாளச் சின்னமாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும் துர்க்கைபோன்ற வீரத்தை வெளிப்படுத்தும் கடவுளின் கரங்களின் இதைக் காணலாம்.
செங்கோல்: ராஜ அலங்காரம் போன்ற கம்பீரமான அலங்காரங்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. பல திவ்யதேசப் பெருமாள் ஆலயங்களிலும் காணலாம்.
உடுக்கை: உடுக்கையை சிவன், தேவி போன்ற தெய்வங்களின் கரங்களில் காணலாம்.
அக்னி: இது உக்கிரத்தை வெளிப்படுத்தும் ஆயுதம். தட்சிணாமூர்த்தி மற்றும் தேவியின் கரங்களில் காணலாம்.
கதை: கதையும் ஒருவித வீரத்திற்கு அடையாளமான ஆயுதமாகும். இதை அனுமன், மகாவிஷ்ணு போன்ற தெய்வங் களின் கரங்களில் காணலாம்.
சக்தி ஆயுதம்: இது இந்திரனின் ஆயுத மாக சொல்லப்படுகிறது. முருகனின் பின் வலக் கரத்தில் இதைக் காணலாம். கௌமாரி மயூர கணபதி போன்ற தெய்வங்களின் வடிவங் களிலும் காணலாம்.
வஜ்ராயுதம்: இந்த ஆயுதம் முருகனின் பின் இடக்கரத்தில் காணப்படும். இது சூலத்தின் வடிவமாகவும், அம்பிகையின் அம்சமாகவும் கூறப்படுகிறது. இந்த ஆயுதம் சக்தி ஆயுதத்துடன் சேரந்தே காணப்படும்.
வேல்: வேல் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் முருகப் பெருமான். அவர் கரங் களில் வேல் தவழும் அழகைக் காண கண் கோடி வேண்டும். இது தேவியின் அம்ச மென்று கூறுவர்.
சூலம்: சூலம்தான் தேவி; தேவிதான் சூலம். ஆக, சூலம் என்பது தேவியின் ஆயுதமாகும். ஆனால், சில அலங்காரங்களில் மற்ற தெய்வங்களின் கரங்களிலும் காணலாம்.
மான்: இது சிவபெருமானின் இடது பின்கரத்தில் இருக்கும். நம் அலைபாயும் மனதை அடக்கவே சிவபெருமான் வைத்திருக்கும் ஆயுதமாகும்.
சாட்டை: இதை ஸ்ரீ ராஜகோபாலனின் கரங்களில் காணலாம். அந்த சாட்டைக்கு கோபாலனின் கைகளில் இருப்பதனா லன்றோ அழகு. இந்த சாட்டை, குதிரை போன்ற கம்பீரமான அலங்காரங்களுக்கு அமைக்கப்படுவது.
கத்தி: இதை வீர அலங்காரங்கள் மற்றும் ராஜ அலங்காரங்களிலும், மாரியம்மன் போன்ற தேவியின் அலங்காரங்களிலும் காணலாம்.
வில்: வில் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் ஸ்ரீ ராமர்தான். அவர் கரங்களில் வில் தவழும் அழகைக் காணலாம். மற்றும் சில தெய்வங்களின் கரங்களிலும் காணலாம்.
அம்பு: இது வில்லுடன் இணைத்தே காணப்படும் சிறந்த ஆயுதமாகும். இதில் பலவித வடிவங்கள் உண்டு.
அட்சமாலை: அட்சமாலை என்பது யோகத்தி-ருக்கும் தெய்வங்களுக்கு அமைவது. சரஸ்வதி, பிரம்மா, பாலாம்பிகை, பிராம்ஹி, கன்னியாகுமரி தேவி, சாரதாம் பிகை போன்ற தெய்வங்களின் கரங்களில் காணலாம்.
வாகனங்கள்
இவை அலங்காரத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஏனெனில், அனைத்து தெய்வங்களுக்கும் வாகனங்கள் உண்டு. அதை நாம் சரிவரத் தெரிந்துகொண்டால்தான் அலங்காரத்தில் அமைக்க முடியும். எந்த வாகனத்திற்கு எந்த அலங்காரம் செய்யலாம் என்றும் தெரிந்துகொள்வது அவசியம்.
யானை வாகனம்: இது பெரும்பாலும் அனைத்து தெய்வங்களுக்கும் அமைக்கப் படுவது. இதில் இறைவனை கம்பீரமாகவும், ஏகாந்தமாகவும் அலங்கரிப்பது அழகைத் தரும். தெய்வானைக்கு உகந்த வாகனமாகவும் சொல்லப்படுகிறது.
அன்ன வாகனம்: இது அனைத்து பெண் தெய்வங்களுக்கும் உகந்ததாகக் கூறப் படுகிறது. மேலும், பிரம்மா, விநாயகர், மோகினி போன்ற தெய்வங்களுக்கும் உகந்த வாகனமாகும்.
மூஷிகம்: இது விநாயகப் பெருமானுக்கு மட்டுமே உகந்தது. இதில் அனைத்துவிதமான விநாயகர் வடிவங்களையும் அமைக்கலாம்.
குதிரை வாகனம்: அனைத்து தெய்வங் களுக்கும் உகந்த வாகனம். ஒரு கம்பீரத் தோற்றத்தைத் தரவல்ல அலங்காரமாக அமையும் வாகனமாகும்.
ரிஷப வாகனம்: இது சிவபெருமானுக்கே உரியதான வாகனம். இதில் பார்வதி- பரமேஸ் வரர் அலங்காரம் செய்வது உத்தமம். மேலும், விநாயகர், தேவி போன்ற தெய்வங்களையும் அலங்கரிக்கலாம்.
அதிகார நந்தி: இது சிவபெருமானுக்கே உகந்ததாக வாகனமாகும். ஸ்ரீ வைணவத்தில் கருட வாகனத்தைப்போன்று சைவத்தில் மிகச் சிறந்த வாகனமாகும். இதில் பார்வதி- பரமேஸ் வரர் அலங்காரம் செய்வது உத்தமமாகும்.
காமதேனு: இது பெரும்பாலும் பெண் தெய்வங்களுக்கு அமைக்கப்படுவது. விநாய கர் அலங்காரங்களுக்கும் அமைக்கப்படுகிறது.
கல்பவிருஷ வாகனம்: இந்த வாகனமும் அனைத்து தெய்வங்களுக்கும் பயன்படுத்தும் வாகனமாகும். தரிசிக்கும் பக்தர்களுக்கு அனைத்து பலன்களையும் தரும் அலங்கார மாக அமையும் வாகனம்.
கருட வாகனம்: இது பெருமாளுக்கே அமைக்கப்படும் வாகனமாகும். இந்த வாகனத்தில் பெருமாள் அலங்காரங்களே உகந்தாகக் கூறப்படுகிறது. மிகச்சிறந்த பலன் களைத் தரவல்லது இந்த வாகன தரிசனம்.
ஹனுமந்த வாகனம்: இதை ராமர் வாகனம் என்றும் அழைப்பர். இதில் ராமர் திருக்கோலங்களே சாற்றப்படுவது வழக்கமாகும்.
கிளி: இந்த வாகனம் பெரும்பாலும் பெண் தெய்வங்களுக்கே அமைக்கப்படுகிறது.
காகம்: இது சனீஸ்வரரின் வாகனமாகும்.
மகர வாகனம்: இது பெரும்பாலும் கிளி, அன்னம்போல் பெண் தெய்வங்களுக்கே உரிய வாகனமாகும்.
மேரு வாகனம்: மேரு மலையை ஒரு வாகனமாகக் கூறுவர். இது சிவபெருமான் அவதாரமான தட்சிணாமூர்த்திக்கு உகந்த வாகனமாகும்.
யாளி: பெரும்பாலும் பெருமாள் திருக்கோவில்களின் வலம்வரும் வாகனமாக இது கூறப்படுகிறது. இதில் பெருமாள் அலங் காரங்களே உகந்தவையாகும்.
சேஷ வாகனம்: இது அனைத்து தெய்வங்களின் வாகனமாக விளங்குகிறது. மேலும், பெருமாளுக்கு மிக உகந்ததாகக் கூறப் படுகிறது. இதில் சயனம்போன்ற அலங்காரங் கள் அமைப்பது மிகச்சிறப்பாக இருக்கும்.
சூர்யப்பிரபை: இந்த வாகனம் சூரிய பகவானைக் குறிக்கும். இது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்தது. குறிப்பாக சிவன், பெருமானுக்கு மிகவும் உகந்த வாகனமாகும்.
சந்திர பிரபை: இந்த வாகனம் சந்திர னைக் குறிக்கும். இதுவும் அனைத்து தெய்வங் களுக்கும் உகந்தது. சிவன், பெருமானுக்கு மிகவும் உகந்தது. இரவுவேளையில் வலம்வரும் வாகனமாகும்.
(அலங்காரம் தொடரும்)
சந்தேகங்களுக்கு கைபேசி: 73584 77073
தொகுப்பு, படங்கள்: விஜயா கண்ணன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/andnal-t.jpg)