ங்கம்போல் புடம்போட்டு தன் பக்தர்களை ஜொலிக்கச் செய்யும் பரமன், அந்த பக்தனின் பக்தியை பார்போற்றும்படி செய்திடுவான். அதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கி ஆட்கொள்வான்.

அப்படி பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட எண்ணற்ற அடியவர்களுள் ஒருவரே மானக் கஞ்சாறர்.

மானமேப் பெரிதென வாழ்ந்த- வேளாளர்க் குடியில் பிறந்த இவர், சோழ மன்னனின் படைகளுக்குத் தலைமை வகிக்கும் படைத்தளபதியாக விளங்கினார். "மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறனுக்கு அடியேன்' என்று சுந்தரர் தனது திருத்தொண்டர்த் தொகையில் இவரது பெருமையையும், வலிமையையும் புகழ்ந்து போற்றுகின்றார். சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்த மானக்கஞ்சாறர் தனது வீரத்தாலும், உழைப்பினாலும் செல்வங்கள் யாவையும் பெற்றார். இருப்பினும், இவருக்கு குழந்தைச்செல்வம் இல்லை. பல நாட்கள் குழந்தைப்பேறின்றி வருந்திய இவருக்கு ஈசனருளால் ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தாள். அவளுக்கு "புண்ணியவர்த்தினி' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த புண்ணியவர்த்தினி பருவமெய்தி, திருமண வயதை அடைந்தாள். பேரழகுடைய இவளுக்கு ஏயர்கோன் கலிக்காமரை மணமுடித்திட பெரியவர்கள் நிச்சயித்தனர்.

Advertisment

ff

திருமண நாளும் வந்தது. சுற்றமும் நட்பும் சூழ்ந்தனர். தன் பக்தன் மானக்கஞ்சாறன்மீது தீராக்காதல் கொண்ட மகாதேவர், ருத்ராட்ச மாலையோடு எலும்பு மாலைகளையும் அணிந்துகொண்டு, கேசத்தையே பூணூலாகத் தரித்துக்கொண்டு, உடல்முழுதும் விபூதி பூசியவண்ணம் மகாவிரதம் பூண்ட மாவிரதராய் (அகோரியாக) மணப்பந்தலை வந்தடைந்தார்.

அவரைக்கண்ட மானக்கஞ்சாறர் மனம் பூரிப்படைந்து, அவ்வடியாரை வரவேற்று மகிழ்ந்தார். தனது மகள் புண்ணியவர்த்தினியை அழைத்தார். சிவனடியாரின் பாதங்களில் விழுந்து, வணங்கி ஆசிபெறப் பணித்தார். அவளும் அந்த அடியாரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அப்போது அவளது அழகிய நீண்ட கருங்கூந்தலை கண்ணுற்றார் அகோரியாய் வந்த அர்த்தநாரீஸ்வரர்.

"ஆஹா! இந்த நீண்டகூந்தல் எனது மார்பில் அணியும் பஞ்சவடிக்கு (கேசத்தால் அணியும் பூணூல்) உதவுமே'' என்று மானக்கஞ்சாறரிடம் கூறினார். திருமண வேளையில், அதுவும் மகளின் கூந்தலை வெட்டுவது அமங்கலம் என்றுகூட கருத்தில் கொள்ளாத மானக் கஞ்சாறர், உடனே தனது உடைவாளை எடுத்தார். தன் மகளின் கூந்தலை அறுத்தார். வந்திருந்த மாவிரதரிடம் அளித்தார். அதை வாங்கிட எழுந்த அவ்வடியார் மறைந் தார். மறுகணமே தேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்து கஞ்சாறரை ஆட்கொண்டு, அவரை கண்ணீர் மல்கச் செய்தார் கயிலைநாதர்.

"உனது அன்பின் பெருமையை உலகிற்கு உணர்த்தவே யாம் இவ்வாறு செய்தோம்'' என்று கூறி அவரை ஆனந்தத்தில் திளைக்கச் செய்தார். அறுபட்ட புண்ணியவர்த்தினியின் கூந்தல் மீண்டும் வளர்ந்தது.

ஈசனுக்கே தனது தேசத்தை அளித்து, பெரும் புண்ணியம் செய்த புண்ணியவர்த்தினி, ஏயர்கோன் கலிக்காமரை மணந்தாள். இருவரும் சிவத்தில் திளைத்து வாழ்ந்தனர். இறுதியில் இணையில்லா ஈசனடியைச் சேர்ந்தனர்.

ஆதியில் சப்தமாதர்களுள் அன்னை கௌமாரி வழிபட்ட ஆனதாண்டவபுரம் என்னும் இப்பதி பாரிஜாத வனமாகத் திகழ்ந்துள்ளது. இந்த பாரிஜாத வனத்தில் ஆசிரமம் அமைத்து, தவமியற்றி வந்த பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்குக்கிணங்க பெருமான் இங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டியருளியுள்ளார். இதனால் இப்பதி "பாரிஜாதாசிரமம்', பரத்வாஜ ஆசிரமம் என்று அழைக்கப்பட்டது. இத்தல நாயகர் பரத்வாஜீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அதன்பின்னர் இத்தலம் கஞ்சனூர் என்று வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த முனிவரை ஆட்கொண்ட பின்னர் ஆனந்த தாண்டவபுரம் என்றாகி, தற்போது ஆனதாண்டவபுரம் என்று மருவியுள்ளது.

ஆனந்த மாமுனிவர் அனுதினமும் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இரவு அர்த்தஜாமப் பூஜைக்கு சிதம்பரம் சென்று தில்லையம்பலவாணரை தரிசிப்பது வழக்கம். தினமும் சரியாக நடந்துவந்த இந்த வழக்கம் ஏனோ தில்லைக்கே உரிய திருநாளான ஆருத்ரா அன்று முரண்பாடானது.

அன்றைய தினம் இராமேஸ்வர ஸ்நானம் முடித்து, கஞ்சனூர் நெருங்கும் வேளையில் புயல் காற்றோடு, கடும் மழையும் பெய்தது. செய்வதறியாமல் திகைத்த ஆனந்த மாமுனிவர் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். அடியார் துயரம் காணப் பொறுக்காத அம்பலத்தரசர் தனது ஆனந்தத் திருநடனத்தை இத்தலத்தில் ஆனந்தமாய் அரங்கேற்றினார். பேரானந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கினார் ஆனந்த மாமுனிவர். இதனால் இத்தலம் அன்றுமுதல் ஆனந்த தாண்டவபுரம் என்றே அழைக்கலானது. ஆனந்த மாமுனிவருக்கு ஆருத்ரா தரிச னத்தை இங்கேயே காட்டியருளி யதால் சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்யமுடியாத வர்கள் இந்த ஆனந்த தாண்டவ புரத்திலேயே அந்த அருட்காட்சி யைக் கண்டுமகிழலாம்.

அத்துடன் சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்வதற்கு முன்னரோ அல்லது தரிசனம் செய்த பின்னரோகூட இங்கு நடராஜப் பெருமானை தரிசனம் செய்வது உன்னதமான சிவனடியார்களின் மரபாக உள்ளது.

Advertisment

ff

அழகிய கிராமத்தின் கீழ்ப்புறமாக விசால மான திருக்குளத்துடன் அமைந்துள்ளது ஆலயம். இந்த திருக்குளத்திற்கு ஓர் சிறப் புண்டு. கருடன் தனது தாயாருக்கு ஏற்பட்ட தீராதநோய் தீர்க்க, தேவலோகத்திலிருந்து அமிர்தம் கொண்டுவரும்போது அதன் ஒரு துளியானது இத்தலத்தின் தீர்த்தத்தில் விழுந்துள்ளது. அதனால் இத்தீர்த்தத்திற்கு அமிர்தபிந்து தீர்த்தம் என்னும் பெயர் உண்டானது.

கிழக்கு நோக்கிய மூன்றுநிலை ராஜகோபுரம். உள்ளே செல்ல, கிழக்குத் திருமாளிகைப் பத்திகளில் (பக்கவாட்டில்) சூரியன், சந்திரன், காலபைரவர், நவகிரகங்கள், தனி சனீஸ்வரர் ஆகிய தெய்வச் சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. எதிரே ஆஞ்சனேயரும் உள்ளார். நேராக முகமண்டபம் நீள்வாக்கில் காணப்படுகின்றது. அதன் வடப்பக்கத்தில் உற்சவர் சந்நிதியும், ஸ்ரீ நடராஜர் சபையும் அமைந்துள்ளன.

மற்ற தலங்களைவிட இங்குள்ள நடராஜரின் இடது திருவடி சற்று முன்னே நீண்டு காணப்படுகின்றது. இந்த தூக்கிய திருவடியே "குஞ்சிதபாதம்' என்று போற்றப்படுகிறது. திருவாசியின் துணையின்றி முயலகன்மீது மட்டுமே தனது வலக்காலை ஊன்றி நிற்பது முற்றிலும் வித்தியாசமான அமைப்பாகும்.

அற்புதமான இந்த ஆடல்வல்லாரின் செப்புத் திருமேனியை காணக் கண்கோடி வேண்டும்.

உற்சவர் சிலைகளில் விசேட மூர்த்தியாகத் திகழும் ஜடாநாதர் அரிந்தக் கூந்தலைத் தனது இடக் கையில் பிடித்தபடி காட்சிதரும் தரிசனத்தை வேறெங்கும் நாம் காணமுடியாது.

அருகே மானக்கஞ்சாறரது விக்ரகமும் உள்ளது.

தென்முகம் பார்த்தபடி அன்னை பிரஹன்நாயகி தனியே சந்நிதிகொண்டு திருவருள் பொழிகிறாள். அம்பிகையை வணங்கிய ஈசன் சந்நிதியை அடைகிறோம்.

கருவறையுள் சிறிய மூர்த்தமாக பேரருள் பொழிகிறார் ஸ்ரீ பஞ்சவடீஸ்வரர். (பஞ்சவடீஸ்வரர்- ரோமத்தையே பூணூலாக அணிபவர்).

ஆலய வலம்வருகையில் கலைநயம் மிகுந்த தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை தரிசிக்கிறோம். ஆலய வாமபாகத்தில் இன்னொரு தல நாயகியாம் அன்னை கல்யாணசுந்தரி கிழக்கு முகம்காட்டி, தனியே சந்நிதி கொண்டு எழில் சிந்துகிறாள். தென்மேற்கில் தான்தோன்றி கணபதியும், மேற்கில் வள்ளி- தெய்வானை உடனுறை சுப்பிரமணியரும் வீற்றுள்ளனர்.

வடப் பிராகாரத்தில் ஜெயதுர்க்கை பிரகாசமாய் கோவில் கொண்டுள்ளாள். பலருக்கும் இந்த துர்க்கையே குலதெய்வமாக விளங்குகிறாள்.

ஒரே திருச்சுற்றுடன் திகழ்கிறது ஆலயம். ரம்மியமான சூழல் மனம் மயங்குகிறது. இத்தலத்தை தரிசிப்பதற்கு எல்லாரும் பாக்கியம் செய்திருக்கவேண்டும். தினசரி நான்குகால பூஜைகள் நடக்கின்றன. தினமும் காலை 6.00 மணிமுதல் 11.00 மணிவரையும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் ஆலயம் திறந்திருக்கும்.

தலவிருட்சமாக பாரிஜாதம் திகழ்கிறது. குருக்கள் பரம்பரையே இன்றுவரை கோவில் அறங்காவலராக உள்ளனர். பொதுவான சிவாலய விசேஷங்களோடு, ஆருத்ரா மற்றும் மானக்கஞ்சாறர் குருபூஜை ஆகியன இங்கு கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றன.

சுவாமியும், அம்பிகையும் இங்கு திருமணக்கோலத்தில் உள்ளதால், திருமணத்தடை நீக்கும் தலமாகத் திகழ்கிறது. அமிர்தபிந்து தீர்த்தத்தில் நீராடி, இறைவன்- இறைவியை வழிபடுபவர்களின் குஷ்டரோகம் மற்றும் எல்லாவிதமான தோல் நோய்களும் நிவர்த்தியடைகின்றன. முற்பிறவியில் ஏற்பட்ட சாப- பாவ- தோஷங்கள் யாவும் இத்தல வழிபாட்டினால் நாம் போக்கிக்கொள்ளலாம் என்பது ஐதீகம்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகரிலிருந்து சேத்தூர் செல்லும் வழியில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆனதாண்டவபுரம்.