செய்யுள்-38
"ஆதாளியை ஒன்றறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கிறைவா
வேதாள கணம்புகழ் வேலவனே.'
பொருள்: கூதாள மலர்களை மாலையாக அணிந்துள்ள வேடுவ குலத்திற்கு இறைவனே, வேதாள கணங்களால் புகழப்படுபவரே, வேலாயுதப் பெருமாளே! அறமென்ற ஒன்றை அறியாதவனும், மிகவும் தீய இயல்புகளை உடையவனுமான என்னையும் நீ ஆட்கொண்டுகொண்ட கருணையை சொல்லவும் முடியோமோ!
கூதாள மலர்கள் மலைசார்ந்த இடங்களில் மட்டுமே வளரக்கூடியது. இந்த கூதாள மலர்களுக்கு வாசனை என்பது கொஞ்சமும் இருக்காது. அழகும் இருக்காது. இப்படிப்பட்ட கூதாள மலர்களைக்கொண்டு செய்த மாலையை இறைவன் விருப்பத்துடன் அணிகிறார். ஏனென்றால் அவருடைய நாயகியான வள்ளியம்மை வேடுவகுலத் தோன்றலின்போது இந்த மாலையை அணிந்திருந்தாள். இங்கு வாசமில்லா மலர்களை அருணகிரிநாதர் குறிப்பதற்கு வேறிரு காரணங்கள் உண்டு. முதலாவதாக, இறைவன் எளிமையானவர். ஆதலால் வாசனையில்லாத பூக்களையும் விரும்பி அணிகிறார். அவர் மலர்களைக்கூட வாசனை யில்லை என்று ஒதுக்குவதில்லை. நாம்தான் பூஜைக்கு ஆகாத மலர்கள் என்றும், ஆகும் மலர்கள் என்றும் பிரிக்கிறோம்.
மேலும் இறைவன் தானே சென்று வள்ளியை வேடுவர் குலத்தில் வளரும் பொழுது மணம்புரிகி றார். அவர் பக்தர்களுக்காக இரங்கிவரும் மன முடையவர் என்றும் தெரிகிறது. அதேபோல், போர்க்களத்தில் அசுரர்களின் உடல்களை உண்டு களிப்பில் ஆடிய வேதாள கணங்கள் இறைவனைப் புகழ்வதை, எவ்வாறு வேத கோஷத்தில் இறைவன் மகிழ்வாரோ, அதே போல் இந்த பேய்க் கூச்சலையும் விரும்பி ஏற்றுக்கொள்கிறார்.
இரண்டாவதாக இங்கு வாசனையில்லாத மலரென்று அருளாளர் குறிப்பது- வாசனை யென்று கூறப்படும் கர்மவினைகளை. இவ்வாறு கர்மவினைகளின் படிவுகள் இல்லாத ஆன்மாக்களை இறைவன் விரும்பி ஏற்கிறார். அதனைக் கண்டே வேதாள கணங்கள் இறைவனைப் புகழ்ந்து, தங்களையும் அவ்வாறு ஏற்றுக்கொள்ளுமாறு முறையிடுகின்றன.
இவ்வாறாக தகுதியிலா பொருட்களையும் இறைவன் மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் பாங்கும், ரகசியமாக அருளாளர் கொடுக் கும் சிந்தனைகளும் இந்தப் பாடலில் வெளி வருகின்றன. லலிதையின் சஹஸ்ரநாமத்திலும் "துராச்சார சமணி' என்ற நாமம், அவள் தகுதியில்லாத மற்றும் தவறான நெறிகளையும் மன்னித்து ஏற்றுக்கொள்கிறாள் என்ற பொருளில் வரும்.
இந்தப் பாடலில் "அறத் தீதாளி' என்னும் பதம், அறமென்றால் என்னவென்றே தெரியாதவன், மிகுந்த தீமையான செயல்களை மட்டுமே புரிபவன் என்பதைக் குறிக்கிறது. இவ்வாறாக இருக்கும் தன்னையும், இறைவன் எவ்வாறு கூதாள மலர்களை ஏற்று அருள்புரிகிறாரோ, அவ்வாறே தன் கர்மவினை களையும் களைந்து ஏற்றுக்கொள்ளுமாறு முறையிடுவதே இப்பாடல்.
சென்ற பாடல்களில் சாதகன் குருவை அடைந்து உபதேசம் பெற்று, சந்நியாசம் வாங்குமளவுக்குத் தேறிவருகிறான். அவன் ஆன்மிக நிலையில் முன்னேற்றம் அடையும்போதுதான் தெரிகிறது-
அவனிடம் எத்துணை தீய இயல்புகள் இருந்தன என்று! தான் இறைநிலையை அடையவோ, குருவின் கருணைக்கோ பாத்திரமானவன் அல்ல என்றும் புரிகிறது. ஆனால் குருவானவர் அவனைத் தன் கருணை யால் மட்டுமே ஆட் கொண்டு சாதகனைத் தயார்படுத்தியதை இப்போதுதான் அவன் உணர்கிறான். இவ்வாறு உணர்ந்த நிலையில்தான் அவனுடைய உண்மை இயல்பை எண்ணி, இவ்வாறாக இருந்த ஒருவனையும் இறைவன் இரங்கிவந்து ஆட் கொள்வதையும், குருவே இறைவனாக அமர்ந்து இந்த செயலைப் புரிவதை யும் சாதகன் பின்னாட் களில் உணர்வதற்கு ஏதுவாக இந்த நிகழ்சி அமைகிறது. லலிதையின் நாமங்களில் "குரு மண்டல ரூபிணி' என்னும் நாமம் இந்தப் பொருள் கொண்டே வரும்.
செய்யுள்-39
"மாவேழ் சனனம்கெட மாயைவிடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின்கொடி தோள்புணரும்
தேவே சிவசங்கர தேசிகனே.'
பொருள்: இந்த பிரபஞ்சத்தின் அரசே, மின்னல்கொடி போன்ற குறமகளின் தோல்களை அன்புடன் அணைபவரே, சிவ சங்கரப் பெருமானின் குருவே! மாவேழ் (விரிவான பொருள் கீழே) பிரிவுகள் மற்றும் அதனோடு ஏற்படும் மாயை மற்றும் மூன்று விதமான ஆசைகள் எப்போது முடியுமோ?
இந்தப் பாடல் கர்மவினைகளின் வகைகளையும் மற்றும் பிறவிகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்றும் விவரிக்கிறது. இவ்வளவு நாட்கள் சாதகனுக்கு சந்நியாச தீக்கை, மகா வாக்கிய உபதேசங்கள் மற்றும் தியானப் பயிற்சி ஆகியவை செய்யத் தொடங்கும்முன்பு, அவனுக்கு கர்மவினைகள் மற்றும் பிறவிச் சுழற்சி போன்றவைமீது உணர்வுப்பூர்வமான புரிதல் இருந்திருக்கவில்லை. ஆனால் இப்போது தியானம் கைகூடியபின்பு இந்த தத்துவங் கள் உணர்வுப்பூர்வ மாகப் புரியத் தொடங்கும் பொழுது தான் அவன் எடுத்த பிறவிகள், எஞ்சிய கர்மவினைகளால் சந்நியாசம் கொள்ளவில்லை; குருவின் பார்வை இல்லாததால் எடுத்த பிறவிகள் என்று அவனுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது.
அவ்வாறாகப் புரியும்பொழுது, இந்தப் பிறவிக்குக் காரணம் இறைவனின் மாயாசக்தி என்றும், இறைவன் தாமே தம்மில்லிருந்து, மற்றவர்களிடம் தம் சக்தியைக்கொண்டே மறைத்துக்கொண்டு நாடகமாடுவதும் புரிகிறது. மேலும் இறைவன் எழுதிய நாடகத்தில் பிறவிகள் ஏழு வகைப்படும் என்பதும், மூன்றுவிதமான ஆசைகளைக்கொண்டு இந்த மாயை செயல்படுத்தும் என்பதும் தெரிகிறது. மாயையின் ஆதிக்கம் எல்லா இடங்களிலும் உண்டு. அண்டத்தில் மகா மாயையாக அவளே இருக்கிறாள். பிண்டத்தில் கர்மவினைகளை நடத்தும் மாயையாக- இறைவனின் மாயாசக்தியாக செயல்படுகிறாள்.
இந்த மாயாசக்தி வழிவிட்டால்தான் இறை நிலையை உணரமுடியும்.
தேவி மகாத்மியத்தில், விஷ்ணுவை பீடிக்கும் மாயையானவள் நீங்கியபிறகே மது கைடப அசுரர் வதம் நிகழ்வதைப் பார்க்கமுடியும். இவ்வாறாக மாயை எல்லா இடங்களிலும் இருந்து செயல்களை இறைவன் சித்தப்படி செய்கிறாள் அல்லது செய்விக்கிறாள்.
இந்தப் பாடலில் மாவேழ்- பெரிய ஏழு பிறவிகள் என்று சொல்லப்படுவது, பிறவிகள் பொதுவில் எழுவகைப்படும். இந்த ஏழு பிறவி வகைகளிலும் பல்வேறு உட்பிறவிகள் உண்டு. மாவேழ் பிறவிகளுக்கு மொத்தம் 84 லட்சம் யோனி பேதங்கள் உண்டு. அவை முறையே மரஞ்செடிகொடி, நீரினம், ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதன் மற்றும் தெய்வம் ஆகிய ஏழு வகையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஜீவன் இந்த மாவேழு பிறவிகளைக் கடந்து செல்வதற்கு "மூவேடனை' என்று கூறப்படும் மூன்று ஆசைகள் தடையாக அமையும்.
அவை மண், பெண் மற்றும் பொன்னாசை என்று தமிழிலும், சமஸ்கிருதத்தில் "ஏஷணை' என்றும் வழங்கப்படுகிறது. இந்த வார்த்தையைத் தமிழ்ப்படுத்தும்பொழுது "ஏடணை' என்று மருவுகிறது.
இந்த ஏடணைகள் அல்லது ஏஷணைகள் பின் வருமாறு:
வித்தேஷணை (அ) அர்தேஷணை (மண்ணாசை): அர்தேஷணை என்பது சொத்து, செல்வம் (பணம்) ஆகியவற்றின்மீதான ஆசை. பெருத்த செல்வம் தங்களிடமிருந்தால் அனைத் தையும் கட்டியாளலாம்; வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்கலாமென்று மக்கள் எண்ணுகிறார்கள். அதனால் மக்கள் செல்வந்தர்களாக ஏங்குகிறார்கள்.
புத்ரேஷணை (பெண்ணாசை): புத்ரேஷணை என்பது மனைவி மற்றும் குழந்தைகள் (குறிப்பாக மகன்) மீதான ஆசை. இவ்வுலகிலும் சொர்க்கத்திலும் சுகங்களை அனுபவிக்க ஆசை.
லோகேஷணை (பொன்னாசை): லோகேஷணை என்பது இவ்வுலகத்தில் பெயர் மற்றும் புகழுடன் வாழ்வதில் ஆசை. அவரவர்களது இடத்தில் (ஊர்- மாநிலம்- நாடு), அவரவர்களின் துறைகளில் (கலை, விளையாட்டு), மதம் மற்றும் ஆன்மிகத் துறைகளில்கூட ஒவ்வொருவரும் மிக முக்கியமான நபராகவும், பரவலாக அறியப்பட்டவராகவும், மதிக்கப்படுபவராகவும் இருக்க விரும்பு கிறார்கள். சுருங்கக் கூறின், ஒருவன் எங்கிருந் தாலும், என்ன செயல் செய்துவந்தாலும், எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவன் முக்கியமானவனாகவும், நன்கு அறியப்பட்டவனாகவுமே இருக்க விரும்புகி றான்.
இந்த மூன்றுவித ஆசைகளும் மனிதனுக்கு இந்த உலகத்தில் எல்லா வளங்களையும் தரும். ஆனால் இவையே இறைவனை அடையப் பெருந்தடையாக இருக்கும். இந்த ஆசைகளே பிறவிகள் திரும்பத் திரும்பத் தோன்றக் காரணம். அருணகிரிநாதர் இதையே "ஏழு கடல் மணலை அளவிடின் அதிகம் எனது இடர்பிறவி அவதாரம்' என்று திருப்புகழில், தாம் பல லட்ச யோனி பேதங்களில் பிறந்ததைக் குறிப்பிடுவார். இந்தப் பிறவிகள் மற்றும் ஆசைகளைக் கடந்தால் மட்டுமே இறைவனையடைந்து இந்த துன்பத்திற்கு முடிவு காணமுடியும். ஆனால் அதற்கு இறைவனின் மாயாசக்தி வழிவிடவேண்டும், அந்த கோரிக்கையை வைப்பதுதான் இந்தப் பாடல்.
இறைவன் எவ்வாறு வள்ளியிடம் சென்று, அவளுடைய மயக்கத்தைப் போக்கி ஏற்றுக்கொண்டாரோ, அவ்வாறே தம்மையும் மாயை நீக்கி அருளவும், எவ்வாறு குடிமக்களுக்கு அரசன் இடர் களைவானோ அவ்வாறு இந்த பிரபஞ்சத்தின் அரசனான முருகப்பெருமான் சாதகர்களின் குறைகளை நீக்கி, மாயாமலம் நீக்கி தம்முடன் சேர்த்து அருள்புரிய வேண்டுமென்று இந்த பாடலில் அருணகிரிநாதர் கேட்கிறார்.
லலிதையின் நாமங்களில் "பவ சக்ர ப்ரவர்த்தினி,' "ஜன்ம ம்ருத்யு ஜரா தப்த ஜன விஸ்ராந்தி தாயினி' என்னும் நாமங்கள், அவளே பிறவி சுழற்சியை நடத்துபவள்; சுழற்சியிலிருந்து நீக்கம் தருபவள் என்று கூறுகின்றன. "மஹா மாயா,' "விஷ்ணு மாயா' என்னும் நாமங்களில், மாயையாகவும் இருந்து பிரபஞ்சத்தை மாயாசக்தியால் நடத்திவருபவள் அவளே என்று வருகிறது.
இவ்வாறு சஹஸ்ரநாமமும் அனுபூதியும் ஒரு பொருள்கொண்டு, இறைவனை அடையும் வழியைக் காண்பிக்கின்றன.
(அனுபூதி தொடரும்)