செய்யுள்-32
"கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ
கொலையேபுரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலைகூறிடு வாகையனே.'
பொருள்: வன விலங்குகளைக் கொன்று புசிக்கும் வேடர் குலத்தில் வளர்ந்த அழகிய பெண் யானையைப்போன்ற வள்ளியம்மையை மணந்தவனே, கிரௌஞ்ச மலையை வேலால் பிளந்து கூறிட்டு வெற்றியின் அடையாளமாக வாகை மலர்களைச் சூடியவனே, சாத்திர நூல்களைக்கொண்டு பலவித தர்க்கங்களைச் செய்து, அந்த சாத்திர அறிவில் சிக்கிக் கொண்டு வெளியில் வரமுடியாத நிலை வராதவாறு என்னைக் காப்பாய் முருகா.
முந்தைய பாடல்களில் சாதகனுக்கு ஆத்மானுபூதி ஏற்படுவதையும், அதனால் அவன் வாழ்வைப் பாழ் வாழ்வென்று அறிந்துகொண்டதையும் பார்த்தோம். கர்மவினைகள் அவனிடம் மண்டியிருப்பது தெரிகிறது. அதனை அனுபவித்து முடித்தால் அவன் இறைநிலை யில் நிலைத்திருக்க முடியுமென்பதால், கர்மவினைகளைக் களைய அவன் எடுக்கும் முயற்சிகளை உலகவாழ்வில் உள்ளவர்கள் சாத்திர நூல்களைக்கொண்டு மிகவும் தடுப்பதை இந்தப் பாடல் குறிக்கிறது.
இறைநிலையை அடைய எண்ணிய சாதகன் கீழ்க்கண்ட பரிணாம வளர்ச்சிகளை அடைவதை அருணகிரி நாதர் பல்வேறு பாடல் களில் உணர்த்துகிறார்.
வைராக்கியம் முளை விடுதல்- நான்காவது செய்யுளில் "வளைபட்ட கைமாதோடு மக்கள் எனும் தளைபட்டழியத் தகுமோ' என்று நினைக் கிறான். பின்னர் "மட்டூர் குழல் மங்கையர் மையல் வலை பட்டு' என்னும் பாடலிலும், "பேராசை எனும் பிணியிற் பிடிபட்டு' என்னும் பாடலிலும் அந்த வைராக்கியமானது மேலும் வளர்கிறது. இந்த வைராக்கியம் மேலும் தியாகம் அல்லது சந்நியாசம் என்று மலர் கிறது. அந்த சந்நியாசத் தின் பலனாக ஞானம் அல்லது மோட்சம் என்ற பழமாக "அனுபூதி' என்னும் இறையனுபவம் கிடைக்கிறது.
இங்கு அருணகிரிநாதர் சந்நியாசம் என்று சொல்வதை, குடும்பத்தைவிட்டுத் துறவறம் மேற்கொள்வதென்று பல்வேறு உரைகளில் நாம் காண்கிறோம். ஆனால் இங்கு சற்று வேறொரு கோணத்தில் சந்நியாசம் அல்லது தியாகம் ஆகிய நிலைகளை நாம் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறோம்.
சந்நியாச தீட்சை என்பது, ஒரு சாதகன் தன் குடும்ப வாழ்விலிருந்து பிரிந்து, அங்கு அவன் கர்மவினைகள் நீங்கிய நிலையில், குருவானவர் அந்த சாதகனிடம் வைராக்கியம் இருப்பதை நடைமுறையில் அறிந்துகொண்டு, பல்வேறு பரீட்சைகளை பலவருட காலம் செய்தபிறகே சந்நியாச தீட்சையளிக்கிறார்.
அந்த சந்நியாச தீட்சையின்போது, விராஜா ஹோமம் என்னும் வேள்வி நடைபெறும், அந்த வேள்வியில் சாதகனின் எஞ்சிய சில கர்மவினைகளும் பரம்பொருளிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த வேள்வியில் மஹா நாராயண உபநிஷத்தின் மந்திரங்கள் கொண்டு ஆகுதி கொடுக்கப்படுகிறது. மேலும் அந்த வேள்வியின் முடிவில் சாதகன் தனக்குத்தானே தர்ப்பணங்கள் கொடுத்துவிட்டு, தன்னுடைய உலகவாழ்வு முடிவதை குறியீடாக அங்கு வெளிப்படுத்துகிறான்.
அதன்பிறகு கங்கையில் குளித்து வெறும் கௌபீனத்துடன் சென்று, தன் குருவிடம் காவியுடை பெற்றுக்கொள்கிறான்.
அந்த நேரத்தில் குரு, சீடனுக்கு புதிய பெயர் ஒன்றை வைக்கிறார் அல்லது அருள்கிறார். இப்படி ஒரு சாதகனுக்குக் கிடைக்கும் பெயர்கள் சரஸ்வதி, பாரதி போன்ற பெயர்களை கடைசியாகக் கொண்டிருக்கும். குருவின் பரம்பரையைப் பொருத்து இந்தப் பெயர்கள் மாறுபடுகின்றன. உதாரணமாக சுவாமி சிவானந் தர், ரிஷிகேஷத்தில் தனது சீடர்களுக்கு கிருஷ்ணானந்த சரஸ்வதி, சின்மயானந்த சரஸ்வதி, சிதானந்த சரஸ்வதி போன்ற நாமங்களை வழங்கியிருக்கிறார்.
இந்த நாமத்தோடு துறவறத்தையும் ஏற்கிறான் சாதகன். அதன்பின் துறவறத் திலிருந்து, வேறெந்த ஒரு கவனச் சிதறலும் இல்லாமல் எப்போதும் இறையனுபவத்திலேயே வாழ்ந்து, பின் இறைவனிடம் ஒன்றிவிடுகிறான்.
இவ்வாறு ஒரு சாதகன் சந்நியாசம் எடுக்கவேண்டுமென்று முடிவுசெய்த பின்பு, அதை அவன் தன் சுற்றம் மற்றும் சொந்தங்கள் மத்தியில் அறிவித்தவுடன், அவர்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகிறான்.
மேலும் சாத்திர நூல்களைக்கொண்டு அவன் முடிவைக் கடுமையாக மறுதலிக் கவும் செய்கிறார்கள். அந்த விவாதமானது மிகுந்த காரசாரமாக அமைகிறது.
அதையே "பதறிக் கதறி' என்று கூறுகிறார் அருளாளர். ஆனால் இறையருளால் அவ்வாறு அந்த விவாதங்களில் மூழ்கிவிடா மல், சாதகன் இறைவனை நோக்கித் தான் எடுத்த முடிவில் நிலைத்துநின்று துறவறத்தை மேற்கொண்டுவிடுகிறான்.
இந்தப் பாடலுக்கும், சக்தி வழிபாடான ஸ்ரீவித்யா முறைக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ஸ்ரீவித்யா தீட்சையிலும் சாதகன் குருவிடம் பலகாலம் பயிலவேண்டும். குரு சாதகனை இறையனுபவத்திற்கு பல்வேறு மந்திரங்கள், பூஜைமுறைகள் கொண்டு படிப்படியாகத் தயார்செய்கிறார்.
இறுதியாக மகா சோடஷி என்னும் மந்திர தீட்சையளிக்கும் முன்பு சந்நியாச தீட்சைபோலவே விராஜா ஹோமம் செய்து, பின்பு சாதகனை கலசநீர் கொண்டு அபிஷேகம் செய்து, அவன் உடலிலேயே பராசக்தியை மந்திரப்பூர்வாமாக எழுந்தருளச் செய்து, பின் புதிய ஆடைகள் அணிவித்து, பதினாறு அட்சரங்கள் கொண்ட மந்திர உபதேசம் செய்யும்முன்பு அவனுக்கு ஒரு புதிய பெயர் அளித்து, அதன்பின்னரே மந்திர உபதேசம் நல்கப்படுகிறது. மகா சோடஷி மந்திர தீட்சையே சந்நியாசத்திற்கு நிகராக விளங்குகிறது. ஆனால் மற்ற சமயங்களைப்போல இல்லாமல், சாதகன் உலகவாழ்வில் இருந்துகொண்டே சந்நியாசியாக வாழ்கிறான். இம்மாதிரி சடங்குகள் ஒருவனை மீண்டும் பிறக்கச் செய்கிறது. இவர்களே "த்வஜ' என்று இருமுறை பிறந்தவர்களைக் குறிக்கும் சமஸ்கிருத சொல்லால் அழைக்கப்படுகின்றனர்.
இந்தப் பாடலிலும் அருளாளர் குறிப்பாக சந்நியாசம் வாங்கினால்தான் இறையனுபவம் வாய்க்குமென்று கூறவில்லை. மாறாக சந்நியாச மனோநிலையானது இறையனுபவம் வாய்த்தால் வந்துவிடுகிறது. உலகவாழ்வில் வாழ்ந்தாலும் பற்றானது அற்றுவிடுகிறது. இங்கு உலகவாழ்விலுள்ள விவாதங்களிலும், தர்க்கங்கள், சாத்திரங்களைக்கொண்டு செய்யப்படும் கர்மாக்களிலும் பற்றில்லாது போவதால், வெகுஜன விரோதத்திற்கு ஆளாகி, அவர்களை சமாளிப்பதிலேயே காலம் சென்றுவிடாமல் இருக்கவேண்டும் என்று கேட்பதே இந்தப் பாடல். இப்படி எப்போதும் இறைசிந்தனையில் இறைவனுக்காக இருப்பதே தவம் என்னும் கொள்கைக்குள் வரும்.
லலிதா சஹஸ்ரமத்தில் "தாபஸ் ஆராத்யா'- தவம் செய்பவர்களால் ஆராதிக்கப்படுபவள், தவத்தால் ஆராதனை செய்யப்படுபவள், தவம்செய்து ஆராதனை செய்தவள் என்றும்; "த்விஜ பிருந்த நிஷேவிதா' என்னும் நாமத்தில் இருமுறை பிறந்தவர்களை- மேற்கூறிய வழிமுறையில் வந்தவர்களைக் காப்பவள் என்றும்; "யோகினி' என்னும் நாமத்தில், யோக மார்க்கத்தில் ஈடுபட்டுத் தவம்செய்பவள், "யோகதா' என்னும் நாமத்தில் யோக மார்க்க தவத்தைக் கொடுப்பவள் என்றும்; முடிவில் "முக்திதா' என்னும் நாமத்தில் முக்தி தருபவள் என்றும் கூறுவது, அனுபூதியில் சக்தி வழிபாடு தோய்ந்து வருவதைக் காணமுடிகிறது.
செய்யுள்-33
"சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தாடவி என்று விடப்பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே.'
பொருள்: கந்தப் பெருமானே! முருகா! கருணையின் உறைவிடமே, கங்காநதி தந்த வரப்பிரசாதமே, கங்கை பெற்ற வரத்தால் உதித்தவனே! விந்திய மலைக் காடுகள் நடுவில் சிக்கிக்கொண்டு வெளியில் வரமுடியாது தவிப்பதுபோல் குடும்பம், செல்வம் என்ற இந்த வாழ்விலிருந்து நான் எப்போது மீண்டு வெளியில் வருவேன்!
முந்தைய பாடலில் சாதகன் சந்நியாச ஆஸ்ரமம் தழுவலாமென்று அவனுடைய முடிவைத் தெரிவித்தபோது, அவன் சுற்றமும் சொந்தமும் மிகுந்த காரசாரமான விவாதங்களில் அவனை உட்படுத்தி, இறைநிலையை அடையமுடியாமல் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கிய சம்பவங்கள் தொடர்கதையாக நடந்த வண்ணம் இருக்கின்றன. கந்தர் அனுபூதியில் 51 பாடல்கள் இருந்தாலும், முதல்முறையாக இந்தப் பாடலில்தான் கங்கையைப் பற்றிக் குறிப்பிடுகிறார் அருளாளர். சாதகன் வைராக்கிய நிலை அடைந்தபிறகு, துறவறம் மேற்கொள்ள விரும்பியபின் தன் குருவின் ஆஸ்ரமம் தேடி கங்கைக்கரைக்குச் செல்கிறான். அங்குசென்று தன் குருவை சரணடைந்து துறவறத்தில் ஈடுபட்டு முக்திநிலையில் லயிக்க தன் விருப்பத்தைத் தெரிவிக்கி றான். ஆனால் இவன் கங்கைக்கரையை அடையவேண்டுமெனில் பாரத தேசத்தின் முழு நீளத்தையும் நடந்தே கடக்கவேண்டிய கட்டாயம் அருளாளர் காலத்தில் இருந்திருக் கக்கூடும். அவ்வாறு சாதகர்கள் கங்கையை அடையவேண்டுமெனில் பாரதத்தின் மத்திய பிரதேசத்திலுள்ள விந்திய மலையைக் கடந்து, அதன் அடிவாரத்திலுள்ள காட்டைக் கடந்துதான் வடக்குநோக்கிச் சென்று கங்கையை அடையமுடியும்.
இவ்வாறான யாத்திரைகள் செல்வது அவ்வளவு எளிதல்ல. விந்தியமலைக் காட்டைக் கடப்பதும் எளிதான செயலாக இருக்கவில்லை. இப்போதும்கூட தமிழகக் காடுகளில் நுழைந்தால் வெளியேவர வழிதெரியாமல் பலர் காணாது போவதுண்டு. இந்த விந்தியமலைக் காட்டைக் கடக்க முடியாமல் பல யாத்ரீகர்கள் தோல்வியுற்று இறந்து போவதுண்டு. அப்படிப்பட்ட காட்டைதான் இந்தப் பாடலில் உலக வாழ்க்கைக்கு உதாரணமாக்குகிறார் அருண கிரிநாதர். இதற்கும் ஒரு காரணமுண்டு. சாதகன் எவ்வாறு ஆன்மிக வாழ்வில் பாதிதூரம் முன்னேறி இருக்கிறானோ அதேபோல் உலகப் பற்றில் பாதிதூரம் விட்டு விலகிவிட்டான். ஆனால் பாதி தூரம் மட்டுமே பயணமாகாது. இங்கு விந்தியமலைக் காடானது பாரதத்தின் பாதி தூரத்தில் இருப்பதும், அந்தக் காட்டை உலக வாழ்வின் சிக்கலுக்கு உருவகப்படுத்துவதும், காட்டைவிட்டு வெளியேவர வழிதெரியாமல் இருப்பது- உலகவாழ்வின் துயரத்திலிருந்து சாதகன் வெளியில் வரத் தெரியாததையும் குறிக்கிறது. மேலும் சாதகன் தான் எங்கு செல்லவேண்டுமென்று ஏற்கெனவே அறிந்தபடியால் கங்கைக்கரையைப் பற்றிய குறிப்பும், எவ்வாறு திக்கற்றவர்க்கு தெய்வமே துணையாக இருக்குமோ, சாதகன் அதை நினைத்தே கங்கையின் புதல்வனான முருகப்பெருமானை உதவிக்கு அழைக்கி றான்.
இங்கு "மந்தாகினி தந்த வரோதயனே' என்னும் வரி, ஈஸ்வர குமாரனை சுமக்கும் வரத்தை ஈசனிடமிருந்து கங்கை பெற்றதைக் குறிக்கிறது. எவ்வாறு கங்கை முருகப்பெருமானை சரவணப் பொய்கையில் கொண்டுசேர்த்ததோ, அவ்வாறு தம்மையும் கரைசேர்க்குமாறு முருகனிடம் சாதகன் வேண்டுகிறான்.
லலிதையின் சஹஸ்ரநாமத்தில் "விந்யாசல நிவாஸினி' என்னும் நாமம், அவள் விந்தியமலையில் அமர்ந்திருப்பவள் என்றும்; இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளில் சம்சாரக்காட்டை அழிப்பவள் என்று "பவ ஆரண்ய குடாரிக்கா', "பாப ஆரண்ய தவாநலா' என்னும் நாமங்களிலும் வரும். மேலும் "ம்ருத்யு தாரு குடாரிகா' என்னும் நாமம், இறப்பை அழிப்பவள் அல்லது இறப்பிற்கு கோடாரி போன்றவள் என்ற பொருள்கொண்டு வரும்.
முருகனை அருணகிரிநாதர் கருணையின் உருவமாக இந்தப் பாடலில் சொல்கிறார். லலிதையின் நாமங்களில் "கருணா சாகரி',
"அவ்யாஜ கருணா மூர்த்தி' போன்ற நாமங்களும்; அவளுடைய தியான ஸ்லோகத்தில் "அருணாம் கருணாம்' என்னும் வரியின்மூலம் அவளின் கருணையின் வெளிப்பாடும் பேசப்படுகிறது.
இவ்வாறு கந்தரனுபூதியும் லலிதா சஹஸ்ரநாமமும் ஒரே இறைவனைக் குறித்து இருவேறு உருவங்களில் வழிபடும் ஒத்த கருத்துடைய நூல்களாக விளங்குவதை நாம் ஒவ்வொரு பாடலிலும் காணமுடிகிறது.
(அனுபூதி தொடரும்)