செய்யுள்-42

"குறியைக் குறியாது குறித்தறியும்

நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்

செறிவற்று உலகோடு உரை சிந்தையுமற்று

Advertisment

அறிவற்று அறியாமையும ற்றதுவே.'

பொருள்: தியானத்தின் குறிக்கோளான பரப்பிரம்மத்தைத் தவிர வேறெந்தவொரு பொருளையும் நினையாமல் பரப்பிரம்மத்தை மட்டுமே நினைந்து, பிரம்மத்தை அடைந்த நிலையைத் "தனிவேல் நிகழ்த்திடலும்' என்னும் பாடலில் அருணகிரிநாதர் கூறுகிறார். இவ்வா றாக தியானத்தின் குறிக்கோளை அடைந்தபின் இந்த உலகோடு இயைந்த எண்ணங்களும் உலகாயுத மான அறிவு மற்றும் அறியாமையாகிய அனைத்தும் தம்மைவிட்டுப் போனதைப் பாடலில் கூறுகிறார்.

Advertisment

dd

இந்தப் பாடலில் அருணகிரிநாதர் தியானத்தின் பலனையும் அதன்பின்பு நடக்கும் வெளிப்பாடுகளையும் கூறுகிறார். கந்தரனுபூதியின் ஆரம்பம் முதலே இறைவனையடையும் ஒரே குறிக்கோளைதான் ஒவ்வொரு பாடலிலும் வலியுறுத்திவருகிறார். "என்னை இழந்த நலம்' என்னும் வரிகளும், "இறையோன் பரிவாரம் மேவலையே' என்ற இடத்திலும், "வடிவேல் இறைத் தாள் நினைவாய்' என்றும், "வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்' என்னும் இவ்விடங்களிலும் இறைவனை வலியுறுத்தி வந்திருக்கிறார்.

இங்கு குறி என்னும் சொல் இறைவனையடையும் ஒற்றை லட்சியத்தைக் கூறுகிறது. "குறித்தறியும்' என்னும் பதம், இறைவனை நோக்கி எடுத்த முயற்சிகளினால் வெளிப்பட்ட இறையருளைக் குறிக்கிறது. "குறியாது குறித்து' என்னும் பதம் இறைவனைத்தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத தியான நிலையைக் குறிக்கிறது.

நெறி என்னும் பதம், இங்கு முக்தி நெறியையே குறிப்பிடும், முக்தி என்ற இலக்கை நோக்கி சாதகன் நகர்வதையே "தனி வேலை' என்றும், அதற்காக வேலாயுதத்தை தியானம் செய்வதையும் குறிப்பதே முதல் இரு வரிகள். இவ்வாறாக சாதகன் வேலை தியானம் செய்யச் செய்ய, ஒருவாறாக சாதகன் சமாதி நிலையை அடைந்துவிடுகிறான். அதனால் தான் இங்கு உலகமயமானதும் மாயமானதுமான அறிவு, அறியாமை என்னும் இரண்டுமே இல்லாமல் போய்விடுகிறது, இங்கு துவைத பாவம் மாறி அத்வைத பாவம் சித்திக்கும் நிலையையே இந்தப் பாடல்மூலம் அருணகிரிநாதர் கூறுகிறார். விடாமுயற்சியுடனான வைராக்கியத்துடன் இறைவனை நோக்கிப் புரியும் தியானமே சாதகனை இறைநிலைக்கு உணர்த்தி ஒன்று பெறச் செய்யும் என்பதையும் இந்தப் பாடல் விளக்குகிறது.

லலிதா சஹஸ்ரநாமத்தில் "தியான தயாத்ரு த்யேய ரூபா, தர்மா அதர்ம விவர்ஜிதா' என்னும் நாமங்கள் இந்தப் பாடலில் கூறியதுபோல தியானத்தைக் கொடுத்து, சாதகனை மெல்ல உயர்த்தி தர்மம் (நல்லது, புண்ணியம், அறிவு, அதர்மம், கெட்டது, பாவம், அறியாமை) என்னும் நிலைகளுக்கெல்லாம் அப்பாலிருக்கும் பரதேவதையான லலிதையிடம் கொண்டு சேர்க்கும்.

செய்யுள்- 43

"தூசா மணியும் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினது அன்பருளால்

ஆசா நிகளம் துகளாயின பின்

பேசா அநுபூதி பிறந்ததுவே.'

பொருள்: மாசிலாமணி மற்றும் ஆடைகளையும் அணிபவளான வள்ளியின் உயிர்நேசனே, உனது அன்பு மற்றும் அருளால் ஆசையென்ற விலங்கு தூளாகியபின்பு இங்கு எனக்கு வெளிய விவரிக்கமுடியாத இறையனுபூதி பிறந்தது.

சாதகன் கொஞ்சங்கொஞ்சமாக கடந்த பாடல்வரை இறையருளினால் சமாதி அல்லது இறைநிலையை அடைந்து விடுகி றான். அப்போதே அந்த அனுபவத்தை விவரிக்க இயலாது என்பதை "பேசா அனுபூதி' என்று கடந்த பாடலில் கூறிய பின்பு, முருகனின் அருளை இப்போது முழுவதும் அறிந்தவராய் இந்தப் பாடல் வெளிப்படுவதை இங்கு காணலாம்.

இவ்வளவு நாட்கள் வள்ளியை தினைப் புலம் காத்தவள், குறமகள், வேடுவ குலத்தவள் என்று பல்வேறு பாதைகளைக் கூறியவர், இங்கு வள்ளியென்ற பெண்ணைப் பற்றிய குறிப்பே இல்லாமல், "தூசா மணி மற்றும் துகில் அணிந்தவள்' என்றுதான் கூறுகிறார். இங்கு "தூசா மணி' என்பதை முத்து மற்றும் வெள்ளை ஆடை என்றும் கொள்ளலாம். அதேபோல் தூசா மானி என்பதை ஸ்படிக மணிகள் என்றும் கொள்ளமுடியும். வள்ளி வேடுவ மங்கை யாக இருந்தவரை அவளுக்குத் தனியாக ஒரு பெயர் இருந்தது. ஆனால் இங்கு முருகனோடு சேர்ந்தபிறகு முருகன் மட்டுமே இருக்கிறான். வள்ளியென்ற பெண் பெயர் கடந்து, ஸ்படிகம்போல் எந்தவொரு பற்றுதலோ கறையோ இல்லாமல் இருக்கிறாள். இதேபோல்தான் சாதகனும் ஸ்படிகம்போல குறையற்றவ னாகி இறையோடு கலந்துவிடுகிறான் என்னும் தத்துவத்தை விளக்குவதைக் கூறவே இங்கு தூசா மணி மற்றும் துகிலை உருவகமாகப் பயன்படுத்துகிறார்.

சைவத்திலும் சிவபெருமானைக் கூறும்பொழுது, "சுத்த ஸ்படிக ஸங்காசம் சுத்த வித்யா ப்ரதாயகம்' என்றுதான் தியான சுலோகங்கள் கூறும். இந்த சுத்த ஸ்படிக சங்காசம்தான் இங்கு தூசா மணி என்று மாறி, சிவஞானம் அடைந்ததைக் குறிக்கிறது. இவ்வாறான சிவஞானம் அடைந்தபின்பு மனிதனின் ஆசை என்னும் விலங்கு தன்னால் தூள்தூளாகப் போகிறது, ஆசைகளற்றபின்பு இறைநிலையின் அனுபவ உண்மை புரிகிறது. அவ்வாறு புரிந்தபின் அதை ஒருவருக்கு உரைக்க இயலவில்லை. அதை விவரிக்க முடியவில்லை. அந்த நிலையையே பேசா அனுபூதி என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.

அதேபோல், இவ்வளவு பாடல்களில் வள்ளியைக் குறிப்பிட்டு வந்தவர் இந்தப் பாடலில் சுத்த சத்துவமான பராசக்தியின் தரிசனத்தைக் காட்டியபின்பு, இதற்குமேல் வரும் பாடல்களில் வள்ளியைப் பற்றிய எந்தக் குறிப்பையும் கொடுக்கமாட்டார், இனிமேல் வரும் பாடல்கள் முருகனைப் பற்றியும், அவன் பெருமைகளைப் பற்றியும், அவன் அருள் தன்மையைப் பற்றியும் மட்டுமே இருக்கும்.

இங்கு அன்பு, அருள் என்ற இரு வார்த்தை களைப் பயன்படுத்தும் அருளாளர், முருகன் சாதகர்கள்மீது முதலில் தம் அன்பை செலுத்துகிறான். அந்த அன்பை சாதகர்கள் இறைவன்மீது திரும்ப வைக்கும்பொழுது, இறைவனின் அருள்தன்மை வெளிப்படுகிறது, இந்த அருள்நிலையே சக்தி. இறைவனின் அன்புக்குப் பாத்திரமாவதற்கும் அவனருள் வேண்டுமென்று இந்தப் பாடல்மூலம் தெரிகிறது.

லலிதையின் நாமங்களில், அவளை கடமையில் வழிபடவேண்டியவள் என்று சொல்லும்பொழுது, குண்டலினி தியானத் தைச் சொல்லி, அம்பாளுக்கு ஸ்படிக மணிகளால் மனதில் அர்ச்சனை செய்யச் சொல்லும். அதேபோல் "மஹா பூஜ்யா' என்னும் நாமத்தில் அம்பிகையைப் பல்வேறு மணிகளால் அர்ச்சனை செய்த உபசாரகர்களைக் கூறும். அவ்வாறான அர்ச்சனையை அம்பிகை விரும்புகிறாள் என்று சொல்வதிலிருந்து, அந்த மணிகளின் பிரயோக முறைகளுக்குப் பின்னாலிருக்கும் தத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

செய்யுள்- 44

"சாடும் தனிவேல் முருகன் சரணம்

சூடும்படி தந்தது சொல்லுமதோ

வீடும் சுரர்மாமுடி வேதமும் வெம்

காடும் புனமும் கமழும் கழலே.'

பொருள்: பகைவர்களை அழிக்கும் வேலையுடைய முருகனின் பாதங்களைத் தலையில் சூடும்படி வாய்த்த இறையின் கருணையை எவ்வாறு சொல்வது. முக்திதரும் தளம், தேவர்களின் மணிமுடி, வேதம் மற்றும் அதன் பொருள், காட்டிலும் தினைப் புனத்திலும் மணக்கின்ற கழல் தாங்கிய பாதங்களை உடையவரே.

இந்தப் பாடலில் அருளாளர் கடந்த காலத்தைப்பற்றிக் கூறி முருகனின் கருணையை வியக்கிறார். ஏற்கெனவே இறைநிலையை உணர்ந்தபின்பு அந்த நிலையை உணர வாய்த்த முருகனின் கருணையையும், வேல்மீது செய்த தியானத்தைத் தந்ததையும், அதன் சிறப்பையும் சொல்லமுடியுமோ என்று கூறுவதே முதலிரு வரிகளாக அமைந்திருக்கின்றன.

இறைவனின் அன்பையும் அருளையும் பெற்ற விஷயமே ஆன்ம அனுபூதி அல்லது இறைநிலை. அடைந்தபின்புதான் பூரணமாக சாதகனுக்குத் தெரியவருகிறது. இவ்வாறு தெரிந்தபின் அந்த அன்பை நினைத்து வியக்கிறான். இந்தப் பாடலில் இறைவனின் வேல், நாமம், பாதம் என்னும் மூன்றும் ஒன்றாகக் கூறப்படுவதிலிருந்து, சமஸ்கிருதத்தில் "த்ரிபுடி' என்று சொல்லப்படும் பொருட்கள் எல்லாம் ஒன்றாக மாறியதைப் புரிந்துகொள்ளமுடியும்.

உதாரணமாக 1. மந்திரம், தெய்வம், குரு; 2. தெய்வம் , குரு, சாதகன்; 3. அறிபவன், அறியப்படும் பொருள், அறியும் வகை ஆகிய மூன்று கூறுகள் கொண்ட கூட்டங்கள் எல்லாம் ஒன்றுதான் என்றறிவதே சமாதிநிலை. அதனால்தான் இந்தப் பாடலில் முருகனின் வேல், முருகனின் நாமம், முருகனின் பாதம் ஆகிய மூன்றும் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

இங்கு சகுன உபாசனையாக முருகனின் உருவமும் வேலும், நிர்குண உபாசனையாக முருகனின் பாதங்களும் பேசப்படுகின்றன. முருகனின் உருவம் உருவ வழிபாட்டையும்; வேல் அரு-உருவ வழிபாட்டையும்; பாதங்கள் அருவ வழிபாட்டையும் குறிக்கின்றன.

இறைநிலையை அடைய முதலில் உருவ வழிபாட்டில் ஆரம்பித்த சாதகன், அருவுருவ வடிவான வேலை தியானம் செய்து, அருவ நிலையான பரப்பிரம்மத்தை அடைகிறான். இந்தப் பயணமே ஆன்மிக வாழ்வாகப் பரிமளிக்கிறது. இவ்வாறாக இருக்கும் மிகப்பெரிய தத்துவங்களை ஒரே வரியில் சாதாரணமாகக் கூறிப் புரியவைக்கிறார் அருணகிரிநாதர்.

இந்த இறைவன் எங்கெல்லாம் இருக்கிறான் என்றால் அதற்கான இடங்களையும் கூறுகிறார்.

வீடு- இதுவே முக்தி தளம் என்று சொல்லலாம். இறைவன் இருக்குமிடம் எல்லாம் முக்தியளிக்கும் தளம். அதனால் தான் அம்பிகையை "முக்தி நிலயா' என்னும் நாமத்தில் சஹஸ்ரநாமம் கூறும் சுரர்மாமுடி- தேவர்களின் துன்பம் துடைத்தபின், அவர்களுக்கு எப்போது சரணாகதியளித்து அவர்களின் துன்பத்தைப் போக்குவது என்பதைக் குறிக்கும் செயல் இது.

அப்போது தேவர்கள் தங்களின் மணிமுடி இறைவன் பாதங்களில் படுமாறு விழுந்து பணிவதை இந்த இடத்தில் புரிந்துகொள்ள முடியும். அபிராமி அந்தாதியில் "வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்' என்று கூறுவதிலிருந்து இந்தப் பொருளை அம்பிகைக்கும் பொருந்துமாறு காண முடியும்.

வேதம்- வேதத்தின் பொருளாக இருக்கி றான் இறைவன். வேதம் என்பது மனிதனால் இயற்றப்பட்ட ஒரு நூலல்ல. அது இருந்த பொருளை இருந்தவாறு ரிஷிகள் கண்டு மனிதர்களுக்குக் கொடுத்தது. அவ்வாறாகக் கொடுத்த வேதத்தில் இறைவனையடைய பல்வேறு முறைகள் கூறப்பட்டுள்ளன. இந்த முறைகளைக் கடைப்பிடித்தால் இறைநிலையை அடைவது திண்ணம். இந்த வேதமாகவும் அதன் பொருளாகவும் அம்பிகை இருக்கிறாள் என்பதை "வேத வேத்யா, வேத ஜனனி' என்னும் நாமங்களின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

வெங்காடும் புனமும்- இறைவன் வள்ளியைத்தேடி வெப்பமான காடுகளிலும், தினைப்புனத்திலும் அலைந்ததைக் குறிக்கும் பதங்கள் இவை. இங்கு வெப்பமான காடு என்பது, இறைவன் கர்மவினைகள் சூழ்ந்த ஆன்மாவைத் தேடிச்சென்று ஆட்கொண்டு, ஆன்மாக்களை தம்மிடம் ஒன்றச்செய்யும் செயலைக் குறிக்கிறது. அம்பிகையின் நாமங்களில் "சம்சார பங்க நிர்மக்ஞ சமுதரண பண்டிதா' என்னும் நாமம் இதே பொருள்கொண்டு வரும்.

இவ்வாறாக அனுபூதியும் லலிதா சஹஸ்ர நாமமும் ஒரே பொருளை ஒரே இறைவனை நோக்கிச் செல்வதை நாம் காணமுடியும்.

(அனுபூதி தொடரும்)