ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமந்த் மாவட்டம், கும்பல்காட் வட்டத்திலுள்ள காபோர் கிராமத்தில் சார்புஜா மந்திர் என்னும் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கிருக்கும் கிருஷ்ணனின் சிலைக்கு நான்கு கைகள் இருப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறார்.
மாவாட் பகுதியிலிருக்கும் இந்த கிருஷ்ணர் விக்ரகம் மிகவும் புகழ்பெற்றது. ராஜபுத்திர மன்னரான கங்க்தேவ் இந்தக் கோவிலைக் கட்டியிருக்கிறார். கர்வாட் வம்சத்தைச் சேர்ந்த மன்னர் மகிபாலும், அவருடைய மகனான ராவத் லட்சுமணனும் சேர்ந்து இந்த ஆலயத்தைப் புதிப்பித்ததாகவும், இந்த இடத்திற்கு "பத்ரி' என்று பெயர் இருந்ததாகவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இந்த ஆலயம் உருவாக்கப்பட்டதற்கான வரலாறு இது...
கிருஷ்ணர் தன் சித்தப்பாவின் மகனான உத்தவரை இமயமலைக்குச் சென்று தவம்செய்யுமாறும், தான் வைகுண்டம் செல்லவிருப்பதாகவும் கூறினார். அதற்கு உத்தவர், "நான் தவம்செய்வதால் எனக்கு மோட்சம் கிடைத்துவிடும். ஆனால் உங்களை உயிரென நினைக்கும் பாண்டவர்களும், உங்களின் ஆருயிர் நண்பரான சுதாமாவும் (குசேலர்) நீங்கள் வைகுண்டம் சென்றுவிட்டால் உயிரையே விட்டுவிடுவார்களே'' என்றார்.
அதையடுத்து தேவ சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்த கிருஷ்ணர், இரண்டு உருவங்களைச் செய்யுமாறு கூறினார். அந்த சிலைகளில் ஒன்று கிருஷ்ணருடையது. இன்னொன்று பலராமனுடையது.
அவற்றை இந்திரனிடம் கொடுத்து, "இவற்றை யுதிஷ்டிரனிடமும், சுதாமாவிடமும் ஒப்படைத்துவிடுங்கள். இவற்றில் நான் குடிகொண்டிருப்பதாக அவர்களிடம் சொல்லுங்கள்'' என்றார் கிருஷ்ணர்.
மேலும் அவர், "இந்த கலியுகத்தில் இவற்றை யாரெல்லாம் வழிபடுகிறார் களோ, அவர்கள் மனதில் நினைக்கும் காரியங்கள் நிச்சயம் நிறைவேறும்'' என்றும் கூறினார்.
கர்போர் சார்புஜா கோவிலில் இருக் கும் சிலை பாண்டவர்களால் வழிபடப் பட்டது. சுதாமாவால் வழிபடப்பட்ட சிலை சிரவந்தி என்னுமிடத்தில் "ரூப் நாராயணன்' என்னும் பெயரில் வழிபடப்படுகிறது.
பாண்டவர்கள் தங்கள் இறுதிக் காலத்தில் இமயமலைக்குச் செல்லும் போது, இந்த சிலையை நீருக்குள் விட்டுச்சென்றனர். நெடுங்காலம் கழித்து கர்போரின் மன்னர் கங்க்தேவின் கனவில் தோன்றிய கிருஷ்ணர், நீருக்குள் இருக்கும் தன் சிலையை எடுத்து ஆலயம் எழுப்பும்படி கூறினார். அதன் படி உருவாக்கப்பட்ட ஆலயமே இது.
முகலாய மன்னர்கள் இந்த ஆலயத்தைப் பலமுறை தாக்கியுள்ளனர்.
அப்போதெல்லாம் இந்த கிருஷ்ணர் விக்ரகம் நீருக்குள் போடப்பட்டது.
மகா ராணா மேவாட் என்ற மன்னர் இந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்தார். தினமும் ஆலயத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த மன்னர் ஒருநாள் சற்று தாமதமாக வந்தார். அதற்குள் பூஜையை முடித்து விட்ட அர்ச்சகர், பகவானை சயன நிலையில் வைத்து விட்டார். மன்னருக்கு அணிவிக்கும் மாலையை அவரே அணிந்துகொண்டார். அந்த மாலையில் வெண்ணிற முடி இருப்பதைப் பார்த்த மன்னர், "பகவானுக்கு வயதாகிவிட்டதா?'' என்று கேட்க, "ஆமாம்...'' என்றார் அர்ச்சகர்.
அந்தச் சம்பவத்தைப் பற்றி விசாரணை செய்ய உத்தரவிட்டார் மன்னர். மறுநாள் பகவானின் தலையில் நரைமுடி இருந்தது. யாரோ அதை ஒட்டியிருக்கிறார்கள் என்று நினைத்து, அந்த நரைமுடியை எடுக்க முயல, அதிலிருந்து குருதி வடிந்தது. அதைப் பார்த்த மன்னர் அர்ச்சகரின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.
இந்த சம்பவத்தின்மூலம் அர்ச்சகரைக் காப்பாற்றினார் பகவான் கிருஷ்ணர். அன்றே மன்னரின் கனவில் தோன்றிய பகவான், "மன்னராக இருக்கும் யாரும் என்னை வழி பட வரக்கூடாது'' என்று கூறினார். ஆனால் இளவரசர்கள், அரசிகள், அதிகாரிகள் வழிபடலாம். இளவரசர்கள் மன்னராக வந்துவிட்டால் ஆலயத்திற்குச் சென்று வழிபடும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.
இந்த ஆலயத்திற்கு வைகுண்ட ஏகாதசி சமயத்தில் பல லட்சம் பக்தர்கள் வருவார்கள்.
சென்னையிலிருந்து அஜ்மீர் செல்லும் ரயிலில் பயணித்து, நீமச் என்னும் இடத்தில் இறங்கவேண்டும். பயண தூரம் 1,850 கிலோ மீட்டர். அங்கிருந்து 187 கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் உள்ளது.
சென்னையிலிருந்து அகமதாபாத் சென்று, அங்கிருந்து 362 கிலோமீட்டர் பயணித்தும் ஆலயத்தை அடையலாம்.