"ஸ ஈக்ஷதேமே நு லோகாச்ச லோகபாலாச்ச அன்னமேப்ய:
ஸ்ருஜா இதி (1:3)
இந்த பிரபஞ்சத்தை (Universe) உருவாக்கிய பரம்பொருளை இறைவன் மனிதனைப் படைத்து, அவர்களுக்குத் தேவையான உணவை உண்டாக்குவேன் என நினைத்ததாக ரிக் வேதத்தைச் சார்ந்த ஐதரேய உபநிஷத்தில் ஒரு ஸ்லோகம் வருகிறது. ஆக மனிதனுக்கு உணவு என்பது ஓர் அடிப்படையான தேவை. அந்த உணவை எளியோருக்குத் தானமாக வழங்கினால் மிகவும் புண்ணியம் என நம்முடைய சாஸ்திரங்கள் உபதேசிக் கின்றன. எல்லா மதங்களும் இந்த கருத்தை வலியுறுத்துகின்றன.
திருமூலர் "யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி' (252) எனக் கூறினார்.
மணிமேகலை "அமுதசுரபி' என்கிற அட்சய பாத்திரம்மூலம் ஏழை, எளியோரின் பசியைப் போக்கினாள். அன்னதானத்தைப் பற்றி வள்ளலாரும் போற்றி அதை நடைமுறைப்படுத்தினார். தினமும் "அன்னக் காவடியை' எடுத்து அதில்வரும் அன்னத் தைக் கொண்டு வருவோருக்கு உணவு வழங்கும் நடைமுறை இன்றளவும் நாகை மாவட்டம் வடக்குப் பொய்கை நல்லூர் என்கிற சிற்றூரில் நடைபெற்றுவருவது ஆச்சரியமான விஷயம். பல நூறு ஆண்டுகளாக இந்த மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருநாவுக்கரசர்.
"புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்...'
எனக் குறிப்பிட்ட பொய்கை நல்லூர் கிராமத்தில் ஜீவசமாதியான கோரக்கர் சித்தரின் ஆசிரம கோவிலில்தான் இந்த அன்னக்காவடி எடுக்கும் நிகழ்வு தினமும் மாலை வேளையில் நடைபெறுகிறது.
பதினென் சித்தர்களில் ஒருவர் தான் கோரக்கர் சித்தர் என்கிற கோரக்கர்நாதர். மச்சேந்திர சித்தரின் சீடரான இவர், குறிஞ்சி நிலக் கடவுளான முருகன் திருவாவினன் குடி என்று அழைக்கப்படும் பழநி யில் தண்டாயுதபாணி என்கிற பெயருடன் அருளாட்சி புரிந்து வரும் மூலவரின் திருவுருவச் சிலையை நவபாஷாணத்தால் போகர் உருவாக்கும்போது உடனிருந்து உதவிபுரிந்தார். இவருடைய மகிமை பற்றி தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் வடநாட்டிலும் குறிப்பாக சீன நாட்டிலும் பேசப்படுகிறது. மருத்துவம், யோகம், வாழ்வியல் போன்றவை குறித்து முப்பத்தெட்டு நூல்களை தமிழில் எழுதியுள்ளார். அதில் "சந்திரரேகை 200' என்கிற நூல் முக்கியமான ஒன்றாகும்.
சிவபெருமானின் அருளால் கோரக்கர் சித்தர் பல சித்தாடலைச் செய்துள்ளார். இன்றளவும் தன்னை நாடிவரும் பக்தர்களின் மனக்குறையைத் தீர்த்து பல அற்புதங்களை புரிந்து வருகிறார். பல ஆண்டுகள் வாழ்ந்த கோரக்கர் சித்தர், பொதிகை மலை, ஆனைமலை, கோரக்நாத் திடல் வந்தமனூர் மானாமதுரை, வடக்குப் பொய்கை நல்லூர், பரூர்ப்பட்டி (தென்னாற்காடு), கொல்லிமலை, பத்மாசுரன் மலை (கர்நாடகம்), கோரக்பூர் (உத்திரபிரதேசம்) என எட்டு இடங்களில் சமாதி கூடியதாக சொல்லப்படுகிறது. தான் சமாதி கூடிய காலத்தைப் பற்றி
"அந்தமுடன் பரிவிருத்தி நானூற் றெட்டு
ஐப்பசிநேர் தசமிதிதி பரணி திங்கள்
சிந்தையுற சமாதிநிலை யான டைந்து
சிதறாமல் சீருலகில் வாழ்ந்து.'
என தனிநூலில் கோரக்கர் சித்தரே பாடி வைத்துள்ளார். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி இவர் சமாதி கூடிய ஆண்டாக 1233 எனச் சொல்லப்படுகிறது.
ஒருவரே எட்டு வெவ்வேறு இடங் களில் சமாதி கூடுவது என்பது சாதாரண மனிதர்களுக்கு சாத்தியமில்லாத விஷயம். ஆனால் ஞானியான கோரக்கருக்கு மட்டுமே சாத்தியம். இந்த எட்டு இடங்களில் வடக்குப் பொய்கை நல்லூர் மட்டுமே பிரசித்திபெற்ற இடமாகக் கருதப்படுகிறது. நெய்தல் நிலத்தின் வளமும், மருத நிலத்தின் வளமும் செழிக்கும் சிற்றூரான வடக்குப் பொய்கை நல்லூரின் நடுவில் பெரிய ஆசிரம கோவில் அமைந் துள்ளது. இவ்வாசிரமம் "அருள்மிகு கோரக்கர் சித்தர் ஆசிரம அறக்கட்டளை' மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. சோழிய வெள்ளாள பிள்ளைமார் சமூகத்தினர்தான் இவ்வறக் கட்டளையை நடத்திவருகிறார்கள்.
பாரம்பரிய வழக்கப்படி தினமும் கோவில் பூசாரி வடக்கு, தெற்கு புற பொய்கை நல்லூர் பகுதிக்கு மாலை வேளையில் அன்னக்காவடி ஏந்திச் சென்று வீடு வீடாக புதியதாக சமைத்த வெறும் அன்னத்தை (சுத்த அன்னம்) மட்டும் வாங்கிவருவார்கள். அந்த அன்னத்தை இரவு பூஜையின்போது சித்தருக்குப் படையலாக படைக்கப்பட்ட பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் படுகிறது. இந்த பகுதியில் சுமார் 3,500 குடும்பங்கள் வாழ்கின்றன. இக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள், ஆசிரம கோவிலில் இருந்து வரும் அடியவர்கள் தெரு வழியாக "அன்னக் காவடி தருமம் தாயே!' என கூவி மணி அடித்துக் கொண்டு வரும்போது பக்தியுடன் தங்கள் வீட்டில் சமைத்த புதிய உணவை காவடி பாத்திரத்தில் இட்டு வருகிறார்கள்.
இந்த உணவை மருந்தாக நினைத்து நம்பிக்கை யுடன் பக்தர்கள் சாப்பிடுவது குறிப்பிடத்தக்க விஷயம்.
சித்தரின் ஆசிரம கோவிலில் நாள்தோறும் மூன்று காலபூஜையும், மூன்று வேளை அன்னதானமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாதந்தோறும் பௌர்ணமி திதி நாளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுவருகிறது. இதில் குறிப்பாக ஐப்பசி மாதம் பரணி நாளில் "பரணிப் பெருவிழா' மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
நாகப்பட்டினத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இவ் வாசிரம கோவில் தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணிவரையும்; மாலை 3.00 முதல் இரவு 9.00 மணிவரை திறந்திருக்கும். தொடர்புக்கு: 75020 41000.
சித்தரை வழிபட்டு நம் வாழ்வில் முக்தி யைப் பெறுவோமாக!