"துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.'

எவரிடமும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்கு, துன்பத்தை மிகுதிப்படுத்தி துன்புறுவதும், துவண்டுவிடுவதும் இல்லாமல் போகும் என்பதாம்.

பல நாட்களாகவே பாண்டவர்களில் தம்பிகள் நால்வருக்கு ஒரு சந்தேகம். "நம் அண்ணன் தர்மர் தானம் செய்வதில் சிறந்த வர். இருப்பினும் ஏன் கர்ணனை தானம் செய்வதில் சிறந்தவன் என்கின்றனர்?' என்பதுதான் அது. இதையறிந்த கிருஷ்ணர் தங்கமலை, வெள்ளிமலை என இரு மலைகளை உருவாக்கினார்.

Advertisment

dd

பாண்டவர்களை அழைத்தார். "இந்த இரு மலைகளையும் மாலைப் பொழுதுக்குள் தர்மம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று ஒப்புக்கொள்கிறேன்'' என்றார்.

Advertisment

தம்பிகள் இரு மலைகளிலிருந்து தங்கத்தையும் வெள்ளியையும் வெட்டித்தர, தர்மர் அதை மக்களுக்கு தானம் செய்தார். ஆனால் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. மாலைப் பொழுதானது. இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தர்மர், "எங்களால் முடியாது கண்ணா'' என்று, தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

கிருஷ்ணர் கர்ணனை வரவழைத்தார். "கர்ணா, இந்த இரண்டு மலைகளை நீ ஒரு நாழிகைக்குள் தானம் செய்யவேண்டும். உன்னால் முடியுமா?'' என்றார். கர்ணன் "இப்போதே செய்கிறேன்'' என்று கூறி, அங்கிருந்த இருவரை அழைத்து, "நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறி, தனது தர்மத்தை முடித்துவிட்டுக் கிளம்பினான்.

பெரும் பேற்றைத் தரும் தன்மையே பெருந்தன்மை. யாரைப் பற்றியும் தீய எண்ணம் கொள்ளாமல், அத்தகைய எண்ணங்களை மனதிலிருந்து அகற்றுவதே பெருந்தன்மையின் அடையாளமாகும்.

p

பெருந்தன்மையாளர்கள் தாங்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து பிறரையும் மகிழ்ச்சியாக வாழவைக்க ஆசைப்படுவார்கள். கர்ணனைப் போல் அள்ளிக்கொடுத்துதான் பெருந்தன்மையாக நடக்கவேண்டும் என்பதில்லை. பெருந்தன்மையை அனைத்து வடிவங்களிலும்- வள்ளுவர் காட்டிய வழியில் இன் சொல், செயலில் காணமுடியும். அதைக் கொடுக்கல்- வாங்கலில் வெளிப்படுத்தலாம். கடனைத் திரும்பக் கேட்பதில் வெளிப்படுத்த லாம். கடனைத் திரும்பக் கொடுப்ப தில் வெளிப்படுத்தலாம். வழக்காடு வதில் வெளிப்படுத்தலாம். பிறரை மன்னிப்பதிலும் வெளிப்படுத்தலாம். எந்த செயலிலும் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும் மனிதருக்கு இறைவன் என்றும் துணை நின்று அருள்புரிவான் என்று தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

ஒரு மனிதர் இறந்தபின் மேலுலகம் சென்றார்.

அப்போது அவரிடம், "நீ உலகில் என்ன நற்செயல் புரிந்துள்ளாய்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "நான் மக்களிடம் கொடுக்கல்- வாங்கல் செய்துவந்தேன். அப்போது சிரமப்படுவோருக்கு அவகாசமளிப்பேன். பணவிஷயத்தில் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டேன்'' என்றார். "இவரது தவறு களைத் தள்ளுபடி செய்யுங் கள்'' என்றார் இறைவன்.

பெருந்தன்மையாக நடந்துகொள்வது இறைவனையே கவர்ந்துவிட்டது. அதனால் அந்த நபரின் பாவங்களைத் தள்ளுபடி செய்து அவரை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்தார்.

இந்தவகையில் பெருந்தன்மையுடன் நற்செயலில் ஈடுபட்ட புனுகுப்பூனை, சிவபெருமானைப் பூஜித்துப் பேறு பெற்றதொரு அற்புதமான திருத்தலம்தான் புனுகீஸ்வரர் ஆலயம்.

இறைவன்: புனுகீஸ்வரர்.

இறைவி: சாந்தநாயகியம்மை.

புராணப்பெயர்: தனியூர்.

ஊர்: கூறைநாடு, மயிலாடுதுறை.

விசேஷ மூர்த்தி: சனிபகவான்.

தலவிருட்சம்: பவளமல்லி.

தீர்த்தம்: அமிர்த தீர்த்தம்.

மயிலாடுதுறை நகரத்தை மையமாகக்கொண்ட தனியூர் என்றழைக்கப்பட்ட பெருமைமிக்கது கூறைவாடு. சாலியர் சமூகத்தவர்க்கு சொந்தமானதும், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவருவதுமான இவ்வாலயம் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காவிரித் தென்கரையில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என முப்பெரும் சிறப்புக்களுடன் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதொரு திருத்தலம்தான் கூறைநாடு புனுகீஸ்வரர் ஆலயம்.

ff

"பூமேவு தூயவனும் மாயவனும்

தொழுதெழ வெண்பொடியே கொள்வோம்

தூமேவு விரையனவே உரை எனவே

தாகமம் முன் சொற்றும் வேறு

பாமேவு விதங்கொடுவான் நனியூரில்

தனியூரில் பரவோர் பூசை

மாமேவு பேரன்புள் முழுகீசர்

புனுகீசர் மலர்த்தாள் போற்றி.'

திருவையாறு ஐயாறப்பர் கோவில் சப்தஸ்தானப் பெருவிழா நடப்பதுபோல், மயிலாடுதுறையிலுள்ள அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் திருக்கோவிலில் சப்த ஸ்தானப் பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி அறம்வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர், கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீஸ்வரர், சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர், மூவலூர் மங்கள சௌந்தர நாயகி உடனுறை மார்க்க சகாயேஸ்வரர், சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகிய நாதர், துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஆகிய திருக்கோவில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடு நடைபெற்று, மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும். ஏழு தெய்வங்களும் ஒன்றாகக் காணும் சப்தஸ்தான விழா கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதில் ஒன்றாகத் திகழ்கின்ற கூறைநாடு புனுகீஸ்வரர் ஆலயம் இருவேறு தலவரலாறுகளைக் கொண்டதாக விளங்குகிறது.

pp

தலவரலாறு

பார்வதிதேவியை மகளாகப் பெற்றதால் தட்சன் சிவனுக்கு மாமன் ஆனான். மருமகனாகிய சிவபெருமானை மதியாமல் தட்சன் நடத்திய யாகத்தில் தேவர்களுக்குத் தலைவனான தேவேந்திரன் கலந்துகொண்டதால், இறைவனின் கோபத்தால் புனுகுப்பூனையாக உருவெடுக்கும்படி சாபம் பெற்றான். சாப விமோசனமாக இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பூஜித்து இழந்த இந்திரப் பதவியை மீண்டும் பெற்றான் என்பது தலவரலாறு. எனவே இத்தலத் தில் எழுந்தருளியுள்ள இறைவனை புனுகீசர், புனுகீஸ்வரசுவாமி, புனுகீஸ்வரமுடையார், மிருகபதீஸ்வரர் போன்ற திருப்பெயரால் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.

மற்றொரு வரலாறு

மயிலாடுதுறைக்கு மேற்கே பல நூற்றாண்டு களுக்குமுன் ஒரு காடு இருந்தது. அரசு, கொங்கு, தேக்கு, அகில், சந்தனம், மூங்கில், நாவல், மா முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து அது ஒரு அழகிய வனமாகத் திகழ்ந்தது. பறவையினங் களும் விலங்கினங்களும் பகையின்றி அந்தக் காட்டில் வாழ்ந்துவந்தன.

அங்கு திருமாலும், பிரம்மனும், தேவர்களும் வழிபடுவதற்காகவும், உயிரினங் கள் உய்யவும் பவழமல்லிகை நிழலில் லிங்கவடிவில் தானே தோன்றி எழுந்தருளி னார் சிவபெருமான். அந்த வனத்தில் ஒரு புனுகுப்பூனை தன் துணையுடனும், குட்டிகளுடனும் வாழ்ந்துவந்தது.

அதனிடமிருந்து வெளிப்பட்ட புனுகு வாசனை அந்த வனம் முழுவதும் ரம்மியாகப் பரவியிருந்தது. திடீரென்று ஒருநாள் அந்தப் பூனைக்கு ஞானம் வந்தது. "இதுவரை சாதாரணமான செயல்களையே செய்து வாழ்ந்துவிட்டோமே! இது என்ன வாழ்க்கை! சிவபெருமானை வணங்கி பேரருளைப் பெறவேண்டும்' என அந்தப் பூனை நினைத்தது. சிவபெருமானின் லிங்கத் திருமேனியைத் தேடி அலைந்தது.

வயல் சூழ்ந்த ஒரு சோலையில் இறைவனின் லிங்கத் திருமேனியைக் கண்டது பூனை. மட்டற்ற மகிழ்ச்சிகொண்டு லிங்கத்திருமேனி முழுவதும் புனுகினை அப்பியது. வில்வத்தளிர்களை வாயினால் கவ்வி இறைவனின் முடியில் சாற்றியது. இறைவனை வலம்வந்து வணங்கியது. இப்படியே பல நாட்கள் அந்தப் புனுகுப்பூனை வணங்க, மனம் மகிழ்ந்த இறைவன் அதற்கு தேவ வடிவைக் கொடுத்து கயிலாயத்திற்கு அழைத்துக்கொண்டார். புனுகுப் பூனைக்கு இறைவன் அருள்புரிந்தமை அறிந்த பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் பவழமல்லிகை நிழலில் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை வந்தடைந்து பணிந்து துதித்துப் பாடினர்.

"புனுகீசர்' என்று அந்த இறைவனுக்குப் பெயரிட்டு வணங்கினர். சோழ மன்னன் தன் காலத்தில் காட்டுப் பகுதியை அழித்து புனுகீசருக்கு அதே இடத்தில் ஒரு ஆலயத்தை அமைத்தான். இதுவே இந்த ஆலயத்தின் தலவரலாறு என்று, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்ற "தனியூர்ப் புராணம்' என்ற நூல் சொல்கிறது.

சிறப்பம்சங்கள்

* இறைவன் புனுகீஸ்வரர் சுயம்புமூர்த்தி யாக மேற்கு நோக்கி லிங்கத்திருமேனியுடன் அருள்பாலிக்கிறார்.

* இறைவி இவ்வுலக உயிர்கள் அனைத் தையும் பாதுகாத்து அருள்வதற்கான கருணைகொண்ட உள்ளப் பண்பினால் சாந்தம், நாயகி என்ற இருபொருள் கொண்ட திருநாமத்தை ஒருங்கே பெற்று சாந்தநாயகியாக, நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். மேலிரு கரங்களில் மாலை யையும், தாமரை மலரையும் தாங்கி, கீழிரண்டு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் திகழ்கிறாள்.

* ஆண்டுக்கொருமுறை மூல நட்சத்திரத்தில் 63 நாயன்மார்களும் வீதியுலா வருவது குறிப்பிடத்தக்கது.

* கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் புனுகீசருக்கு 1,008 சங்காபிஷேகம், புரட்டாசி முதல் ஞாயிறு, வார வழிபாட்டு ஆண்டு விழா, சிவனடியார்களின் சிவபூஜை வழிபாடு, தைமாதம் லட்சதீப விழா, சித்திரை மாதம் பிரம்மோற்சவத் திருவிழா திருக்கல்யாண உற்சவத்துடன் நடைபெறுகிறது. பங்குனி மாதம் மாலையில் புனுகீசர்மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுகின்ற நேரத்தில் சூரிய பூஜை நிகழ்கிறது. மற்றும் திருவிளக்கு வழிபாடு, சண்டி ஹோமம் முதலிய வைபவங்களும் நிகழ்த்தப்படுகின்றன.

* பொதுவாக சனி பகவானின் திசை மேற்கு. ஆனால் இத்தலத்தில் கிழக்கு நோக்கி அனுக்கிரக மூர்த்தியாக தனிச் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார். வம்பு, வழக்கு, நீதிமன்றப் பிரச்சினை, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டகச் சனி, ஜென்மச்சனி காலகட்டத்திலும் சரி; ஆரோக்கியத்தில் விருத்தியின்மை, ஆயுள்பங்கம் இருந்தாலும் சரி- இவற்றுக்கெல்லாம் நல்ல தீர்வுகாண சனிக்கிழமை, ஜென்ம நட்சத்திர நாள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்கள் வரும் நாட்களில் இத்தல சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை சாற்றி எட்டு நல்லெண்ணெய் தீபமேற்றி, எள்ளுசாதம் நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைத்து, பக்தர்களுக்கும் வழங்கி வழிபாடு செய்தால் வளமான வாழ்வு கிடைப்பதோடு நீண்ட ஆயுளும் பெறுவர் என்பது ஐதீகம்.

* இத்தல தீர்த்தக்குளம் சிறப்புவாய்ந்தது. பேரின்பத்தை அளிக்க வல்லது. அமாவாசை, பௌர்ணமி, மாதப் பிறப்புகளின்போதும், கிரகண காலங்களிலும் இத்திருக்குளத்தில் நீராடுபவர்கள் நோய் நொடியின்றி சகல செல்வங்களையும் அடைவர்.

* குற்றாலம், மதுரை, ஆனைக்கா, காளத்தி ஆகிய தலங்களில் யானையும்; நல்லூரில் சிங்கமும்; சாத்தமங்கையில் குதிரையும்; கருவூர், பட்டீஸ்வரம், ஆவடுதுறை, பேரூர், ஆமாத்தூர் ஆகிய இடங்களில் பசுவும்; ஐயாற்றில் இடபமும்; சிவபுரத்தில் பன்றியும்; தென்குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை, குரக்குக்கா, குரங்கணிமுட்டம், வாலிகண்டபுரம் ஆகிய ஊர்களில் குரங்கும்; தேப்பெருமாநல்லூர், நாகேஸ்வரத்தில் பாம்பும்; சோலூரில் மீனும்; திருமணஞ்சேரியில் ஆமையும்; திருத்தேவன்குடியில் நண்டும்; ஸ்ரீசைலத்தில் வண்டும்; சிற்றேமத்தில் ஈயும்; பாதிரிப்புலியூரில் முயலும்; எறும்பூரில் எறும்பும்; திருநரையூரில் நாரையும்; மயிலாப்பூர், மயிலாடுதுறையில் மயிலும் இறைவனைப் பூஜித்துப் பேறுபெற்றன. மேற்கண்ட தலங்களோடு வைத்து எண்ணக்கூடியதாகத் தனியூர் என்கிற கூறைநாட்டில் புனுகுப்பூனை பூஜித்துப் பேறு பெற்றது சிறப்பம்சம் உடையது.

நேசநாயனார் வரலாறு

சைவ சமயத்தவர்களால் பெரிதும் போற்றப் படும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் நேசநாயனார் என்பவரும் ஒருவர். நல்லொழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீ- என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் சாலியர் குலத்தில் செல்வம் மிக்க குடியில் பிறந்தவர் நேசர் என்பவர். அவர் இடைய றாது சிவனடியார்களைப் போற்றிவந்தார். ஒருபோதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைத்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலை சிவனடியார்களுக்காகவே செய்துவந்தார். உடையும் கீழ்க்கோவணமும் நெய்து அடியார்களுக்கு ஈந்துவந்து இறுதியில் சிவனடி நிழல் சேர்ந்தார்.

பெயர்: நேச நாயனார்.

குலம்: சாலியர்.

அவதாரத்தலம்: காம்பீ-. (ஆந்திர மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் காம்பீ- வட்டம், காம்பீ- நகர்).

முக்தி தலம்: ஆரூர்

வாழ்ந்தது: கூறைநாடு.

"மன்னியசீர் மறைநாவன்

நின்றவூர் பூசல்

வரிவளையான் மானிக்கும்

நேசனுக்கு மடியேன்'

என்ற திருத்தாண்டகத் தொகைமூலம் அவர்தம் பெருமையை உணரலாம்.

இந்து சமய ஆலயங்களைக் கண்காணிக்கும் பொருட்டு அரசால் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை என்னும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டபோது, அதற்கு ஆணையராக பதவியேற்ற உத்தண்டராமபிள்ளை என்பவர், 63 நாயன்மார்களுக்கும் அவர்கள் பிறந்த ஊர் அல்லது அவர்கள் வாழ்ந்த ஊரில் தனியாக ஆலயம் அமைத்து சிறப்பிக்க வேண்டுமென்னும் பக்தி சிரத்தையுடன், இந்து சமய அறநிலையத்துறையே நாயன்மார்களின் சிற்பங்களை வடிவமைத்துக் கொடுக்கச் செய்தார்.

அதன்படி நேசநாயனாரின் சிற்பமானது கூறைநாடு சா-யர்களிடம் ஒப்படைக் கப்பட்டது.

ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ரோகிணி நட்சத்திரம் அன்று நேசநாயனாருக்கு குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியன்றும் சிறப்பு ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை வெகுவிமரிசையாக நடை பெறும்.

திருக்கோவில் அமைப்பு நாற்புறமும் உயரமான மதில்களால் சூழப்பெற்று, மூன்று பிராகாரங்களுடன் மேற்கு திசை நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. சாலையோரம் முகப்பு வளைவையடுத்து நெடிதுயர்ந்த ஐந்துநிலை ராஜகோபுரம் கம்பீரமாக உள்ளது.

சிவபெருமான், அம்பிகை சந்நிதிகளுடன் பரிவார தெய்வங்களின் சந்நிதிகளும் சிறப் பாக அமைந்துள்ளன.

மேற்கு நோக்கிய சிவாலயத்திற்கு சக்தி அதிகம் என்பார்கள். நவகிரகத் தலமான வைத்தீஸ்வரன் கோவிலைப் போன்ற அமைப்பிலுள்ள தலம் இது. சுயம்புமூர்த்தியாக புனுகீஸ்வரர் உறையும் தலம்; மன அழுத்தத்தைப் போக்கி சாந்தநிலையில் உலவ சாந்தநாயகி அருளும் தலம்; சொல்லொணா துயரங்களைப் போக்கி நீதி தவறாத நீதிபதியாய் அருளும் சனீஸ்வரர் கிழக்கு நோக்கிய நிலையில் அருளும் தலம்- மொத்தத்தில் முறையான வழிபாட்டிற்கு நிறைவான பலனருளும் கூறைநாடு புனுகீசரை வழிபட்டு வளம் பெறுமாறு ஆலய அர்ச்சகரான மகேஸ்வர குருக்கள் பெருமிதத்துடன் கூறுகிறார்.

காலை 6.30 மணிமுதல் பகல் 12.30 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்தி ருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு; செயல் அலுவலர், புனுகீஸ்வரர் திருக்கோவில், கூறைநாடு, மயிலாடுதுறை மாவட்டம். பின்கோடு: 609 001. முத்துக்குமார், கணக்கர், அலைபேசி: 95669 26252. மகேஸ்வர குருக்கள், அலைபேசி: 96003 11651.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கூறைநாடு. ஊரின் மையத்தில் ஆலயம் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதியுண்டு.

படங்கள்: போட்டோ கருணா