கார்த்தியாயினி மந்திர்...
புகழ்பெற்ற இந்த ஆலயம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கிறது. இது அமைந் திருக்கும் இடம் பிருந்தாவனம்.
அருகிலிருக்கும் ரயில் நிலையம் மதுரா அருகிலுள்ள விமான நிலையம். டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம். அங்கிருந்து இந்த ஆலயம் 170 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
இந்தியாவிலுள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்று இது.
இந்த ஆலயத்தைப் பற்றிய கதை இது...
அன்னை பார்வதியின் தந்தை தட்ச பிரஜாபதி. அவர் ஒரு மிகப்பெரிய யாகம் நடத்துகிறார். அதற்குத் தன் மகளையும் மருமகனான சிவபெருமானையும் அழைக்கவில்லை. அதைத் தொடர்ந்து அன்னை பார்வதி தன் தந்தையிடம் நேரில்வந்து கேட்கிறாள். அப்போது சிவனை அவமதிக்கும் வகையில் தச்சன் பேசிவிடுகிறார். அதனால் வருத்தமுற்ற பார்வதி அங்கிருந்த யாக குண்டத்தில் குதித்துவிடுகிறாள்.
அதைக் கேள்விப்பட்ட சிவபெருமான் அங்கு வருகிறார்.
குண்டத்திலிருக்கும் தன் மனைவியின் உடலை எடுக்கிறார். அதைத் தூக்கி வைத்துக்கொண்டு கோபத்துடன் ருத்ர தாண்டவமாடுகிறார்.அவரின் ஆட்டத்தில் பூமியே குலுங்குகிறது. சிவனின் மன நிலையைப் பார்த்து கவலைப்பட்ட விஷ்ணு, பூமிக்கு எங்கே பாதிப்பு வந்துவிடுமோ என்றெண்ணி தன் கையிலிருந்த சுதர்சன சக்கரத்தைச் செலுத்துகிறார்.
அது அன்னை சக்தியின் உடலைத் துண்டுத் துண்டாக சிதறச் செய்கிறது. சக்தியின் உடலின் பாகங்கள் 51 இடங்களில் விழுகின்றன.
அன்னை சக்தியின் தலைமுடி பிருந்தாவனத்தில் விழுகிறது.
அந்த இடத்தில்தான் இப்போதைய ஆலயம் இருக்கிறது.
இந்தக் கதை பல புராண நூல்களில் எழுதப்பட்டிருக்கிறது. வேத வியாசர் தான் எழுதிய பாகவத நூலில் இந்த ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
கார்த்தியாயினிக்கு இருக்கும் இன்னொரு பெயர் துர்க்கை. அன்னை கார்த்தியாயினியைப் பற்றிய இன்னொரு கதை...
கார்த்தியாயன் என்ற முனிவருக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.அந்த குழந்தையின் பெயர் கார்த்தியாயினி.
அன்னை துர்க்கைதான் குழந்தையாகப் பிறக்கி றாள்.
நவராத்திரியின் 7, 8, 9-ஆவது நாட்களில் தந்தை கார்த்தியாயன், கடவுள் வடிவமான தன் மகளை பூஜைசெய்து வழிபடுகிறார்.
10-ஆவது நாளன்று கார்த்தியாயினியாக அவதரித்திருக்கும் துர்க்கை மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்கிறாள்.
மதுராவில் கோபியர்கள் அன்னை கார்த்தி யாயினியை வழிபட்டதாக புராண நூல்கள் கூறுகின்றன. அங்கு கார்த்தியாயினியை குலதெய்வமாகவே வழிபாடு செய்திருக்கின்றனர்.
அன்னை கார்த்தியாயினிக்கு நான்கு கரங்கள். ஒரு கையில் வாள்... இரண்டாவது கையில் தாமரை மலர்... மூன்றாவது கை அருள்தந்து கொண்டிருக்கும்.
நான்காவது கை கீழ்நோக்கி, வரம்ளிப்பதைப்போல இருக்கும்.
நவராத்திரியின் ஆறாவது நாளன்று ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து கார்த்தியாயினியை மனமுருக வழிபடுவார்கள். திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக அன்னை கார்த்தியாயினியிடம் வேண்டிக்கொள் வார்கள். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்.
இப்போதும் திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இங்குவந்து அன்னையை வழிபடு கிறார்கள்.
திருமணம் நடந்தபிறகு, மீண்டும் அன்னைக்கு நன்றி கூறுவதற்காக வருகிறார்கள். பண்டைக் காலத்தில் கார்த்தியாயினியை கோபியர்கள் யமுனை நதியின் கரையில் மண்ணில் உருவமாகச் செய்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. பகவான் கிருஷ்ணன் தங்களுக்குக் கிடைக்கவேண்டுமென அவர்கள் வேண்ட, அது நடந்திருக்கிறது.
16,108 பேர்களுடன் தான் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்கி, அவர்களுடன் பகவான் கிருஷ்ணன் நடனமாடிய கதை நமக்குத் தெரியவருகிறது. அவ்வாறு ஆடிய நடனத்திற்குப் பெயர் "மகாராஸ்'.
பௌர்ணமியன்று அது நடந்திருக்கிறது. அந்த வரத்தைப் பெண்களுக்கு அளித்தவள் கார்த்தியாயினி.
பகவான் கிருஷ்ணன் அன்னை கார்த்தியாயினியை வழிபட்டதாக அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் கூறுகின்றனர் கம்சனை வதம்செய்வதற்குமுன்பு, பகவான் கிருஷ்ணன் அன்னை கார்த்தியாயினியை மண்ணில் உருவமாகச் செய்து, யமுனையின் கரையில் வைத்து வழிபட்டிருக்கிறார். அதற்குப்பிறகுதான் அவர் கம்சனை வதம்செய்த செயல் நடந்திருக்கிறது.
நவராத்திரி இந்த ஆலயத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது லட்சக்கணக்கில் பக்தர்கள் இங்குவந்து அன்னை கார்த்தியாயினியை வழிபடும் அற்புதச் செயலை நாம் பார்க்கலாம். இந்த ஆலயத்திற்கு "உமா சக்திபீடம்' என்றொரு பெயரும் இருக்கிறது.
இந்த கோவிலில் சிவபெருமானுக்கும் ஒரு ஆலயம் இருக்கிறது. இங்கிருக்கும் சிவனுக்குப் பெயர் "பூதேஸ்வர்'.
இந்த கார்த்தியாயினி ஆலயத்தைப் பற்றிய தகவலை முதன்முறையாக வெளியுலகத்திற்குக் கூறியவர் கேசவானந்த் என்பவர். இமயமலையில் 33 வருடங்கள் தவமிருந்த துறவி அவர். யமுனை நதியின் கரையில் வாழ்ந்த அவர், இப்போதிருக்கும் ஆலயத்தை 1923-ஆம் ஆண்டில் உருவாக்கினார். அதற்கருகிலேயே ஒரு ஆசிரமத்தை உண்டாக்கி, அங்கு அவர் இருந்தார்.
1942-ஆம் வருடத்தில் அவர் சமாதியானார்.
இந்த ஆலயத்திற்குச் சென்று அன்னை கார்த்தியாயினியின் அருளைப் பெற விரும்புபவர்கள், சென்னையிலிருந்து டில்லிக்குச் செல்லும் ரயிலில் பயணிக்க வேண்டும். வழியில் மதுராவில் இறங்கிக் கொள்ள வேண்டும். பயண தூரம் 2,182 கிலோமீட்டர். பயண நேரம் 31 மணி.