திருக்கார்த்திகை 13-12-2024
திருக்கார்த்திகை என்றவுடன் நமக்குத் திருவண்ணாமலை தான் நினைவுக்கு வரும்.
திருவண்ணாமலை தீபத் திருநாளுக்குரிய புராணக்கதை ஆழ்ந்த அர்த்தமுடையது. பிரம்மா விற்கும் விஷ்ணுவுக்கும் போட்டி வந்தது. பிரம்மா அன்னப்பறவை வடிவமெடுத்து சிவபெருமானின் முடியைக் காண மேல்நோக்கிப் பறக்க, விஷ்ணு சிவனின் பாதங்களைக் காண வராஹ அவதாரமெடுத்து பூமியைப் பிளந்துகொண்டு சென்று தேடினார். ஆனால் அவர்கள் இருவராலும் சிவபெருமானின் பாதங்களையோ சிரசையோ காண இயலவில்லை.
ஆனால், பிரம்மா தான் சிவனின் சிரசைக் கண்டதாகப் பொய்கூற, அதற்குத் தாழம்பூ "ஆமாம்' என பொய்சாட்சி கூறியது.
சிவன் பூமிக்கும் வானுக்குமாக, ஜோதி சொருபமாகக் காட்சியளித்தார். அந்த நெருப்புக் கொழுந்தின் அடி, முடி காணாமல்தான் பிரம்மாவும் திருமாலும் தவித்தனர்.
அந்த நெருப்பே திருவண்ணாமலையானதாக வரலாறுண்டு.
பொய் கூறிய பிரம்மாவிற்கு பூமியில் கோவில் கிடையாது. பொய் சாட்சி கூறிய தாழம்பூ பூஜைக்கு உதவாது.
கடவுள் என்பவர் ஜோதி சொரூப மானவர். விளக்குச்சுடர் மேல்நோக்கியே செல்லும். அதனால் இறைவனின் பாதம் பற்றியவர்களின் வாழ்க்கை வெளிச்சமாக, மேல்நோக்கிப் பிரகாசமானதாக அமையும். பொய் கூறியவர்கள் வாழ்க்கையில் விதிவிலக்கப்படுவர் என்பது தெளிவாகிறது.
கார்த்திகை மாதப் பௌர்ணமியன்று, கார்த்திகை நட்சத்திரம் நகரும்போது திருக்கார்த்திகை வரும்.
மற்ற பௌர்ணமிகளில் திருகார்த்திகை கொண்டாடாமல், கார்த்திகை மாதம் மட்டும் கொண்டாடப்படுவதன் காரணமென்ன? எல்லா மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வரும்தானே!
கார்த்திகை மாதம், சூரியன் விருச்சிகத்திலுள்ள மாதமாகும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமடைவார். தாய் கிரகமான சந்திரன் நீசமடைந்து, அந்த வீட்டில் தந்தை கிரகமான சூரியன் செல்வதைத் தாய் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாளா! எனவே ரிஷபத்தில் சந்திரன் உச்சமடைந்து, தனது பிரகாசமான குளிர்ந்த கதிர்களால் சூரியனை நோக்குகிறது. இப்போது, சூரியன் வெளிச்சமான இடத்தில் நகர இயலும்.
ஈசனை இருட்டில் விடுவாளா எந்தாய் ஈஸ்வரி? தான் மட்டும் ஒளி பரப்புவதில்லை. கார்த்திகை மாதம் அனைத்து மக்களும், வீட்டில் தீபமேற்றி, தினமும் வாசலில் வைக்கவேண்டுமென்ற நியதியும் உண்டாகியுள்ளது.
ஜோதிடக் காரணம்
சூரியன் காலபுருஷனின் 5-ஆம் அதிபதி. அவர் கார்த்திகை மாதம் காலபுருஷனின் 8-ஆம் வீட்டில் செல்வார். எனில், ஒரு ஆரோக்கிய அதிபதி, மறைவு ஸ்தானத்தில் மறையும்போது, மக்களின் ஆரோக்கியம் நிச்சயம் பாதிக்கப்படும்.
வீடுகளிலும், கோவிலிலும், குளக்கரையிலும் நிறைய தீபமேற்றும் போது, அந்த விளக்குகளின் ஒளி, அனைத்துவிதமான பீடைகளையும் போக்கி விடும்.
8-ஆமிடமான நோய், பயம் போன்ற தீமைகளை விளக்குச் சுடர் நீக்கி விடும்.
5-ஆமிடம் ஆரோக்கியம்; 4-ஆமிடம் சுகம். ஒரு ஆரோக் கிய 5-ஆமிட அதிபதி பாதிப்புக்குள் ளாகும்போது, 4-ஆமிட அதிபதி தனது முழு கிரணங்களால், பௌர்ணமி ஒளி வீச்சால் இருளையகற்றி ரட்சிக்கிறார்.
கார்த்திகை மாதமென்பது இருள் சூழும் மாதம். மாலையில் விளக்கேற்றுவதால் மக்கள் பூச்சிகளின் பயத்தினின்று காப்பாற்றப் படுவர். கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும்போது, நிறைய கெடுதல் செய்யும் கிருமிகள் அழியும். எனவே மனித நலனை முன்னிட்டே காலச் சூழலுக்கேற்ப பண்டிகைகள் உண்டாக்கப் பட்டுள்ளன.
பொரியுருண்டை, கொழுக்கட்டை, அதிரசம் என உங்கள் வீட்டு வழக்கப்படி பிரசாதம் படைத்து, ஈசனையும் எந்தாயையும் நினைத்து வழிபடவும்.
-மகா