எங்கும் நீக்கமற நிறைந் திருக்கும் பரம்பொருளான இறைவனை அடைவதே ஒவ்வவொரு பிறவியின் நோக்கமாகும். இதற்கு முதலில், அனைத்துப் பொருட்களிலும் வியாபித்தவனாகக் அவனைக் காணும் பக்குவம் பெறவேண்டும். அனைத் துமே இறைவன் என்ற எண்ணம் மேலோங்கும்போது தானும் அவனே என்ற சிந்தனை அனைத்து ஜீவன்களுக்கும் வரப் பெறும். இதற்கு பெருந் துணையாக இருப்பவை களே திருக்கோவில்கள். இவ்வாலயங்களில் உறைந்து அருள் பாலிக்கும் இறைவனை முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைத்தும் அவனே என்பதாய் எண்ணி சித்தத்தை அவன்பால் செலுத்தியும், பல வேண்டுதல் முறைகளை உருவாக்கியும் வழிபட்டனர். அத்தகைய பக்தர்களின் ஆத்மார்த்த வழிபாட்டில் மயங்கிய இறைவன் பல திருவிளையாடல்களை நிகழ்த்தியும் பலவித உருவங் களில் வெளிப்பட்டும் அருள் பாலித்தான். மனிதர், தேவர், அசுரர், விலங்குகள், பறப்பன, நீந்துவன என் அவன் அனுக் கிரக பட்டியலில் இடம்பெறாத ஜீவன்களில்லை. சில சமயங் களில் தானே வேறு வடிவ மெடுத்து தன்னைத்தானே வழிபட்டுக்கொண்டு வழி காட்டியதுமுண்டு. இத்தகைய இறைவனை ஒரு முனிவர் கருப்புப்புலி வடிவெடுத்து வழிபட்டு கயிலாயப் பேறுபெற்ற திருத்தலமே அரியலூர் மாவட்டம் கோடாலிகருப்பூர் அருள்மிகு மீனாட்சி யம்மன் உடனுறை சொக்கநாதப் பெருமான் திருக்கோவில்.
ஊர்ச் சிறப்பு
சிவனை வழிபட்ட முனிவர்கள் பலர் கானக விலங்குகளிடமிருந்து தப்பிக்கவும், சிவபூஜைக்குத் தேவையான பூக்களை மரங்களில் ஏறிப்பறிக்கவும் கால்களிலும், கைகளிலும் கூரிய நகங்களை வேண்டிப் பெற்றிருந்தனர். இவர்களை எல்லாம் தாண்டி ஒரு முனிவர் தன் தவ வலிமையால் கருப்புப்புலி (கரும்புலி)யாகவே தன்னை மாற்றிக்கொண்டு வழிபட்டார். அவரது வேண்டுகோளை நிறைவேற்றியருளிய இத்தல இறைவனுக்கு கருப்புலீசுவரன் என்றும், தலத்திற்கு கருப்புலீசுவரம் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. கருப்புலீசுவரம் காலப்போக்கில் கருப்புலியூர் என்றாகி வழக்கில் கருப்பூர் என்றாயிற்று.
ஒரு யுகக் காலத்தில் அற்புத மூலிகை வனமாக, குறிப்பாக வேர்வகை மூலிகைகள் கொழித்த இப்பகுதியில் போகர், புலிப்பாணி, இடைக்காடர், கோரக்கர், தன்வந்திரி ஆகிய ஐந்து மருத்துவச் சித்தர்களும் சூக்குமவடிவில் தவமிருந்தபோது மீனாட்சியம்மன் சிறுமியாகக் திருக்காட்சி தந்து, ஆற்றில் மிதந்துவந்த அதிஅற்புதமான பசுமரக் கோடாலி ஒன்றை சுட்டிக்காட்டினாள். அதை தரிசித்தவர்கள், அந்த கோடாலியை எடுத்து வனத்திலிருந்த நறுமணம் கமழும் 4,448 மூலிகைச் செடிகளின் வடக்குப்புற வேரை வெட்டி அதை மாலையாக்கி மீனாட்சி சொக்கநாதருக்கும் அந்த கோடாலிக்கும் சார்த்தி வழிபட்டனர். இதனால் பசுமரத்தாலான அந்த கோடாரி பசும்பொன் கோடாரியாக மாறிற்று. அப்பொழுது அம்மன் மீண்டும் அவர்கள்முன் தோன்றி, அணைக்குடம் மற்றும் அருட்குடத்தைப் பற்றி கூறினாள்.
பலத்த வினைத்துன்பங்களால் அல்லலுறும் கலியுக மக்களுக்கு நல்வழிகாட்டி அவர்களை அரவணைத்து வழிநடத்திச் செல்ல வரும் மகான்கள் மற்றும் ஞானிகள் குறிப்பாக பாற்கடல், அமிர்தகடல் ஆகியவை இடம்பெற்றுள்ள லோகங்களிலிருந்து பூலோகத்திற்கு வருவோர் ஒரு அருட் குடத்துடன் வருவர். சர்வகோடி லோகங்களுக்குமான அருட்கடாக்ஷ்த்தை தரும் இதை அணைக்குடம் என்றும் குறிப்பிடுவர். இந்த அருட்குடம் வரும்போது சிறிதாக இருக்கும். பின்னர் பெரிதாக மாறும். அதனால் இதை புண்ணியநதிகள் வழியாகவே உருட்டி வரமுடியும். கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிகளுக்கு அடுத்து இக் குடத்தை, கங்கையை பூமிக்குக் கொண்டுவந்த பகீரதனால் விண்ணுலகிலிருந்து கொண்டு வரப்பட்ட குடமுருட்டியில் உருட்டிவரப்படுகிறது அந்த நதிக்குச் சென்று அந்த அருட் குடத்தை பெற்றுக்கொள்ளு மாறு கூறினாள்.
இதைக்கேட்ட. ஐந்து சித்தர்களும் விரைந்து சென்று அவ்வருட்குடத்தை தரிசித்து கரையேற்றி வைத்தனர். அந்த இடமே இன்றைய அணைக்குடம் கிராமம். பின்னர் வனத்திலிருந்த நறுமணம் கமழும் 4,448 மூலிகைச் செடிகளின் வடக்குப்புற வேரை வெட்டி அதை மாலையாக்கி கோடா லிக்கும் அந்த குடத்திற்கும் சூடி வழிபட்டனர்.. தொடர்ந்து இவ்வனப்பகுதியில் விளைந் திருந்த மூலிகைச் செடி களைக்கொண்டு தங்களது வைத்தியப் பணியை தொடர்ந்தனர். கோடாலியும், அருட்கடாக்ஷ்த்தை தரும் குடமும் கிடைத்த செய்தி நாலா திசைகளிலும் பரவ பல தேசங்களிலிருந்தும் தங்களுக்குத் தேவையான மூலிகைச் செடிகளை சேகரிக்க வைத்தியர்கள் இவ்வூருக்கு அதிகமாக வரத் தொடங்கினர்.
அப்படி வருபவர்கள் தாங்கள் சேகரித்த மூலிகைச் செடிகளை எடுத்துக்கொண்டு புறப்படும் முன்னர் கருப்புலிசுவரன் கோவிலில் வைத்து பூஜித்து வைத்தியத் தொழில் சிறக்க வேண்டுமென பிரார்த்தனை செய்துக்கொண்டு நேர்த்திக்கடனாய் கோடாரி ஒன்றை வைத்து செல்வதும் வழக்கமாயிற்று. ஆற்றிலிருந்து கோடாலி கிடைக்கப் பெற்றமையாலும், நேர்த்திக் கடனாய் கோடாலி செலுத்தப்பட்டமையாலும் ஊருக்கு கோடாலி கருப்பூர் என்ற பெயர் ஏற்பட்டது. வைத்தியர்கள் நேர்த்திகடன் செலுத்துவதற்கு கோடாலிகள் அதிகம் தேவைப்பட்டதால் கோடாலிகள் செய்யும் தொழிலும் இவ்வூரில் உருவாயிற்று. கோவிலில் குவிந்த கோடாலிகள் என்ன செய்வது என்பது தெரியாமல் அரசிடம் கேட்க அரசு அதை தன் யுத்த தளவாடமாக எடுத்துக் கொண்டது. இதனால் கோடாலிகள் தேவை அதிகமாகி தயாரிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இச்செய்தியே "யுத்த கோடாலிகள் வடித்துக் கொடுத்த கருப்புலீசுவரன் கோடாலிக்கடனே' என்று அப்பர் பெருமானையும் பாடவைத்தது. கோடாலிகருப்பூரில் தயாரிக்கப்பட்ட தரமான கோடாலிகள் யுத்ததளவாடமாக அரசால் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து அக் கம் பக்கத்து கிராம மக்கள் பல ஆயதங்களை தயாரிக்கமுற்பட அவை களை சேகரித்து வைக்க ஆயுத களமாக மாமன்னன் இராசேந்திரசோழன் ஆட்சிக்காலத்தில் இக் கிராமத்திற்கு வடக்கில் ஒரு கிராமமே உருவாக்கப் பட்டது.
சோழர்கால கல்வெட்டு களில் ஜெயங்கொண்ட வளநாட்டின் உட்பிரிவாக குறிப்பிடப்பெற்றுள்ள இவ்வூர் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் கோடாலி மற்றும் கருப்பூர் என இரண்டு சிற்றூர் களாக அமைந்துள்ளது. கோடாலியில் தொல் பழங்காலந்தொட்டு கவரச்செட்டியார்கள் எனப்படும் நெசவு நெய்பவர்கள் வாழ்ந்துள் ளனர். தங்களின் கலையம்சத்தால் கண்கவர் சேலைகளை தயாரித்த அவர்கள் அதை கடல்தாண்டி விற்பனைசெய்து நாட்டிற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்தனர். இங்கு தயாரிக்கப்பட்ட தங்க இழை கலந்த பருத்தி சேலைகளை அணிவது அக்காலத்தில் கௌரவத் தின் அடையாளமாகவே கருதப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி பிற நாட்டு மன்னர் களும், தங்கள் பட்டத்தரசிகள் கோடாலி கருப்பூர் சேலையை அணியவேண்டும் என்று விரும்பினர். லண்டனில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியம், மும்பை சத்ரபதி சிவாஜி மியூசியம், அகமதாபாத் காலியோ மியூசியம், டில்லி நேஷனல் மியூசியம் போன்ற புகழ்பெற்ற மியூசியங்களில் கோடாலி கருப்பூர் சேலைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஒரிஜினல் தங்க ஜரிகையை 100 அல்லது 80-ம் நம்பர் வெள்ளை பருத்தி நூலோடு ஊடாக நெய்து, செடிகள், காய்கறிகளிலிருந்து உருவாக்கப்பட்ட இயற்கை வண்ணங்களால் சாயம் இடுவர்.
அதன்மேல், இயற்கை நிறங்களால் கைகளாலும், மர அச்சுகளாலும் ஓவியங்களை வரைவார் கள். தனித்துவம் இந்த கோடாலி
கருப்பூர் சேலைகள் நூறாண்டுகளுக்குமுன்பே 500 வெள்ளி நாணயங்களுக்கு விற்கப்பட் டுள்ளன.
கடந்த நூறு ஆண்டு களுக்கு முன்புவரை மிகவும் பிரிசித்திப் பெற்றவையாக அனைவராலும் அணியப்பட்ட இச்சேலைகள் மில் சேலைகளின் வருகைக் குப்பின் ஆதரவு குறைந்ததால் தயாரிப்பு நிறுத்தப்பட்டு பின் ஆண்கள் அணியும் வேட்டிகள் தயாரிக்கப்பட்டன. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது. ஆடைகள் தயாரிக்கவும் சாயமிடவும் ஏற்ற நீர் இங்கு கிடைத்தமையால்தான் இத்தொழில் வளர்ந்தன. இதன் அடையாளமான சாயம் நனைக்கப் பயன் படுத்தப்பட்ட தொட்டி குட்டைகளை இன்றும் இவ்வூரில் காணமுடிகின்றது.
சோழ இளவரசி குந்தவை நாச்சியார் சிறந்த போர்பயிற்சிப் பெற்றவர். மகளிர் படைப்பிரிவுக்கு தலைவியாக விளங்கியவர். இவரது வலது கரமாக செயற்பட்டவர்கள் கருப்புலீசுவரம் சீத்தாலக்ஷ்மி உடனுறை இராமநாராயண பெருமாள்கோவில் பட்டாச்சாரியரான பிரம்மச்சாரி பரசு ஆழ்வார் நம்பியாண்டான் வீரநாராயணனும், அதே கோவிலின் ஆண்டாள் தாயார் அம்சம் பெற்றவளும், பிறப்பறியா பிரம்மச் சாரணியும் சோழ மகளீர்படையில் குந்தவை நாச்சியாரின் வலதுகரமாய் செயற்பட்ட வளுமான வைஷ்ணவிதேவியும் இவ்வூரைச் சேர்ந்தவர்களாகக் கூறப்படுகிறது. பிரம்மச்சாரி பரசு ஆழ்வார் நம்பியாண்டான் வீரநாராயணன் ஆற்றிய ராஜகாரியங்களுக்கு மதிப்பளித்து இவ்வூருக்கு பரசு கருப்புநாராயணபுரம் என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது... பரசு என்பது கோடாலியையும் கருப்பு என்பது இறைவன் கருப்புலீசுவரனையும் நாராயணன் என்பது ஆழ்வார்நம்பியையும் குறிப்பதாகும். .
தலச் சிறப்பு
தன் தவவலிமையால் கருப்புப்புலி (கரும்புலி)
யாகவே தன்னை மாற்றிக்கொண்ட முனிவர் வழிபட்டது, கூடல்மாநகரில் அருள்பாலிக் கும் மீனாக்ஷி சொக்கநாதர்மீது அளவுகடந்த பக்திகொண்ட பக்தன் ஒருவன் இத்தல இறைவன் கருப்புலீசுவரரை சொக்கநாதராக எண்ணி வழிபட்டதால் இறைவன் அவனுக்கு மீனாக்ஷி சொக்கநாதராகவே காட்சியளித்தது, சித்தவைத்தியர்கள் தங்களது தொழில்சிறக்க வந்துவழிபட்டது, அவர்களுக்கும் தேவையான வேர்வகை மூலிகைகளை அளிக்கும் மூலிகை வனமாக இருந்தது, சோழர்கால ஆயுதபட்டறையாக திகழ்ந்து, யுத்த ரகசியங்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டது, கீழப்பழையாறுக்கும் ஜெயங்கொண்டசோழ புரத்துக்கும் ஆயுதங்கள் எடுத்துச்செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது, ஒரு குக்கிராமமாக இருந்தாலும் சிறியதும் பெரியதுமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கோவில்களைக் கொண்டது என்பன போன்ற சிறப்புக்களைக்கொண்டது. இறைவன் அருள்மிகு சொக்கநாதப் பெருமான். முந்தைய பெயர் கருப்புலிசுவரன். இறைவி மீனாட்சியம் மன், தல விருட்சம்- வில்வ மரம், தீர்த்தம்- திருக்கோவிலின் எதிரிலுள்ள திருக்குளம்.
தலவரலாறு
சிவனை வழிபட்ட முனிவர் ஒருவர் தன் தவவலிமையால் கருப்புப்புலி (கரும்புலி)யாகவே தன்னை உருமாற்றிக்கொண்டு வழி பட்டார். அவரது வேண்டுகோளை நிறைவேற்றி யருளிய இத்தல இறைவனுக்கு கருப்புலீசுவரர் என்றும், தலத்திற்கு கருப்புலீசுவரம் என்ற பெயரும் ஏற்பட்டது. திருப்பாற்கடலில் திரண்டு வந்த ஆலகாலவிஷத்தை முதலில் அருந்திய வராக இந்த சுவாமி வர்ணிக்கப்படுவதால் இவர் விஹாபஹரண கருப்புலிசுவரர் என்றும் அழைக்கப்பட்டார். அப்போது இத்தலம் பரசு நீலமேகபுரம் என்றழைக்கப்பட்டுள்ளது காலமும் கட்டுமானமும் இத்தலம் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்னர் தஞ்சை மாநகரையும், பழையாறையும் தலைநகராக்கொண்டு ஆட்சிசெய்த சோழமன்னர்களால் கற்றளியாக்கப்பட்டு, நிவந்தங்கள் பல அளிக்கப்பட்ட திருத் தலமாகும். கி.பி. 985-ல் முதலாம் ராஜராஜசோழன் இத்தலத்தின் கீழ் ஆயுதங்கள் எடுத்துச்செல்லவும், படைகளை நகர்த்தவும் சுரங்கப்பாதை அமைத்துள்ளான். பின்னர் 1220-ல் இரண்டாம் ராஜேந்திரசோழன் தனது தாயார் திரிபுவனமாதேவி விருப்பப்படி ஆலயத்தை புணருத்தாரணம் செய்து திருக்குடமுழுக்கு செய்துவைத்துள்ளான். கி.பி. 1737 முதல் 1822 வரை தஞ்சையை ஆட்சிசெய்த இரண்டாம் சரபோஜி மன்னர் இச்சிவாலயத்தையும், இத்துடன் இணைந்து வைணவ ஆலயத்தையும், படைவெட்டி பட்டாளத்தம்மன், மற்றும் வைஷ்ணவிதேவி திருக்கோவில்ளையும் புதுப்பித்து திருக்குடமுழுக்கு நடத்தி கோவில் நிர்வாகத்தை ஊரிலுள்ள பெரு நிலக்கிழார்களிடம் ஒப்படைத்துள்ளான்.
கல்வெட்டுச் செய்திகள்
இவ்வாலயம் சார்ந்த கல்வெட்டுச் செய்திகளும் செப்பேட்டுச் செய்திகளும் படி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாலயத்திற்கு முதலாம் ராஜராஜசோழன் அளித்த நிவந்தங்கள் பற்றிய சில குறிப்புகள் தஞ்சை பிரகதீசுவரர் கோயில் சுவர்களில் கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட்டுள்ளன. அப்பர்பெருமான் இத்தலத்து ஈசனை போற்றி பாடிய செய்தியும், இவ்வூர் பரசுநாராயணபுரம் பரசுநீலமேகபுரம் என்றழைக்கப்பட்ட செய்திகளும் கரந்தையில் கண்டுபிடிக்கப்பட்ட 57 செப்பேடுகளில் 37-ஆவது செப்பேட்டில் இடம்பெற்றுள்ளது. சோழநாட்டின்மீது படையெடுத்து வந்த ஹொய்சாள மன்னன் இரண்டாம் நரசிம்மன் இப்பகுதியை தாக்கி இங்கிருந்த ஆயுத பட்டறையிலிருந்த ஆயுதங்களை களவாடியபோது ஆயுதபட்டறையை நிர்வகித்துவந்த வைஷ்ணவிதேவி எதிரிப்படைகளுடன் போரிட்டு வீரமரணமெய்தினார். பின்னர் அம்மன்னன் தன் செயலுக்கு வருந்தி வைஷ்ணவிதேவிக்கு வீரக்கல் நாட்டி ஆலயம் அமைத்தான். காவல் காக்கும் எல்லையம்மனாய், நோய் தீர்க்கும் பாறையாய், அவன் பிரதிஷ்டை செய்த ஆலயத்திலிருந்து படைவெட்டி பாளையத்து அம்மனாய் வைஷ்ணவிதேவி இன்றும் காட்சியளித்து ஊரையும் மக்களையும் காத்துவரும் செய்தி ஆனைமங்கலத்து செப்பேடுகளில் காணக்கிடைக்கிறது. இவைதவிர தஞ்சை சரசுவதிமகால் ஓலைச்சுவடிகளிலும் இவ்வாலய செய்திக்குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பாடியோரும் வழிபட்டோரும்
இத்தலம் பாடல்பெற்ற திருத்தலம் வரிசையில் இடம்பெறவில்லை என்றாலும் அப்பர்பெருமான் இத்தலத்து ஈசனை "அத்தி வண்ணத்தழகனை நான் கண்ட கருப்புலிசுவரனை' என்று போற்றி குறிப்பிட்டுள்ள செய்தி கரந்தை செப்பேடுகளில் காணக் கிடைப்பதால் இத்தலம் பாடல்பெற்ற தலமாக இருந்திருக்கலாம் என்றும் அதற்கான பாடல்கள் கிடைக்காமல் போயிருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இவ்வாலய இறைவனை விஹாபஹரண கருப்புலிசுவரர் என்று தமது நூலான தக்கையாக பரணியில் குறிப்பிடுகிறார்.
இத்தனை சிறப்புக்குரிய இத்தலத்தை புராணகாலத்து முனிவர்கள் தொடங்கி பல தேசத்து மன்னர்கள், அப்பர்பெருமான், ஆழ்வார்க்கடியான், வைஷ்ணவிதேவி, விடயபுரம்மஹான் போன்றோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
ஆலய அமைப்பு
இவ்வாலயம் கிழக்கு திசை நோக்கி மூன்று நிலை ராஜகோபுரத்துடனும் வௌவால் நெற்றி மண்டப முறையிலும் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சி தருகிறது. வெளிப்பிராகாரத்தில் ருணவிமோசன
வினாயகர் என்ற பெயரில் தலவினாயகரும், தற்காலம் அமைக்கப்பட்ட சாஸ்தாவின் சன்னதியும், வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணியர் சன்னதியும் காருண்ய ரூபமாய் காட்சியளிக்கும் கஜலக்ஷ்மி, சண்டிகேசு வரர் சன்னதிகளும் கிணறும் இடம் பெற்றுள்ளன.
கஜலக்ஷ்மி சன்னதிக்கு நேரெதிரில் கால பைரவரையும், அருகில் சூரியனையும் தரிசிக்க லாம். சுற்றின் முடிவில் நவகிரகங்கள் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். கருவறைக் கோட்டத்தின் தெற்கில் தக்ஷ்ணாமூர்த்தியும், வடக்கில் வரப்பிரசாதியான துர்க்கா பரமேஸ்வரியும் அருள்பாலிக்கின்றனர்.
கிணறு இடம்பெறவில்லை. கோபுரத்தின் தெற்கில் யாகசாலை மண்டபமும் வடக்கில் மடப்பள்ளியும் இடம்பெற்றுள்ளன.
பிராகாரம் தாண்டி உள்ளேச் செல்ல பலிபீடம் நந்திதேவர் இடம்பெற்றுள்ளனர். கொடிமரத்து வினாயகர் என்ற பெயரில் ஒரு வினாயகரும், அர்த்த மண்டபத்தின் இடது புறத்தில் மற்றொரு வினாயகரும் அமர்ந்து அருட்காட்சித் தருகின்றனர். துவிதள விமானத் தைக்கொண்ட கருவறையின் கீழ் பெருமானும் பெருமாட்டியும் தனித்தனி சன்னதிகள் கொண்டுள்ளனர். பக்தனுக்காக மதுரை மீனாக்ஷி சுந்தரேசுவரராக காட்சியளித்த ஈசன் வட்ட வடிவ ஆவுடையாருடன் திருக்காட்சி தருகிறார். மூர்த்தி சிறியதென்றாலும் கீர்த்தியில் பெரியவர் என்பதை அக்காலம் தொட்டு இக்காலம் வரை உணர்த்தி அனைவருக்கும் அருளாசிபுரிகிறார். அம்பாள் மீனாக்ஷி சதுர்புஜங்களில் மேலிரு திருக்கரங்கரங்களில் பாச அங்குசத்தோடும், கீழிரு திருக்கரங்களில் அபயவரத சின்னத்தோடும், மின்னாயிரம் ஒரு மெய் வடிவாகவும், மண்களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர் குலப்பெண்களில் தோன்றிய பேரகழோடும் பிரகாசமாய் தரிசனம் தருகிறாள். நடராஜர் மண்டபத்தில் ஆடல்வல்லானும் அன்னை சிவகாமி அம்மையும் அருள்பாலிக்கின்றனர்.
உற்சவங்களும் திருவிழாவும்
தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகத்தின் கீழுள்ள இவ்வாலயத்தில் தினசரி இரண்டுகால பூஜைகள் நடத்தப்பெறுகின்றது. சிவாலயங்களுக்கேயுரிய மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை. ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி தரிசனம் போன்ற ஆண்டு உற்சவங்களும், பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி போன்ற பட்ச உற்சவங்களும், சிறப்பாக நடத்தப்பெறுகின்றது
பிரார்த்தனையும் வேண்டுதலும்
இத்தல ருணவிமோசன வினாயகர் கடன்களிலிருந்து நம்மைக் காப்பவர். இவரைத் தொடர்ந்து நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட்டால் கடன்களிலிருந்து விடுபட்டு ஐஸ்வர்யம் பெறலாம் என்ற நம்பிக்கையில் பலர் வந்து வழிபடுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் அம்பாளின் பொற்பாதங்களில் அரிசியைக் கொட்டி மாங்கல்ய சரடு வைத்து பிரார்த்திக் கொண்டு சரடை வீட்டிற்கு எடுத்துச்செல்ல விரைவில் திருமண பிராப்தி கிட்டும் என்ற ஐதீகம் காரணமாக பலர் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
அமைவிடம்
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் ஜெயங்கொண்டம் தா.பழுர் வழி கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் அணைக்குடத்திலிருந்து பிரிந்து அணைக்கரை செல்லும் பேருந்து சாலையில் அணைக்குடத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும், அணைக் கரையிலிருந்து நான்குகிலோமீட்டர் தொலை விலும், இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு குறைந்தளவு பேருந்துகளே செல்கின்றன. அணைக்கரை, ஜெயங் கொண்டம் மற்றும் தா.பழுர் ஆகிய ஊர் களிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் அரியலூர் மற்றும் கும்பகோணம்.
வேண்டுகோள்
பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற முதலமைச்சர் அனிருத்த பிரம்ம ராயரின் அந்தரங்க ஒற்றனும், இளவரசி குந்தவை நாச்சியாரின் நம்பிக்கைக்கு உரியவனும், இளவரசி நந்தினியின் வளர்ப்புச் சகோதரனும், அரசியல் சாணக்கியனும், யுத்தகளத்தில் சிறந்த வீரனாக விளங்கியவனுமான ஆழ்வார்க் கடியான் என்ற கதாபாத்திரம் உண்மையாக இருக்கும்பட்சம் அவனே மேலே சொன்ன கருப்பு-சுவரம் இராமநாராயண பெருமாள் கோவில் பட்டாச்சாரியரான பிரம்மச்சாரி பரசு ஆழ்வார் நம்பியாண்டார் வீரநாராயண னாக இருக்கக்கூடும். இதுபற்றி அறிந்தவர் கள் விளக்கலாம். உண்மையாக இருக்கும் பட்சம் பொன்னியின் செல்வன் பாதையில் பயணிப்போர் கோடா-கருப்பூர் கருப்புலீ சுவரர் சிவன் மற்றும் இராமநாராயண பெருமாள் கோவில்களை தரிசிக்க வேண்டும்.