குரு மடத்தாரிடம் அரச குடும்பத்தார் கொடுத்தனுப்பிய வரவேற்போலையை, அரசு அதிகாரி தலைமை குருவிடம் கொடுத்து ஔவையாரை வரவேற்க, அரச பரிசுப் பொருட்களை காணிக்கை யாக அளிப்பார்.

வெள்ளாவியில் வெளுத்த வெள்ளாடை! ஔவையாரின் பயணத்தில்,

அவருக்கென சில பொருட்களை பிரத்யேகமாக குரு மடத்தார் உருவாக்கி வைத்திருப்பார்கள். அவற்றில் வெண்கலிங்கம் முக்கியமானது. வெண்கலிங்கம் என்றால், சுத்தமான பருத்திப் பஞ்சில் நூல் நூற்று, அவற்றால் 16 முழ, 8 முழ நீளமுடைய ஆடைகளை நெய்வதுதான். நெய்தபின், குருமடத்தில் நீரு லர்த்திகள் என்றழைக் கப்படும் வண்ணார் களைக் கொண்டு "வெள்ளாவி வைத்தல்' என்ற ஆடைகளை சுத்தம்செய்யும் முறை களால், அவ்வாடை களை தூய வெண்மை நிறமுடைய- தூய ஆடைகளாக மாற்றுவார்கள். பிறகு அவற்றை நீர்த்த அரிசிக் கஞ்சி யில் மூழ்கியெடுப்பார்கள். அவற்றை ஒருநாள் முழுவதும் உலரவைத்து அவ்வாடைகளின் நான்கு முனைகளையும் நான்கு பேர் பிடித்திழுத்து, அவ்வாடை களில் சுருக்கங்கள் இல்லாதவாறு இழுத்து, பிறகு மடிப்பார்கள். மடித்த பருத்தியாடைகளை சுத்தமான மரப்பலகையின்மீது வெள்ளாடை ஒன்றை விரித்து, அதன் மீது வைப்பார்கள். அதனை மற்றொரு வெள்ளாடையால் போர்த்தி, அதன்மீது ஒரு மரப்பலகையையும், மரப்பலகையின்மீது பாறாங் கற்களையும் வைத்துவிடுவார்கள். இருநாட்களுக்குப்பின் அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு, சுருக்கமற்று மடிக்கப்பட்ட ஆடைகளை ஔவை யாரின் பயணப் பொருட்களில் ஒன்றாக வைப்பார்கள்.

சங்ககாலப் பல்பொடி!

Advertisment

பல் துலக்கும் பொடிக்கு கருவேலம் பட்டை மற்றும் ஆலம் பட்டைகளை உரித்து, வெய்யிலில் உலரவிட்டு, அவற்றை இடித்துத் தூளாக்குவார்கள். அவற்றோடு சிறிதளவு நாயுருவி வேர், நன்னாரி வேர்ப் பொடிகளைச் சேர்ப்பார்கள். சங்ககாலத்தில் கடல் நீரிலிருந்து உப்பெடுத்தும், பின் பாறைகளிலிருந்து உப்பெடுத்தும் உணவிற்குப் பயன் படுத்தி வந்தனர். பாறைகளிலிருந்து எவ்வாறு உப்பெடுப்பார்களென்றால்,

யானை வழித் தடங்களின் வழியே குறிஞ்சிநிலக் குறவர்கள் செல்வார் கள். யானை, உப்புச் சத்துகள் தங்கள் உடலில் குறைவதை யறியும் தன்மை யுடையவை. அவ்வாறு தங்களுக்கு உப்புச்சத்து தேவையென்பதை அறிந்திருப்பதால், அவை செல்லும்வழிகளில் உப்புத் தாதுக்களுள்ள பாறைகளைக் கண்டறியும். அப்பாறைகளைத் தங்களுடைய தந்தங்களினால் குத்திக்குத்தி உடைத்துத் தூளாக்கி, துதிக்கையில் எடுத்து உண்டுவிட்டுச் செல்லும்.

அந்தப் பாறையிருக்கும் இடங்களின் வழியாகவே, வழித்தடங் களை யானைகள் அமைத்துக்கொள்ளும். அவ்வழியே குறிஞ்சிக் குறவர்களும் மலைவாழ் மக்களும் நடந்துசென்று அப்பாறைகளைக் கண்டறிவர். அப்பாறைகள் செந்நிறத்தில், யானைகளால் பக்கவாட்டில் துளைத் துளைகளாகத் தோண்டப்பட்டிருக்கும். அவற்றிலிருந்து உதிர்ந்த பாறைத் துகள்களை வாயிலிட்டுச் சுவைத்தால் உப்புக் கரிக்கும். உடனே அப்பாறைகளை வெட்டியெடுத்து, தங்கள் இடத்துக்குக் கொண்டுவந்து தூளாக்கி, அதனை அரிசிக்காக வேளாண்குடி மக்களிடம் பண்டமாற்று முறையில் விற்பனை செய்வர்.

Advertisment

dd

இந்த உப்பை குரு மடத்தார்கள், பெரிய மண்கலங்களில் ஆற்றுநீருடன் சேர்த்துக் கரைத்து, ஒருநாள் முழுமைக்கும் வைத்துவிடுவார்கள். மறுநாள் காலை வேளையில், அக்கலனி லிருக்கும் தெளிந்த நீரை மற்றொரு மண்கலனில் வடித்தெடுப் பார்கள். முதல்நாள் உப்பு ஊறவைத்த கலனின் அடிப்பகுதியில், பாறையுப்பிலிருந்த பாறைத் துகள்களும், உப்பில்லாத தாதுப் பொருட்களும் கசடாகத் தங்கிவிடும். அதனைக்கீழே ஊற்றி விடுவார்கள். வடித்தெடுத்த தெளிந்த நீரினை, வாயகன்ற பெரிய கொதிக்கும் கலத்தில் ஊற்றி அடுப்பேற்றி, நீரினைக் கொதிக்கவைப்பார்கள். அதிலிருந்த நீரனைத்தும் கொதித்து ஆவியாகியபின், அக்கலனில் உப்புக்கள் மட்டும் தங்கியிருக்கும். அவற்றையெடுத்து வறுக்கும் கலனிலிட்டு, மெல்லிய வறுப்பாக வறுத்தெடுத்து வைத்துக்கொள்வார்கள். அந்த உப்பைதான் சித்த மருத்துவத்திற்குப் பயன்படுத்துவார்கள். இதனை, ஔவைக்கான பல்பொடியுடன் ஐந்திலொரு பங்கு கலப்பார்கள். பிறகு அதனுடன் பத்திலொரு மடங்கு அதிமதுரவேர்ப் பொடி, நெல்லிப்பொடி, பதுமுக மரப்பட்டைப்பொடி போன்றவற்றைச் சேர்ப்பார்கள். இவற்றையெல்லாம் நன்றாகத் துணியில் சலித்து, ஈருறையிட்ட பையிலிட்டு கட்டிவைப்பார்கள். இதுவே சங்ககாலப் பல்பொடியாகும்.

பெருவழிப்பாதையில் ஔவையாரோடு சேர்ந்து சில பயணியர்களும் செல்ல விரும்புவார்கள். அவர்களில் மாதவிடாய்க் காலப் பெண்கள் இருந்தார்கள் என்றால், இரவு நேரங்களில் தங்குகின்ற இடங்களுக்கு, அவர்களின் ரத்த வாடைகளை மோப்பம் பிடித்து, கழுதைப்புலிகளும் சிறுத்தை களும் வந்துவிடும். சங்ககாலத்தில் தமிழக ஊர்களைத் தாண்டி பயணம் செய்யும் வழிகள் அனைத்தும் கானகப் பகுதிகளாகவே இருந்தன. ஆகவே, ஒரு ஊரிலிருந்து தொலைதூரத்திலிருக்கும் ஊர்களுக்கு, தங்களது பெண்களைத் திருமணம் செய்துகொடுத்த வர்கள், தங்களது மகளைப் பார்ப்பதற்குச் செல்வதாக இருந்தால், இந்த ஔவையின் பெருவழிப்பாதைப் பயணத்தோடு சேர்ந்துகொள்வார்கள்.

அவ்வாறு செல்லும்போது நடைபயணக் களைப்பு தெரியாது. மேலும், பாதுகாப் பானதாக இருக்கும். எனவே, இப்படி மோப்ப மிடும் மிருகங்கள் மனித வாடைகளைக் கண்டறியா மல் இருப்பதற்காக, பெண்கள் சடைகளில் தாழம்பூ சூடிக்கொள்வார் கள். தாங்கள் தங்கியிருக்கும் கூடாரத்தைச் சுற்றிலும் தாழம்பூ இதழ்களைப் பரப்பிவைப்பார்கள். எனவே, ஆற்றோரங்களில் பூத்திருக்கும் தாழம் பூக்களைச் சேகரித்து, பச்சை வாழை மட்டைகளில் அவற்றை வைத்து மூடித் தைத்துக்கொள்வார்கள். அவை பல நாட்களுக்கு வாடாமலும், வாடை குறையாமலும் இருக்கும். இத்தாழம்பூ வாடைக்கு ஓநாய், கழுதைப்புலி, கரடி, சிறுத்தைகள் வராது. இதற்காகவே ஆதிகாலத் தமிழ்ப்பெண்கள் மாட்டு வண்டிகளில் சென்றாலும்,

நடைபயணம் மேற்கொண் டாலும், தாழம்பூவைத் தங்களது சடைகளில் வைத்துத் தைக்கும் பழக்கம் இருந்தது. ஔவையின் பெருவழிப் பயணத்தின்போது அவர் பயன்படுத்தும் உண்கலங்களை, பல குரு மடத்திலிருந்தும் செய்து கொடுப்பார்கள்.

தொகுவாய் கன்னல் பயணத்தின் வழியில், ஆற்றிலிருந்து குடிநீர் எடுத்துவருவதற்கு குறுகலான வாயுடைய மண்கலனைப் பயன்படுத்தினார்கள். ஏனெனில், அகன்ற வாயுடைய நீர்க்கலனில் நீரைச் சுமந்துவரும்போது, நீர் அலம்பி தண்ணீர் அதிக அளவில் சிந்திவிடும் என்பதால், அடி பருத்து, வாய் குறுகி யிருக்குமாறு மண்கலன்களை ஆதித் தமிழர்கள் செய்து பயன்படுத்தினர்.

இதில், நீர் எவ்வளவு தூரத்திலிருந்து மேடுபள்ளம் நிறைந்த மலைப் பாதைகளின் வழியே எடுத்துவந்தா லும், குடிநீர் சிறிதளவுகூட சிந்தாது. இந்த மண்கலனைத்தான் தற்போது குடம் என்றழைக்கிறோம். இன்றைய குடத்திற்கு, சங்ககாலப் பெயர் தொகுவாய் கன்னல் என்பதாகும். இவ்வகை மண்பாண்டங்களிலிருந்து வேறு குவளைகளுக்கு நீர்ப் பொருட்களை மாற்றும்போது, சிந்தாமல் மாற்றலாம்.

தசும்பு அடுக்கம்

ஔவைக்கான உணவு வகைகளான சிறுதானியக் களி, குழம்பு, ரசம், மோர், நீராகாரம் போன்றவற்றை, ஒரு தூரியில் ஒன்றின்மேல் ஒன்றாகப் பொருந்துமாறு, கீழிருந்து மேலே செல்லச்செல்ல வாய் குறுகியிருக்குமாறு, ஐந்து மண்பாண்டக் குவளைகளை அடுக்குத் தொடராக அடுக்கி, அதனடியில் பிரிமனை என்றழைக்கப்படும் வட்டவடிவ வைக்கோல் பிரியைப் பின்னி, அவற்றின் மூன்று பக்கங்களில் சீந்தில் கொடியினைக் கட்டுவார்கள். இதுபோல் இரண்டு தூரிகளை ஒரு நீண்ட கல்மூங்கில் கழியின் இருபக்கங்களிலும் கட்டி, அதை ஒருவர் தோளில் சுமந்துசெல்வார். தற்போது நாம் பயன்படுத்தும் டிபன் கேரியருக்கு ஆதித்தமிழ்ப் பெயர் "தசும்பு அடுக்கம்' என்பதாகும்.

ff

குறுநீர் கன்னல்

ஔவை அதிகதூரம் பகற்பொழுதில் பெருவழிப் பயணம் மேற்கொள்ளும்போது இரவில் உடல்வெப்பம் அதிகரிக்கும். உடல் அசதியாகி களைப்படையலாம். சில நேரங்களில் வெப்ப நோய்களும் வரலாம். அதனைத் தவிர்ப்பதற்காக, மூங்கில் அரிசி உணவையும், தெழுவு என்னும் நீராகாரத்தையும் இரவுநேர உணவாக சாப்பிடுவார். பனைமரத்திலிருந்து பதநீர் இறக் கும்போது, பனைமரத்தில் கட்டப்படும் மண்சட்டியின் உட்புறச்சுவற்றில் சுண்ணாம்பு தடவுவார்கள். அப்படி சுண்ணாம்பு தடவாவிட்டால், அதில் சேகரமாகும் பனைநீரைப் புளிக்கவைக்கும்போது, போதைதரும் கள்ளாக மாறிவிடும். வழியும் பனைநீரை சுண்ணாம்பு தடவாத பாத்திரத்தில் பிடித்து, அது புளித்துவிடுவதற்குள் அருந்தவேண்டும். அந்த பானத்திற்குத்தான் "தெழுவு' என்று பெயர். இதை மாலைநேரத்தில் பொழுதுசாயும் வேளையில் பனைமரத்திலிருந்து இறக்கி, இரவில் அருந்துவர். காலையில் பனைநீர் இறக்கினால், பகல் வெயில் சூட்டில் உடனே புளித்து, போதைதரும் கள்ளாக மாறிவிடும். ஆகவேதான் மாலைநேரத்தில் சூரியன் மறையும் வேளையில் இறக்கி, இரவில் பெண்களுக்கு அருந்தக் கொடுத்தனர் சங்கத் தமிழர்கள். தொலைதூர நடைபயணம் மேற்கொள்ளும் பெண் விருந்தினருக்கு, இரவு தூங்கப்போகும்போது கொடுக்கும் பானமே தெழுவு. இது உடல் சூட்டைத் தணிக்கும். உடல் வலியைப் போக்கும். வெப்பு நோயை வரவிடாது. பெண்களின் உடல் சூட்டால் வெட்டை போவதைத் தடுக்கும். இரவில் மெல்லிய போதைதந்து நல்ல நிம்மதியான, ஆழ்ந்த உறக்கத்தைத் தரும். இனிய சுவையுடன்கூடிய, கள்வாடை இல்லாத நீர்பானம் இதுவாகும்.

சங்ககாலத்தில் கபிலரும் பாரியும் விரும்பி அருந்தியது இந்த பானத்தைதான் எனக் கூறுவர். குழந்தை பிறக்கும் பேறுகாலத்தில், ஆதித் தமிழர்கள் பெண்களுக்கு இதையே கொடுத்தனர்.

இதை வாயகன்ற மண் குடங் களில் வைத்தால் ஈக்களும் தேனீக்களும் மொய்த்து அதனுள் விழுந்துவிடும். ஆகவே, அதனைத் தவிர்ப்பதற்காக, மண் குவளைகளின் பக்கவாட்டில் அடிப்பகுதியில் ஒரு சிறிய மண்குழாயை 45 டிகிரி கோணத்திலிருக்குமாறு பொருத்தி, அக்குவளையின்மேல் வாய்ப்பகுதிக்கு அழகிய சிமிழ்கொண்ட மூடியமைத்து, அதில் இந்த பானத்தை ஊற்றி வைப்பார்கள். தேவைப்படும்போது அதன் பக்கவாட்டுக் குழாய்வழியே சாய்த்து நீரா பானத்தை அருந்தலாம். ஆகவேதான், தெழுவு வைக்கப் பயன்படும் இவ்வகைப் பெரிய மண்குவளைக்கு குறுநீர் கன்னல் என்று பெயர் வந்தது. இவ்வகை பானங்களை அன்றைய ஔவைமார்கள் அவசியம் அருந்தவேண்டிய சூழல் இருந்தது. எனவேதான், அவர்களுக்கு குறுநீர் கன்னல் வழங்கப்பட்டது.

குழிசி

ஔவை தங்குகின்ற இடத்தில் சிறு தானியங் களை இடித்துச் சலித்து, அதனைப் பல முடிச்சுகளாக துணிப்பையில் கட்டிவைத்திருப் பர். ஆற்றுநீர், சுனைநீர் போன்றவற்றை வாயகன்ற கெட்டியான மண் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவைத்து, அதில் அந்த சிறு தானிய மாவையிட்டு துடுப்பினால் கிண்டுவர். அதில் நீர் வற்ற வற்ற களியாக மாறும். அவ்வாறு மரத்துடுப்பினால் கிண்டும்போது, அம்மண் பாத்திரம் உடைந்துவிடாத, வாயகன்றதாக இருக்கவேண்டும். அதற்கேற்ப, வாயகன்றதாகவும், தடிமனான சுவர்களை உடையதாகவும் செய்யப்படும் மண் பாத்திரத்தை, "குழிசி' எனப் பெயரிட்டு அழைத்தனர்.

இந்தக் குழிசி ஔவைக்கு அவசியம் தேவைப்படும் பாத்திரமாகும். பெரும்பாலும் சுடுதல், அவித்தல், வேகவைத்தல், ஊறல் செய்தல் போன்ற முறைகளில் சமைக்கப்படும் உணவையும், வேகவைக்கத் தேவையற்ற பழ வகைகளையும் ஔவை சாப்பிடும் பழக்கம் இருந்தது. எண்ணெய்யில் பொரித்த உணவு வகை களைச் சாப்பிடமாட்டார் கள். ஊறவைத்த முறையில் உருவாக்கப்படும் உணவுக்கு எடுத்துக்காட்டாக ஊறு காயைச் சொல்லலாம். இவ்வகை உணவினை வைப்பதற்குப் பயன்படும் சட்டிகள், அடிப்பகுதியிலிருந்து மேலே வாய்வரையிலும் ஒரே அளவிலான அகன்ற உருளை வடிவத்தில், அதன் மேற்புற வாயை மூடக்கூடிய சிமிழ் பொருந்திய மூடியுடன் காணப்படும். இந்த மண் பாத்திரங்களை "காடி' என்று பெயரிட்டு அழைத்தனர். இந்த காடியும் ஔவை பாத்திர வகைக்குள் அடங்கும்.

மரவை

ஒவ்வொரு ஆதித்தமிழரும் உணவில் இன்றியமையாததாகப் பயன்படுத்திவந்த உப்பை வைக்கும் பாத்திரம், கருங்காலி மரத்தி னால் செய்யப்பட்ட பாத்திரமாக இருக்கும். இவ்வகை மரப்பாத்திரத்திற்கு உப்பு மரவை என்று பெயர். இதுவும் ஔவையின் பயணத் தில் அத்தியாவசியமானதாக இருக்கும்.

அஞ்சறைப்பெட்டி

இது ஆதித்தமிழர் அறிவர் மடத்தினரும் ஆசீவக குருமார்களும் வலியுறுத்திக் கூறிய மிக முக்கிய பொக்கிஷமாகும். இது மிளகு, கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு போன்ற மிக முக்கிய மருத்துவ குணமுள்ள பொருட்கள் அடங்கிய, ஐந்து அறைகளையுடைய மரப்பெட்டியாகும். ஔவை, துறவி, குழவி, வயதானவர், குடும்பத்தார் போன்ற அனைத்துப் பிரிவினரும் உணவில் சேர்க்கக்கூடிய பொருட்கள் கொண்டவை, இந்த பொக்கிஷப் பெட்டி. தமிழகத்தில் வீடுகளில் அஞ்சறைப் பெட்டி புழக்கத்தில் இருந்தவரையிலும் பெருநோய்கள் வந்ததில்லை.

பயணம் தொடரும்!

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்