esan

"நல்ல எண்ணம் விதையானால் நன்மையதன்

பயனாகும்

Advertisment

தீயஎண்ணம் விதையானல் தீமைதன் பயனாகும்

அன்புநல் விதையானால் அறிவதன் பயனாகும்

ஆணவமே விதையானால் அழிவதன் பயனாகும்.'

Advertisment

"மனிதர்கள் எல்லாருமே இந்த உலகில் வசிப்பதற்குக் கட்டணமாக வாடகை ஒன்றைத் தந்தே ஆகவேண்டும்' என்று மேல்நாட்டு அறிஞர் கிரென்ஃபெல் கூறுகிறார். அவர் கூறுவது என்னவென்றால், "பிறருக்கு நாம் செய்யும் உதவிகள்தான் பூமியில் வசிப்பதற்கு நாம் தரும் வாடகை' என்கிறார்.

"பரோபகாரம் இதம் சரீரம்' என்றுதான் நம் சாஸ்திரங்களும் பறைசாற்றுகின்றன.

"தம்முடன் வாழ்பவர்களின் சுகதுக்கங்களில் பங்குகொண்டு அவர்களில் ஒருவனாக இயங்காதவன் செத்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவன்' என்று தீர்மானமாகச் சொல்கிறார் திருவள்ளுவர். உதவுவதற்கு வளமான வாழ்க்கை, நிலபுலன்கள், செல்வவளம் தேவை என்பதில்லை. அக்கறையும், மனித நேயமும், உதவவேண்டும் என்கிற மனமும் இருந்தால் போதுமானது.

esanஒருசமயம் இளந்துறவி ஆதிசங்கரர் இல்லந்தோறும் சென்று தர்மம் கேட்கிறார். வறுமை தாண்டவமாடும் ஒரு குடிலின் முன்னே சென்று "பவதி பிக்ஷாம் தேஹி' என்று குரல் எழுப்புகிறார்.

ஏதுமற்ற நிலையில் இருக்கும் மூதாட்டி வெளியே வந்து தன்னிடமிருந்த நெல்லிக்கனி ஒன்றை அவரிடம் கொடுத்தார். அவரது உதவும் மனப்பாங்கைப் பாராட்டி அப்போது ஆதிசங்கரர் பாடியதே கனகதாரா ஸ்தோத்திரம். அம்பிகை அருளால் அவள் வீட்டில் பொன்மழை பொழிந்தது. பொன் மழை பொழியக்காரணம் அந்த மூதாட்டியின் பொன்மனம்தான்.

"மனிதர்களை நேசிப்பதிலும், அவர்களின் துயர் துடைப்ப திலும் இவ்வளவு அக்கறையுடன் பணிபுரிகிறீர்களே' என அன்னை தெரசாவிடம் ஒருவர் கேட்டார். அதற்கு அம்மையார், "நாம் கண்ணால் காணும் எவர் ஒருவரையும் நேசிக்கவில்லையென்றால், கண்ணுக்குப் புலப்படாத இறைவனை எவ்வாறு நேசிக்க இயலும்?' என்றார். அனைவருக்கும் தேவையான பதில் இது.

ஆனால், ஒருசிலர் தன்னைத்தானே புரிந்து கொள்ளாமல்- வாழ்வில் பிடிப்பில்லாமல் ஏனோதானோவென்று வாழ்கிறார்கள். காரணம் சிலரது ஜாதக அமைப்பு. ராகு- கேதுவின் பிடியில் லக்னம் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் அகப்பட்டு, கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும்கூட குறிப்பிட்ட காலம் செயல்படவிடாமல் தடுத்துவிடும். எவர் அறிவுரை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையின்றி, கண்ணிருந் தும் குருடராய், காலசர்ப்ப தோஷத்துடன் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உள்ளார்ந்த ஈடுபாட்டினை வரவழைத்து, சர்ப்ப தோஷங்களகற்றி காலசர்ப்ப யோகமாய் மாற்றி, அர்த்தமுள்ள வாழ்கையைத் தரவல்லதொரு அற்புத மான திருத்தலம்தான் கோடங்குடி கார்க்கோடகநாதர் திருக்கோவில் இறைவன்: கார்க்கோடகநாதர். இறைவி: கைவல்லி அம்பிகை.

விநாயகர்: நர்த்தனவிநாயகர்

es

புராணப்பெயர்: கார்க்கோடகக்குடி, கார்க்கோடகபுரம்.

ஊர்: கோடங்குடி.

தல விருட்சம்: வில்வமரம்.

தீர்த்தம்: தாமரைத்தடாகம், பத்மசரஸ் தீர்த்தம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் கீர்த்தி யையுடையதும், காவேரி தென்கரைத் தலங்களுள் ஒன்றாகத் திகழ்வதும், கார்க்கோடகன் வழிபட்டுப் பேறுபெற்றதும், சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமையுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதுமான திருத்தலம்தான் கோடங்குடி கார்க்கோடகநாதர் திருக்கோவில்.

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறையைச் சேர்ந்த இவ்வாலயம் நளமகாராஜா காலத்திற்குத் தொடர்புடைய தலம். அது என்னவென்று பார்ப்போமா?

ஒரு துறவியை உபசரிப் பதற்காக, ஆகுகன், ஆகுகி என்னும் வேடுவத் தம்பதிகள் உயிர்துறக்க நேர்ந்தது. சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நளன்- தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாகப் பிறந்தார். நளன் நிடத நாட்டின் மன்னனாக இருந்தான். ஒரு நாள் நளனின் அழகைக்கண்ட அன்னப்பறவை, ""உனது அழகுக்கு ஏற்றவர் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்திதான். உனக்காக நான் தூது சென்று வருகிறேன்'' என்று சொல்லி, தமயந்தியிடம் சென்று நளனைப் பற்றிக் கூறியது. அன்னத்தின் பேச்சைக்கேட்ட தமயந்தி அவன்மீது காதல் கொண்டாள்.

இதனிடையே சனி உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் நளனைப்போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர்.

தமயந்தியைப் பெறமுடியாத தேவர்கள் சனி பகவானிடம் நளனைப் பிடிக்குமாறு கூறினர்.

கடமையுணர்வு மிக்கவர்களை சனி ஏதும் செய்ய மாட்டார்.

அதேநேரம் கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை பூஜைக்கு நளன் தயாரானபோது சரியாகக் கால்கழுவவில்லை. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சனி அவனைப் பிடித்துவிட்டார்.

இதன்பின் புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான் நளன். குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும்பாட்டைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பிவைத்தான். பின் மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால் அவள்மீது ஆசைகொண்டு விரட்டினான். தப்பித்த அவள் சேதி நாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒருவழியாக அவளை தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து அழைத்துச்சென்றார்.

esan

தமயந்தியைப் பிரிந்த நளன், காட்டில் கார்க்கோடன் என்னும் பாம்பு கடித்துக் கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகிழந்த அவன் அயோத்தி மன்னன் ரிதுபன்னனிடம் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்குப்புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன்வந்தான்.

அப்போது நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன் கார்க்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான்.

திருநள்ளாறு க்ஷேத்திரம் வரும்போது ஏழரைச்சனி முற்றிலும் நீங்கியது.

இந்த நளபுராணத்தில் நாம் அறிய வேண்டியது என்னவென்றால், நளமகாராஜனுக்கு சனிதோஷம் ஏற்பட்டு நாடுமுழுவதும் சுற்றிவரும்பொழுது, இறுதியாக "வில்வாரண்ய க்ஷேத்திரம்' எனப்படும் கார்க்கோடகநாதபுரத்திற்கு (கோடங்குடி) வந்து அங்கே சிவனை வழிபட்டபிறகே "தர்ப்பாரண்ய க்ஷேத்திரம்' எனப்படும் திருநள்ளாறு சென்று தீர்த்தம் அமைத்து இறைவனை தரிசித்ததாக ஐதீகம். கார்க்கோடகநாதரை வழிபட்ட பிறகுதான் நளனுக்கு சருமநோய் குணமாகி நலம் பெற்றதாக வரலாறு.

அஷ்ட மற்றும் சப்தநாகங்களில் முதன்மையானது கார்க்கோடகன் எனப்படும் ராஜநாகமாகும். நளனைத் தீண்டியதால் கார்க்கோடகனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க வேண்டி வில்வாரண்ய க்ஷேத்திரத்தில் சிவனை வழிபடுமாறு தேவர்களும் நவகிரகங்களும் கூறியதால், கார்க்கோடகன் இத்தலத்திற்கு வந்து பத்மசரஸ் என்ற தாமரைத் தடாகத்தை நிறுவி, சிவனுக்கு தாமரை மலர்களால் பூஜை செய்திட, மனங்குளிர்ந்த சிவபெருமான் கார்க்கோடகனுக்கு சாபவிமோசனம் அருளினார். மனம் மகிழ்ந்த கார்க்கோடகன், ""தங்களை வணங்கியதால் இந்த தலம் என் பெயராலேயே கார்க்கோடகக்குடி என்று விளங்கிட அருள்பாலிக்க வேண்டும். கலிகாலத்தில் பக்தர்கள் தாமரைத் தடாகத்தில் புனித நீராடி தங்களைப் பூஜித்தால், ராகு- கேது தோஷங்கள் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கவேண்டும்'' என்று சிவபெருமானிடம் வரம் வேண்டிப் பெற்றது.

அம்பிகையின் மகிமை

கைவல்லி அம்பிகை விரைந்து அருள் புரியும் தேவியாம். மகாருத்ரம் என்ற காட்டில் தேவகர்ப்ப மகரிஷியின் ஆசிரமம் இருந்தது. அங்குள்ள தோட்டத்தில் துளசி, மந்தாரை, மல்லிகைச்செடிகள் இருந்தன. சில பசுக்களையும் பராமரித்து வந்தார். மங்களகரமான சூழல் நிலவியதால் மகாலட்சுமியின் பார்வை அங்கு விழுந்தது. விஷ்ணுவுக்கு நைவேத்தியம் செய்த பாலையே உணவாக ஏற்பார் மகரிஷி. இதனால் அம்பிகை அவரை நேரில்காண ஆசிரமத்திற்கே வந்துவிட்டாள்.

""மகரிஷியே! உம் பக்தியை மெச்சுகிறேன். செல்வ வளமுடன் வாழ்வீராக!'' என்று வாழ்த்தினாள்.

""தாயே, துறவிக்கு செல்வம் எதற்கு? பிறப்பற்ற முக்தியே என் விருப்பம்'' என்றார். ""முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் நீர் செல்வந்தனாக வாழ்ந்தே ஆகவேண்டும். அதன்பின்னே உமக்கு முக்தி உண்டாகும்'' என்று சொல்லி மறைந்தாள்.

அம்பிகையின் எண்ணத்தை முறியடிக்கவேண்டுமென்று தீர்மானித்த மகரிஷி ஆசிரமத்தைவிட்டுக் கிளம்பினார். ஓரிடத்தில் பல்லக்கு, பரிவாரம், படைவீரர்கள் என பெருங்கூட்டம் இருந்தது. காட்டுக்கு வேட்டையாட வந்த அந்நாட்டின் மன்னர் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அவர் அருகில் ரத்தினக்கிரீடம் பட்டுத்துணியில் வைக்கப்பட்டிருந்தது. மகரிஷியின் மனதிற்குள் விபரீத எண்ணம் எழுந்தது.

"கிரீடத்தைக் காலால் உதைத்தால் மன்னரின் கோபத்திற்கு ஆளாகலாம்.

அதற்கு தண்டனையாக தன்னைக் கொல்ல உத்தரவிடுவார். அதன்மூலம் அம்பிகையின் ஆசை நிறைவேறாமல் போய்விடும்' என்றெண்ணினார். இதையறிந்த அம்பிகை, அஷ்டநாகத்தில் ஒன்றான அனந்தனை அங்கு அனுப்ப, அது கிரீடத்திற்குள் ஒளிந்துகொண்டது.

மன்னரை நெருங்கிய மகரிஷி கிரீடத்தைக் காலால் உதைத்தார். அப்போது கிரீடத்திற்குள்ளிருந்த பாம்பு வெளிப்பட்டு புதருக்குள் மறைந்தது. மன்னரின் உயிரைக் காக்கவே மகரிஷி எட்டி உதைத்திருக்கிறார் என புரிந்துகொண்ட மன்னரும், வீரர்களும் அவரை வணங்கி நன்றிகூறினர். அவரை அரண்மனைக்கு அழைத்துச்சென்ற மன்னர் ராஜகுருவாக ஏற்றார். சகல வசதிகளுடன் வாழச்செய்தார். அம்பிகையின் மகிமையே மகிமைதான்.

சிறப்பம்சங்கள்

✷ பஞ்சபூதத்தலங்களுள் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்திக்கு நிகரான தலம். சோழ மண்டல காளஹஸ்தி என போற்றப்படுகிறது.

✷ நவகிரகங்களும் இங்குள்ள சிவனுக்குள் இருப்பதால், இங்கு நவகிரக சந்நிதி கிடையாது.

✷ கோஷ்ட தெய்வங்கள் இல்லை. தட்சிணாமூர்த்தி மட்டும் தென்திசை நோக்கி அருள்கிறார்.

✷ துர்க்கை சந்நிதி

கிடையாது. அம்பாளே துர்க்கையாகவும், பார்வதி தேவியாகவும், லட்சுமியாகவும் இரு கைகளிலும் சக்கரங்கள் உடையவளாக- ராஜராஜேஸ்வரியின் அம்சமாக அருட்காட்சி தருகிறாள்.

✷ ஒன்றரை ஆண்டிற்கொருமுறை வரும் ராகு- கேது விழா வெகு விமரிசையாக நடக்கும். மற்றும் நாக பஞ்சமி, நாக சதுர்த்தி, தினசரி ராகுகால பூஜைகளும் முறைப்படி நடக்கும்.

✷ ஜாதகத்தில் லக்னம், குடும்பம், சப்தம ஸ்தானங்களில் ராகு- கேது நின்று களத்திர தோஷங்களினால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வழிபட்டால் குறைகள் நீங்கி மனம் மகிழ்ந்து வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

✷ அசுவினி, மகம், மூலம், திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ராகு காலம், எமகண்ட நேரத்தில் பிறந்தவர்கள், ராகவன், நாகராஜ், நாகமாணிக்கம், நாகஜோதி, நாகவல்லி, நாகலக்ஷ்மி, நாகராணி என பெயர் வைத்திருப்பவர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்துச்செல்ல வேண்டிய புராதன க்ஷேத்திரம் கோடங்குடி.

✷ கைவல்லி அம்பிகை

தன்னை வணங்குபவர்களுக் கும், மனத்தினால் ஸ்மரிப்பவர்களுக்கும் அருளும் பொருளும் வாரி வழங்கி, கைவல்யமாகிய சாயுஜ்யத்தையும் உவந்தளிக்கிறாள். இங்கு அம்மையும் அப்பனும் தானே யாவுமாகி அறம், பொருள், இன்பத்தை வாரி வழங்குகிறார்கள்.

✷ லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்தில் வரதராஜப்பெருமாள் தனிச்சந்நிதி கொண்டு கிழக்கு நோக்கி அருள்கிறார்.

✷ தொடர்ந்து ஐந்து பிரதோஷ வழிபாடு செய்தால் கொடுக்கல்- வாங்கலில் உள்ள சிக்கல்கள் மற்றும் வழக்கு சாதகமான முடிவுக்குவரும்.

கோவில் அமைப்பு

நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று, கிழக்கு, மேற்கு என இரு நுழைவாயில்கள் உள்ளன. ராஜகோபுரம் இல்லை. கிழக்கே பத்மசரஸ் என்கிற தாமரைத் தடாகம் என்றும் வற்றாத நிலையில் உள்ளது. ஒரே பிராகாரம்தான். நந்தீஸ்வரர்க்கு தனிச்சந்நிதி உண்டு. அடுத்து நர்த்தனவிநாயகர், கஜலக்ஷ்மி சந்நிதிகள் உண்டு. சண்டிகேஸ்வரர் தென்திசை நோக்கி தனிச்சந்நிதி கொண்டுள்ளார். ஈசான்ய திக்கில் மேற்கு நோக்கி பைரவர், சூரியன் அருள்பாலிக்கிறார்கள். சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியபடி உள்ளது. உள்நுழைவாயிலின் இடப்புறம் விநாயகர், வலப்புறம் வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமான் உள்ளார். அர்த்த மண்டபத்தில் ஆதிகார்க்கோடகநாதரும், நடராஜர்- சிவகாமி கற்சிலை வடிவத்திலும், கர்ப்பக்கிரகத்தில் கார்க்கோடகநாதரும் அருள்பாலிக்கின்றனர்.

கைவல்லி அம்பிகை முப்பெரும் தேவியரின் அம்சமாக தெற்குதிசை நோக்கி அருள்கிறாள்.

இம்மைக்கும் மறுமைக்கும் வரமளிக்கும் கோடங்குடி ஈசனை வழிபடுவோம். கோள்நிலைக் கோளாறுகளற்றி இகபர சுகங்களுடன் வாழ்வோம்.

காலை 7.00 மணிமுதல் 11.30 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் 7.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு

கணேச சிவம் குருக்கள்,

அலைபேசி: 95006 86091.

கார்க்கோடகநாதர் திருக் கோவில்,

ராகு- கேது பரிகாரத்தலம்

கோடங்குடி-609 314.

மயிலாடுதுறை போஸ்ட், நாகை மாவட்டம்.

சுதா சுந்தரேசன், அலைபேசி: 94446 67454.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து காவேரியின் தென்கிழக்கே நல்லாத்துக் குடி வழியாக சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோடங்குடி. பஸ் வசதி குறைவு. ஆட்டோமூலம் செல்லலாம்.

படங்கள்: போட்டோ கருணா