மிதிலை மன்னருக்கு, ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி, ஸ்ரீ நாராயணரின் அவதாரத் தத்துவங்களை அறிவதே பாகவத தர்மம் என்றுரைத்தார். திருமால் எடுத்தவராக அவதாரத்தை விளக்கியபின், நரசிம்ம அவதாரத்தின் தத்துவத்தை விளக்கலானார்.
நரசிங்கம் (நரசிம்ம அவதாரம்)
நாறு நறும்பொழில் இலங்கும் மாலிருஞ்சோலையில் வண்டுகள் பெடையுடன் சேர்ந்து யாழ் நரம்புபோல இன்னிசை எழுப்பின. அண்டர்கோன் அணியரங்கன், கமலத் திருமகளுடன் தனித்திருந்தார்.
அப்போது முனிவர்கள் நாராயணனைக் காண சோலைக்குள் புகமுயல, அவரைத் தடுத்தனர் மெய்காவலர்கள். வெகுண்ட முனிவர்கள் அவர்களை பூலோகத்தில் பிறக் கும்படி சாபமிட்டனர். அரக்கர்களாகப் பிறந்து, தீமைகள் செய்து, விரைவில் நாராயணரை வந்தடையும் பிறப்பை வேண்டினர். இந்த துவார பாலகர்களில் ஒருவன்தான் இரணியன்.
சத்யுகத்தில் காசிப முனிவருக்கும் அதிதி தேவிக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரண்யாட்சன் எனும் இரு அசுர சகோதரர்களும் பிறந் தனர். கூடலுக்கு ஆகாத அந்திநேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்துவிட்டார்கள். வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரண்யாட்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன், விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக் கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான். பிரம்மாவும் காட்சிதந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக்கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங் களுக்கும், தேவருக்கும், மூவருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும்.
அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினா லும் தவத்தாலும் அடையக்கூடிய- காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அளித்தார்.
கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன். அவனை அடக்க யாராலும் முடியவில்லை. இரணியகசிபு, தான் பெற்ற சாகாவரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சிபுரிந்து வந்தான். தான் மட்டுமே கடவுள் என்றும், அனைவரும் தன்னைத்தான் வணங்கவேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான். இரணியனது அதிகாரத்தால் நடுங்கிய இந்திரன், வருணன், வாயு பகவான், அக்னி, ஆதித்தன், சந்திரன் உள்ளிட்டவர்கள் செய்வதறியாது திகைத்து அஞ்சினர். இரணியனின் அக்கிரமத்திற்கு முடிவுகாண முடியாமல் தேவாகள் மட்டுமல்லாது, அனைத்து உலகத் தவரும் பயத்தால் நடுங்கினர். அப்படிப் பட்ட அசுரனை வதம் செய்ய நாராயணன் முடிவெடுத்தார். நல்லவர்களைக் காக்க, தர்மத்தை நிலைநாட்ட, தன்மேல் பக்திகொண்ட பிரக லாதனை இரணி யனுக்கு மகனாகப் பிறக்க வைத்தார்.
இரண்யகசிபுக்கு மகனாக பிரகலாதன் பிறந்தான். நாரதமுனி, தாயின் கர்ப்பத்திலிருந்த குழந்தை பிரகலாதனுக்கு நாராயணன்தான் (விஷ்ணு) இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்துவிட்டார். "நாராயணாய நம' என்று சதாசர்வ காலமும் தன் உள்ளத்தில் ஸ்ரீமந் நாராயணனையே நினைத்து, அந்த மகா புருஷனின்மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான், பால்மணம் மாறாத பாலகன் பிரகலாதன். அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும், அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் "இரணியன் தான் கடவுள்' என்று போதிக்க, பிரகலாதன், "நாராயணன்தான் தன் கடவுள்' என்று மறுத்துரைத்தான். "அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் காரணமாக விளங்கும் ஸ்ரீமந் நாராயணன் ஒருவனே ஒப்பற்ற தெய்வம். அவனே சர்வ லோகங்களையும் படைத்து நம்மைக் காத்து ரட்சிப்பவன்' என்று கூறினான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனின் மனதை மாற்ற சாம, பேத, தான, தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் யாவும் பயனற்றுப் போயின.
ஆத்திரமடைந்த இரணியன் தன் மகனென் றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடறச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்பு களோடு அடைத்து வைத்தல், விஷமருந்து கொடுத்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற கொடிய முயற்சிகளைச் செய்தான்.
பிரகலாதன், தான்கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் காப்பாற்றப் பட்டான். பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனைத் தனது நெஞ்சத்திலே நிலையாக நிறுத்திய பக்தன் பிரகலாதனுக்கு, தனது தந்தையின் கொடூரச் செயல்களால் கேடு ஏதும் நேரவில்லை. பிரகலாதனைக் கொல்ல தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன், தானே நேராக பிரகலாதனைக் கொல்லப்போனபோதும், பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான்.
அதுகேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி, "உன் கடவுளைக் காட்டு' என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ, "என் கடவுள் நாராயணர் எங்கும் இருப்பார்' எதிலும் இருப்பார். ஏன் தூணிலும் இருப்பார்; எந்தத் துரும்பிலும் இருப்பார்; என்று கூறினான். இரணியன் ஒரு தூணைக் காட்டி, "இந்தத் தூணில் உள்ளாரா' என்று கேட்டான். பிரகலாதனோ "இதை உடைத்து சோதித்துப் பாருங்கள்' என்று கூறினான்.
இரணியன் தன் காலால் அந்தத் தூணை எட்டி உதைத்தான். அந்தத் தூண் வெடித்து இரண்டாகப் பிளந்தது. தூணிலிருந்து சிங்க முகத்தோடு கூடிய நரசிம்மர் வெளிப்பட்டார். மாலை மயங்கும் அந்திப்பொழுதில் சூறைக் காற்று சுழன்றதுபோல ஸ்ரீமந் நாராயணர் பாதி மனித உருவத்திலும், பாதி சிங்க உருவத்திலும் அவதரித்தார். சிங்கம் போன்ற திருமுகத்தில் தாடியுடனும், கோரைப் பற்களுடனும், வானத்தில் ஓங்கி உயர்ந்து விளங்கும் நெருப்பு பந்து போன்ற சிவந்த கண்களுடனும், தலைக்குக் கீழ்பாகம் மனித உடலுடனும், கூர்மையான நகங்களுடனும் புதுமையான உருவத்துடன் ஸ்ரீநரசிம்மர் இந்த பூமியில் அவதரித்தார். திருமாலின் நரசிம்ம வடிவம் எட்டு திசை களையும் தாண்டி வளர்ந்தது. அந்த விசுவரூபத்தை முழுவதுமாகக் காணும் வலிமையுள்ளோர் எவருமில்லை. ஹரியின் பெரிய வடிவத்துக்கு இந்த உலகம் ஒரு தூசியைப் போன்று காட்சியளித்தது. கடல் ஒரு துளியைப் போலக் காணப்பட்டது. பெருங்காற்றானது நரசிங்கப் பெருமாளின் சிறுமூச்சுப்போல இருந்தது. தூய்மையான ஆகாயம் அப் பெருமாளின் விரல்களுக்கிடையில் காணப் படும் இடைவெளிக்குச் சமமாக இருந்தது. நரசிம்மப் பெருமாளின் வடிவத்துக்கு முன்னர் ஐம்பூதங்களும் மிகவும் சிறியதாகவே காணப்பட்டன.
தூணிலிருந்து தோன்றிய நரசிம்மத்துடன் போர்புரிய இரணியன் தயாரானான். தன் வாளை உருவினான். கடல்கள் ஆர்ப்பரித்தன. மலைகளும் அஞ்சி நடுங்கின. அறிவிழந்த அரக்கன் பெரிய ஆரவாரம் செய்தான். அவன் ஆணவ எக்காளம் எழுந்து முடிவதற்குள் இரணியனை நரசிம்மப் பெருமாள் தன் கைகளால் பற்றினார். அவனைத் தன் தொடைமேல் கிடத்தி, தன் கூர்மையான நகங்களால் அவன் மார்பினைப் பிளந்தார். குருதி பொங்கும் அவன் குடலை மாலையாக மார்பில் அணிந்து, தன் திரு அவதார நோக்கத்தை நிறைவுசெய்தார்.
இரணியன் அழிந்தது கண்டு எல்லாரும் ஆரவாரம் செய்தனர். இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் வானுலகிலிருந்து பூமழை பொழிந்தனர். ஆனால் நரசிம்மரின் சினம் தணியவில்லை. இதனால் அவர் அருகே செல்ல அச்சமடைந்த அமரர்கள், லட்சுமியின் திருவடிகளை வணங்கி நின்றனர். நரசிம்மரின் சீற்றம் தணிய அருகில் செல்லுமாறு திருமகளை வேண்டிக்கொண்டனர். ஆனால் லட்சுமியும் அவர் அருகே செல்ல அஞ்சி னாள். பலரும் வேண்டி நின்றும் ஹரியின் சீற்றம் தணியவில்லை. ஆனால் பிரகலாதன் மட்டும் நரசிம்மரின் திருவடிகளை வணங்கி ஆனந்தத்தில் மூழ்கியிருந்தான். சிறுவனாகிய பிரகலாதனின் பக்தியைக்கண்டு நரசிம்மப் பெருமாளின் கோபம் தணிந்தது. பிரகலாதனை அன்புடன் தன் கரங்களால் தடவிக் கொடுத்தார்.
பிரகலாதனிடம் "நீ விரும்பும் வரத்தைக் கேள்' என்று நரசிம்மப் பெருமாள் கூறினார்.
பக்தியின் பலன் பக்திசெய்வதே என்றுணர்ந்த பிரகலாதன், "ஸ்ரீமந் நாராயணரை வழிபடும் வரம் ஒன்றே வேண்டும்' என்றான். பிரகலாதன் சொன்னதைக் கேட்டுத் திருமால் உளம் குளிர்ந்தார். "சிலகாலம் இவ்வுலகத்தை ஆளும் பேரரசனாக அனைவரும் போற்ற ஆட்சி புரிந்த பின்னர் என்னிடம் வந்துசேர்வாயாக' என்று நரசிம்மர் அருளினார். ஹரியின் திருநாமத்தை அன்புடன் சொல்லி வணங்கி னான் பிரகலாதன். அனைவரும் அச்சம் நீங்கித் திருமாலின் திருவடிகளை வணங்கித் துதித்தனர். முக்திமழை பொழியும் முகில் வண்ணர் அனைவருக்கும் வரங்கள் தந்தபின் வைகுண்டம் ஏகினார். நாராயணா எனும் நாமம் எங்கும் ஓங்கி ஒலித்தது.
நரசிம்ம அவதாரம், பிரகலாதானின் தூய்மையான பக்தி என்பது அவனது பிறப்பு சம்பந்தபட்டதல்ல; அது குணம் சமபந்தப் பட்டது என்பதை உணர்த்துகிறது. பிரகலா தன் அசுரனாகப் பிறந்தாலும் இறைவன்மீது கொள்ளும் சிறந்த பக்திக்கு உதாரணமாக விளங்குகிறான். எப்பேர்ப்பட்ட தடை வந்தாலும் நம்பிக்கையை விடவில்லை. தன்னை மனமுருகி அழைப்பவர்களுக்கு, பக்தர்களின்மீது மிகுந்த வாத்ஸல்யம் கொண்ட பக்தவத்ஸலன் இமைப்பொழுதில் விரைந்துவந்து உதவிசெய்வதை உணர்த்து வதே நரசிம்ம அவதாரம். ஸ்ரீமந் நாராயணர் எங்கும் உள்ளார் என்பதே நரசிம்ம அவ தாரத்தின் ஆதாரம்.
(அமுதம் பெருகும்)