கானிஃப்நாத் மந்திர்....
இந்த ஆலயம் மஹா ராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிறது. இது புனே யிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. புனே நகரத் திற்கு அருகிலிருக்கும் கர்ப்பகிரி என்ற மலையிலுள்ள காட்டிஷ் ராஷ் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் குடியிருக்கும் கடவுளுக்கு விருத்தேஸ்வர் என்றொரு பெயரும் இருக்கிறது.
சவர்கோன் என்ற இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில்... மச்சீந்திரநாத் என்ற இடத்திற்கருகில் இந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் மலையின் உச்சியில் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ண பகவானின் உத்தரவுப்படி ஒன்பது நாராயண உருவங்கள் அவதாரம் எடுத்தன. அவற்றில் ஒன்று கானிஃப்நாத்.
ஒன்பது நாராயணர்களில் ஒருவரின் பெயர் பிரபுத்வ நாராயணன். அவர் யானையின் காதிலிருந்து பிறந்தவர். அதனால் அவரை "கானிஃப்நாத்' என்று அழைத்தார்கள். "கானிஃப்' என்றால் "காது' என்று அர்த்தம்.
அவர் "நாத்' சம்பிரதாயத்திற்காக வழிபாடு செய்தார். தர்மத்தைக் காப்பாற்றினார். இமயத்திலிருந்து புறப்பட்டு அவர் தெற்கு நோக்கி பயணத்தை மேற் கொண்டார். வரும் வழியில் "மடி' என்ற கிராமத்தில் அவர் தவம்செய்தார். அங்கு ஜீவ சமாதி ஆனார். அந்த இடத்தில்தான் இந்த ஆலயம் இருக்கிறது.
இந்த கோவில் அரண்மனையைப் போன்ற தோற்றத்தைக் கொண்டது.
பல வருடங்களுக்குமுன்பு, பால்ராஜே ஷாம் மகராஜ் என்ற அரசரையும், யெஷுபாய் என்ற அரசியையும் முகலாய அரசர்கள் எதிர்த்து போர் புரிந்திருக்கிறார்கள். மன்னரை அவர்கள் ஆக்கிரமிக்க, மகாராணி, கானிஃப்நாத்தை மனதில் நினைத்து வழிபட்டிருக்கிறாள்.
"ஐந்து நாட்களுக்குள் அரசர் விடுவிக்கப்பட்டு விட்டால், நான் இந்த ஆலயத்தைப் புதுப் பித்து பெரிதாக கட்டுகிறேன்'' என்று அவள் வேண்டி யிருக்கிறாள். அத்துடன் பித்தளையால் செய்யப்பட்ட குதிரையை ஆலயத்திற்கு அளிப்பதாகவும் கூறியிருக்கிறாள்.
கானிஃப்நாத்தின் அருளால் ஐந்து நாட்களுக்குள் மன்னர் விடுவிக்கபட, மகாராணி தன் பிரார்த்தனையை நிறைவேற்ற முடிவெடுத்து, தன் தளபதியான பீலாஜி கெய்க்வாட் என்பவரை ஆலயத் தைப் புதுப்பிப்பதற்காக அனுப்பியதாக வரலாறு கூறுகிறது.
அவர் சீமாஜி சாவந்த் என்பவரின் ஒத்துழைப்புடன் "மடி' என்ற அந்த கிராமத்திற்குச் சென்று ஆலயத்தைப் புதுப்பித்து பெரிதாகக் கட்டினார்.
அப்போது புதிதாக நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.
சத்ரபதி சாஹு மகராஜ் எனும் அரசர் ஜீவசமாதியைப் புதுப்பித்து கட்டினார். வேத முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன.
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக தங்குமிடங்கள் உண்டாக் கப்பட்டன. 1743-ஆம் ஆண்டில் மராட்டிய மன்னர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டிருக்கிறார். இந்த ஆலயத்திற்குச் சென்றால், பித்தளையால் செய்யப்பட்ட குதிரையை நாம் பார்க்கலாம்.
இந்த ஆலயத்தில் ஹோமகுண்டம் இருக்கிறது. பகவான் விஷ்ணுவின் ஆலயம் உள்ளே இருக்கிறது. அதன் அழகான தோற்றமே அனைவரையும் ஈர்க்கும்.
ஆஞ்சனேயருக்கு இங்கு ஒரு சிறிய கோவில் இருக்கிறது.
கோவிலின் தெற்கு திசையில் கனீப்நாத்தின் குருநாதரான மச்சீந்திரநாத்திற்கு ஆலயம் இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால், கர்ப்பக் கிரகம் தெரியும். மேற்கு திசையில் விட்டல் ருக்மிணி ஆலயம் இருக்கிறது. அருகிலேயே சிவனுக்கு ஆலயம் இருக்கிறது. நந்தியின் ஆலயமும் இருக்கிறது.
இங்கு ஒரு மாதுளை மரம் இருக்கிறது. இங்குவரும் பக்தர்கள் தங்களுடைய வேண்டுகோள்களை வெளிப்படுத்தி, சிவப்புநிற நூல்களை மரத்தில் கட்டுவார்கள்.
ஜீவசமாதிக்குமேல் கானிஃப்நாத்தின் பளிங்கால் செய்யப்பட்ட ஒரு சிலை இருக்கிறது.
இங்கு தாத்தாத்ரேயரின் ஒரு சிறிய ஆலயமும் இருக்கிறது.
பிப்ரவரி- மார்ச் மாதத்தில் நடைபெறும் "ரங்க் பஞ்சமி' திருவிழாவின்போது (இந்தியில்- பால்குனி மாதம்) பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் இந்த ஆலயத் திற்கு வந்து வழிபடுவார்கள்.
அமாவாசை, பௌர்ணமி காலத்தில் அரசாங் கத்தின் சிறப்பு பேருந்துகள் ஓடுகின்றன.
இங்குவரும் பக்தர்களுக்கு கானிஃப்நாத்தின் அருளும் ஆசிர்வாதமும் கிடைப்பதாக ஒரு நம்பிக்கை.
ஆண்கள் மட்டுமே ஜீவசமாதிக்குள் செல்லமுடியும். அவர்கள் ஒருவருக்குப் பின்னால் ஒருவராக ஒரு பொந்துக்குள் நுழைவதைப்போல நுழையவேண்டும். ஆனால், அதை அனைவரும் பார்க்கலாம்.
இந்த ஆலயத்திற்குச்செல்ல விரும்பு பவர்கள் சென்னையிலிருந்து புனேக்கு பயணிக்கவேண்டும். பயண தூரம் 1,100 கிலோ மீட்டர். பயண நேரம் 22 மணிகள். அங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.