சொற்கள் மிக வலிமை வாய்ந் தவை. "அ'கர "உ'கர "ம'கார எழுத்துகளின் சேர்க்கையான "ஓம்' எனும் சொல்லின் பேராற்றல் ஆன்மிக உலகம் அறிந்த ஒன்று. நவீன அறிவியலாரும் இதனைக் குறித்து ஆராய்ந்து வியக்கிறார்கள். பேரண்டம் தோன்றியபோது உண்டான ஓசை "ஓம்' எனப் படுகிறது.

அதுபோலவே, ஒவ்வொரு எழுத்துக்கும், அவற்றின் கூட்டான சொற்களுக் கும் தனி வலிமை உண்டு. அவற்றை சரியான விகிதத்தில் பொருத்தும்போது அளவற்ற ஆற்றல் பெறுகின்றன. எண்ணியதை ஈடேற்றும் திறன் வாய்ந்தவையாகின்றன. மன ஆற்றலையும் சொல்லாற்றலையும் இணைத்துப் பயன்படுத்தும்போது நினைத்ததை அடையும் சக்தி மனிதனுக்கு வாய்க்கிறது.

kk

இதையுணர்ந்த சித்தர்களும் ஞானி களும், ஒவ்வொரு செயலின் வெற்றிக்கென தனித்தனி மந்திரங்களையும் துதிகளையும் உலக மக்களின் நன்மை பொருட்டுத் தொகுத்தளித்தனர். அவற்றுள், கவசங்கள் என்பவை தனித்தன்மை வாய்ந்தவை யாகத் திகழ்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் பெரும் செல்வமாக விளங்குவது அவனது உடல்நலனே. பிணியே பெருங்கொடுமையாகச் சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள அருளப்பட்டவையே கவசங்களாகும்.

இவற்றுள், கந்தசஷ்டிக் கவசமானது பலராலும் போற்றப்படும் சிறந்ததொரு கவசமாகும். பாலன் தேவராயன் என்பவர் தன் கொடுநோய் நீங்க, செந்தூர் திருத்தலத்தில் முருகனை வேண்டி இக்கவசத்தைப் பாடியருளினார். அது அவருக்கு மட்டுமின்றி, பலரது நோய் தீர்க்கும் அருமருந்தாக இன்றளவும் விளங்கி வருகிறது. என்றென்றும் விளங்கி நிற்கும்.

"சஷ்டியை நோக்க சரவணபவனார்' என தொடங்குகிறது கந்த சஷ்டிக் கவசம். சஷ்டி என்றால் ஆறு. முருகன் ஆறு அட்சரங்களுக்குரியவன். ஆறுபடை வீடுடையவன். பொதுவாக ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது நோய், கடன், எதிர்ப்பு போன்றவற்றைக் குறிக்கும். நவகிரகங்களில் நோய்க்குக் காரகன் செவ்வாய். அதன் அதிபதி முருகன் என்பதால், முருகனைக் குறித்து இக்கவசம் பாடப்பெற்றது.

இக்கவசத்தில் கந்தப்பெருமானின் வேலே காக்கும் கவசமாக முன்னிலைப் படுத்தப்படுகிறது. "காக்க காக்க கனகவேல் காக்க' என வேண்டுதல் தொடங்குகிறது. "பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க; கதிர்வேல் இரண்டும் கண்களைக் காக்க; நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க; பேசிடும் வாய்தனை பெருவேல் காக்க; முப்பத்திருபல் முனைவேல் காக்க; செப்பிய நாவைச் செவ்வேல் காக்க; கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க; மார்பை ரத்ன வடிவேல் காக்க' என்று தம்மைக் காக்கும்படி வேண்டும் பாலன் தேவராயர், ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேலின் பெயரைக் குறிப்பிட்டுள்ளது கூர்ந்து நோக்கத்தக்கது. இடையில் வரும் "ரரரரரர ரிரிரிரிரிரி டுடுடுடுடுடு' போன்றவை பொருளற்ற சொற்களாகத் தோன்றலாம். ஆனால் அவை அதிர்வலைகளைக் கூட்டும் பொருட்டு அமைக்கப்பட்டவை.

எனவே, பெரும்பிணி உலக மக்களை அச்சுறுத்தும் இக்காலகட்டத்தில், அனைவருக்கும் மாமருந்தாக உள்ள கந்த சஷ்டிக் கவசத்தை மனமொன்றிப் படிப்போம்.

கவசங்களும் துதிகளும் சக்திவாய்ந்தவை. ஆதிசங்கரரும் செந்தூர் முருகனை வணங்கி "சுப்பிரமணிய புஜங்கம்' பாடி தம் தீராநோய் நீங்கப்பெற்றார். தற்காலம்வரை முருகனைப் பணிந்து நோய் நீங்கப் பெற்றோர் பலர். பாம்பன் சுவாமிகள் கால் முறிவு ஏற்பட்டு சென்னை பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 73. முறிந்த எலும்புகள் ஒன்றுகூட வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

ஆனால், சண்முகக் கவசம் பாடப்பட்ட நிலையில் அவரது முறிந்த எலும்புகள் ஒன்றுசேர்ந்துவிட்டன. இன்றளவும் இது மருத்துவ அதிசயமாகக் கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சி நிகழ்ந்ததற் கான ஆவணங்களும் உள்ளன.

நம்பிக்கையோடு முருகனைப் பணிவோம். அவனது கவசம் நம்மைக் காக்கும்.!

-எம்