தொன்மையும்,, தொல்புகழும் நிறைந்த திருவண்ணாமலை மாவட்டத்தின் அதிசிறப்பு வாய்ந்த தலமாகத் திகழ்கிறது காமக்கூர்.

மூர்த்தி, தீர்த்தம், தலம், விருட்சம், நடனம் ஆகிய பெருமைகளையுடைய இப்புனிதத் தலம் காஞ்சியை விடவும் மிகப் பழமையானது என்பர். ஐந்து புண்ணிய தீர்த்தங்களைக்கொண்ட இப்பதிமீது தேவாரங்கள் பாடியிருக்கக்கூடும் என்பது அறிஞர்களின் கூற்றாகும்.

ஜவ்வாது மலைக்குத் தெற்கே அமைந்துள்ள இத்தலம் ஆதியில் காமநகர், காமபுரி, காமக் கோட்டிபுரம், காமாத்தூர் என்றெல்லாம் அழைக் கப்பட்டுள்ளது. "காமத்தூரிற் சிவபால தேவப் பெருமானே' என்று அருணகிரிநாதரால் திருப் புகழ் பாடப்பெற்ற பெருமையுடையது.

ஸ்ரீசக்கரத்துடன் ஆதிகாமாட்சி அருள்புரியும் அதியுன்னதப் பதியாகத் திகழ்கிறது இந்த காமக்கூர்.

Advertisment

முருகப் பெருமான், சந்திரன், விவஸ்வான் என்னும் அயோத்திய மன்னன், அர்ஜுனன், ரதிதேவி, காமக்கோடி என்னும் நங்கை ஆகியோர் இங்கு வழிபட்டுப் பேறுபெற்றுள்ளனர்.

கந்தன் ஏற்படுத்திய குமார தீர்த்தம், சந்திரன் உண்டாக்கிய பாபவிமோசன தீர்த்தம், விவஸ்வான் உண்டாக்கிய வீராவளி தீர்த்தம், அர்ஜுனனால் ஏற்படுத்தப்பட்ட அர்ஜுன தீர்த்தம் மற்றும் ஜமதக்னி முனிவரின் கமண்டலத்திலிருந்து வழிந்துவரும் கமண்டலநாக நதி ஆகியன இத்தலத்திற்குரிய சிறப்புத் தீர்த்தங்களாகும்.

கங்கை நதியை விடவும் கால்மடங்கு புண்ணியம் கூடுதலாகக்கொண்ட கமண்டல நதியையும், இத்தல மூர்த்தம் மற்றும் இத்தலம் பற்றியும் ஒரு வடமொழி சுலோகமுண்டு. அது...

Advertisment

"இதங்காமபுரி காசி விஸ்வேசா

சந்திரசேகர: கமண்டல நதி கங்கை

அமிர்தாம்பா அன்னபூரணிகா.'

இத்தலத்திற்கென ஆதி யில் தொகுக்கப்பட்ட தனி புராணமே உண்டு.

முருகப்பெருமான்

திருவேரகத்தில் (சுவாமி மலை) தந்தை ஈசனுக்கு உபதேசம் செய்தார் முருகப் பெருமான். அப்பனுக்கே பாடம் கற்பித்த காரணத்தால் அகில நாயகனான பரமேஸ்வரன், "பூவுலகில் 16,000 பிறவிகள் எடுக்கக் கடவது' என்னும் பெரும் சாபத்தை அளித்தார். இதனைப் போக்கிக்கொள்ள முருகக் கடவுள் இத்தலமடைந்து, தீர்த்தம் உண்டாக்கி, ஈஸ்வரனைப் பூஜித்து, 16,000 பிறவி களுக்கு பதில் 16,000 பதிகங்கள் சிவன் மீது பாடும்படியான வரத்தைப் பெற்றார்.

அதன்படியே சீர்காழி பிரம்மபுரத் தில் திருஞானசம்பந்தராக அவதாரம் செய்து, அன்னை பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்டு ஞானம்பெற்று, இறைவனைப் பாடித் தொழுது, சைவத்தை நிலைநாட்டினார். ஞானசம்பந்தரே முருகன் என்பதை ஆணித் தரமாக பகர்கிறார் அருணகிரியார் பல இடங்களில்!

சந்திரன்

சந்திரனின் துணைவியர் 27 நட்சத் திரங்கள். அவர்கள் யாவரும் தட்சனின் புதல்விகள். அவர்களுள் ரோகிணியைத் தவிர மற்ற மனைவியரிடத்தில் சந்திரன் அன்பு செலுத்தாத காரணத்தால் மற்ற அனைவரும் சென்று தந்தை தட்சனிடம் முறையிட்டனர்.

கோபம்கொண்ட தட்சன், "உனது கலைகள் யாவும் குன்றி, நீ அழியக் கடவாய்'

என்று சந்திரனுக்கு சாபமளித்தான். சந்திர னின் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயத் தொடங்கின. அச்சம்கொண்ட அம்புலி, அச்சாபம் நீங்க இத்தலத்தையடைந்து, தீர்த்தம் உருவாக்கி, ஈஸ்வரனைப் பூஜித்து, தனது சாபம்நீங்கப் பெற்றான்.

இத்தலப் பெருமான் இளம்பிறையாக சந்திரனைத் தனது முடியில் சூடிக்கொண் டார். இதனால் இப்பெருமான் சந்திர சேகரர் என்றும், இளம்பிறை சூடிய பிரான் என்றும் போற்றப்படலானார்.

விவஸ்வான்

திரேதாயுகத்தில் அயோத்தி மாநகரை விவஸ்வான் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். அம்மன்னனை அதி சூரன் என்னும் அரக்கன் தோற்கடித்து நிராயுதபாணியாகத் துரத்திவிட்டான்.

இத்தல மகிமைகளைக் கேள்வியுற்ற மன்னன் இங்குவந்து கார்த்திகை மாதம், திங்கட்கிழமைகூடிய பூச நட்சத்திரத்தன்று தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி, இத்தல ஈசனை 300 நாட்கள் சித்த சுத்தியோடு பூஜித்தான். அவனது பூஜைக்கு இரங்கிய பரமன், சூலாயுதத்தை வழங்கினார்.

அதைக்கொண்டு அதிசூரனை வதம்செய்து, பலகாலம் அயோத்தி மாநகரை சிறப்புற ஆட்சி நடத்தினான். இறுதியில் சிவகதி யடைந்தான். வீராவேசத்தோடு விவஸ்வான் இங்கு தீர்த்தம் உண்டாக்கியதால் அத் தீர்த்தம் வீராவளித் தீர்த்தம் என்றானது.

aa

ரதிதேவி

அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான குறுக்கை தலத்தில் காமனை (மன்மதன்) எரித்தார் கங்காதரர். மீண்டும் காலனை மீட்க ரதிதேவி, இந்த அற்புதப் பதி யடைந்து, இறைவனை இறைஞ்சினாள்.

உளங்கனிந்த பெருமான், பங்குனி உத்திர நன்னாளில் அமிர்தவல்லி அம்பிகையை மணம்புரிந்து, ரதிதேவிக்குக் காட்சியளித்து, காமனை ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படியான வரத்தை அளித்தார். காமனை மீட்டதால் இப்பதி காமநகர் என்றும், காமபுரி என்றும் போற்றப் பட்டது.

அர்ஜுனன்

சிறந்த சிவபக்தனான அர்ஜுனன் இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி ஈசனை வழிபட்டு வரங்கள் பல பெற்றுள்ளான்.

காமக்கோட்டி

ஆதியில் இத்தலத்தில் 16 மங்கையர்கள் கோவிலில் பணி செய்துவந்தனர். அவர்கள் 16 பேர்களில் ஒருத்தி காமக்கோட்டி என்னும் நங்கை. அதிபுத்திசாலியான காமக்கோட்டியை மற்ற 15 பெண்களுக்கும் பிடிக்காமல் போனதால், அவள்மீது காழ்ப்புணர்ச்சி காட்டி, சோழ மன்னனிடம் பொய்கூறி அவள்மீது வீண்பழி சுமத்தி, கோவிலைவிட்டு வெளியேற்றினர். இதனால் மனம் வருந்திய காமக்கோட்டி அப்பன் ஈசனிடம் அழுது, தொழுது நின்றாள். அருளுள்ளம் கொண்ட பெருமான் சோழ மன்னனுக்கும் மற்ற 15 நங்கையர் களுக்கும் கொடிய காய்ச்சலைக் கொடுத்து புத்திபுகட்டினார். பின் சோழ மன்னனின் கனவில் தோன்றிய சதாசிவர் காமக் கோட்டியை மீண்டும் ஆலயத்திற்குள் சேர்த்திட கட்டளையிட்டருளினார்.

அதன்படியே சோழ மன்னன் மீண்டும் காமக்கோட்டி நங்கையை ஆலயத்திற்குள் பணிசெய்ய அமர்த்தினான்.

ஜெயங்கொண்ட சோழன்

சோழர்களில் ஜெயங்கொண்ட சோழன் என்னும் மன்னன் ஒருசமயம் தல யாத்திரை மேற்கொள்ளும்போது, இந்த காமநகரையடைந்து, பெருமானை வணங்கி னான். அப்போது பெருமான் இத்தலத்தைப் புதுப்பிக்கும்படி கட்டளையிட்டார். அதன் படி இவ்வாலயத்தை சிறப்புற புதுப்பித்து, திருக்குடமுழுக்கு செய்து, நித்திய பூஜைக்காக கைக்கோலன்தாங்கல் என்னும் ஊரையும் தானமாக அளித்தான். அத்துடன் புங்கம்பாடி என்னும் ஊரை, தினமும் இளம்பிறை நாயனார் ஆலயத்தில் 500 தீபங்கள் ஏற்றிட, தானமாக அளித்துள்ளான். அதுமட்டுமல்லாமல் முள்ளிக்காடு என்னும் முள்ளிப்பட்டிலுள்ள ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தையும் புனரமைத்து குடமுழுக்கு நடத்தினான் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

ஆதிகாமாட்சி

காஞ்சியைவிடவும் மிகப் பழமைவாய்ந்த இந்த காமக்கூரில் ஆதியில் ஆதிசங்கரர் கருங்கல்லினால் ஸ்ரீசக்கரம் ஸ்தாபிதம் செய்து, அன்னையை வழிபாடு செய்துள்ளார். இன்றும் இவ்வம்பிகையின் மகிமையால் பல அற்புதங்கள் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

a

ஆலயம்

ஊரின் நடுவே நாற்புறமும் ஓங்கிய மதில்களுடன் அற்புதமாகத் திகழ்கிறது ஆலயம். கிழக்கு நோக்கிய ஐந்துநிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே செல்கிறோம். முதலில் சித்தி விநாயகர் தரிசனம். சுவாமிக்கு நேரே மகாநந்தியும், கைகூப்பியபடியுள்ள அதிகார நந்தியும் விற்றுள்ளனர். சுவாமி சந்நிதியும் அம்பாள் சந்நிதியும் ஒரே சபா மண்டபத்தில் இணைகின்றன. சபா மண்டபம் கடந்து மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகிய அமைப்பில் அமைந்த ஈசன் சந்நிதியை தரிசிக்கிறோம். இத்தல இறைவனான ஸ்ரீ சந்திரசேகரர் கிழக்கு முகம்கொண்டு சுயம்புமூர்த்தமாக அருள்கிறார். தேஜோ மூர்த்தமாக காட்சிதரும் இப்பெருமான் சற்றே இடப்புறம் சாய்ந்தவாறு காட்சியளிக்கிறார்.

திவ்ய தரிசனத்தை முடித்து, பின்னர் மீண்டும் சபா மண்டபம் அடைகிறோம். அங்கே தென்முகம் பார்த்தவாறு அதிசய அற்புத நடராஜப் பெருமானைக் கண்டு பரவசப்படுகிறோம். இவர் ஸ்ரீ சதுர தாண்டவ மூர்த்தியாவார். கால்கள் இரண்டையும் வளைத்து நாட்டியமாடும் இச்சதுர தாண்டவமே பரமனின் 108 தாண்டவங்களுள் சிருஷ்டியின்போது ஆடும் முதன்மையான தாண்டவமாகும்.

பின், தனிச் சந்நிதியில் தன்னிகரற்ற கருணையுடன் ஸ்ரீ அமிர்தாம்பிகை தென்திசை நோக்கி நின்றபடி அருள்மழை பொழிகிறாள். அருள் சுரக்கும் இவ்வம்பிகையின் பேரழகில் பிரபஞ்சமே மயங்கும். அவ்வளவு எழில். ஆலயத்தின் பிரதான தேவியாகிய இவ்வன்னை எம திசையை நோக்குவதால், இவளை வழிபட்டால் எமபயம் எதுவும் இருக்காது.

அகால மரணமும் நிகழாதென்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆலய வலம் வருகையில் எழில் கொஞ்சும் தென்முகக் கடவுள் நம்மைக் கலைக் கண்ணாலும் நோக்கச் செய்கிறார். ஏனைய கோடஷ்ட தெய்வங்களும் முறையே மாடத்தை அலங்கரிக்கின்றனர்.

அடுத்தபடியாக உட்பிராகாரத்தில் தனிக் கோவில்கொண்டு அருள்பாலிக்கிறாள் ஸ்ரீ ஆதிகாமாட்சி. திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறாள். அமர்ந்த கோலத்தில் அன்னை காமாட்சியின் ஸ்வரூபமாக அருள்புரியும் இந்த அன்னையின் முன், கல்லி னால் வடிக்கப்பட்டு, ஆதிசங்கரரால் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பழந்தமிழ்க் கல்வெட்டுகள் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. ஹொய்சாளர்களின் வராக முத்திரை வெளிப்புறச் சுவர்களில் வரிசையாகக் காணப்படுகின்றன.

ஒரு காலத்தில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடந்ததற்குச் சான்றாக அகன்ற வீதிகள் இன்றும் காணப்படுகின்றன. புதிதாக தேர் ஒன்று தற்போது செய்யப்பட்டுள்ளது.

இங்கு நடைபெறும் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் மிகவும் பிரசித்தம். இதில் கன்னிப் பெண்கள் திருமணம் கைகூட பிரார்த்தனை செய்தும், சுமங்கலிப் பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும் வழிபட்டு மிகுந்த பலனைப் பெறுகின்றனர். மற்ற விசேடங்களில் பங்குபெற முடியாவிட்டாலும், பங்குனி உத்திரநாளில் இங்கு கலந்துகொள்வது அதிக புண்ணியத்தையும், சுபப்பலன்களையும் தரவல்லதாகும்.

முன்னோர்களின் சாப- பாவங்கள் யாவும் நீங்கிடவும், முற்பிறவித் தீவினைகள் தொலையவும், திருமணத்தடை விலகிட வும், மாங்கல்ய பலம்பெறவும் இத்தல வழிபாடு மிகவும் உசிதமானதாகும். பெருமைமிகு காமக்கூர் தலத்தினை தரிசனம் செய்து வாழ்வில் வளங்கள் பல பெற்றுயர் வோம்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்திலுள்ள இவ்வூர் ஆரணி- படவேடு பேருந்து மார்க்கத்தில் அமைந்துள்ளது. ஆரணியிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள இவ்வூரினை சிற்றுந்துகள் மூலமாகவும் சென்றடையலாம்.

ஆலய தொடர்புக்கு: மணிகண்டன் குருக்கள், அலைபேசி: 94865 19555, 90872 25939.