ப்ரவரி மாதத்தை ஒரு புண்ணிய மாதம் எனலாம். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவதரித்த மாதம்; அரவிந்தரின் அன்னை உதித்த மாதம். தத்தாத்ரேய அவதாரமான கஜானன மஹராஜ் தோன்றிய மாதமும் பிப்ரவரியே.

1994-ஆம் ஆண்டு மே மாதம் நான், என் மூத்த மகனின் கல்லூரி அட்மிஷன் விஷயமாக நாக்பூருக்கு ரயிலில் சென்றுகொண்டிருந் தேன். வண்டி "ஷிகாவ்ன்' என்னும் நிலையத்தில் நின்றது. திடீரென்று மனதில் ஒரு உந்துதல்- "கீழே இறங்கு' என்று. அவ்விடத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தெரிந்த எவரும் இல்லை. மனக்குழப்பத்துடன் வண்டியைவிட்டு இறங்கினேன். டிக்கெட் கலெக்டரிடம் சென்று, "பிரேக் ஜர்னி எண்டாஸ்மென்ட்' வாங்கிக்கொண்டு, ""இந்த ஊரில் என்ன விசேஷம்? ஏதோ ஒரு உந்துதலால் இறங்கிவிட்டேன்'' என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே, ""இதோ மேலே பாருங்கள்.

அந்த படத்தில் உள்ளவர் தான் கஜானன மஹராஜ். அவரது சமாதியை தரிசிக்கவே உங்களை இறங்க வைத்திருக்கிறார். சீரடி சாய்பாபா போன்றவர். தத்தாத்ரேய அம்சம் என்பார்கள். இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவுதான். ஆட்டோவில் போய் வந்துவிடலாம். நாக்பூருக்கு அடுத்த ரயில் வர இன்னும் மூன்று மணி நேரம் உள்ளது'' என்றார்.

Advertisment

அவர் ஆங்கிலம் பேசியவிதம் தமிழர்போல் இருக்கவே, ""நீங்கள் தமிழரா... பெயர் என்ன?'' என்றேன். ""ஆம்... கோவிந்தராஜன்'' என்றார். அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஆட்டோவில் சமாதிக்கோவில் சென்றேன். பெரிய கல்வி நிலையங்களுக்கு நடுவே அமைந்திருந்தது. கீழே சமாதி. படிகளில் ஏறி மேல்மாடியிலிருந்துதான் தரிசிக்கமுடியும். சீதா லட்சுமண அனுமன் சமேத ராமர் விக்ரகங்களும் இருந்தன. சமாதியைப் பார்த்ததும் எனக்குள் ஒரு ஆச்சரியம். ஒரு வாரத்துக்குமுன்பு மும்பையில் கண்ட கனவொன்று நினைவுக்கு வந்தது.

maharaja

Advertisment

கனவில் எங்கோ போகிறேன். ஒரு சிறிய சமாதி. யாருடையதென்று புரியாமல் கேள்வியுடன் பார்க்க, கீழேயிருந்த சிறிய கணபதி (யானை) வடிவம் பெரிதாக உருவெடுத்து என் காதில் கிசுகிசுத்தது. "நீ சொல்வது புரியவில்லையே' என்றேன். "கோவிந்த ராஜனைக் கேள்' என்றது.

மறுநாள் மும்பையில் என் நண்பர் கோவிந்தராஜனிடம் கேட்டபோது, அவர் சிரித்துக்கொண்டே, "ஒன்றும் புரியவில்லை' என்றார். இங்கு எனக்கு வழிகாட்டிய டிக்கெட் கலெக்டரின் பெயர் கோவிந்தராஜ்! தெய்வீகக் கனவுகளை அலட்சியம் செய்யக்கூடாது என்று எனக்கு உணர்த்திய பல சம்பவங்களில் இதுவும் ஒன்று. என்னை ரயிலிலிருந்து இறங்கச் செய்து சமாதி தரிசனம் காட்டிய அந்த புனித யோகீஸ்வரரின் சமாதிமுன்பு தியானம் செய்து வணங்கினேன். அவரது வரலாறு கொஞ்சம் சிந்திப்போமா?

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் ஒருங்கிணைந்த அம்சமாக, அத்திரி முனிவர்- அனுசுயா தேவி தம்பதிக்குப் பிறந்தவர் தத்தாத்ரேயர்.

"பிரம்ம விஷ்ணு சிவ ஏகஸ்வரூபம்

அத்ரி அனுசுயா புத்ரம்

தத்தாத்ரேயம் சச்சிதானந்தம்

அவதூத குரும் ஸதாநமாமி'

என்னும் துதியைக்கூறி தத்தாத்ரேயரை வணங்கினால் எல்லா நன்மைகளையும் பெறலாம். அவரது அம்சமாக ஸ்ரீபாத வல்லபர் (பீதாபுரம், ஆந்திரா), ந்ருஸிம்ஹ சரஸ்வதி (நரஸோபாடி), சமர்த்த அக்கல்கோட் மஹராஜ் (அக்கல்கோட்), சீரடி சாய்பாபா (சீரடி), கஜானன மஹராஜ் போன்றோர் அவதரித்து மக்களுக்குப் பல நன்மைகள் புரிந்துள்ளனர்.

கஜானன மஹராஜ் வரலாறு சற்று வினோதமானது. அவர் எங்கு, எப்போது, யாருக்குப் பிறந்தார் என்ற விவரம் இதுவரை தெரியாது. சீரடி சாய்பாபா சரிதம் கூறிய தாஸ்கனுவே இவரது சரித்திரமும் கூறியுள்ளார்.

23-2-1878-ல் ஷிகாவ்னில் ஒரு திருமணம் நடந்தது. அங்கு சாப்பிட்டவர்களின் இலைகளை வெளியே எறிய, அவற்றிலிருந்த மீதியை ஒருவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பரட்டைத் தலை; இடையில் கோவணம் போன்ற சிறுதுணி மட்டுமே.

திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் "சீச்சீ... பைத்தியம்' என்றனர். பங்கட்லால் அகர்வால், தாமோதர் குல்கர்னி ஆகிய இருவர் மட்டும், "இவர் பிச்சைக்காரர் அல்லவே... யாரோ சித்தபுருஷரோ' என்று, உள்ளே சென்று நல்ல உணவுப் பண்டங்களை இலையில் வைத்துக் கொண்டுவந்து கொடுத்தனர். அவர் சாப்பிட்டார். மற்றவர்கள் கை அலம்பி வெளியே வரும் நீரையே பருகினார். கை, முகம் அலம்பினார். திடீரென மறைந்தார். அகர்வாலும் குல்கர்னியும் வியந்து நின்றனர்.

நான்கு நாட்கள் கழித்து அவ்வூர் சிவன் கோவிலில் நடந்த கீர்த்தன விழாவுக்கு பங்கட்லால் சென்றார். அங்கு மீண்டும் அந்த பரதேசியைக் கண்டார். அவர் "எனக்கு ஒரு ரொட்டித்துண்டு தா' என்றார். பின்னர் பீதம்பர் என்ற தையல்காரரிடம், அருகிலிருக்கும் ஓடையிலிருந்து குடிக்க நீர் கொண்டு வரச் சொன்னார். அவர் "ஓடையில் நீர் இல்லையே' என்று சொல்ல, "சொன்னதைச் செய்' என்றார். தையல்காரர் ஒரு குவளை யுடன் ஓடையருகே சென்று பார்க்க, தூயநீர் குவளையில் நிறைந்தது. வியப்போடு அவர் நீரைக் கொண்டுவந்து கொடுக்க, அதை வாங்கிக் குடித்துவிட்டு மறைந்துபோனார்.

பங்கட்லால் தன் தந்தையிடம் இந்த வினோத மனிதரைப்பற்றிக் கூற, "அடுத்த முறை பார்த்தால் வீட்டுக்கு அழைத்துவா' என்றார் அவர். நான்கு நாட்கள் கடந்து அவர் தெருவில் தென்பட, பங்கட்லால் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

அவரும் சென்றார். "க(ஏஹ)ன் க(ஏஹ)ன் க(ஏஹ)னாத

போதே' என்று அவர் அடிக்கடி கூறியதால் அவர் பெயர் கஜானன மஹராஜ்

என்றாயிற்று.

சில நாட்களுக்குப் பிறகு மஹராஜ் அருகிலிருந்த அனுமன் கோவிலில் தங்கினார்.

இந்த நிலையில், பஜனைப் பாடல்கள் பாடும் கோவிந்த் புவா என்பவர் தலம்தலமாகச் சென்று கீர்த்தனைகள் பாடி வந்தார். பயணத்திற்கு ஒரு குதிரையைப் பயன்படுத்தி வந்தார். அது முரட்டுக்குதிரை. அடிக்கடி கனைக்கும். உதைக்கும். பஜனைக்கு இடைஞ்சல் செய்யும். தூக்கத்தையும் கெடுக்கும். அன்று அந்த அனுமன் கோவிலில் பஜனை செய்தபோது குதிரையின் சத்தமே கேட்கவில்லை. பஜனை முடிந்து வியப்புடன் குதிரையின் அருகே சென்று பார்த்தபோது, குதிரையின் நான்கு கால்களுக்குக் கீழே மஹராஜ் படுத்திருந் தார். கோவிந்த் புவா பணிந்து வணங்க, மஹராஜ் எழுந்தார். குதிரையிடம் ஏதோ பேசினார்.

அன்றிலிருந்து குதிரை சாந்தமாகிவிட்டது. சித்தர்களுக்கு எதுவும் சாத்தியமே. அதனால்தான் அவர்கள் பெயர் சித்தர்!

காசியிலிருந்து ஒருவர் வந்தார். "சுவாமி, என் கனவில் வந்து கஞ்சா கேட்டீர்களே... கொண்டு வந்துள்ளேன்' என்று சொல்ல, "அதை குழலில் போட்டுப் பற்றவை' என்று சொல்லி, அதை வாங்கிப் புகைத்தார் மஹராஜ். (அவரது படங்கள் புகைபிடிக்கும் கோலத் தில்தான் உள்ளன.)

பாலாபூரில் பாலகிருஷ்ணன் என்பவர் இருந்தார். சமர்த்த ராமதாசரின் பக்தரான அவர் ராமநவமி, தாசநவமி ஆகிய தினங்களில், ராமதாசர் வாழ்ந்து சமாதியடைந்த சஞ்சனகட்- சதாரா செல்வது வழக்கம். வயதுமுதிர்வின் காரணமாக உடல் தளர்ந்துபோக, அடுத்த ஆண்டு செல்லமுடியாதே என்று மனம் வருந்தினார். அப்போது தாசர் அவரது கனவில் தோன்றி, "வருந்தாதே; என் தரிசனம் இனி உனக்கு பாலாபூரிலேயே கிட்டும்' என்றார்.

அதன்படி அடுத்த ராமநவமியன்று தன் வீட்டிலேயே வழிபாடு செய்தார் பாலகிருஷ்ணன். ராமதாசரை எதிர்பார்த்தார். அப்போது பிரசாதம் விநியோகிக்கும் சமயம் வாசலில் கஜானன மஹராஜ் நிற்பதைக்கண்டு, மகிழ்வுடன் வரவேற்று பிரசாதம் உண்ணும்படி கூறினார்.

என்றாலும் ராமதாசர் வரவில்லையே என்னும் வருத்தம் மனதில் இருந்தது. அடுத்த கணம் பிரசாதம் உண்டுகொண்டிருந்த மஹராஜ், சமர்த்த ராமதாசராகவே அவருக்குக் காட்சி கொடுத்தார். பாலகிருஷ்ணன் மனம் பூரித்துப்போனார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய ராமதாசர், "யானும் மஹராஜும் ஒன்றே. நீ வேண்டியபடி, நான் உனக்களித்த வாக்குப்படி தரிசனம் தந்தேன். சர்வம் பிரம்மமயம் அல்லவா' என்றாராம்.

ஒருசமயம் ஹரிபாடில், பாபுனாகாலே ஆகிய பக்தர்களுடன் பண்டரிபுரம் சென்றார் மஹராஜ்.

அன்று கார்த்திகை ஏகாதசி என்பதால் கூட்டம் அதிகம். சந்திரபாகா நதியில் நீராடியபிறகு பண்டரிநாதனை தரிசித்தனர். பாபுனா குளித்துவிட்டு வர நேரமானதால், கூட்டம் காரணமாக அவரால் பண்டரிநாதனை தரிசிக்க இயலவில்லை. அதனால் அவர் பெரிதும் மனம் வருந்த, "கண்ணை மூடு' என்றார் மஹராஜ். பின், "கண்ணைத் திறந்து பார்' என்றார். பாபுனா பார்த்தபோது அங்கு அவர் மஹராஜைப் பார்க்கவில்லை. பாண்டுரங்கனாகவே கண்டார்.

1908-ல் பாலகங்காதர திலகர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அகோலாவில் சிவாஜி ஜெயந்தியன்று ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் மஹராஜிடம், "நீங்களும் வரவேண்டும். உடையணிந்து சாந்தமாக வந்து திலகரை ஆசிர்வதிக்க வேண்டும்' என்று கேட்டனர். அதிசயமாக சம்மதித்த மஹராஜ், உடையணிந்து சென்று மேடையில் அமைதியாக அமர்ந்திருந்து ஆசிர்வதித்தார்.

போராட்டத்தின் காரணமாக திலகர் சிறைசெல்ல நேரிட்டது. அப்போது பக்தர்கள் அவரை சிறையிலிருந்து விடுவிக்குமாறு மஹராஜிடம் வேண்டினர்.

அவரோ, "அது முடியாது. அவரால் ஒரு மகத்தான பணி நடக்கவுள்ளது' என்றார். ஆம்; சிறையில்தான் திலகர் "சீதாரஹஸ்ய' என்னும் பெயரில் பகவத்கீதைக்கு விரிவுரை எழுதினார்.

1910-ஆண்டு ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரம் வந்து பாண்டுரங்கனை தரிசித்த மஹராஜ், 1910-ல் விநாயக சதுர்த்திக்கு மறுநாள் சமாதியானார். அவர் இருந்தபோதே எழுப்பப்பட்ட கோவிலில் சமாதி வைக்கப்பட்டது. அதற்கு மறுநாளே பலருக்கும் காட்சி கொடுத்தாராம். எங்கிருந்து வந்தார் என்று பக்தர்கள் சிந்திக்கும்போதே மறைந்துவிட்டாராம்.

சித்தபுருஷர்களின் பூதவுடல் மறைந்தாலும், ஆழ்ந்த பக்தர்களுக்கு மீண்டும் காட்சி தருகிறார்கள்.

தியாகராஜர் பாடுவார்-

"எந்தரோ மஹானுபாவுலு- அந்தரிகி வந்தனமு'

என்று.

எத்தனையோ மகான்கள்; அனைவருக்கு வந்தனம்.

ப்