தீபாவளி என்பதன் பொருள் தீபம்+ ஆவளி=தீபங்களின் வரிசை என்பதாகும். தீபாவளி சமயம் வடநாட்டினர் வரிசையாக தீபமேற்றி வழிபடுவர்.

தமிழ்நாட்டில் கார்த்திகை மாதம், கார்த் திகை நட்சத்திரத்தில் தீபங்கள் ஏற்றி வழிபடுவர். இது முருகனை (கார்த்திகேயனை) வேண்டிச் செய்யும் வழிபாடு என்பதால் இதனை "குரு கார்த்திகை விளக்கு' என்பர். கார்த்திகை தீபத்திருநாளுக்கு மறுநாளிலிருந்து மாதம் முடியும்வரை மாலையில் வாசலில் தீபம் ஏற்றுவர். இதனை "அந்தி விளக்கு' என்பர்.

ஜோதி வழிபாடு

முருகனே ஜோதி வடிவானவன். அவன் தோற்றமே நெருப்புப் பொறிகளில்தானே? தோற்றுவித்த தந்தை சிவபெருமானும் ஜோதி வடிவமே. அதற்குச் சான்றுதானே நெருப்பு மலையாகிப் பின் குளிர்ந்த திருவண்ணாமலை திருத்தலம். எனவேதான் இத்தலம் பஞ்சபூதத் தலங்களுள் அக்னித் (தேயூ) தலமாக விளங்குகிறது.

Advertisment

mm

திருமாலும் பிரம்மனும் தேடிக் காண முடியாத ஜோதியாய் சிவன் நின்ற தலமே திருவண்ணாமலை. ஆகவே இது லிங்கோத்பவ தலம். இந்தப் பெருமையைத்தான் மணி வாசகர் "ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதி' என்று போற்றியுள்ளார்.

வள்ளலார் இராமலிங்கர் சிறுவனாயிருந்த போது சென்னையில் வசித்தார். வீட்டு மாடியறையில் தனிமையில் கண்ணாடிமுன் தீபஜோதியில் தணிகை முருகனையும் தணிகை மலையையும் கண்டார். அதுமுதல் திருவருட்பா பாட ஆரம்பித்தார். முருகனை ஜோதி வடிவில் கண்டதால் அவருக்கு ஜோதி ராமலிங்கம் என்று பெயராயிற்று. பிற்காலத்தில் வடலூரில் சத்திய ஞானசபை அமைத்து, ஜோதி வழிபாட்டு முறையை உருவாக்கினார்.

கார்த்திகை தீபம்

சரவணப்பொய்கையில் ஆறு குழந்தை களாகத் தோன்றினார் முருகன். அப்பொழுது அவருக்கு பாலூட்டிய தாய்மார்கள் அறுவர்.

அவர்களே கார்த்திகைப் பெண்கள். அதனால் முருகனுக்கு கார்த்திகேயன் என்றும் பெயர் உண்டு. இந்த கார்த்திகைப் பெண்கள் பெயரால் ஒரு மாதமும், ஒரு நட்சத்திரமும் உள்ளது. சிவபெருமான் இவர்கள் அறுவருக்கும் வானில் விண்மீன்களாய் ஒளிவீசும் பதவி கொடுத்தார். வானில் வடதிசையில் அருந்ததி நட்சத்திரத்தையடுத்து ஆறு நட்சத்திரக் கூட்டத்தை இன்றும் காணலாம்.

கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்தது. ஆகவே கார்த்திகை மாத கார்த் திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீப வழிபாடு நடைபெறுகிறது.

திருமுருகாற்றுப்படையில் சூரியன் சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் முதலாவது திருமுருகாற்றுப்படை. நக்கீரர் இயற்றியது. முருகனடியார்களுக்கு வழிகாட்டி யவர் நக்கீரர். ஆற்றுப்படுத்துதல் என்றால் வழிகாட்டுதல் என்று பொருள். முருகனிடம் சென்று அருள்பெற வழிகாட்டுவதால் திருமுருகாற்றுப்படை எனப்பட்டது. இந்த நூலைத் தொடங்கும்போது முருகனை சூரியப் பிரகாசமாய் காண்கிறார் நக்கீரர். ஆம், சிவப்பிரகாசம்தானே முருகன்? சிவனும் நெருப்பின் ஒளிதானே. எனவே முருகனை சிவசூரியன் என்றும் கூறலாம்.

"உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிரொளி' என்கிறார்.

மேருவுக்கு வலப்புறமாய் எழுந்து சுற்றுவது சூரியன் (வலனேர்பு திரிதரும்). சேண்விளங்கு அவிரொளி (இடைவிடாது இயங்குவதும் நெடுந்தூரம் ஒளிர்வதும்). எங்கெங்கு உள்ள வர்க்கும் வேற்றுமையில்லாது ஒளி தருபவன் சூரியன். முருகனும் அவ்வாறே ஒளிர்பவன். ஏனெனில் இறைவன் வேண்டுதல்- வேண்டாமை இலாதவன். இவ்வாறாகத் தொடக்கத்திலேயே கடலில் உதிக்கும் செங்கதிரவனை முருகனது ஒளியாகக் காண்கிறார் நக்கீரர்.

இடர் தீர்க்கும் முருகன்

சூரியன் நவகோள்களில் தலைமைக்கோள். நவகிரகங்களால் நமக்குத் தீங்கு வருவ துண்டு. அருணகிரிநாதர் கந்தரங்காரத்தில் பாடியுள்ள ஒரே ஒரு திருப்புகழைப் பாடினாலே போதும். நவகிரக சோதனை யிலிருந்து விடுபடலாம்.

"நாளென் செயும் வினைதான் என்செயும் எனை

நாடிவந்த

கோளென் செயும் கொடுங்கூற்று என்செயும்

குமரேச ரிருதாளும் சிலம்பும் சதங்கையும்

தண்டையும் சண்முகமும்

தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து

தோன்றிடினே.'

இந்தப் பாடலில் தாள் (திருவடி)-2, சிலம்பு-2, சதங்கை-2, தண்டை-2, சண்முகம்-6, தோள்கள்-12, கடம்பமாலை-1. இவற்றைக் கூட்டினால் 27 வரும். இது 27 நட்சத்திரங்களைக் குறிக்கும்.

தோள்கள் 12 என்பது 12 ராசிகளைக் குறிக்கும்.

திருவடிகளையும் காலணிகளையும் சேர்த்தால் 8. இத்துடன் கடம்பமாலை சேர்ந்தால் 9. இது நவகிரகங்களைக் குறிக்கும். இவற்றோடு சண்முகம் சேர்த்தால் 15. இது திதிகளைக் குறிக்கும்.