நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
-என்கிற மிகவும் அருமையான பாடல் இடம்பெற்ற திரைப்படம் "பெற்றால்தான் பிள்ளையா' கிருஷ்ணன்- பஞ்சு இயக்கத்தில் 1966-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் குழந்தை கண்ணனாக நடித்த பேபி ஷகிலாவின் வளர்ப்புத் தந்தை ஆனந்தனாக எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் கவிஞர் வாலி எழுதி, டி.எம். சௌந்திரராஜன் பாடிய அந்தப் பாடல் இன்றைக்கும் நீதி போதனைப் பாடலாக விளங்குகிறது.
இந்தப் பாடலின் சரணத்தில்...
தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்
-என எம்.ஜிஆர் ஓர் எளிய... ஆனால் வலிய கருத்தைப் பதிவு செய்திருப்பார்.
தவறிச் செய்த தவறுகளுக்கு மனப் பூர்வமாக தவறை உணரும்படிச் செய்தால் போதும். ஆனால் தெரிந்தே தப்புச் செய்கிறவர்களுக்கு தண்டனை தான்.
இதுபோலவே புராணத்தில் ஒரு சம்பவம் நடந்தது.
தர்மம் தவறாத எமதர்மராஜனுக் கும், நேர்மையான முனிவர் மாண்டவ்யருக்கும் நடந்த தாக புராணம் சொல்கிறது.
உங்களுக்கு புராணக் கதைகளில் நம்பிக்கை இல்லையென்றால் பரவா யில்லை.
நீதி தவறாத ஊர்
பஞ்சாயத்துத் தலைவருக் கும்- ஒரு நேர்மையான குடிமகனுக்கும் நடந்ததாக நினைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நமக்கு கதையின் நோக்கம் அவசியம்.
***
முனிவர் மாண்டவ்யர் அறம் தவறாதவர்.
கடும் தவம் ஆற்றக்கூடியவர். மௌன விரத தியானத்தில் மூழ்கக்கூடியவர். வனத்தில் அமைதியான சூழலில் தனது ஆசிரமத் திற்கு வெளியே மரத்தடியில் அமர்ந்து, பேசா விரதத்துடன் தியானம் செய்து கொண்டிருப்பது அவரின் வழக்கம். அன்றும் வழக்கம்போல மௌனம் கடைப்பிடித்து தியானம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது அரசாங்க வீரர்கள் அங்கே வந்தனர்.
"முனிவரே! கள்வர்கள் சிலர் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களுடன் இந்தப் பக்கம் வந்தார்களா?' எனக் கேட்டனர்.
பேசா விரதம் பூண்டு தியானம் செய்து கொண்டிருந்த மாண்டவ்யர், காவலர்களின் கேள்வியைக் கவனிக்கவில்லை. மீண்டும் கேட்டனர்.
மௌன தியானத்தை கலைக்க விரும்பாத மாண்டவ்யர், பதிலேதும் கூறவில்லை.
மீண்டும், மீண்டும் கேட்டுப்பார்த்த காவலர்கள், ஆசிரமத்திற்குள் நுழைந்தனர். அங்கே கள்வர்கள் கொள்ளையிட்டு வந்த பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றைக் கைப்பற்றியதுடன், சுற்றிலும் ஒளிந்திருந்த திருடர்களையும் பிடித்தனர்.
திருடர்களுக்கு முனிவர் அடைக்கலம் கொடுத் ததாக கருதியதுடன், அந்தக் கள்வர் கூட்டத் துடன் முனிவருக்கும் சம்பந்தமிருப்பதாகக் கருதி, கள்வர்களுடன், மாண்டவ்யரையும் கைது செய்துகொண்டுபோய் அரசன்முன் நிறுத்தினர்.
கள்வர்களையும், முனிவர் மாண்டவ் யரையும் கழுவேற்றும்படி உத்தரவிட்டான் அரசன். அதன்படி கழுவேற்றப்பட்டனர்.
சில நிமிடங்களில் திருடர்கள் உடல் துளைக்கப்பட்டு, இறந்துபோயினர். ஆனால் மாண்டவ்யர் மட்டும் பலமணி நேரமாக, நீரும், ஆகாரமும் இன்றி, கடவுளைத் தியானித்த படியே உயிருடன் இருந்தார். அங்கே மீண்டும் வந்த அரசாங்க அதிகாரிகள் இந்த அதிசயத்தைக் கண்டு, வியப்படைந்து, அரசனுக்கு உடனடியாக அறிவித்தனர்.
விரைந்து வந்த அரசன், "தவறாக ஒரு முனிவரைத் தண்டித்துவிட்டோமே, முனிவர் சாபம் கொடுத்துவிட்டால்?' என மனம் மருகி, மாண்டவ்யரிடம் மன்னிப்புக் கேட்டான். மன்னன் மன்னிப்புக் கேட்டதால் சமாதானமடைந்த அவரைக் கழுமரத்திலிருந்து தூக்க முயன்றனர். ஆனால் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அதனால் மாண்டவ்யரின் மலத்துவாரம் வழியாக உடலுக்குள் போய்விட்ட கழுமரத்தின் பகுதிகளை விட்டுவிட்டு, மலத்துவாரத்திற்கு வெளியே இருந்த கழுமரப் பகுதியை வெட்டி எடுத் தனர். கழுமரச் சூலத்தின் முனைப்பகுதி அவரின் உடலுக்குள்ளேயே இருந்தது.
அதனுடனேயே தான் முன்செய்ததுபோலவே தொடர்ந்து இறைப்பணி ஆற்றிவந்தார், தவம் மேற்கொண்டார். அதனால் அவர் "ஆணி மாண்டவ்யர்' என்று அழைக்கப்பட்டார்.
***
கடந்தகால வினைகளே, நிகழ்கால பலன்களாக எதிரொலிக்கிறது. ஆயினும் தன் மனமறிந்து எவ்வித ஒழுங்கீனத்தையும் செய்யாதபோது, அவருக்கு ஏன் இந்தத் தண்டனை?
பாரபட்சமின்றி பலாபலன்களைத் தரும் தர்மதேவனான எமதர்மன் நீதி தவறினாரா?
கழுவேற்றல் நிகழ்வுக்குப்பின், ஒருமுறை எமதர்மனைச் சந்தித்தபோது, "நான் அறிந்தவரையில் எந்த ஒரு பாவத்தையும் நான் செய்யவில்லை.
ஆனால் இப்படி ஒரு தண்டனை எனக்குக் கிடைக் கிற அளவுக்கு நான் என்ன பாவம் செய்தேன்?' எனக் கேட்டார் ஆணி மாண்டவ்யர்.
"ஒருசமயம் நீங்கள் சிறுவனாக இருந்தபோது, ஒரு சிறு பூச்சியைப் பிடித்து, அதன் பின்புறத்தில் புல்லால் துளைத்து, அந்தப் பூச்சியை வதைத்ததால், இப்போது உங்களுக்கு இந்தத் துன்பம் நேர்ந்திருக் கிறது' என்றார் எமதர்மர்.
"பன்னிரண்டு வயது வரையிலான குழந்தைகள் செய்யும் தவறுகள் பாவக் கணக்கில் சேராது என சாஸ்திரங்கள் சொல்கிறது. ஆனால் சிறுவயதில் செய்த ஒரு சிறு குற்றத்திற்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' எனக் கேட்டதுடன் "இனி மேல் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் செய்யும் குற்றங்கள் பாவக்கணக்கில் வராது என்கிற நடைமுறையை இன்று முதல் நான் கொண்டுவருகிறேன்' என்றார்.
புராணக் கூற்றின்படி முதன்முதலில் "சிறார் குற்றவியல் பாதுகாப்புச் சட்டம்' கொண்டு வந்தவர் முனிவர் ஆணி மாண்டவ்யர்தான்.
இன்றளவும் சிறார்கள் குற்றம் செய்தால் அவர்கள் சிறையில் தண்டிக்கப்படுவதில்லை. பாதுகாப்பு இல்லத்தில் வைத்து நல்வழிப்படுத்தப் படுகிறார்கள்.
இப்படி ஒரு சட்டத்தை நடைமுறைப் படுத்துவதாகச் சொன்ன முனிவர், தவறில்லை என்று தெரிந்தே தனக்கு கர்மப்பலனால் தண்டனை கிடைக்கக் காரணமான எமதர்மனுக்கு தண்டனையை அறிவித்தார்.
"நீ செய்த தவறுக்காக நீ பூமியில் பிறப் பாயாக. அறிவிற் சிறந்தவனாய் அரச குடும்பத்தில் பிறந்தாலும், அரியனை ஏறும் தகுதியும், மரியாதையும் உனக்குக் கிட்டாது'' என எமதர்மராஜனுக்கு சாப மளித்தார் முனிவர் ஆணி மாண்டவ்யர்.
முனிவரின் சாபத்தால்தான் எமதர்மன் கௌரவர்கள் அரண் மனையில் அரச வாரிசாக பிறந்தாலும், கௌரவர்களால் "வேலைக்காரியின் மகன்' என இழிவு படுத்தப்பட்டார் விதுரர். ஆயினும் நீதி தவறாத விதுரர் பாண்டவர்கள் பக்கம் இருந்த நியாயத்தை உணர்ந்து, அவர் களுக்கு ஆதரவாகத் திகழ்ந்தார்.
மீண்டும் அந்தப் பாடலின் சரணத்தைக் கேளுங்கள்...
தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்
-ஆகவே நம் சொந்த வாழ்க்கையில் தப்பு செய்யும்போது திருந்திக் கொள்வோம்; தவறு செய்யும்போது வருந்திக்கொள்வோம்! தீர்ப்பை நாமே உறுதிசெய்வோம்.