அட்சய திரிதியை- 18-4-2018

ஸ்ரீஞானரமணன்

"அட்சயம்' என்ற சொல்லுக்குக் குறையாதது, வளர்வது, எடுக்க எடுக்கக் கொடுப்பது என்பது பொருள். வைதீக சங்கல்பத்தில்கூட பித்ரு தேவர்களுக்கு (இம்மானிடப் பிறவிக்குக் காரணமானவர்கள்) செய்யப்பெறும் பூஜைகளில்கூட "அட்சய திருப்தியர்த்தம்' என்று வரும். அதாவது அவர்கள் மகிழ்ச்சியடைந்து எப்போதும் நம்மை ஆசிர்வதிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

அதேபோல், பெரியவர்கள் நம்மை ஆசிர்வதிக்கும்போது சுப- அசுப நிகழ்ச்சிகளுக்கேற்ப மஞ்சள் அல்லது வெள்ளை அட்சதையை உபயோகிப்பார்கள்.

Advertisment

மற்றைய தினங்களில் தலம், தீர்த்தம், மூர்த்தி என புண்ணியத்தைப் பெறுவதற்காக பல்வேறு இடங்களுக்குச் செல்கிறோம்.

ஆனால், அட்சய திரிதியை தினத்தில் மட்டும் புண்ணியம் நம்மைத் தேடிவருகிறது.

அட்சய திரிதியை தினத்திற்கு ஈடான புண்ணிய தினம் கிடையாது என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

Advertisment

அதேபோல, அன்று நாம் செய்யும் பித்ரு பூஜையும் (தர்ப்பணம்) அவர்களுடைய திருவுள்ளத்திற்கு மிகமிக உகந்ததாகும். யுக + ஆதி = யுகாதி. அதாவது யுகங்களின் ஆரம்ப நாள். அது பித்ருக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகும். இதையே அர்ப்பணம், தர்ப்பணம் மற்றும் சமர்ப்பணம் என்பார்கள்.

யாக்ஞவல்கியர் எனும் மகாதபஸ்வி, "கிரகண காலத்திலும், அட்சய திரிதியை தினத்திலும் தனது சக்திக்குத் தகுந்தபடி நம்பிக்கையுடனும், சிரத்தையுடனும் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தானம் கொடுக்க வேண்டும். அந்த தானத்தின் புண்ணியப்பலன் பல பிறவிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும்' என்று கூறியுள்ளார்.

krishnan

திரிதியை திதியின் சிறப்பு

வளர்பிறை- தேய்பிறை என இரு திரிதியை திதிகளுமே சிறப்பானவை.

ஏனெனில் அந்த திதி தேவதை பெற்ற நல்வரமானது என்றென்றும் குறையாமல் வளர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதே. எண் கணிதப்படி 3 என்பது குருவுக்கு உரியது.

வாமனர் இவ்வுலகில் மூன்றடி மண் கேட்டார். ஒருவர் நீரில் மூழ்கும்போதுகூட இயற்கை அவர் பிழைத்துக்கொள்ள மூன்றுமுறை அவகாசம் அளிக்கும். சந்தியா வந்தனத்தின்போது, சூரிய பகவானுக்கு மூன்றுமுறை அர்க்கியம் அளித்து, மூன்று வேளை பூஜைகளை காயத்ரி தேவியின் உபாசனையின்போது செய்கிறார்கள்.

இவ்வாறு மூன்று என்பதற்கு நிறைய சிறப்புண்டு.

புண்ணிய நதிகளில் நீராடல்

நதி தேவதைகளின் பெயரை உச்சரித்தாலே அங்கு அவர்கள் எழுந்தருள வேண்டுமென்பது அவர்களுக்கு விதிக்கப்பட்டதாகும். அதனால்தான் சாதாரண பூஜைகளில்கூட கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா, கோதாவரி, கண்டகி, தாமிரபரணி போன்ற புண்ணிய நதிகளின் பெயர்களையும், மானசரோவம், புஷ்கரம், கௌரிகுண்டம் போன்ற புண்ணிய தடாகங்களையும் மானசீகமாகப் பூஜிப்பதும், முடிந்தால் நீராடுவதும் கற்பனைகளையும் மீறிய அளவில் புண்ணிய பலனைத் தரும்.

தேவ பூஜையாக நாமசங்கீர்த்தனம், தமிழ்த்திருமறைகள் பாராயணம் செய்யலாம். முக்கியமாக ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம் சிறப்பானது. பூஜையின் நிறைவில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் செய்தல், அனாதைகளுக்கு ஆதரவளித்தல் பல பிறவிகளுக்கு நமக்குப் புண்ணியப் பலனை அள்ளித்தரும். நம் சக்திக்கேற்றவாறு செய்தால் போதும்.

தர்மசாஸ்திரம், அட்சய திரிதியை நாளில் நாம் அளிக்கும் தானங்கள் மறுபிறவியில் எவ்விதம் நற்பலனை அளிக்கும் என்று கூறியுள்ளது.

பிருந்தாவனங்களில் சந்தனக்காப்பு!

மகான்கள், மகாபுருஷர்கள், துறவிகள் ஆகியோர் தங்கள் பூவுலக வாழ்க்கை முடிந்த பின்பு ஜீவபிருந்தாவனங்களில் தபோநிலையில் நித்யவாசம் செய்து நமக்கு அருள்புரிந்து வருகிறார்கள்.

இத்தகைய பிருந்தாவனங்களுக்கு அட்சய திரிதியை தினத்தில் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து சந்தனக்கட்டையை கல்லில் அரைத்து "கரபூஷண சேவையாக' சமர்ப்பிக்க வேண்டும்.

முதலில் வீட்டில் பித்ரு தேவர்களுக்கும், பிறகு தெய்வப் படங்களுக்கும் சமர்ப்பிக்கலாம். மந்த்ராலய மகானின் அனைத்து மிருத்திகா பிருந்தாவனங்களிலும் சமர்ப்பிக்கலாம்.

அட்சய திரிதியையில் ஆபரணங்கள் வாங்க வேண்டுமா?

இந்த மகத்தான புண்ணிய தினத்தன்று நாம் வாங்கும் தங்கம், தீராத கடன்களையும், ஏழ்மையையும் மிகக்குறுகிய காலத்தில் தீர்க்கும். இதுபோன்றே வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும். இந்த இரண்டும் வாங்க இயலாதவர்கள் அவரவர் சக்திக்கேற்ப புதிதாக வஸ்திரங்கள் வாங்கலாம். தயிர்சாதம் தயாரித்து ஏழைகளுக்குக் கொடுத்தால் தலைமுறைகளுக்குக் குறைவில்லாத அன்னம் கிடைக்கும்.

இத்தினத்தில் எம்பெருமானின் வாமன அவதாரமும், பரசுராமரின் அவதாரமும் தனிச்சிறப்புப் பெற்றவை.

எனவே, இந்த மகாபுண்ணிய தினத்தில் நமது சக்திக்கேற்றவாறு தான தர்மங்களைச் செய்து, இப்பிறவிக்கு மட்டுமல்ல; இனி வரப்போகும் பிறவிகளுக்கும் புண்ணியம் என்ற நிரந்தரமான சொத்தைச் சேர்த்து வைத்துக்கொள்வோம். இந்த தர்மம் என்கின்ற செலாவணியே எல்லா லோகங்களிலும் செல்லத்தக்கதாகும்.