ல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவ தும், அந்த உயிர்களின்மீது கருணையோடு இருப்பதும்தான் ஜீவகாருண்ய ஒழுக்கமாகும். இதுவே தலைசிறந்த பக்தியாகும். மிக உயர்ந்த கடவுள் வழிபாடாகும். இதைப்பற்றி வாழ்வியல் ஞானி திருவள்ளுவர்-

"இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்'

என்று கூறுகிறார்.

Advertisment

ஒருவன் தான் தேடிக் குவித்துவைத்துள்ள பொருட்களைப் பிறர்க்கு ஈயாமல் (கொடுத்து உதவாமல் இருப்பது) தாமே அனுபவிப்பது, தாமே உண்ணுவது என்பதெல்லாம் கையேந்தி பிச்சை எடுப்பதைக் காட்டிலும் கொடுமையானது.

இதைப்பற்றி அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் கூறியுள்ள தைப் பார்க்கலாம். பசியால் வருந்துகின்ற உயிர்களுக்கு ஆகாரம் (உணவு) கொடுக்க நினைக்கும் புண்ணியவான்களது (நற்சிந்தனை உள்ளவர்கள்) மனமானது வேறு பற்றுகளை விட்டு சுத்தி கரணமாகி (நல்ல செய்கை) நிலைத்தபடியால் அந்தப் புண்ணியவான்களை யோகிகள் என்றே நாம் உண்மையாக அறிந்து கொள்ள வேண்டும்.

இதில் பாவம்- புண்ணியம் என்றால் என்ன? என்பதைப் பற்றிய புரிதல் வேண்டும். பாவ- புண்ணியம் என்ப தைக் குறித்துப் பெரிதாகக் கற்பனை செய்ய வேண் டிய அவசிய மில்லை. ஏனென் றால், பாவம் என்றால் தீமை, புண்ணியம் என்றால் நன்மை என்று பொருள். இதையே பெரியோர்கள் "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று கூறுகிறார்கள்.

Advertisment

vv

எனவே நன்மை- தீமை என்பது ஒவ்வொரு தனி மனிதனின் செயல்களினால் உண்டாகும் விளைவுகளின் பயனாகும்.

நன்மை- தீமைகளுக்கு மூன்று முக்கிய கருவிகளாக, காரணங்களாகக் கூறுகிறார் அருட்பிரகாச வள்ளலார். மனம், வாக்கு, காயம். அதாவது எண்ணம் (மனம்), சொல் (வார்த்தை), செயல் (உடலின் செயல்பாடு) இவை மூன்றும் ஒரு நேர்க்கோட்டில் செயல்படவேண்டும்.

1. மனதினால் செய்யக்கூடாத விஷயங்கள் அடுத்தவர் மனைவியை விரும்புதல்.

பிறருடைய சொத்துகளை அபகரிக்க நினைப்பது.

பிறருக்குக் கிடைத்ததை நினைத்துப் பொறாமைப் படுதல்.

பிறருக்குத் தீங்கு நினைப்பது.

2. வார்த்தைகள் (வாக்கு)மூலம் செய்யக்கூடாத விஷயங்கள்

பொய் சொல்லுதல்.

கோள் சொல்லுதல்.

புறங்கூறுதல்.

வீணாக அழுவது.

3. உடலால் செய்யக்கூடாத விஷயங்கள் பிறர் மனைவியைத் தழுவுதல்.

உண்ணத் தகாத உணவுகளை உண்ணுதல்.

பிறருக்குத் தீங்கு செய்தல்.

பிறருக்குத் தீங்கு செய்பவரைத் தடுக்காமல் அவருக்கு உதவி செய்வது.

மனதினால் செய்யக்கூடாததைப் பற்றி திருவள்ளுவர்-

"வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்'

என்கிறார்.

தீய சிந்தனையுள்ள மனதை உடையவ னின் பொய்யான ஒழுக்கத்தை, அவன் உடம்போடு உடம்பாகக் கலந்துள்ள பஞ்ச பூதங்களும் கண்டு தனக்குள்ளே ஏளனமாக சிரிக்கும்.

வார்த்தைகள்மூலம் செய்யக்கூடாததை திருக்குறள் கூறுவதைப் பார்க்கலாம்.

"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.'

தீயினால் சுட்ட புண்ணானது வெளியே தெரிந்தாலும், அது குணமாகிவிடும்; ஆறிவிடும். ஆனால் நாவினால் சுட்ட வடு (சொல்) சொன்ன வார்த்தைகள் என்றுமே ஆறாது. மனதினுள்ளே மறையாமல் பெரிய காயமாகவே இருந்துகொண்டிருக்கும்.

உடலால் செய்யக்கூடாத செயல்கள் பற்றி திருக்குறள்-

"அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்'

என்கிறது.

அறச்செயல் எதுவென்றால் எந்தவொரு உயிரையும் கொல்லாமல் இருப்பதேயாகும். பிற உயிர்களுக்குத் தீங்கிழைப்பது- அதாவது காயப்படுத்துவது, பிற உயிர்களைக் கொல்வது என்பது தீவினைகள் எல்லா வற்றின் விளைவையும் ஒருங்கே கொடுத்து விடும்.

ஒரு மனிதன் பழமையான கோவில் களுக்குப் போவது அவசியம். அதேவேளை யில் கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்து விட்டால் நமது தீவினைகள்- அதாவது பாவச் செயல்கள் சரிசெய்யப்படும் என்ற எண்ணம் இருந்தால் அது மிக மோசமான ஏமாற்றத்தையே கொடுக்கும். அது மூடநம்பிக்கை. இறைவனின் படைப்பில் உருவாகிய, இயற்கையிலிருக்கும் ஒரு கொய்யா மரத்திற்கு நீரூற்றி வளர்த்தால், அது நமக்கு கொய்யாக்கனியைப் பரிசாகக் கொடுக்கும். அதுபோல ஒரு தென்னை மரத்திற்கு நீரூற்றி வளர்த்தால் அது நமக்கு தேங்காய் எனும் விலை மதிப்பற்ற கனியைக் கொடுக்கும். ஒரு வாழை மரத்திற்கு நீரூற்றி வளர்த்தால், அது வாழையிலை, வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு என்று தன்னையே வளர்த்தவருக்குப் பரிசாகக் கொடுக்கும். வாழையைக் குறித்து ஒரு பாடல் உண்டு. 1962-ஆம் வருடம் வெளிவந்த சுமைதாங்கி எனும் திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்.

"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...

வாரிவாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்....

வாழைப்போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்...

உருகி ஓடும் மெழுகுபோல ஒளியை வீசலாம்...'

இந்தப் பாடல் உணர்த்தும் பொருள்- மனிதன் என்பவன் தெய்வமாகவும் ஆகமுடியும். தெய்வ நிலையிலும் செயல்பட முடியும். அவ்வாறு செயல்படும்பொழுது அதன் விளைவுகள் எத்தகைய பலன்களைக் கொடுக்கும் என்பது இந்தப் பாடல் உணர்த்தும் பொருளாகும். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும் என்பதே இப்பாடல் உணர்த்தும் உயரிய கருத்தாகும்.

இறைவனது படைப்பில் இயற்கையாக இருக்கும் ஐந்தறிவுக்குக் குறைவாவுள்ள அனைத்துக்கும், நாம் ஒன்றைச் செய்தால், அவை நமக்குப் பிரதிபலனாக கனிகள் முதற்கொண்டு ஏதேனும் ஒரு பொருளை நமக்குக் கொடுத்துவிடும். அதுபோல விலங்கினங்களுக்கும் நாம் நலமான ஒன்றைச் செய்தோமானால், அந்த விலங்கினமானது வாழ்நாள் முழுக்க நமக்கு நன்றியோடு இருக்கும்.இவ்வாறு ஆறறிவுக்குக் குறைவான செடி, கொடி, மரங்களாகட்டும்; பல்வேறு வகையான விலங்குகளாகட்டும்- இறைவனிடம் எதுவும் கேட்பதில்லை; கோரிக்கை வைப்பதும் இல்லை.

இயற்கை எப்போதும் அமைதியாக, மகிழ்ச்சியாகவே இருக்கிறது. ஆனால் இறைவனால், இயற்கையால் படைக்கப் பட்ட ஆறறிவு படைத்த மனித இனம் மட்டும், பேராசையுடன் எதையாவது தேடிக் கொண்டே இருக்கிறது. இறைவனிடம் எதையாவது கோரிக்கை வைத்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மழை வந்துவிட்டால், மழையின் அருமை தெரியாமல் "எங்களுக்கு சிரமமாக இருக்கிறது' என்று கூறுகிறார்கள். "வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள்' என்று புலம்புகிறார்கள். வெயில் அதிகமானால் "வெளியில் தலைகாட்ட முடியவில்லை' என்று கூறுகிறார்கள்.

இப்படி இயற்கையை மனிதன் ஏதாவ தொரு வகையில் குறைகூறிக்கொண்டே இருக்கிறான். இவ்வாறு மனிதன் மனதளவில் சக மனிதர்களைப் புண்படுத்துவதும், வார்த்தைகளால் காயப்படுத்துவதும், உடலால் தீங்கிழைப்பதும், உயிர்வதை செய்துகொண்டும் இருக்கிறார்கள். "எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை; கடவுள் ஏன் என்னை சோதிக்கிறார்' என்று சொல்வதைப் போன்ற ஒரு முட்டாள்தனம் வேறொன்றும் இல்லை.

இயற்கையோடு இயற்கையாக வாழப் பழகிக்கொண்டால் இறைவன் எனும் இயற்கை சக்தி எப்போதும் துணையாக இருக்கும்.

மனம், வாக்கு, காயம்மூலம் செய்யக் கூடாத பாவச் செயல்களைப் பற்றி சுமார் 150 ஆண்டுகளுக்குமுன்பு வாழ்ந்த வள்ளலாரின் கருத்துகளைப் பார்த்தோம். அது குறித்து சைவ சித்தாந்தக் கணக்கின்படி சுமார் 8,000 வருடத்திற்கு முன்பும், என் சிற்றறிவின் கணக்குப்படி சுமார் 15,000 வருடத்திற்கு முன்பும் வாழ்ந்த- இன்றும் மறைமுகமாக இருந்தும், மறைந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் திருமந்திரச் சிற்பி திருமூலர் தான் இயற்றிய ஒரே பாடலில் கூறுவதைப் பார்ப்போம்.

"கொலையே களவுகள் காமம் பொய் கூறல்

மலைவான பாதகமாம் அவை நீக்கித்

தலையாம் சிவனடி சார்ந்த இன்பம் சார்ந்தோர்க்கு

இலையாம் இவைஞானா னந்தத்து இருத்தலே.'

பொய் பேசுதல், திருடுதல், கள் உண்ணு தல், பெண்மீது இச்சை கொள்ளுதல், உயிர்க் கொலை செய்தல் ஆகிய ஐந்தும் மிகப் பெரிய கொடூரமான பாவங்கள். இத்தகைய கொடுஞ்செயல்கள் ஜீவகாருண்ய ஒழுக்கத் திற்கு எதிரானதாகும். எனவே, இத்தகைய தீய செயல்களை விட்டொழித்துவிட்டு, பிரபஞ்சத் தலைவனாம் சிவப்பரம்பொருளின் திருவடித் துணையை நாடி இன்புற்று இருப்பவர்களுக்கு, வேறு வகையான துன்பங்கள் எதுவும் இல்லை.

சிவப்பரம்பொருளின் திருவடி என்பது உச்சபட்ச ஞானப் பேரொளியான பேரறிவு. அது விளங்கும் தலை உச்சியிலுள்ள சகஸ்ரார சக்கரம் (தி மாஸ்டர் ஆப் கிளாண்ட்- அதாவது பிட்யூட்டரி) (ஏப்ஹய்க்) சக்கரம் என்பதை நமது பகுத்தறிவைப் பயன்படுத்தினால் மட்டுமே, புரிந்துகொள்ளமுடியும். அதன் மீது பக்திகொள்ளமுடியும். அதனால் மூடநம்பிக்கையை தகர்த்தெறிய முடியும் அப்போது பகுத்தறிவில் உயர்ந்து சிறந்து பண்பாளராகவும், நற்குணம் உள்ளவராகவும், ஈகையில் உயர்ந்தவராகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும், எல்லா உயிர்களையும் நேசிக்கத் தெரிந்தவராகவும் விளங்கமுடியும். இதுவே ஜீவகாருண்ய ஒழுக்கம். இதனையே திருமந்திரம் இனிமையாக விளக்குகிறது.

"ஒன்றும் இரண்டும் ஒடுங்கிய காலத்து

நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்

வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்

சென்று வணங்குந் திருவுடை யோரே.'

ஒன்றையும் இரண்டையும் சேர்த்தால் அது மூன்றாகும். இந்த மூன்றும் எதுவென் றால் மனம், மொழி (சொல்), மெய் (உடல்) என்ற மூன்றாகும். இம்மூன்றும் தன்வசமாகி நலமுடன் இருந்து, நல்ல வார்த்தைகள் பேசினாலும், எல்லா உலகங்களையும், உயிர்களையும் வென்று விளங்கும் சிவப்பரம் பொருளையே சிந்தை செய்பவர்களே திருவருட்செல்வத்தைப் பெற்ற- மனம், மொழி, மெய் அடங்கக் கற்ற மேலோர் ஆவார்கள். இதுவே உச்ச பட்ச ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.

எனவே பக்தி என்ற பெயரில் பிறரை ஏமாற்றும் செயல்களை விட்டுவிட்டு, எல்லா உயிர்களுக்கும் அன்பு செலுத்தும் உண்மையான பக்தி செய்வோம்; உலக நாதனின் உண்மை அன்புக்கு சொந்தக்காரர் களாக மாறுவோம்.