இரண்டாம் பாகம்
சபதம் செய்த விஸ்வாமித்திரர் அதை நிறைவேற்ற ஒரு புதிய வேள்விக்குத் தயாரானார். அந்த வேள்வியின் நோக்கமே திரிசங்கு தன் சொந்த உடலோடு சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே! ஆனால் அந்த வேள்வியில் பங்குகொள்ள ஏனைய ரிஷிகளும், அந்தணர்களும் தயாராக இல்லை.
"ஒரு சண்டாளனாகிய திரிசங்கு வுக்கு சொர்க்கத்தில் அவனது பூதவுட லோடு இடமளிப்பது இயற்கைக்கு எதிரானது. அது கூடவும் கூடாது' என்று விஸ்வாமித்திரரிடம் கூறிய தோடு, "அவர் எத்தனைதான் உயரிய சன்மானங்களைத் தந்தாலும் அதை ஏற்கமுடியாது; அது ஈஸ்வர துரோகம்' என்றும் கூறிவிட்டனர்.
இவ்வாறு எல்லாரும் கூறியதைக் கேட்டதும் விஸ்வாமித்திரர் கொந்த ளிக்கத் தொடங்கினார். அவர்கள் இப்படிக் கூறுவதன் பின்னணியில் வசிஷ்டர் இருப்பதாகக் கருதினார். எனவே வெகுண்ட விஸ்வாமித்திரர் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.
இறுதியாக தன் வசம் இருக்கும் காயத்ரி உபாசனை சக்தியைப் பணயம் வைத்தாவது திரிசங்குவை சொர்க்கம் அனுப்புவது என்று முடிவு செய்தார். அவர் அப்படி சொன்னதுமே எல்லா ரும் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக திரிசங்குவே இதை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. திரிசங்கு மட்டுமல்ல... தேவலோகத்து இந்திரனும் அதிர்ந்தான். விஸ்வாமித்திரரின் விடாமுயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்காக அவர்முன் பிரசன்னமானவன், ""மகரிஷி... இது என்ன விநோதப் போட்டி...? இது வரும் காலத்துக்கு நல்லதல்ல. ஒரு தேவலோகம், ஒரு சொர்க்கம், ஒரு நரகம்- இவையே பரம்பொருளின் தீர்வு. இது தாங்கள் அறியாததா?'' என்று கேட்டான்.
""இந்திரா... தன் பூதவுடலோடு வரும் திரிசங்குவை நீ ஏற்பாயா மாட்டாயா?
அதை மட்டும் சொல்...'' என்றார். ""ஏற்க முடியாது'' என்று இந்திரன் கூறிய அன்றிரவே இன்னொரு வேள்விக்குத் தயாரான விஸ்வாமித்திரர், தன் தவசக்தி அவ்வளவையும் பணயம் வைத்து திரி சங்குவை சொர்க்கம் செல்லப்பணித்தார். இப்படி திரிசங்கு சொர்க்கம் நோக்கி செல்லத் தொடங்கவும், சொர்க்க வாயிலில் நின்று இந்திராதி தேவர்கள் தடுத்து நிறுத்தியதோடு அவனை சொர்க்கத்திலிருந்து பூமி நோக்கித் தள்ளிவிட்டனர்.
திரிசங்கு கீழே விழலானான்!
அதுவும் புலம்பியபடியே...
""விஸ்வாமித்திரரே! விஸ்வாமித்திரரே! என்னை இந்திரன் தள்ளிவிட்டான்'' என்று கதறினான்.
அதற்கேற்ப விஸ்வாமித்திரரும் அவனை நடுவானில் தலைகீழாக நிற்கச் செய்தார். அவன் அருகிலேயே ஒரு புதிய சொர்க்கத்தை உருவாக்க முனைந்தார். இம்முறை இந்திரனும் ஒரு முடிவுக்கு வந்தவனாக விஸ்வாமித்திரரிடம் மன்னிப்பு கோரி திரிசங்குவுக்கு சொர்க்கத்தில் இடமளிக்க சம்மதித்தான். அதேசமயம், ""பூதவுடலோடு அனு மதிக்க மாட்டேன்- நான் அளிக்கப்போகும் சுவேதவு-லோடுதான் சொர்க்கம் வரமுடியும்'' என்றவன் அதற்கேற்ப சுவேத உடம்பை (ஆவி) அளித்தான்.
திரிசங்குவும் சொர்க்கம் புகுந்தான். இந்திரனும் விஸ்வாமித்திரரின் திறமையை அறிந்து அவரோடு மோதுவதைத் தவிர்த்தான்.
ஒருவழியாக திரிசங்குவுக்கு தான் அளித்த வாக்கை விஸ்வாமித்திரர் நிறைவேற்றிவிட்டார். இவ்வேளையில்தான் திரிசங்கு இடத்திற்கு அவன் புதல்வனும், தற்போதைய அரசனுமான அரிச் சந்திரன் பட்டத்திற்கு வந்தான். அப்படி பட்டத் துக்கு வந்த அரிச்சந்திரன் தன் மனைவியுடன் நேரிய முறையில் அரசாளவும் செய்தான். ஆனால் அவனுக்கொரு பிள்ளை பிறப் பதில்தான் சிக்கல் ஏற்பட்டது.
எனவே அரிச்சந்திரன் குலகுருவான வசிஷ்டரிடம் ஆலோசித்தான். வசிஷ்டரும் அவனை வருணனைப் பூஜிக்கும்படி கூறினார். வருணனும் அரிச்சந்திரனுக்கு வரமளிக்கத் தயாரானான். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தான். அதன்படி அரிச்சந்திரன் எப்போது வேள்வி செய்தாலும் அந்த வேள்வியின் யாகப் பசுவாக பிள்ளையைத் தனக்கே தந்துவிட வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இந்த நிபந்தனை அரிச்சந்திரன் மனைவி சந்திரமதிக்குத் தெரியாது. அரிச்சந்திரனும் பிள்ளை பிறந்து தான் ஒரு ஆண்மகன் என்பது நிரூபணமானால் போதும் என்று சம்மதித்தான். அரிச்சந்திர னுக்கு லோகிதாசன் என்று ஒரு மகனும் பிறந்தான்...'' என்கிற அளவில் வியாசர் ஜெனமேஜெயன் முன்னால் கதையைக் கூறி நிறுத்திவிட்டு அவனை உற்று நோக்கினார்.
ஜெனமேஜெயனோ மலைத்துப் போயிருந்தான்.
""என்ன ஜெனமேஜெயா... தலையைச் சுற்றுகிறதா?''
""ஆம் மகரிஷி! விஸ்வா மித்திரரின் விடாமுயற்சி எப்படியோ பலித்துவிட்டது. திரிசங்குவும் சொர்க்கம் சென்றுவிட்டான். ஆனாலும் திரிசங்கு மகன் அரிச்சந்திரன் புத்திரப்பேறின்றி அவதிப் பட்டதும், அதற்கு வருணனி டம் வரம் கேட்கும்படி வசிஷ்டர் கூறியதும் எதனால்?
வருணனும் எதற்கு தான் அளிக்கும் புத்திர பாக்கியத்தை இப்படித் திரும்பக் கேட்கிறான்?
இதற்கு கொடுக்காமலே இருந்து விடலாமே? எதனால் அயோத்தி நாட்டு சூரிய குலத்தவருக்கு இத்தனை சோதனைகள்?''
""ஒரே காரணம்தான்... விஸ்வாமித்திரர் பேச்சைக் கேட்டு விதிகளைமீறி வாழ நினைத் ததுதான் காரணம். அந்த தவறை திரிசங்கு செய்தான்... அதன் எதிரொலியாக திரிசங்கு மகன் அரிச்சந்திரன் அவதிப் பட்டான்... பிள்ளைப்பேற்றுக்கே சிரமம் எனும்போது சொர்க்கத்தை எல்லாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாதல்லவா? அடுத்து வாக்குத்தவறாமை என்பது மிக முக்கியம். அதிலும் அரசர்களுக்கு வாக்கு மிகமிக முக்கியம். எனவே அரிச்சந்திரனை சோதிக்கவே வருணன் இவ்வாறு கூறினான்.''
""நல்லது மகரிஷி... அரிச்சந்திரன்
அதன்பிறகு தன் மகன் லோகிதாசனை யாகப் பசுவாக்கி வேள்வித்தீயில் ஆஹுதியாக அளித்தானா?''
""அரிச்சந்திரன் அவ்வாறு செய்யத் தயாரானான். ஆனால் அவன் மகன் லோகிதாசன் அதற்கு சம்மதிக்க மறுத்து நாட்டைவிட்டே ஓடிவிட்டான்.''
""அடடா... இது என்ன வினோதம்?''
""ஆம் வினோதமேதான்... வாழ்வே ஒரு ஒரு வினோதம்தானே?''
""இப்படிச் சொன்னால் எப்படி மகரிஷி? அரிச்சந்திர பிரபு என்பவர் வாய்மை தவறாத வர்- மிக நேர்மையானவர் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன்.''
""உண்மைதான். தங்கத்தை ஆபரணமாக்க வேண்டுமென்றால் அதை நெருப்பிலிட்டுச் சுட்டு வளைத்து, பிறகு தட்டியும் செதுக்கியும்தான் ஆபரண மாக்குவர். அதுபோல் தான் அரிச்சந்திரனுக்கும் சோதனைகள் நிகழத் தொடங்கின.''
""அவர் அருணனுக்கு என்ன பதில் கூறினார்?''
""என்ன செய்ய முடியும்.... மௌனமாக கண்ணீர் சிந்தினான்.''
""வருணதேவன் ஏதும் செய்யவில்லையா?''
""வருணன் கோபித்தான். ஜலோதரம் என்னும் கொடிய வியாதி அரிச்சந்திரனுக்கு ஏற்பட்டு அவன் துன்பப்படும்படி செய்தான்....''
""கொடுமையே!''
""கொடுமையேதான்... எல்லாம் திரிசங்கு விடம் தொடங்குகிறது. யாருக்கும் வரக் கூடாத ஆசை வந்ததன் வினை. அதன் விளைவு விஸ்வாமித்திரரின் வீம்பு... அதன் எதிரொலி இப்போது வருணன் கோபம்...''
""சரி... ஜலோதரம் வந்து பாதிக்கப் பட்ட அரிச்சந்திரன் அடுத்து என்ன செய்தான்?''
""குலகுருவான வசிஷ்டரிடம் அரிச்சந்திரன் மனம் வருந்திப்பேசி, ஜலோதரத்தில் இருந்து விடுபட வழிகேட்டான்...
வசிஷ்டரும் வருணனை திருப்தி செய்திட ஒரு யாகத்தைத் தொடங்கினார். அதில் லோகிதாசனுக்கு பதிலாக அரிச்சந்திரன் ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து அந்த பிள்ளையை பலி கொடுத்து அரிச் சந்திரனைக் காப்பாற்றத் தயாரானார்.''
""இது அதைவிடக் கொடுமை அல்லவா?''
""கொடுமைதான். தேவர்களுக்கு வாக்களித்துவிட்டு அதில் தவறினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்கு இந்தச் சம்பவங்கள் ஒரு உதாரணம்!''
""சரி... தத்துப்பிள்ளை கிடைத்தானா?''
""ஏன் கிடைக்காமல்? எவ்வளவோ ஏழை பிராம்மணர்கள் ஏராள மான பிள்ளைகளைப் பெற்றுவிட்டுக் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கி றார்களே... அவர்களில் ஒருவர்தான் அஜுகர்த்தன் என்பவர். இவர் மகன் கனச்சேபன் என்பவன். அந்த கனச்சேபனை யாகப் பசுவாக பலி கொடுக்க வேள்வியும் தொடங்கியது.
அந்த பிள்ளையோ தான் தீயில் விழுந்து மாளப்போவதையறிந்து கண்ணீர்விட்டுக் கதறினான். இந்த அழுகுரல் யாருக் குக் கேட்டதோ கேட்கவில்லையோ? விஸ்வாமித்திரருக்குக் கேட்டுவிட்டது. விஸ்வாமித்திரர் யாகத்தைத் தடுத்து அனைவரையும் கோபத்தோடு பார்த்தார். அரிச்சந்திரன் அவர்முன் மன்றாடத் தொடங்கினான். ஆனால் விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனைப் பொருட்படுத்தவில்லை. மாறாக கனச்சேபனைக் காப்பாற்ற விரும்பி, ""எந்த வருணனுக்கு உன்னை பலியாகத்தர இந்த வேள்வி நடக்கிறதோ, அந்த வருணனுக்கு இது தெரியவேண்டும். இவர்கள் முந்தும்முன் நீ முந்திக்கொள். வருணனுக்கான காயத்ரியை நான் உனக்கு இப்போது உபதேசிக்கிறேன். நீ அதைச் சொல்லி வருணனை அழைத்து அவனிடமே உன் இழிநிலையைக் கூறு'' என்று அங்கேயே அப்போதே வருண காயத்ரியை கனச் சேபன் காதில் ஓதிட, கனச்சேபனும் அதை உருக்கமாய் ஓதியபடி தீப்பாய முயலவும், வருணன் வந்து தடுத்தாட்கொண்டான். பின் அவனை விடுவித்து அரிச்சந்திரனின் நோயையும் விலக்கி னான்.''
""அருமை... விஸ்வாமித்திரர் இந்த இடத்தில் மிக புத்திசாலித்தனமாய் நடந்துகொண்டு அனைவரையும் காப்பாற்றிவிட்டார்.''
""ஆம்... ஆனால் இங்கே புதிதாய் ஒரு சிக்கல் ஏற்பட்டது?''
""திரும்பவும் சிக்கலா?''
""ஆம்... கனச்சேபன்தான் அந்த சிக்கல்! அவன் அங்கே கூடியிருந்தோரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டான்...''
""இது என்ன விந்தை... இனி கேட்க என்ன இருக்கிறது?''
""ஏன் இல்லை? அவன் இனி யார் பிள்ளை? "தத்தெடுத்துக்கொண்ட அரிச் சந்திரன் பிள்ளையா? இல்லை பெற்றெடுத்த பிராம்மணனான அஜுகர்த்தன் பிள்ளையா? இல்லை என்னைக் காப்பாற்றி உயிர்ப்பிச்சையளித்த வருணனின் பிள்ளையா? அதுவுமில்லை எனக்கு மந்திரோபதேசம் செய்து அனைத்தும் நலமாய் முடியக் காரணமான விஸ்வா மித்திரரின் பிள்ளையா நான்?' என்று கேட்டான்.''
""எதறகாக இப்படிக் கேட்டான் அவன்?''
""அவன் இப்படி ஒரு சோதனையை எதிர்பார்க்கவில்லை. அந்த சோதனையில் தன்னைக் காப்பாற்றிய விஸ்வாமித்திரருக்கு நன்றி காட்டவே இப்படி கேட்டான்.''
""எப்படி?''
""முழுவதுமாகக் கேள். நீதி சாஸ்திரப்படி அன்னமிட்டவன், கல்வி கற்பித்தவன், பொருள் தந்தவன், பயத்தை நீக்கியவன் மற்றும் பெற்றெடுத்தவன் ஆகிய ஐவருமே ஒருவனுக்கு தந்தையாவார்கள்! அந்த வகையில் பார்த்தால் இவன் ஐவருக்குமே மகனாகிறான். ஆனால் ஒருவருக்கே இவன் பாசம் காட்டமுடியும். அதனால்தான் இப்படி கேட்டான்.''
""முடிவு என்னாயிற்று?''
""நல்ல முடிவுதான் ஏற்பட்டது. வசிஷ்டரே அந்த முடிவைக் கூறினார். பெற்றாலும் விற்று விட்டதால் பெற்றவன் முழு தகப்பனில்லை. வருணன் கருணை மட்டுமே காட்டி னான், அரிச்சந்திரனும் விலைக்கு வாங்கி யாகப் பசுவாக்கவே எண்ணினான். எனவே இவனும் சரியில்லை. இவர்களில் தன்னல மின்றி செயல்பட்டது விஸ்வாமித்திரரே! எனவே இவரின் பிள்ளையே இனி இந்த கனச்சேபன் என்று அறிவித்தார் வசிஷ்டர்!
விஸ்வாமித்திரரும் கனச்சேபனை அழைத்துக்கொண்டு- அதேசமயம், "திரும்ப வருவேன். எனக்கு இங்கே நிறைய கணக்குகள் பாக்கி உள்ளன!' என்று கூறிச்சென்றார்.''
(தொடரும்)