மகாளய அமாவாசை 6-10-2021
பிரதமை முதல் அமாவாசை வரை திதிகள் 15. இதில் அமாவாசை திதி முக்கியமானது. அன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைவதால் பூமிக்கு ஒரு காந்தசக்தி ஏற்படும். மற்ற திதிகளில் ஏதாவதொன்று, இரண்டு கிரகங்கள் திதி சூன்யமடையும். ஆனால் அமாவாசையன்று எந்த கிரகமும் சூன்யமடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களைத் தொடங்கினால் அது வெற்றிபெறும். ராகு- கேது மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அமாவாசையன்று பரிகாரம் செய்தால் சிறப் பான பலன் கிடைக்கும்; முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
அமாவாசையன்று சூரிய கலையும், சந்திர கலையும் சேர்வதால் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால்தான் அந்தநாளில் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனர். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்கின்றனர்.
அமாவாசை நாளில் ஜீவசமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள், அதிஷ்டான பூஜைகளை அமாவாசையன்றுதான் நடத்துகின்றனர்.
சில சடங்குகளுக்கும், சில பூஜைமுறைகளுக்கும் அமாவாசை சிறந்தது.
அதில் ஒன்றுதான் பித்ரு தர்ப்பணம்.
இறைவனடி சேர்ந்த முன்னோர்கள், பெற்றோர்களின் ஆசிவேண்டி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாளான அமாவாசையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை மிகவும் சிறப்புடையது.
பித்ரு லோகமென்பது சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும் வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர். மறைந்த முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு சந்திரனின் ஒளிக்கதிரிலுள்ள அமிர்தம்தான் உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கதிர்கள் ஆன்மாக்களுக்குக் கிடைக்காது. அதனால் அந்த நாளில் பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக இருக்கும். உணவுக்கு திண்டாடும் பசி தாங்கமுடியாத ஆன்மாக்கள் தங்களது ரத்த சம்பந்தமுடையவர்களின் வீடுகளுக்குச் சென்று, நீர்நிலை, வாசலில் நின்று, படையல், தர்ப்பணம்மூலம் கிடைக்கும் உணவை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அவர்களின் பசியைப் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்யவேண்டும். இதனால் மூதாதையர்களின் பசியும் தாகமும் விலகி சந்ததியரை வாழ்த்துவார்கள்.
அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடுசெய்து அவர்களின் பசியைப் போக்காமலிருந்தால், பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர். வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடைசெய்யும் வலிமைகொண்டது. கடவுளின் வரங்களையே தடைசெய்யும் ஆற்றல் கொண்டவர்கள் பித்ருக்கள். எனவே அவர்களின் கோபத்திற்கோ சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது.
ஒரு ஜாதகத்திலுள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையான தோஷம் பிதுர்தோஷம். இந்த தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மணவாழ்க்கை மற்றும் குழந்தை போன்ற வற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. பிதுர்தோஷம் நீங்காமல் மற்ற எந்த பரிகாரங்கள் செய்தாலும் பலன் தருவதில்லை.
எத்தகைய மந்திர ஜபங்களும் சித்தியடைவதில்லை. இதற்குக் காரணம் பித்ருக்களின் சாபம்தான். பிதுர்தோஷம் உள்ளவர்களின் ஜாதகம், பிதுர்தோஷம் நீங்கிய பின்புதான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும்வரையில் ஜாதகத்திலுள்ள எந்தவொரு யோகமும் தன்னுடைய பலனைத் தராது. மாறாக வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். தோஷம் நீங்கியபின்னரே வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்.
புரட்டாசி அமாவாசையன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று இறந்த தாய்- தந்தை, முன்னோர்களை நினைத்து பித்ருக்கள் வழிபாடு, பூஜை, திதி, தர்ப்பணம் செய்யலாம். தமிழ்நாட்டில் இராமேஸ்வரம், தேவிபட்டினம், திருச் செந்தூர், வேதாரண்யம், திருவையாறு, கொடுமுடி, பவானி கூடுதுறை, தாமிரபரணி போன்ற இடங்களும்; வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம், கயா போன்ற இடங்களும் திதி கொடுப்பதற்கு சிறப்பான தலங்களாகக் கருதப்படுகின்றன. இறந்தநாள், திதி தெரியாதவர்களும், மாதாந்திர அமாவாசையன்று திதி கொடுக்க முடியாதவர் களும் மகாளய அமாவாசை தினத்தில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம். இந்நாளில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தைத் தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்களது பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்திப்பேறு கிடைக்கும்.
நாம் முன்னோர்களுக்குச் செய்யும் திதிப் பலன்களை நம்மிடமிருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அதனாலேயே சூரியனை பிதுர்காரகன் என்கிறோம். அதனால் அன்று சூரிய வழிபாடு செய்வது மிக அவசியம்.
அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும்போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின்போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீர்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.
மனிதர்களுக்கு அன்னமிடுபவள் அன்னபூரணி. ஆன்மாக்களுக்கு அன்னமிடுபவள் ஸ்வதா தேவி. நமது முன்னோர் களின் ஆன்மாக்களை நினைத்துக் கொடுக்கும் அன்னம் மற்றும் யாகத்தில் இடும் ஆகுதிகளை ஸ்வதா தேவிதான் ஆன்மாக்களுக்கு சேர்ப்பிக்கிறாள்.
அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவர்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்யவேண்டும். அவரவர் வசதிக்கேற்ப அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமா கவோ, இட்லியாகவோ இருக்கலாம்.
ஆனால் எள்ளுச் சட்னி அல்லது எள்ளுருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எதுவும் செய்யமுடியாமல் இருப்பவர்கள் ஒரு பசுமாட்டிற்கு ஒன்பது வாழைப் பழங்கள் கொடுக்கவேண்டும். இதற்கு சாதி, மதம், இனம் என்ற வேறுபாடில்லை.
அமாவாசையன்று காலை ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்கவேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப் பணத்துக்குப் பொருந்தாது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி தர்ப்பணம் செய்வது அவசியம். பின்னர் வீட்டிற்குத் திரும்பிவந்து மறைந்த முன்னோர் களின் படத்தைத் தூய்மை செய்து, சந்தனம், குங்குமமிட்டு துளசிமாலை சாற்றவேண்டும். முன்னோர்கள் பயன் படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கேற்ற வேண்டும். முன்னோர்களுக் குப் பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகை களைப் படைக்கவேண்டும். தலைவாழை இலையில் படையல்போட்டு வணங்க வேண்டும்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்துவிட்டு, தர்ப் பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்யவேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை நாட்களில் அசைவ உணவு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து பின்னரே நாம் உணவருந்த வேண்டும். கோதுமைத் தவிடு, அகத்திக் கீரை போன்றவற்றைப் பசுவுக்கு வழங்க வேண்டும்.
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சூரியன் ஒரு ராசிக்குள் பிரவேசிக்கிறார். ராசிச் சக்கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர் பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், பித்ருக்கள் விடுதலையாகி தங்கள் உறவு களை நாடி வீடுகளுக்கு வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையிலிருந்து அமாவாசை வரையான 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, "மகாளய பட்சம்' என்பர். "பட்சம்' என்றால் 15 நாட்கள் என்று பொருள். மகாளயம் என்றால் கூட்ட மாக வருதல். மறைந்த முன்னோர்கள் மொத்தமாகக் கூடும் காலமான 15 நாட்களே மகாளய பட்சம். (சில சமயங்களில் 16-ஆக மாறுபடும்). நம் முன்னோர்கள் அனைவரும் கூட்டமாக வந்து நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்.
இந்த நாட்களில் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்.
மூன்று தலைமுறை தந்தைவழி, தாய்வழி முன்னோரையும் நினைத்து தீர்த்தக்கரைகளுக்குச் சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக வழிபாடு செய்யவேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து உதவலாம்.
வீடுகளில் பெரியவர்கள் இறந்தால் அவர்களின் பெயர் மற்றும் இறந்த நாட்களை டைரியில் குறித்துவைத்து, நம் தலைமுறை யினருக்கு எதிர்கால திதி, தர்ப்பணம், சிரார்த் தத்திற்கு உதவவேண்டும்.
நமது சிறிய வயதில், வீடுகளில் மறைந்த பெரியவர்களின் படங்களில் தோற்றம், மறைவு, பெயர் எழுதி வரிசையாக வைத்திருப்ப தைப் பார்த்திருக்கிறோம். அதற்குக் காரணம் அவர்களுடைய திதி, வழிபாட்டு முறையை மறக்கக்கூடாது என்பதால்தான். இப்பொழுது பலரும் அதை மறந்துவிட்டனர்.
ஸ்ரீ பிலவ வருட புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சம் புரட்டாசி 5-ஆம் நாள் ஆரம்பித்து 20-ஆம் நாள் முடிவடைகிறது. ஆங்கிலத் தேதி செப்டம்பர் 21-ல் ஆரம்பமாகி அக்டோபர் 6-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
பிதுர் வழிபாட்டுக்கு மிகச் சிறப்புவாய்ந்த நாளான மகாளய அமாவாசையில் (6-10-2021) செய்யப்படும் பிதுர்பூஜை மற்ற எல்லா அமாவாசை நாட்களைக் காட்டிலும் அதிக பலன் தரும். ஒரு வருட திதி, தர்ப்பணம் செய்த பலன், முன்னோர் ஆசி கிடைக்கும்.
எனவே, மகாளய அமாவாசை என்னும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் இருந்தால் புண்ணியப் பலன் நம் தலை முறைக்கு வந்துசேரும். பித்ருபூஜை செய்யாமல் என்னதான் கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாகப் பலன்கள் கிடைக்காது.
ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை- பரிகாரங்களைச் செய்பவர்கள்தான் பித்ரு கடமையில் அவ்வள வாக ஈடுபாடு காட்டாமல் தொடர் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். முறையான பித்ருபூஜை செய்தால் ஜாதகத்திலுள்ள எல்லா தோஷங் களையும் சரி செய்யும்.
நமது குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று குடும்பத்தார்கள் பிண்டம் செய்துவைத்துப் படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும் செய்துவந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.
முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்யவேண்டும். தந்தை இல்லாதவர்கள் மட்டும் திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்யவேண்டும். மற்றவர்கள் படையலிட்டு வழிபாடு செய்யலாம். வெளிநாட்டில் இருப்ப வர்கள் வீட்டின் அருகிலுள்ள கோவிலில் தர்ப்பணம் செய்யலாம். பெண்கள், ஆண் வாரிசு இல்லாதவர்கள் முன்னோர்களின் ஆத்மசாந்திக்காக இறைவனை ஆத்மார்த்த மாக வழிபட்டால் பலன் கிடைக்கும்.