ஆற்றங்கரை நாகரிகம் பழைய உலக நாகரிகங் கள் யாவுமே ஆற்றங்கரையோரங் களிலேயே உருவாகியிருந்தன. எடுத்துக்காட்டாக, எகிப்திய நாகரிகம் நைல் ஆற்றையும், மெசபடோமிய நாகரிகம் டைக்ரீஸ்லி யூப்ரடிஸ் ஆற்றையும் அருகிற்கொண்டே அமைந்திருந்தன. இந்த வகையிலேயே சிந்துவெளி நாகரிகமும் சிந்து ஆற்றங் கரையில் அமைந்திருந்தது.
வேட்டைத் தொழிலிலும், உணவு சேகரித்தலிலும் வாழ்ந்திருந்த மனிதன், படிப்படியாக ஓரிடத் தில் தங்கியிருந்து பயிர் செய்கையில் ஈடுபட்டபோதே நாகரிகங்கள் தோன்றின. இத்தகைய பயிர்த் தொழிலுக்கு நீர் தேவை. அதற்காகத் தங்கள் இருப் பிடங்களை ஆற்றங்கரைகளில் அமைத்துக் கொண்டார்கள். இவ்வாறு உழவுத் தொழிலில் ஈடுபடும்போதே நகரங்களும், அதனையொட்டி நாகரிகங்களும் பிறந்தன.
உலகின் பெரும்பான்மையான நாகரிகங்கள் வற்றாத ஆற்றங்கரையோரங்களிலேயே தோன்றின. இதற்கு மாறாக, சிந்துவெளி நாகரிகமானது ஆண்டு முழுவதும் நீர் ஓடும் ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருக்கவில்லை எனப் புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.
கோடையில் வற்றும் ஆற்றங்கரையோரத்திலேயே வைகைக்கரை நாகரிகமான கீழடியும் அமைந்திருக்கிறது. இவ்வாறு ஆண்டிற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் மட்டுமே நீர் கிடைக்கும் ஆற்றங்கரையில் ஒரு நாகரிகம் அமைந்திருக்குமாயின், அந்த நாகரிக மக்கள் நீர் மேலாண்மையில் மிகவும் சிறப்புடையவர்களாக இருந்திருக்கவேண்டும்.
நாகரிகத்தில் முன்னேறிய மக்கள் பல ஆலயங்களை உருவாக்கினார்கள்.
அவ்வாலயங்கள் பக்தி செய்வதற்காக மட்டுமின்றி, கல்வி, கலை முன்னேற்றங்களுக்காகவும் அமைத்தனர். அந்தவகையில் நமது நாகரிகத்தில் ஆலயங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன.
செவலபுரை அகத்தீஸ்வரர் ஆலயம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து வடமேற்கு திசையில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செவலபுரை கிராமம். இங்குதான் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அகத்தீஸ்வரர் கோவில் வராக நதியின் வட புறத்தில், கிராமத்தின் ஈசானிய பாகத்தில் அமைந்துள்ளது.
அகத்திய முனிவர், சிவபெருமானை வழிபட்ட தலங்களில் அமைந்துள்ள இறைவனை "அகத்தீஸ்வரர்' என்று அழைப்பது மரபு. இந்தத் தலத்திலும் அகத்தியர் தங்கியிருந்து சிவபெருமானை வழிபட்டதாகத் தலவரலாறு சொல்கிறது.
திருக்கோவிலில் நுழைந்ததும் தெற்கு நோக்கி அமர்ந்து காட்சிகொடுக்கும் நிர்விக்ன கணபதியை தரிசனம் செய்யலாம். அகத்தீஸ்வரர் இங்கு சுயம்பு மூர்த்தியாக லிங்கத் திருமேனியோடு அருள்பாலிக்கிறார். அன்னையின் திருநாமம் பிரகன்நாயகி. அற்புத லிங்கத் திருமேனியையும், எழிலோடு காட்சிகொடுக்கும் பிரகன்நாயகியையும் கண்டு வழிபட பேரானந்தம் பிறக்கும்.
பிராகாரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நவகிரக சந்நிதிகளும் காணப் படுகின்றன. ஆலயத்தின் எதிரில் கிழக்குத் திசையில் திருக்குளமும், கல்லாலான முப்பதடி உயர தீப ஸ்தம்பமும் காணப்படுகின்றன.
வராகநதி வரலாறு
அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஜோதிப் பிழம்பாக ஈசன் தோன்றியபோது, அவரின் திருமுடியைக் காண பிரம்மனும், திருவடியைக் காண திருமாலும் முயன்றனர்.
அப்போது திருமால், வராக (பன்றி) வடிவமெடுத்து பூமியைக் குடைந்தபோது உருவானதே "வராக நதி' எனக் கருதப்படுகிறது.
இந்த வராக நதி செஞ்சியை வந்தடையும் போது "சங்கராபரணி' எனப் பெயர் மாற்றம் பெறுகிறது.
கோவில் விழாக்களும் பலன்களும்
இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமண வரம் வாய்க்கும்; குழந்தை பாக்கியம் கிட்டும்; நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தின் தல விருட்சமாக சரக்கொன்றை திகழ்கிறது.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா அபிஷேக ஆராதனையோடு சிறப்பாகக் கொண்டாடப்படும். விஜயதசமியன்று சுவாமி திருவீதிவுலா காண்பார். இங்கு, பிரதோஷம், விசேஷ நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழாவின்போது, கோவிலின் முகப்பிலிருக்கும் தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டு கோலாகலமாக வழிபாடு செய்யப்படும்.
கல்வெட்டுகளில் செவலபுரை
பேராசிரியர்கள் ரமேஷ், ரங்கநாதன் மற்றும் ஜோதிபிரகாஷ் குழுவினர் இங்கு கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளனர். இவை, பாண்டியர்கள் காலம் மற்றும் சம்பு வராயர்கள் காலத்தைச் சேர்ந்தவை.
"இங்கு கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு கால கல்வெட்டு களை ஆய்வு செய்தோம். அவற்றில் ஒன்று ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில் கி.பி.1312-ல் பொறிக்கப்பட்டது. செவலபுரை எனத் தற்போது அழைக்கப்படும் இந்த ஊரின் பெயர் "ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து சிங்கப்புர நாட்டு செவ்வலப்புரையூர்' என அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழர்களின் ஆட்சிக்குப் பிறகு இப்பகுதி யில் பாண்டியர்கள் ஆட்சி ஏற்பட்டதையும், ஆலயத்தின் பெயர் அக்காலத்தில் "அகத்தீஸ் வரமுடைய நாயனார்' என அழைக்கப் பட்டதும் தெளிவாகப் பொறிக்கப்பட் டுள்ளது. மேலும், இந்தக் கோவிலுக்கு இவ்வூரி லுள்ள நன்செய், புன்செய் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் விதிக்கப் பட்ட வரிகளான மரவடை, குளவடை, செக்கிறை, தட்டார்பாட்டம், தட்டொலி, புறவடை மற்றும் தறியிறை போன்ற வரிகள் விதிக்கப்பட்டதையும், அவை யனைத்தும் கோவிலுக்கே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிவன் ஆலயத்துக்காக வழங்கப்பட்ட நிலம் "திருநாமத்துக்காணி' என்ற பெயரில் அளிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெருமாள் கோவிலுக்கு "நாலுமா' நிலம் இருந்துள் ளது. அது "திருவிடையாட்டம்' என வழங்கப் பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்துப் பெருமாள் கோவிலில் கல்வெட்டுகள் ஏதுமில்லை.
இவ்விதமான கொடையை செஞ்சி மலைப்பற்றைச் சேர்ந்த ஜெயங்கொண்ட சோழ பிரமராயன் மற்றும் அகம்படி வேளான், காட்டுப்பள்ளி வேளான் ஆகியோர் தானத் துக்கு கையொப்பமிட்டுள்ளனர். இந்தச் சிவாலயத்துக்கு வடக்கு திசையிலுள்ள வயல்வெளிப் பகுதியில் மற்றுமொரு தனிக் கல்வெட்டு இருப்பதை இவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
இக்கல்வெட்டு "ராசநாராயணன் திருமல்லிநாதன் சம்புவராயன்' காலத்தைச் சேர்ந்தது. கி.பி.1356-ல் "சோணாடு கொண்டான் திருவீதி' என்ற பெயரில் "அஞ்சினான் புகலிடம்' ஏற்படுத்தி, அதை திருநாமத்துக் காணிக்கையாக வழங்கினான் என்பதைக் குறிப்பிடுகிறது. அதாவது, போர் நிகழும் காலங்களில் போருக்கு அஞ்சித் தஞ்சமடைவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் இருக்கும் அகதிகள் முகாம்போல இதைக் கருதலாம்.
இவ்வாறு, இங்கு பாதுகாப்புத் தேடி வருபவர்கள் இங்கு தங்குவதற்கு வரி செலுத்தவேண்டும். அவ்வாறாகப் பெறப் பட்ட வரிகளும் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது என்பதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
"சோணாடு கொண்டான்' என்பதற்கு "சோழ நாட்டை வெற்றிகொண்டான்' என்பது பொருளாகும். எனவே, இந்தச் சிறப்புப் பெயரின் அடிப்படையில் அஞ்சினான் புகலிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டு இருக்குமிடம் தற்போது கோவிலுக்குச் சொந்தமான பகுதியாகவே உள்ளது. இதுபோன்ற அஞ்சினான் புகலிடம் கல்வெட்டு இம்மாவட்டத்தில் ஜம்பை போன்ற பகுதியிலும் ஏற்கெனவே கிடைத் திருக்கிறது.
இதை வைத்துப் பார்த்தால் இப்பகுதிகள் அக்காலத்தில் எல்லைப் பகுதிகளாகவே இருந்திருக்கின்றன. எனவேதான் இங்கு, பல பகுதிகள் அஞ்சினான் புகலிடமாக ஆக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் கல்வெட்டுமூலம் பாண்டியர்கள் கால ஆட்சி இப்பகுதியில் பரவியதையும், சம்புவராயர்கள் ஆட்சிக் காலத்தில் இவ்வூரில் அகதிகள் பாதுகாப்பு முகாம் இருந்ததையும் அறியமுடிகிறது. மேலும், இங்கு 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவர் கால "ஜேஷ்டா தேவி' சிற்பம் ஒன்றும் பராமரிப்பின்றித் திறந்தவெளியில் உள்ளது. அதையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.
குறிப்பு: பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததும், வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷேகம், 15-9-2024 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பாக நடைபெறவுள்ளது.