யானைகளுக்கு 70 வகை காரணப் பெயர்களைச் சூட்டி ஆதித் தமிழர்கள் அழைத்துவந்ததை கடந்த அத்தியாயத்தில் விவரித்திருந் தோம். சங்ககாலப் பாண்டியர்களின் போர்ப்படையில், முதல் வரிசையில் யானைப் படைகள்தான் செல்லும். சேரர்கள் இமயம்வரை வெற்றி வாகை சூடியது, தமது திறன்மிக்க யானைப் படைகளைத் திறம்படப் பயன்படுத்தியதால்தான். ராஜராஜசோழனின் யானைப் படைகளுக்கு அஞ்சாத நாடே இல்லையென்று கூறுவார்கள்.

யானைகளைப் பிடிப்பதற்கான உத்திகள்!

சங்க காலத்திலிருந்தே பெரும் கானகப் பகுதிகளிலிருந்தும், மலைப் பிரதேசங்களிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான யானைகளைப் பிடிப்பதற்கு நான்கு உத்திகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒன்று, சமதளப் பகுதிகளில் யானைகள் செல்லும் பாதைகளில் பெரும்பள்ளங்களைத் தோண்டி, அவற்றின்மீது யானைகள் விரும்பி உண்ணும் மூங்கில் தழைகளைப் பரப்பி, மறைவிடங்களில் ஒளிந்து காத்திருப்பார்கள். யானை குழிகளில் விழுவதைப் பார்த்தவுடன், கைவெடிப் பொருட்களை வெடிக்கச்செய்து, பிற யானைகள் அக்குழியை நெருங்கவிடாமல் துரத்திவிடுவார்கள். பிறகு, தாங்கள் பழக்கப்படுத்தியுள்ள யானைகளைக் கொண்டு, பெருங்குழியில் விழுந்த யானைகளை மீட்டுக்கொணர்ந்து, யானைக் கொட்டங்களில் அடைப்பார்கள்.

Advertisment

இரண்டாவதுமுறை, யானைகள் செல்லும் மலைப்பிரதேச வலசைப் பாதைகளில், குன்றுகளுக்குப் பின்னால் தங்களால் பயிற்சி தரப்பட்ட கும்கி யானைகளின்மீது அமர்ந்து, மறைவான இடங்களில் காத்திருப்பார்கள். இங்கு வலசை என்றால், யானைகளுக்கான தீவனப் பயிர்கள் நிறைந்துள்ள- யானைகள் வழக்கமாகச் சென்றுவரும் பாதையைக் குறிக்கும் சொல்லாகும். இந்த வலசைப் பாதைகளில் குன்றுகள் நிறைந்த நீர்நிலைகள் இருக்கும். அந்த இடத்திற்கு சிறு யானைக் கூட்டங்கள் நீரருந்த வந்தால், நீண்ட நேரத்திற்கு அந்த நீர்நிலைகளில் தங்கள் குட்டிகளோடு சேர்ந்து விளையாடி மகிழும். ஏனெனில், யானைகளின் தோல் கடினமானதாகவும், வியர்வைச் சுரப்பிகளே இல்லாத தன்மையுடையதாகவும் இருக்கும். யானைகளின் கால் நகங்களுள்ள இடங்களில் மட்டுமே குறைந்த அளவு வியர்வைச் சுரப்பிகள் காணப்படும். அதனால், யானைகள் கோடைகால உடல் வெப்பத்தைத் தணிக்க, நீர் நிலைகளில் நீரையும் சேற்றையும் தங்கள் உடல்மீது பாய்ச்சி வெப்பத்தைத் தணித்துக்கொள்ளும்.

இந்த நீர் நிலைகள் இருக்குமிடத்தைத் தங்களது நுகர்வுத் திறனைக்கொண்டு, ஐந்து கிலோமீட்டர் தூரத்திலிருந்தே யானைகள் அறிந்துகொள்ளும். நீர் நிலைகளை வந்தடைந்தவுடன், யானைகள் ஒவ்வொன்றும் சுமார் ஏழு முதல் எட்டு லிட்டர் தண்ணீர்வரை குடிக்கும். பிறகு நீர்நிலைகளில் புரண்டு விளையாட ஆரம்பிக்கும். விளையாடிக்கொண்டிருக்கும்போதே, ஒரு யானையானது சுமார் 350 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும். அந்த சமயத்தில், யானைகள் தங்களது நுகர்வுத் திறனை கவனிக்காமல் இருக்கும். இதேபோல், யானையானது அதிக அளவு செவித்திறனுடைய உயிரினம். வயதான பெண் யானைதான் ஒரு கூட்டத்தை வழிநடத்தும். அது தகவல் பரிமாற்றங் களைத் தன் கூட்டத்திற்குப் பரிமாறும் திறன் படைத்ததாக விளங்கும்.

Advertisment

ee

எனவே, அக்கூட்டத்தில் அந்தவொரு யானையை மட்டும் தெளிவாக அடையாளம் கண்டுவைப்பார்கள். அந்த யானை மெய்ம்மறந்து விளையாடும் நேரம் பார்த்து, அந்த நீர்நிலையைச் சுற்றி, குன்றுகளுக்குப் பின்னால் அமைதியாக, கும்கி யானைகளில் காத்திருந்த யானைப்பிடி வீரர்கள், தங்கள் யானைகளோடு அந்த யானைக் கூட்டத்தைச் சுற்றிவளைப்பார்கள். யானைகளுக்கு தூரப் பார்வைத் திறன் குறைவு. எனவே குன்று மறைவிலிருந்து வெளிப்பட்ட யானை வீரர்களில் திறமையானவர்கள், அந்தத் தாய் யானையை விரைந்து அணுகி, கருந்திரைச் சீலையை அதன் முகத்தில் போர்த்தி, பெருங்கயிற்றால் சுற்றிவளைத்துக் கட்டுவார்கள்.

அந்த யானையின்மீது கருந்திரை போர்த்துவதால், அந்த யானைக்கு என்ன நடக்கிறதென்பதை அறியாத நிலையை ஏற்படுத்தி, அதனிடமிருந்து பிற யானைகளுக்கு சமிக்ஞைகள் பரிமாற்றம் நடக்காதவாறு தடுத்துவிடுவார்கள். அது தன்னிலை இழக்கும் சமயத்தில், மிகப்பெரிய தந்தங்களையுடைய தங்களது நூற்றுக்கணக்கான கும்கி யானைகள்மூலம், பலவிதமான பிளிறல் களை ஏற்படுத்தி, பிற யானைகளைக் குழப்பத்திற்குள்ளாக்கிக்கொண்டே, அவை தப்பியோடாமல் சுற்றிவளைப்பார்கள். கருந்திரை போர்த்தப்பட்ட தாய் யானையைச் சுற்றி, நான்கு பெரும் கும்கி யானைகளிடம், நான்கு திசைகளிலும் கயிறு சுற்றப்பட்டு, அதன் நுனிகள் தரப்படும். அது அசையாதவாறு கயிறுகளை இறுகப் பற்றிக்கொள்ளும்.

மற்ற யானைகள், பெரும் மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்குள் கும்கி யானைகளால் சுற்றிவளைத்துத் தள்ளப்பட்டு கொண்டுவரப்படும். அங்கிருக்கும் பெரிய மரத்தூர்களில் பெரிய சீந்தில் கொடிகளால் திரிக்கப்பட்ட நீண்ட கயிறுகள் கட்டப்பட்டி ருக்கும். அப்பகுதியைச் சுற்றிலும் பெருமரவேலி இடப்பட்டு, அதனைச் சுற்றிலும் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தீப்பந்தங்களோடு சுற்றி நிற்பார்கள். அவ்வேலிக் குள் காட்டுயானைகள் கொண்டு வரப்பட்ட வுடன், அதன் நுழைவாயில் பெரும் மரத்தூண் களால் மூடப்படும்.

அக்கூட்டத்தில் அடங்காமல் சினங் கொள்ளும் யானைகளை, கும்கி யானைகளால் சுற்றிவளைத்து, அதன் குறுக்கே சீந்தில் கயிற்றைப் போட்டு, பின்னங்கால்களை மரத்தோடு கட்டுவிப்பார்கள். அமைதியாக இருக்கும் யானைகளுக்கு, ஒவ்வொரு மரத்தடியிலும் அவற்றுக்கு விருப்பமான இரைகளைக் குவித்துவைப்பார்கள். அவை இரை தின்னும்வரையிலும் எந்த தொந்தரவும் செய்யமாட்டார்கள். அந்த இரை, தீவனக் குவியல் மரத்தில் கட்டப்பட்டுள்ள நீண்ட சீந்தில் கயிற்றின்மீதுதான் தூவப்பட்டிருக்கும். தன் இரையினை யானைகள் உண்ணும்போது, அந்தக் கயிற்றை ஒவ்வொரு யானைகளின் பின்கால்களைச் சுற்றி மரத்தோடு கட்டிவிடுவார்கள். பாலருந்தும் யானைக் குட்டிகளை சுதந்திரமாக உலவவிட்டு, கும்கி யானைகளோடு பழகவிடுவார்கள். இங்கு கும்கி என்ற சொல் சங்ககாலத்தில் இல்லை. அதனை "பெருவேட்டையன்' என்று சொல்வார்கள். இவ்வாறு, யானைக் கூட்டத்தைக் கவர்ந்து வருவதை "பெருவேட்டை' என்பார்கள்.

நீர்நிலையில் கருந்திரையிட்டு சுற்றி வளைக்கப்பட்ட யானைக்கருகே பல கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, அதன்மீது போர்த்தப்பட்ட கருந்திரை அகற்றப்படும். அப்போது தன்னைச் சுற்றியிருக்கும் யானைக் கூட்டங்கள் தூரத்தில் பிளிறும் ஒலிகேட்டு, தானே அந்த இடத்தை நோக்கி ஓடும். அதனைச் சுற்றி கும்கி யானைகளும் ஓடும். கூண்டுக் கதவு திறக் கப்பட்டு, அது உள்ளே வந்தவுடன் கதவு அடைக்கப்படும். அங்கேயே ஒன்பது மாதங்கள்வரை பயிற்சியளிக்கப்பட்டு, காட்டிலிருந்து நாட்டிலுள்ள யானைக் கொட்டத்திற்கு அழைத்துவரப்படும். இப்பெருவேட்டையில் கிடைத்த மொத்த யானைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், வேட்டைக் குழுவினருக்கு மன்னன் பரிசளிப்பான்.

சங்க காலத்தில் ஒரு யானையை ஒன்பது மாதங்கள் வேலைவாங்குவார்கள். மூன்று மாதங்கள் ஓய்வு தருவார்கள். இந்த ஒன்பது மாதங்களை ஊழியக்காலம் என்றும், மூன்று மாதங்களை ஓய்வுக் காலமென்றும் அழைத்தனர். இந்த ஓய்வுக் காலமானது, இனப்பெருக்க காலமாக புத்துணர்ச்சி ஊட்டப்பட்டும். ஒரு பெண்யானை பருவமாகும் வயது 15. நான்கு வருடங்களுக்கு ஒருமுறைதான் யானை இனம் குட்டிபோடும். யானையின் கர்ப்பகாலம் 25 மாதங்கள். 25 மாத கர்ப்ப ஜெனிப்பில் வந்த ஆண் யானைக் குட்டிதான் பட்டத்து யானையாகும்.

அதற்குக் குறைவான காலங்களில் ஈன்றெடுக்கப்பட்ட யானையானது, பட்டத்து யானைக்குரிய தகுதியை இழக்கும்.

யானை பிடிக்கும் மூன்றாவதுமுறை என்னவென்றால், ஒரு யானைக் கூட்டத்தில் வயதுவந்த ஆண்யானை, கூட்டத்தைவிட்டு விலகிவிடும். வலசைப் பாதையில் குறுகிய கனவாயில்கள் இருக்கும். அதன் வழியே இப்படிப்பட்ட யானைகள் வருவதை நோட்டமிட்டுக்கொண்டே இருப்பார்கள். கனவாயின் மறுபக்கம், இருபுறங்களின் மறைவிடங்களில் யானை பிடிப்பவர்கள் பெருங்கயிற்று வலையுடன் காத்திருப்பர். யானை கனவாயில் நுழைந்து வெளியேறுமிடத்தில், அத்திப்பழங்களோடு சேர்ந்த மரக்கிளைகளைக் குவித்து, அதனடியில் வலை விரித்திருப்பர். யானை அத்திப்பழக் கிளைகளைக் கண்டால் நகராது. அது மேயும்போது வலையில் சிக்கவைத்து கயிறுபோட்டுக் கட்டுவார்கள். இருமருங்கும் கயிறுபிடி வீரர்கள், பின்னால் கும்கி யானையைவிட்டு முட்டியபடி, கொட்டத்திற்கு யானையை அழைத்துவருவர்.

நான்காவது முறையென்பது, யானையின் வலசைப் பாதைக்கு அருகில் யானைக் கொட்ட வேலியடைத்துக் காத்திருப்பர். யானைக் கூட்டம் வரும் காலங்களில், தேனீக்கள் நிறைந்திருக்கும் தேனடைகளை, மாட்டுத் தோலினாலான பெரிய பைகளில் எடுத்துவைத்துக் கொள்வார்கள். யானைக் கூட்டங்கள் வரும்போது அதனைத் திறந்து விடுவார்கள். தேனீக்களின் ரீங்கார ஓசைகேட்கும் யானைகள் மிகவும் அஞ்சி யோடும். யானையின் தோல் மிக தடிமனாக இருந்தாலும், நம் விரலால் தொட்டதும் சுழிக்குமளவுக்கு அது உணர்வுத்திறன் மிக்கவையாக இருக்கும்.

அதனால் தேனீக்கள் கொட்டினால் துடிதுடித்துவிடும். யானையால் குதிக்கவியலாது. ஆகவே விரைவாக நாலாபக்கமும் ஓட ஆரம்பிக்கும். அப்போது மரங்கள் அடர்ந்த பகுதிகளில் யானைக் கொட்ட வேலி அடைத்திருப்பார்கள்.

அப்பகுதிக்குள்தான் யானைகள் ஓடிமறையும். வெட்டவெளியை நோக்கிச் செல்லாது. அப்படி யானைகள் கொட்டப்பகுதிக்குள் நுழைந்தவுடன் அதன் நுழைவாயிலை மூடி, அதன்மீது இலை தழைகளைக்கொண்டு மூடிமறைத்துவிடுவார்கள். வந்தவழி தெரியாமல் கொட்டத்திற்குள் இங்குமங்கும் சுற்றித்திரியும். ஒரு யானைக் கொட்டம் என்பது, அன்றைய நில அளவில் ஆயிரம் குழி அளவீடுகளைக் கொண்டதாக இருக்கும். அதன்பின், ஒவ்வொன்றாக பெரு வேட்டையர்களைக்கொண்டு- அதாவது கும்கி யானைகளைக் கொண்டு மரங்களில் கட்டுவார்கள்.

இவ்வாறு நான்கு முறைகளில் பிடிக்கப்பட்ட அனைத்து யானைகளுக்கும் அரண்மனைக்குப் புறத்தே ஆறோடும் பாதைக்கு அருகிலேயே மிகப்பெரிய பயிற்சிக்கூடம் குருகுலத்தாரால் அமைக்கப் பட்டு, பயிற்சியளிக்கப்படும். ஒவ்வொரு நாளும் ஒரு யானை, சுமார் 200 லிட்டர் அளவு நீர் அருந்தவேண்டியிருந்ததால், வற்றாத ஜீவநதி ஓட்டம் தேவைப்பட்டது.

யானைக் குட்டிகளுக்கு சங்கேத மொழிகள்!

இந்த யானைகளைப் புலவர்களுக்குப் பரிசுப் பொருளாக மன்னர் வழங்கும் பழக்கம், அன்றைய சங்ககால நாட்களில் இருந்துவந்தது. யானைப் பயிற்சியகத்தில் கேழ்வரகுக் களியுருண்டை, சோற்றுருண்டை, பாசிப்பருப்பு, பழவகைகள், ஆலம், அத்தி, அரசந்தழைகள், மூங்கில், கரும்பு, தென்னங்குலை போன்றவை 16 மணி நேரம் கொடுக்கப்படும்.

சங்ககாலத்தில் பாடலிபுத்திரம், அந்தமான், இலங்கை போன்ற இடங்களில் யானைச் சந்தைகள் சிறப்பாக நடைபெற்றுவந்தன. அச்சந்தைகளில் ஐந்து வயது வந்த யானைக் குட்டிகள்தான் விற்கப்பட்டன. பெரிய செல்வந்தர்கள், அவற்றை வாங்கிவளர்க்கும் பழக்கம் உடையவர்களாக இருந்தனர். அவற்றைப் பராமரிக்கும் பணியைச் செய்யும் தொழிலாளர்களுக்கு "பார்ப்பார்' என்று பெயரிட்டனர். பின்னாளில் அவர்கள் "மாவூத்து' என்றழைக்கப்பட்டனர். இவர்கள் யானைக் குட்டிகளுக்கு சுமார் அறுபது வகையான சங்கேத மொழிகள் அல்லது வார்த்தைகளை சொல்லிக்கொடுத்தனர். இவற்றைக்கொண்டு யானை பாஷைகள் உருவாயின. இச்சங்கேத வார்த்தைகள் பெரும்பாலும் சேரநாட்டு வழக்கு மொழியாகவே இருந்துவந்தன.

பார்ப்பார்களின் பரம்பரைத் தொழில்!

பார்ப்பார்களில் ஒன்றாம் பார்ப்பார்கள், இரண்டாம் பார்ப்பார்கள், மூன்றாம் பார்ப் பார்கள் என மூன்றடுக்கு பயிற்சியாளர்கள் இருந்தனர். இவர்களுக்கு உதவியாளர்களாக இருப்பவர்களை "காவடி' எனப் பெயரிட்டு அழைத்தனர். இவர்கள் அன்றாடம் யானைச் சாணிகளை அள்ளி, யானை கட்டியிருக்கும் இடங்களை சுத்தம் செய்யும் வேலைகளைச் செய்வார்கள். இவ்வாறு மாவூத்துகள் அல்லது பார்ப்பார்களுக்கு, பரம்பரையாக தந்தை, மகன், குரு, சீடர் முறையிலே பணி கற்றுக்கொடுக்கப்பட்டு, பரம்பரைத் தொழிலைக் கற்றுப் பணியாற்றி வந்தனர்.

தந்தையோடு மகன் யானையிடம் பழகி, அவனது வியர்வை வாடையை யானை நுகர்ந்து பழகும்படி செய்வார்கள். முதல் ஒன்றாம் பார்ப்பார வேலை என்பது, யானையை ஆற்றில் குளிக்கச்செய்யும் பணியைக் கற்றுக் கொள்வதாகும். குளிப்பாட்டும் முறைலி முதலில் வாலி-ருந்து தலை, இரண்டாவது முன்னங்கால்களிலிருந்து தலை, மூன்றாவது கால்களிலிருந்து தலை, பிறகு சுற்றி, அடுத்து புரண்டு குளிக்கச் செய்வது, துதிக்கை ஊதல், நீச்சல் போன்றவையாகும். இவற்றை ஒரு குட்டி யானைக்குக் கற்றுத் தருவதற்கு ஐந்து வருடம் பழகவேண்டும்.

அடுத்தது, இரண்டாம் பார்ப்பார் சைகை, சமிக்ஞை கற்றல் இரண்டு வருடங்கள்.

மூன்றாம் பார்ப்பார் பயிற்சியில் 60 வகை சங்கேத யானை பாஷைகளை அல்லது மொழிகளைக் கற்றுக்கொள்ளல் மூன்று வருடங்கள். யானைக்கு 15 வயதாகும்போது, இனப்பெருக்கப் பருவமடையும் தறுவாயில், மிகவும் கவனமாக, தன் தந்தையிடம் பார்ப்பார்கள் பயிற்சிகளைக் கற்றுக்கொள்வார்கள். யானையைச் செலுத்தும்போது வலந்திருப்பு, இடந்திருப்பு, முன்செல்லல், பின்செல்லல், நிலைநிற்றல் போன்ற செயல்பாடுகள் அனைத்தும், கால்களின் இரு பெருவிரல் நுனிகளைப் பயன்படுத்தும் முறைகளில் கற்றுக்கொள்வதோடு, படுக்கச் செய்தல், அமரச்செய்தல், வணங்கச் செய்தல் போன்றவற்றை, சங்கேத மொழிகளுடன் சேர்ந்து செய்யவைப்பது இறுதிப் பயிற்சியாகும்.

வரும் இதழிலும் பயிற்சி முறைகள் தொடரும்!

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்