ங்கும் நிறைந்தவன் இறைவன். அவனன்றி அணுவும் அசைவதில்லை. கண்ணுக்குத் தெரியாத அந்த மகானுபாவனை கண்முன்னே காட்டுவதற்கு கணக்கற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடைசியில் கண்டறியப்பட்டதே மானிடத் தோற்றத்தில் சிலை வடிவில் அவனை மனிதர்களுக்கு அடையாளங் காட்டியது. மனிதர்களை வழிநடத்த, மனிதர்களால் மனித உருவாக அடையாளங்காட்டப்பட்ட அவனது உறைவிடமாக, மனிதர்களால் உருவாக்கப்பட்டதே ஆலயங்கள். ஆலயங் களை ஆண்டவனின் இருப்பிடமாக மட்டும் கருதாது, நம் ஆன்மா லயிக்குமிடமாக எவர் உணர்ந்தொழுகுகிறார்களோ அவர் களால் தன்னையும், தன்மூலம் அவனையும் அறியமுடியும்.

இதனை உணர்ந்த பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்கள் அவனுக்குப் பல ஆலயங்களை எழுப்பி மக்களை நல்வழிப்படுத்தினர்.

அத்தகைய அற்புத ஆலயங்களில், அரியலூர் மாவட்டத்திலுள்ள பல ஆலயங்கள் வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்றே பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதும், அரியலூர் மாவட்டத்தின் பழமையான சிவாலயங்களில் ஒன்றானதுமான உடையார்பாளையம் நறுமலர் பூங்குழல்நாயகி உடனுறை திருப்பயறணீ சுவரர் ஆலயம்.

முற்காலப் பேரரசர்கள் நிர்வாக வசதிக் காக தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதி களைப் பிரித்து, அதன் பிரதிநிதிகளாக தங்கள் நம்பிக்கைக்குரியவர்களை நியமித்து ஆட்சிநடத்தினர். பேரரசர்களுக்கிடையே ஏற்பட்ட பெரும் போர்களுக்குப் பின்னர் பேரரசுகள் வீழ்ச்சியடைய, அவர்களின் பிரிதிநிதிகளாக இருந்தவர்கள் அந்தந்த பகுதிகளின் குறுநில மன்னர்களாய் பொறுப் பேற்று ஆட்சிசெய்யத் தொடங்கினர். இவர் களை ஜமீன்தார் என்றும், இவர்களது ஆளுகைக்குட்பட்ட பகுதிக்கு சமஸ்தானம் என்ற பெயரும் ஏற்பட்டது. இத்தகைய சமஸ்தானங்களில் ஒன்றே உடையார் பாளையம் சமஸ்தானம். "காலாட்கள் தோழ உடையார்' என்னும் பட்டப் பெயரைக் கொண்ட வம்சத்தினர் சுமார் 64-க்கும் மேற்பட்ட கிராமங்களைத் தங்கள் ஆளுகைக் குக்கீழ் பெற்று ஒரு சமஸ்தானமாக்கி, அதன் தலைநகரமாக இந்த ஊரை அறிவித்து, தங்கள் பட்டப்பெயரைக் குறிக்கும்விதமாக அதற்கு 'உடையார்பாளையம்' என்று பெயரிட்டு ஆட்சிசெய்தனர். .

Advertisment

தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட இவர்களின் வாரிசுகள் இன்றளவும் உடையார்பாளையத்தில் வாழ்ந்துவருகின் றனர். இவர்கள் ஆட்சி பரிபாலனம் செய்த இடம், 30 ஏக்கர் வளாகம், அரண்மனையுடன் இன்றும் உள்ளது. அரண்மனைக்கு முன்னே இரு சிங்கங்கள் மற்றும் கயல்கள் சிம்மக்கொடியை ஏந்தியவாறு வாட் களுடன் நிற்கும் சிற்பங்கள் அடங்கிய நுழைவுவாயிலில், "சமஸ்தானபதி அவர்கள், உடையார் பாளையம்' என்று தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்களது அரண்மனை சிதைவுற்றுக் காட்சியளித்தாலும், இவர்கள் பயன்படுத்திய பீரங்கி, துப்பாக்கி, வாட்கள், வேல்கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட பொருட்கள் வீரத்தின் அடையாளமாகவும், வரலாற்றின் சாட்சியாகவும் காட்சியளிக்கின்றன.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு இணக்கமாயிருந்த இவர்கள் கங்கைகொண்ட சோழபுரக் கோவிலை நிர்வாகம்செய்த காலத்தில் உருவாக்கப் பட்டதுதான் அக் கோவிலில் இடம் பெற்றுள்ள சிங்கமுகக் கிணறு.

இந்த ஜமீன்தார்கள் ஆன்மிகப் பணிகளுக்கு மட்டுமல்ல; தமிழுக்கும் தொண்டாற்றி பல தமிழறிஞர்களையும் ஆதரித்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் தமிழ்த் தாத்தா எனப்படும் உ.வே.

Advertisment

சாமிநாத ஐயர் ஆவார். இவர்கள் ஆட்சிக் காலத்தில் இவ்வூரிலும், இதனைச் சுற்றிய ஊர்களிலும் பல கோவில்கள் இருந்ததாலும், பட்டுநெசவுக்குப் பெயர்பெற்று விளங்கிய தாலும் இவ்வூர் கோவில்கள் நகரம், ஜமீன் தார் நகரம், ஏழைகளின் பட்டு நகரம், இரண் டாம் காஞ்சிபுரம் என்னும் பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பல இந்துக் கோவில்கள் கொள்ளையடிக்கப் பட்டதுடன் இடித்து நொறுக்கப்பட்டன. அந்த சமயத்தில் இந்து ஆலயங்களிலிருந்த இறைத் திருமேனிகளைப் பாதுகாக்க அங்கிருந்து அகற்றி பல ஊர்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைப்பது வழக்க மாயிற்று. அதன்படி காஞ்சிபுரத்தின் நாயகி காமாட்சி உட்பட காஞ்சியின் முக்கிய கோவில்கள் பலவற்றின் இறைத் திருவுருவங் கள் உடையார்பாளையம் கொண்டுவரப் பட்டு, ஜமீன்தார்வசம் ஒப்படைத்துப் பாது காக்கப்பட்டது என்பது வரலாற்றறிஞர்கள் கூற்று. இதையறிந்த காஞ்சி மகாசுவாமிகள் கும்பகோணம் சங்கரமடத்திற்கு வரும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் உடையார்பாளையம் சென்று, சிலை களைப் பாதுகாத்த செயலுக்கு அவர்களை ஆசிர்வதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந் ததாகக் கூறப்படுகிறது.

தலச் சிறப்பு

உடையார்பாளையம் ஜமீனில் பல்லாண்டு களுக்கு முந்தைய வரலாற்றுச் சின்னங்களும், தொன்மையான கோவில்களும் இடம் பெற்றிருந்தாலும், அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல விண்முட்டும் கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக் கிறது அருள்மிகு பயறணீநாத சுவாமி ஆலயம். இக்கோவில் புராணகால வரலாற்றுடன் தொடர்புகொண்டிருந்ததற்கு அடையாள மாக இவ்வூருக்கு திருபத்ராரண்யம், திருமுற்க புரி, திருப்பயறணீச்சுரம் என காலந் தோறும் வழங்கப்பட்ட பெயர்களைக் குறிப்பிட லாம். சுவாமியின் திருநாமம் தமிழில் பயறணீ சுவரர்; வடமொழியில் முற்கபுரீசுவரர்.

அம்பிகையின் திருநாமம் தமிழில் நறுமலர்ப் பூங்குழல்நாயகி; வடமொழியில் சுகந்தகுசும்ப குந்தளாம்பிகை. தலதீர்த்தம் காண்டீப தீர்த்தம். தலவிருட்சம் மகிழமரம்.

தல வரலாறு

முற்காலத்தில் மலைநாடு எனப்படும் சேர தேசத்தின் திவாகபுரம் என்ற ஊரைச் சேர்ந்த வணிகனொருவன் விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்றம் சந்தையில் வியாபாரம் செய்ய வண்டியில் மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இவ்வூர் வழியே சென்றான். உடையார்பாளையம் சுங்கவரி வசூலிக்கும் இடமாக இருந்தமையால், இங்கிருந்த அதிகாரி கள் வண்டியை நிறுத்தி விசாரித்தனர். மிளகுக்கு அதிக சுங்கவரி விதிக்கப்பட்ட காலமது. அதிக வரி கொடுப்பதைத் தவிர்ப் பதற்காக சுங்க அதிகாரிகளிடம், பயறு ஏற்றிச் செல்வதாகவும், அதற்கு இவ்வூர் இறைவனே சாட்சி எனவும் பொய்யுரைத்து, குறைவான சுங்கவரி செலுத்திவிட்டு வண்டியை ஓட்டிச் சென்றான். சுங்கச்சாவடி பாதுகாப்பு வீரர்களும், "இறைவன் சாட்சி' என்று கூறியதால் அதை நம்பி வண்டியை ஆய்வு செய்யாமல் வழியனுப்பிவைத்தனர்.

dd

சந்தோஷத்துடன் விருத்தாசலத்திற்கு வண்டியை ஒட்டிச்சென்ற வணிகன், அங்கு சென்று மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த போது அனைத்து மிளகு மூட்டைகளும் பயறாக இருக்கக் கண்டு அதிர்ச்சியுற்றான். தான் பொய்யுரைத்ததன் காரணமாகவே இப்படி மாறிவிட்டது என்பதை உணர்ந்த அவன், தான்செய்த தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டினான். அப்போது கருணையுள்ளம் கொண்ட ஈசனார் அசரீரி வடிவில், "மாற்றிய இடத்திற்கே சென்று மாற்றுக' என்றுரைத்தார். இறைவாக்கை உத்தரவாக ஏற்று வணிகன் மீண்டும் வண்டியைத் திரும்ப ஓட்டிவந்து உரிய சுங்கவரியை செலுத்திவிட்டு இவ்வூர் இறைவனிடம் முறையிட, அனைத்து மூட்டைகளும் மீண்டும் மிளகாக மாறின. இதனாலேயே இத்தல இறைவனாருக்கு "பயறணிநாதர்' என்ற திருப்பெயரும், ஊருக்கு "பயறணீச்சுரம்' என்ற பெயரும் ஏற்பட்டன.

தீர்த்த மகிமை

முற்காலத்தில் ஆலயம் எழுப்பும்போது ஆலய கட்டுமானத்திற்குத் தேவையான மண்ணைப் பெறுவதற்கும், நீரைத் தேக்கிவைக்கவும் ஆலயத்தின் முன்னால் அல்லது பக்கவாட்டில் பெரிய குளம் தோண்டுவதும், ஆலயக் கட்டுமானப் பணிகள் நிறைவுற்றவுடன் அந்தக் குளத்தை சீர்திருத்தி ஆலயத் தீர்த்தமாக்குவதும் வழக்கம். இப்படி கோவில் கட்டும்போதே திருக்குளம் உருவாக்கும் பணியும் நடைபெறும். ஆனால் காண்டீப தீர்த்தம் என்னும் இவ்வாலய தீர்த்தம் இதிகாச காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டு மாறுவேடத்தில் ஒவ்வொரு நாடாக சென்று தலைமறைவாக வாழ்ந்தனர். அதன்படி இப்பகுதிக்கு வந்தவர்கள் குடிக்க நீரின்றி சிரமப்பட்டதுடன், இப்பகுதி மக்கள் சிரமப்படுவதையும் பார்த்தனர். மனம் பொறுக்காத அர்ச்சுனன் முழுமுதற் கடவுளாம் வினாயகரை வணங்கி தன் வேண்டுகோளை முன்வைத்து, தன்னுடைய காண்டீப வில்லை வளைத்து ஒரு அம்பை எய்தான். அந்த அம்பு பூமியை துளைத்துச் சென்று நீரோட்டத்தைத் தடுத்து அதை மேல்நோக்கிக் கொண்டுவந்து வில் வடிவிலான இந்த பரந்த விரிந்த தீர்த்தத்தை உருவாக்கியதாம். தன் காண்டீப வில்லால் உருவாக்கிய இந்த தீர்த்தத்திற்கு காண்டீப தீர்த்தம் என்னும் பெயர் சூட்டிய அர்ச்சுனன், வில்வளைக்க அருள்பாலித்த வினாயகருக்கு ஆலயம் எழுப்பி, அதற்கு காண்டீப வினாயகர் என்னும் பெயரையும் சூட்டினான். இந்த வினாயகர் பெரிய கோவில் கோபுரத்திற்கு வெளியே, காண்டீப தீர்த்தத்தைப் பார்த்தவாறு கிழக்குநோக்கி தனிக்கோவிலி-ருந்து அருள்பாலிக்கிறார். வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவராதலால் வினாயகர் ஒரு திருக்கரத்தில் வில்லுடன் காட்சியளிக்கிறார்.

dd

பதினான்கு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காட்சியளிக்கும் காண்டீப தீர்த்தமே அனைத்து இந்து கோவில்களின் தீர்த்தத்திலேயே மிகப்பெரிய தீர்த்தக்குளம் என்று கூறலாம். இதன்நடுவே பெரிய நீராழி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. முற் காலத்தில் இவ்வாலயத்தில் நடைபெற்ற பிரம்மோற்சவத்தின் முடிவில் தெப்போற்ச வம் மற்றும் தீர்த்தவாரிக்கு வரும் சுவாமியை தங்கவைப்பதற்காக இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. காண்டீப தீர்த்ததில் நீராடுவோர் சகலவிதமான நோய்களிலிருந்தும் விடுபடுவர் என்னும் ஐதீகம் காரணமாக, முற்காலத்தில் பல தேசங்களிலிருந்தும் வந்து இந்த தீர்த்தத்தில் மக்கள் நீராடிச் சென்றுள்ளனர். அப்படி வரும் பக்தர்கள் தங்கி நீராடுவதற்கு வசதியாக மேற்குக் கரையிலுள்ள பெரிய மண்டபம் கட்டப் பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

இன்றளவும் இந்த பிரம்மாண்ட தீர்த்தத்தைத் தாண்டிச் செல்லும் எந்த ஒரு புதிய மனிதரும் நின்று அதைப் பார்ப்பதுடன் கடல்போல காட்சியளிக்கும் இத்தீர்த்தத்தில் குளிக்கலாமே என்றெண்ணுவர்.

இந்த தீர்த்தத்தின் மற்றொரு சிறப்பு- இதில் வாழும் நீர்வாழ் உயிரினங்களில் ஒன்றான தவளைகள் கத்தி சப்தம் ஏற்படுத்தாததைக் குறிப்பிடலாம். இதற்குப் பின்னணியிலும் ஒரு கதை கூறப்படுகிறது. புராண காலத்தில், கயிலாயத்தில் சிவன்- பார்வதி திருமணம் நடைபெற்ற காலத்தில் அதைப் பார்ப்பதற்காக தேவர்களும் முனிவர்களும் அங்கு திரண்டனர். இந்த நிகழ்வால் கயிலாயம் இருந்த வடதிசை தாழ்ந்து, தென்திசை உயரத்தொடங்கிற்று. இதனால் அனைத்து உயிர்களும் பாதிப்புறுவதைக் கண்ட சிவன் குறுமுனிவராம் அகத்தியரைத் தென்திசைக்கு செல்லுமாறு பணித்தார். "தங்கள் திருமணத்தைப் பாராமல் நான் எப்படி செல்வேன்'' என அகத்தியர் கேட்க, "நீர் எந்த இடத்திலிருந்து எம்மை வழிபடுகிறீரோ அங்கெல்லாம் உமக்கு எமது திருமணக் காட்சியைக் காட்டியருள்வோம்'' என்று கூறி அனுப்பிவைத்தார். அதன்படி தென்திசை நோக்கிச்சென்ற அகத்தியர் ஆங்காங்கே உள்ள தலங்களில் வழிபட்டும், தலமில்லாத இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டும் சிவ- பார்வதி திருமணக்காட்சியைப் பலமுறை காணும் பேற்றைப் பெற்றார். அந்த பயணத்தின்போது இவ்வாலயத்திற்கும் வந்த அகத்தியர் சிவனை நினைத்து தவம் செய்யும்போது, இத்தீர்த்தத்தில் இருந்த தவளைகளில் ஒன்று பெருங்குரலெடுத்து கத்தி அவர் தவத்திற்கு இடையூறு செய்ய, கோப முற்ற அகத்தியர், "இனி இந்த தீர்த்தத்தில் தவளைகளின் சப்தம் கேட்கக்கூடாது' என்று சாபமிட்டார். அன்றுமுதல் இன்றுவரை இத்தீர்த்ததில் தவளைகள் கத்துவதில்லை என்று கூறப்படுகிறது.

dd

கட்டுமானம் மற்றும் காலம் அருள்மிகு பயறணீசுவரர் ஆலயம் தமிழகத்தின் தொன்மையான ஆலயங்களில் ஒன்று. இவ்வாலயம் சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முன்பாக பல்லவ மன்னர் கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படு கின்றது. ஆனால் ஆலயத் தீர்த்தமான காண்டீப தீர்த்தம் அர்ச்சுனனின் அம்பால் உருவாக்கப் பட்ட வரலாற்றின் அடிப்படையில் பார்த் தோமானால், இது புராண காலத்திலேயே இருந்த கோவிலாக எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக எடுத்துக்கொண்டோமா னால், எந்த மன்னனால் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை. ஜமீன் குடும்பத்தினருக்கும் இது பற்றிய விவரம் தெரியவில்லை. சரியான தகவலையும் காலத்தையும் வரலாற்றறிஞர்கள்தான் கூறவேண்டும்.

ஆனால் உடையார்பாளையம் ஜமீன்தார்கள் இக்கோவிலுக்கு நிறைய திருப்பணிகள் செய்துள்ளனர். தற்போதும் கோவில் அவர்களது நிர்வாகத்திலேயே உள்ளது.

சோழர், பல்லவர்காலக் கலைநகரமாக விளங்கிய அரியலூர் மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் வரலாறு மற்றும் ஆன்மிகச் சிறப்புவாய்ந்த உடையார்பாளையம் கோவிலில் எந்த கல்வெட்டுகளும் இடம்பெறவில்லை. அரண்மனைக்குள் மட்டும் தெலுங்கு மொழியிலான சில கல்வெட்டுகள் உள்ளன. அதிலிருக்கும் விவரங்களை அறியமுடியவில்லை.

ஆலய அமைப்பு

ஐந்துநிலை கோபுரத்துடன் கிழக்குநோக்கி அமைந்திருக்கும் இவ்வாலயத்தின் தென்புறத் தில் ஏழுநிலை கொண்ட கம்பீரமான மற்றொரு கோபுரமும் இடம்பெற்றுள்ளது. கிழக்கு கோபுரம் காண்டீப தீர்த்தத்தை ஒட்டி அமைந்துள்ளதால், பக்தர்கள் ஆலய தரிசனத்திற்கு தென்புற கோபுரத்தையே பயன்படுத்துகின்றார். அதனால் இதுவே ராஜகோபுரமாகக் கருதப்படுகிறது.

கிழக்கு கோபுர வாயில் வழியே காண்டீப தீர்த்தத்தையும், கொடிமரம், பலிபீடம், நந்தியெம்பெருமானையும் தரிசித்து உட்பிராகாரத்திற்குள் நுழைய, எதிரில் மூலவர் பயறணீசுவரப் பெருமான், உடைமையைக் காத்துத் தரும்படி வேண்டுதல் வைப்போருக்கு வேண்டிய வரத்தையளிக்கும் வள்ளலாய் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.

அவரை தரிசித்து வேண்டுதல் வைத்து பின்னர் இரண்டாம் பிராகாரத்திற்குள் நகர, முழுவதும் கண்ணாடிக் கற்களை பதித்து துணியால் உருவாக்கப்பட்ட தஞ்சை ஓவிய பாணியிலான காளிகாம்பாளும், தென்புறத் தில் அறுபத்துமூன்று நாயன்மார்களும், மேற்குப் புறத்தில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமானும், கஜலட்சுமியும், வடக்கில் விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதரும், சண்டிகேசுவரரும் இவர்களைத் தொடர்ந்து அனைத்தையும் இயக்கி அனைவர்பாலும் அன்பைப் பொழியும் அன்னை நறுமலர்ப் பூங்குழல் நாயகியும், நவகிரகங்களும், கிழக்குப் புறத் தில் சூரியன், தனி சனீசுவரர், பைரவரும் இருந்து வேண்டுவோருக்கு வேண்டிய வரத்தை அளிக்கின்றனர்.

பிரார்த்தனையும் பரிகாரமும்

தங்களின் தீராத குறைகளைச் சொல்லி நேர்ந்துகொள்ளும் பக்தர்கள், அது நிறைவேறிய பின்னர் ஆலயத்திற்கு வந்து தங்களால் இயன்ற விதத்தில் பரிகாரம் செய்கின்றனர். தனி சனீசுவரர் சந்நிதி அனைத்து கோவில்களிலும் இருப்பதில்லை. ஒருசில கோவில்களில் மட்டுமே இருக்கும். அந்த சனீசுவரருக்கு ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் தாமரை, அரளி போன்ற பூக்களைக்கொண்டு அர்ச்சனைசெய்து, எள்தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நிவர்த்தியாவதுடன், திருமணத் தடைகள் நீங்கி புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பதும், பைரவர் சந்நிதியில் வழிபாடுகள் செய்தால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி வளமான வாழ்கை அமையுமென்பதும் ஐதீகமாக உள்ளதால், பிரார்த்தனை மற்றும் பரிகாரத்திற்கேற்ற கோவிலாகும்.

அமைவிடம்: உடையார்பாளையம் சமஸ்தான நிர்வாகத்தின் கீழுள்ள இக்கோவில் தினசரி காலை 7.00 மணிமுதல் 11.00 வரையிலும்; மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 வரையிலும் திறந்திருக் கும்.

அரியலூர் மாவட்டத்தில், சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஜெயங் கொண்டத்திலிருந்து பத்து கிலோமீட்டர் மேற்கில் அமைந்துள்ள இவ்வாலயத்திற்குச் செல்ல அரியலூர், கும்பகோணம், சிதம்பரம், திருச்சி ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதியுள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் அரியலூர் மற்றும் செந்துறை.