"ஹரியும் சிவனும் ஒருவரே என்பது முன்னோர் வாக்கு. சனாதன இந்து மதத்தில் கடவுள் என்பவர் ஒருவரே. அவர் அனைவருக்கும் அருள்புரியவேண்டும் என்பதற்காகவே, ஒருவரே பல்வேறு அவதாரங்களை (தோற்றம்) எடுத்துள்ளார். விஷ்ணுவுக்கும், சிவனுக்கு மிடையே பேதம் (வித்தியாசம்) பார்ப்பதை அன்றே ஆதிசங்கரர் கண்டித்தார்'' என சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள் சென்னையில் நடந்த அருளுரையின்போது எடுத்துரைத்தார்.
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் சங்கராச்சாரியர் ஸ்ரீபாரதி தீர்த்த மகாசந்நிதானம் வழிகாட்டுதலின் பேரில், சென்னை பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அக்டோபர் மாதம் 26-ஆம் தேதிமுதல் நவம்பர் 13-ஆம் தேதிவரை 19 நாட்கள் காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் இளைய சங்கராச்சார்ய ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள் விஜய யாத்திரை மேற்கொண்டு, பல ஆன்மிகத் திருப்பணிகளைச் செய்தார்.
சென்னை விஜயத்தின்போது பல்வேறு இடங்களில் அருளுரை என்னும் தர்மப்பிரச்சாரத்தைச் செய்து மக்களை நல்வழிப்படுத்தினார். அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் "இறைவன் ஒருவனே' என்னும் அடிப்படைத் தத்துவம்தான்.
சிவபெருமானை வணங்குவோரை சைவர்கள் என்றும், விஷ்ணுவை வணங்குவோரை வைணவர்கள் என்றும் அழைப்பதுண்டு. இதில் சிவபெருமான் பெரியவரா? விஷ்ணு பெரியவரா என்றொரு சந்தேகம் சரியான புரிதல் இல்லாத காரணத்தால் முற்காலத்திலிருந்து இன்றுவரை இந்துக்களிடையே நிலவிவருகிறது. இருவருக்குமிடையே அபிப்பிராய பேதம் பார்ப்பதை பண்டைய நூலான பத்ம புராணம் கண்டிக்கிறது.
ஒரு சமயம் சிவ பெருமானும் விஷ்ணுவுக்குமிடையே சுவாரசியமான உரையாடல் நடந்துகொண்டிருந்த வேளையில் மகாவிஷ்ணு, "நம் இருவரிடையே யாரேனும் பேதத்தை உண்டாக்கி அதைக் கற்பித் தால், அவர்களுக்கு தண்டனையாக பல்லாண்டுகள் நரகத்தில் வாழவேண்டி வரும்'' எனக் கூறினார். இப்படி பரம் பொருளான இறைவனே கூறியபின்னர் அதை அப்படியே அனுசரிப்பது (ஏற்பது) நமது கடமை. இதைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை பல மகான்கள் பல்வேறு சமயங்களில் மக்களுக்கு போதித்து வருகிறார்கள்.
சிவனும் விஷ்ணுவும் (திருவேங்கட முடையான்) ஒரே பரம்பொருள் என்கிற பொருளில்-
"தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து' (63)
என முதலாழ்வார் மூவருள் மூன்றாமவரான பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியில் பாசுரம் பாடியுள்ளார்.
இதே பொருளில் திருமங்கை யாழ்வார்-
"பிறை தங்கு கடையானை வலத்தே வைத்துப்
பிரம்மனைத் தன் உந்தியிலே தோற்றிவித்து
கறை தங்கு வேல் தடங்கண் திருவை
மார்பில் கலந்தவன் தாள்
அணைகிற்பீர்
கழுநீர் கூடித் துறை தங்கு கமலந்துத் துயின்று கைதைத் தோடாரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி சிறை வண்டு களிபாடும் வயல்சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே' (3-4-9) என பெரிய திருமொழியில் பாடியுள்ளார்.
"ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால்- இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து'
என சங்கரநாராயண திருவுருவத்தைப் பற்றி அற்புதத் திருவந்தாதியில் காரைக்கால் அம்மையார் பாடியுள்ளார்.
சிவனும், விஷ்ணுவும் ஒருசேர சங்கர நாராயணராகக் காட்சிதரும் இடம்தான் தென்காசி மாவட்டம், கோமதியம்மன் உடனுறை சங்கரநாராயணன் திருகோவில். 1022-ஆம் ஆண்டு இப்பகுதியை ஆண்ட உக்கிரப் பாண்டியன் என்ற மன்னரால் முதலில் கட்டப்பட்ட இக்கோவிலில், மூலவர் முதல் சந்நிதியில் சங்கர லிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணராகவும் அருள்பாலிக்கி றார்கள்.
கோமதியம்மன் சிவனும் விஷ்ணுவும் ஒருவரே என்ற தத்துவத்தை நிரூபிக்கும் வண்ணம் தவமிருந்து, இருவரும் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சியளித்து ஒரே பரம்பொருள் என்பதை உலகறியச் செய்தார். இந்த சம்பவம்தான் இன்றளவும் "ஆடித்தபசு' என்னும் பெயரில் உற்சவமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிருங்கேரி மடத்தின் 32-ஆவது பீடாதி ஸ்ரீநரசிம்மபாரதி சுவாமிகள் (1817-1879) சங்கரன் கோவிலுக்கு விஜயம்செய்த சமயத்தில் நித்ய பூஜைக்காக ஸ்படிக லிங்கத்தைக் கொடுத்தார். இந்த லிங்கத்திற்கு தினமும் காலை 7.30 மணியளவில் அபிஷேகமும் பூஜையும் தொடர்ந்து நடந்துவருகிறது.
ஹரியும் சிவனும் ஒருவரேதான் என்னும் உயர்ந்த தத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காகவும். இருவருக்குள் அபிப்பிராய பேதங்களைப் போக்கவேண்டுமெனும் நோக்கிலும், சிருங்கேரி மடம் சார்பில் சொர்ணபாரதி உற்சவத்தை முன்னிட்டு "ஹரிஹர நாமாமிருதம்' என்கிற நாம யக்ஞத்தை (வஹஞ்ஹ) கடந்த விஜயதசமி (12-10-2024) அன்று ஸ்ரீபாரதி தீர்த்த மகாசந்நிதிதானம் சுவாமிகள் துவக்கிவைத்தார்.
அதன்படி ஒரு படிவத்தில் ஒருபுறம் "ராம' என்கிற இறை நாமத்தையும், மறுபக்கம் "சிவ' என்கிற இறை நாடித்தையும் முறையே 108 முறை எழுதும்வண்ணம் அச்சடிக்கப் பட்டு, ஒருகோடி நாமங்களை பக்தர்கள் தங்களின் தாய்மொழியிலேயேயே எழுத வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நாமங்களை எழுதுவதன்மூலம் புண்ணியம் கிடைப்பதுமட்டுமின்றி, மனதில் பேத எண்ணங்கள் மறையும்.
இந்தப் படிவத்தை சிருங்கேரி கிளை மடங்கள்மூலம் இலவசமாக விநியோகிக் கப்பட்டு வருவதால், எல்லாரும் பக்தியுடன் பங்குபெறலாம். அடுத்த ராமநவமிக்குள் (ஏப்ரல் 2025) எழுதி மடத்திற்கு அனுப்ப வேண்டும் என ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள், சென்னையில் நடந்த அருளுரை சமயத்தில் கேட்டுக்கொண்டார்.