அனுமன் ஜெயந்தி 11-1-2024

வ்வொரு மனிதனுக்கும் அவனுக்குரிய குணங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எந்த ஒரு காரியத்தையும் அசுர வேகத்தில் செய்துமுடித்துவிடும் திறமை, வலிமை இருக்கும்.

அந்த வலிமையின் வேகம் எந்த அளவுக்கு இருந்ததோ அந்த அளவுக்கு அவனிடம் புத்திக்கூர்மை இருப்பதில்லை. ஒருவன் பேச்சு வல்லமையில் "ஓஹோ'வென்று இருப்பான்.

அதே அவன் செயலில் பார்த்தால் அவன் ஆற்றிய செயல் கடுகு அளவுகூட இருக்காது. இப்படி மனித குணங்களில் ஒருவனுக்கு ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்காது. ஆனால் இராமாயண காவியத்தில் நடுநாயகனாக இருந்து பல அசுர சாதனைகளைப் புரிந்த ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமிக்கு மட்டும் எல்லாக் குணங்களும் ஒன்றுவிடாமல் அனைத்தும் ஒன்றாய்கூடி அவரிடம் சேர்ந்து இருந்தது.

Advertisment

மனித மனம் என்பது எப்போதும் ஏதாவது ஒரு சலனத்தை உண்டு பண்ணிக்கொண்டே இருக்கும். அது ஒரு குரங்குபோல இங்கும் அங்கும் தாவிக்கொண்டே இருக்கும். ஆனால் குரங்கு இனத் திலே பிறந்த ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு மட்டும் அங்கும் இங்கும் மன சஞ்சலம், மனமாற்றம் என்பது கொஞ்சம்கூட இருந்தது இல்லை. "பிறவிக்குணம் கடைசிவரைக்கும் போகாது' என்பது பழமொழி. ஆனால் ஆஞ்சனேயரின் குரங்கு இனக்குலத்திற்கு உண்டான எந்த குணமும் அவரிடம் இருந்ததில்லை; கிடையவே கிடையாது.

அவரிடத்திலே சாந்தம், அமைதி இருந்தது. ஆனால் எதனிடமும் மோகமில்லை. இந்திரியங்களை அடக்கும் சக்தி இருந்தது. ஆனால் எதனிடமும் ஆசை இல்லை. கூர்மையான அறிவு இருந்தது. அது நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இவர் புத்திமான் மட்டுமல்ல; சிறந்த இராம பக்திமானும் ஆவார். ஸ்ரீராமசேவை என்றால் ஆஞ்சனேயரைப்போல உண்மையான பயபக்தியுடன் அந்த இராமருக்கு வேறு எவரும் சேவை செய்திருக்க முடியாது. மனதைக் கட்டுப்படுத்தி, ஒரு வைராக்கியத்துடன் எந்த நேரமும் தனது "மைண்டை ஸ்ட்டியாக' வைத்துக்கொண்டிருப்பார். அதனால் இவர் எந்த காரியத்தை செய்தாலும், செய்து முடித்தாலும், அவர் செய்தது சரிதானா? என்று யோசித்துப் பார்க்கும்படி இருக்காது. மாறாக எடுத்த எடுப்பிலேயே அவர் செய்தது மிகச் சரியானதே என்று ஒப்புக்கொள்ளக்கூடிய அளவுக்கு அந்தக் காரியம் செய்து முடிக்கப்பட்டிருக்கும். ஸ்ரீ ஆஞ்சனேயர் ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால் அடுத்தடுத்து என்ன செய்யவேண்டுமோ அதை செய்துகொண்டு போய்க்கொண்டே இருப்பார். சாதனை புரிவதிலே இவருக்கு நிகரானவர் இவரேதான். கடல் எவ்வளவு பெரியது. அதைத்தாண்டி இருக்கிறார். சஞ்சீவி மலையை அடியோடு பெயர்த்தெடுத்து அதை அப்படியே தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார். இலங்கை எவ்வளவு பெரிய நகரம், அதை எரித்து, சுட்டுப்பொசுக்கி சாம்பலாக்கிவிட்டார். ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்திருந்த ஸ்ரீராமபிரானையும் அன்னை சீதாதேவியையும் சேர்த்து வைத்திருக்கிறார். தனக்கென்று எந்த சுயநலமும் தேடிக்கொள்ளாத இவர், தன்னுடைய காரியங்கள் அனைத்தையும் செய்துமுடிக்க இந்த வலிமையையும், வேகமும் ஸ்ரீராமபிரான் கொடுத்த பிச்சைதான் என்று அடக்கத்தோடு கூறுகிறார்.

புராண காலத்தில் "கின்னஸ்' சாதனையாளர் என்ற பட்டியல் இருந்திருந்தால் அதில் முதல் இடத்தில் இருக்கும் சாதனையாளராக ஸ்ரீ ஆஞ்சனேயர்தான் இருந்திருப்பார். அப்பேர்ப்பட்ட சாதனையாளர் இந்த ஆஞ்சனேயர்.

Advertisment

dd

இராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று அங்கு ஆஞ்சனேயரைப் பார்த்தவர்கள் இருப்பார்கள். இன்னொரு கையால் ஓங்கி அரைவதுபோலவும் இருப்பார். பார்த்தால் "அபயம்' என்பதுபோல இருக்கும்.

ஆனால் அதுவல்ல தத்துவம். "நான் ஸ்ரீராம காரியத்தை செய்துகொண்டிருக்கிறேன். ஆகவே சமுத்திர ராஜனே நீ இதற்குமேல் வராதே! ராட்சஸ அலைகளை எழுப்பாதே!'' என்று சமுத்திரராஜனுக்குக் கட்டளை இடுகிறார் என்பதே அதன் உண்மையான தத்துவம். சமுத்திரராஜனும் ஆஞ்சனேயருக்குக் கட்டுப்பட்டு இன்றுவரை அடங்கிப் போய் இருக்கிறார். அங்கே சமுத்திரம் ஒரு கடலைப்போல இல்லாமல் குளம்போல இருப்பதற்கு அந்தக் கையே காரணம்.

எனது நண்பர் ஒருவர் எந்த நேரமும் "ஆஞ்சனேயா' என்று பெயரை உச்சரித்துக்கொண்டே இருப்பார். படுக்கும்போதும் சரி- படுக்கையைவிட்டு எழுந்திருக்கும்போதும் சரி; இந்தப் பெயரை உச்சரிக்காமல் இருக்கவே மாட்டார். அதே போல தனது மகனையும் அப்படி சொல்லச்சொல்லி பழக்கினார். மிக ஏழ்மையான அவர், தனது பையன் முன்னுக்கு வந்தபின்புதான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவேண்டுமென்று ஆஞ்சனேயரை விடாமல் துதிபாடி காத்துக் கிடந்தார். காலமும் நேரமும் கணிந்து வந்தது. ஸ்ரீ ஆஞ்சனேயரும் அவருக்குக் கைகொடுத்து உயர்த்திவிட்டார். மகன் ஒரு பெரிய கம்பெனியில் வேலையில் சேர்ந்து லட்சக்கணக்கில் சம்பாதித்தான். இன்று அவர் வாழ்க்கை "ஓஹோ'வென்று உயர்ந்துவிட்டது. ஒரு "பீஸ் அப்மைண்ட்' அமைந்துவிட்டது. காரணம் ஆஞ்சனேயரை துதித்து முழுமையான பக்தி செலுத்தியதுதான்.

இந்தக் கலிகாலத்திலே ஒருவனைக் கரையேற்றுவது என்பது இறைவனின் பெயரை உச்சரித்து அவன் அருளைப்பெற வேண்டுமென்பது கட்டாயம். எவனொருவன் இறைவன் பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கிறானோ, அவனுக்கே நல்ல வாழ்க்கை அமைகிறது.

எனவே, இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணவும், முதியவர்கள் மோட்சத்தை அடையவும், "ஸ்ரீ ஆஞ்சனேயரின்' பெயரை ஓயாது உச்சரித்து அவர்மீது பக்தி செலுத்தி நன்மைகளை அடையலாம்.

அனுமத் ஜெயந்தி அன்று பக்தர்கள் ஆஞ்சனேயர் கோவிக்குசென்று அவருக்கு வடைமாலை, வெற்றிலைமாலை, வெண்ணெய் காப்பு என்று ஏதாவது செய்து, அவரை மனமாற வணங்கிவிட்டுவந்தால் அவர்கள் நினைத்த காரியம் வெற்றியடையும்; எண்ணம்போலவே எல்லாம் நடக்கும்.

ஜெய் ஆஞ்சனேயா!