ஏகன் ஆதனார் குருகுலத்தில் சிறப்பாகக் கற்பித்த இரும்புத் தொழில் என்பது துருப்பிடிக்காத வாள், கேடயம், ஈட்டி, சுருள்வாள் போன்றவற்றைத் தயாரிப்பதாகும். இங்கு தயாரிக்கப்பட்ட பொருட்கள் உலகப் பிரசித்திபெற்றவையாக இருந்தன. இத்துருப்பிடிக்காத இரும்பு செய்வதற்கான தொழில் முறையை, இந்த குருமடத்தார் மிக ரகசியமாக வைத்திருந்தனர். இங்கு செய்யப் பட்ட வாள் கடினத்தன்மையுடனும், எப்போதும் புதிதுபோல் துரு ஏறாமலும் இருந்தது. இதற்காக இரும்புடன் வெள்ளை பாஷாணத்தை ஒரு சதவிகிதம் சேர்ந்தனர்.
உருகிய இரும்புடன் வெள்ளை பாஷாணத்தை ஒரு சதவிகிதம் சேர்த்தால், அது துருப்பிடிக்காத இரும் பாக மாறிவிடும் என்பது இதுநாள் வரையிலும் இம்மடத்தில் ரகசியமாக வைத்திருக்கும் செய்முறையாகும். இவ்வாறான துரு ஏறாத இரும்புப் பொருட்கள் செய்வதற்காக, ஒரு பெரிய இடத்தில் இரும்பு உலையைச் சீராள குருமார்கள் உருவாக்கி வைத்திருந்தனர்.
அதுவே இன்று உலைப்பட்டி என்ற ஊராக மாறியுள்ளது. இது தேனி மாவட்டத்தில் உள்ளது. ஏகன் ஆதனார் குருமடத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து, அதை ஒரு இரும்புத் தொழிற்சாலையாக மாற்றி, போர்க்கருவிகளும் அனைத்துவித இரும்புச் சாமான்களும் செய்துகொடுத்துப் புகழ்பெற்றனர்.
ஏகன் ஆதனார் குருமடத்தில் கற்றுக் கொடுத்த போர்ப் பயிற்சிகளில் முக்கியமானது சுருள்வாள் வீச்சு. இது சிலம்பம் போன்ற தற்காப்புக் கலையாகும். இரண்டு கைகளிலும் இரண்டு சுருள் வாள்களைப் பிடித்து, சிலம்பம் போன்று தன் இருபுறமும் "8' வடிவத்தில் வீசத் தொடங்கி னால், நம் அருகே பத்தடி தூரத்திற்கு யாரும் வர இயலாது. அவ்வாறு வந்தால், அவர்களது அங்கங்கள் அறுபடும். இவ்வாளின் விளிம்போரங்களில் செங்காந்தள் கிழங்கிலிருந்து எடுக்கப் படும் ஒருவகை விஷச்சாந்து தடவப்பட்டு உலரவைத்திருப் பார்கள். இவ்வாளில் பகைவரின் உடல் வெட்டுப்படும்போது அந்த விஷம் ஏறி உடனடியாக மயக்க மடைந்துவிடுவார்கள்.
இவ்வாள் சுற்றும் பயிற்சியை ஒற்றர்களுக்கும் மடவைகளுக்கும் இம்மடத்தார் கற்றுக்கொடுத்தனர்.
இவர்கள் சிறந்த சுருள்வாள் பயிற்சி யடைந்த பின்னர், இதனைத் தங்கள் இடையில் சுற்றி வெளியே தெரியாதபடி மறைத்து, ஆடை அணிந்திருப்பர். தங்கள் உயிருக்கு ஆபத்து வரும்போது மட்டும் இதனை எடுத்துப் பயன்படுத்துவார்கள். தங்களைச்சுற்றி பத்துபேர் சூழ்ந்து வந்தாலும், தங்களை நெருங்காதபடி இதன்மூலம் அவர்களால் காத்துக்கொள்ள முடியும். கானகங்களினூடே பயணிக்கும்போது கழுதைப் புலிகள், கரடிகள், ஓநாய்கள், சிறுத்தைகள் எதிர்ப்பட்டால், இதனை எடுத்து வீசும்போது இச்சுருள்வாள் அவற்றின் அங்கத்தில் பட்டவுடன், அவை அலறியடித்து ஓடிவிடும். இவ்வாள் வீச்சை நிறுத்தியவுடன், அது ஒரு சாணுக்குள் சுருண்டுகொள்ளும்.
இதேபோல் இன்னுமொரு பயிற்சி, விஷ எறி ஊசி ஊதுகுழல் பயிற்சியாகும். நீண்ட மூங்கில் குழாயின் ஒரு முனையில் விஷ ஊசிவைத்து ஊதினால், அது ஐம்பது அடி தூரத்திலிருக்கும் எதிரியைக் குத்தும். இவ்வெறி ஊசியின் முனை, தூண்டில் முள்ளில் இருப்பதுபோல், கூர்மையான முனையின் ஒருபக்கம் பிளந்து காணப்படும். இதைப் பயன்படுத்த, நன்றாக மூச்சை இழுத்து வயிறு, நுரையீரல்களில் நிரப்பிக் கொண்டு, முடிந்த அளவு அதிக ஆற்றலுடன் ஊதவேண்டும். யானைமீதிருக்கும் அம்பாரி யில் இருப்பவர்களைக் குறிபார்த்து ஊதினால், அவர்களது உடம்பினுள் இது செருகினால், அதனைப் பிடுங்க இயலாது. பிடுங்கினால் சதையோடு வரும். இதில் தோய்ந்திருக்கும் விஷம் பகைவர்களது இரத்தத்தில் பட்டவுடன் மயக்கமடைவர்.
யானைப்படைகளை எதிர்த்துப் போராடும் காலாட்படையினர் இதனைப் பயன்படுத்தினர். யானைகளின் துதிக்கை மற்றும் நெற்றியில் இது குத்தினால் ஒருசில மணித்துளிகளில் யானை தன் நிலை தடுமாறும். இதற்கென வீரர்களுக்கு இம்மடம் முதலில் சிறந்த மூச்சுப்பயிற்சி கொடுத்தனர். இவர்களுக்கு முதலில் ஆயிரம் குன்றிமணி எடையுள்ள கல்லை, ஒரு மேடையில் அவர்களின் முகத்திற்கு நேரே வைத்து, அதனை அவர் கள் வாயில் ஊதி மேடையிலிருந்து விழச்செய்ய வைப்பார்கள். பின் அதேபோல் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு, நான்கு மடங்கு, ஐந்து மடங்கு எடையுள்ள கற்களை வைத்து ஊதி விழச்செய்யும் பயிற்சி தருவார்கள். இவ்வாறு ஒரே ஊதலில் ஐந்து மடங்கு எடையுள்ள கல்லை ஊதி விழச்செய்பவர்களால், ஒரு யானையை ஊது ஊசியினால் கொல்லமுடியும் என்பது குருமடத்தாரின் கணிப்பு.
இதேபோல் ஒருவனை பாலப் பருவத்திலிருந்து ஒரு சிறந்த குதிரைவீரனாக மாற்றுவதற்கு மரத்தாலான ஒரு குதிரையைச் செய்து, அது மேலும் கீழும் அசையுமாறு ஒரு பொறி அமைப்பார்கள். அக்குதிரையின் தலையில் ஒரு மரக்குச்சியைப் பொருத்தி, அதன் மேல்பகுதியில் ஒரு சேவலின் இரு கால்களை இறுக்கிக் கட்டிவிடுவார்கள். அம்மரக்குதிரையின் முதுகில், பயிற்சிபெறும் பாலகனை அமரவைத்து அக்குதிரைப் பொறியை இயக்குவார்கள். மரக்குதிரையின் தலை மேலும் கீழும் அசைந்தாடும். அப்போது அதன் தலைமீது கட்டப்பட்டிருக்கும் சேவலானது, அக்குதிரையின் அசைவைச் சமன்செய்து, தன் தலை மேலும் கீழும் அசையாதவாறு ஒரே மட்டத்தில் வைத்திருக்கும். இது சேவலின் தனிச் சிறப்பு. இதைப் பார்த்துப் பயிற்சிபெறும் பாலகன் சேவலின் தலையைத் தன் இரு கண்களுக்கிடையே பார்த்துக்கொண்டு, அச்சேவலைப்போல, மரக்குதிரை எப்படி அசைந்தாலும் தன் உடலை சமன்செய்துகொண்டு, சேவல் தலைக்கு இணையாகத்தன் தலையை வைத்துக் கொள்வதற்குப் பயிற்சி பெறவேண்டும்.
இப்பயிற்சியானது மிகக் கடுமையானதாக இருக்கும். மரக்குதிரைப் பொறியைப் பயிற்சியின் ஆரம்பத்தில் மெதுவாகவும், போகப் போக குதிரையின் அசைந்தாடும் வேகத்தை அதிகரித்தபடியும் செல்வார்கள். இப்பயிற்சியின்மூலம் குதிரைவீரன் தன் குதிரையை எவ்வளவு வேகமாக மேடுபள்ளங்களில் செலுத்தினாலும், தன் பார்வையிலுள்ள குறி தப்பாது நிலைபெறச் செய்வான்.
அடுத்ததாக, தன் குறியை மையப் படுத்தி, தன் வலதுகை அசையா மல், இடதுகையில் குதிரையை இயக்கி, தன் வலதுகையில் இருக் கும் ஆயுதத்தால் எதிரியைத்தாக்கும் பயிற்சியினை அளிப்பார்கள். இதற்காக, இடதுகையில் மரக் குதிரையின் கடிவாளத்தையும், வலது கையில் இரண்டு வளையங்களுக்கு ஊடே செருகப்பட்ட ஈட்டியையும் பிடித்திருக்குமாறு செய்வார்கள். குதிரை இயங்கும்போது அந்த ஈட்டியானது, வளையங்களில் பட்டு விடாதபடி அவற்றின் மையத்தில் பிடித்துக்கொள்ளவேண்டும்.
அடுத்த பயிற்சி, தன் குறியை ஈட்டியால் தாக்குவதற்கு, அசையும் குதிரையில் தன் இரு கால் பாதங்களின் பலம் முழுவதுதையும் செலுத்தி ஈட்டியை எறியவேண்டும். நாள்பட நாள்பட குறியிருக்கும் தூரத் தைக் கூட்டிக்கொண்டே போய், ஒரு காத தூரத்திலிருந்து தாக்கப் பழகித்தருவார்கள். அடுத்த கட்டமான உண்மையான குதிரை யேற்றப் பயிற்சி, வரும் இதழில் விவரிக்கப்படும்.
இனி மனிதனை உயர்ந்த நிலைக் குக் கொண்டுசெல்லக்கூடிய இல்லாள குருமார்களின் பணி களைக் காண்போம். பாடறப்பட்டது பண்பாடு. சமுதாயத்தில் மனிதன் எச்செயலைச் செய்தால் இழுக்கு நேருமோ அதைவிடுத்து, நன்மைபெறும் வகையில் வாழும்முறையைக் கற்றுக் கொடுத்தனர் இல்லாள குருமார்கள். இவர்கள் பண்பாடு, மருத்துவம், தமிழ் மொழி, கலைகள், இயல், இசை, நடன, நாடகத்துறைகளை மேம்படுத்தப்பாடுபட்டனர். உழைக்கும் மனிதர்களுக்கு ஓய்வும், ஓய்வைத் தொடர்ந்து புதிய ஊக்கத்தையும் அளிப் பவையாக இசை, நாட்டிய, நாடகத்துறை திகழ்ந்தது. பண்டைய இசையில் யாழ் எனும் இசைக்கருவி, இயல்பாக குறிஞ்சி நிலத்தில் வேட்டை சமுதாயத்திலிருந்து உருவாகியது.
வேடுவர் வைத்திருந்த வில்லிலிருந்து அம்பு சென்றவுடன், வில்லின் நாணில் ஏற்பட்ட அதிர்வு இசையாக மாறியது. வேட்டை முடிந்தபின் ஓய்வுநேரத்தில், அந்த நாணை விரல்களால் சுண்டிச் சுண்டி, அதற்கேற்ப பாடல் பாடும் பழக்கமும் உருவாயிற்று.
அப்பழக்கம் சீர்பட்டு, வில்லில் பல நாண்களைக் கட்டி மீட்டும் யாழின் முதல் வடிவம் தோன்றியது. அந்த இனிய ஓசையை ஓய்விற்காகக் கூடியிருக்கும் அனைவரும் கேட்டு மகிழும் வண்ணம், கூடாக இருக்கும் வளைவான மரத்தில் நாண்களைப் பொருத்தி இசைக்கும் முறையைக் கண்டறிந்தனர்.
இவ்விசைக்கலையை ஆர்வமிக்கவர்கள் விழுமிய கலையாக உருவாக்கினர். ஆகவே, முதன்முதலில் உருவானது குறிஞ்சி யாழ் ஆகும்.
இதேபோல் முல்லை நிலத்தில், புல் அல்லது வேணு என்ற சொல் மூங்கிலைக் குறிக்கும் சொல்லாக இருந்தது. மூங்கில் புதர்களில் வண்டுகள் நுழைந்து, அதனுள் காற்று மோதி உருவான இசை கேட்டு, புல்லாங்குழலை உருவாக்கினர். இதனைப் பின்னாளில் "வங்கியம்' என்ற பெயரில் அழைத்து, அதற்கு இலக்கணமும் வகுத்தனர்.
இதனைத்திறம்பட வாசிக்கும் இசைக் கலைஞனை "வங்கியத்தான், குழலோன்' என அழைத்தனர். முதலில் மெல்லிய மூங்கில் குழாயில் குழல் செய்தவர்கள், பின் சந்தனம், கருங்காலி, செங்காலி, வெண்கலம் போன்றவற்றைக்கொண்டு செய்தனர்.
இவ்வங்கியத்தை மூங்கிலால் செய்தால் உத்தமம் என்றும், வெண்கலத்தால் செய்தால் மத்திமம் என்றும், மரத்தால் செய்தால் அதமம் என்றும் கூறப்பட்டது. இதற்கான இலக்கணப்படி, ஒரு வங்கியத்தின் நீளம் இருபது விரற்கடை இருக்கவேண்டும் என்றும், சுற்றளவு நாலரை விரற்கடை இருக்கவேண்டும் என்றும், அதில் இடும் துளை நெல்லரிசியில் ஒரு பாதி இருக்கவேண்டும் என்றும், அதன் நுனிகளில் வெண்கலத்தால் பிடி போடவேண்டும் என்றும் (பூண் போடுதல்) நிர்ணயித் தனர்.
இருபது விரற்கடை நீளமுள்ள குழலில் வாய்வைத்து ஊதும் துளை, முனைப்பகுதியிலிருந்து இரண்டு விரற்கடை விட்டுத் துளையிடவேண்டும் என்றும், இத்துளையிலிருந்து ஏழு அங்குலம் விட்டு இரண்டு விரற்கடைவிட்டு, எட்டுத்துளைகள் இடவேண்டும் என்றும். அதில் முதல் துளைக்கு முத்திரை என்றும் பெயர் வைத்தனர். ஒவ்வொரு துளைக்கும் ஒருவிரலிடைப் பரப்பு இருக்கவேண்டும் என்றும் வரையறுத்தனர்.
இந்த ஏழு துளைகளில் இடக்கைப் பெருவிரல் நீக்கி, மீதி நான்கு விரல்கள் முதல் நான்கு துளைகளிலும், மீதமுள்ள மூன்று துளைகளில், வலக்கையின் பெருவிரல், சிறுவிரல் நீக்கி மூன்று விரல்களை வைக்கவேண்டுமென இலக்கணமிட்டனர். இதன்மூலம் இளி, விளரி, தாரம், குரல், தத்தம், கைக்கிளை, உழை என்ற எழுவகை இசைச் சுரங்களை விளைத்தனர்.
(இன்னும் விரியும்...)
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்