பழையன் மாறனிடம் குதிரை வணிகன் சொன்ன வார்த்தைகள் மாறனின் காதுகளை வந்தடைந்ததும், அவனது இதயம் உள்வாங்கிய இரத்தத்தால் வீங்கியவுடன், விரைவாக அதனை உச்சி முதல் பாதம்வரை மிகுந்த வேகத்துடன் பாய்ச்சியது. உடல் முழுவதும் சூடேறியது. மேலும், ஔவை அனுப்பிய செய்தியைக் காட்டிலும் இது பலமடங்கு வீரியமுடையதாக இருந்தது. ஔவை அனுப்பி வைத்த செய்திப்படி "எருமையூரன் பாண்டிய னின் படை மருங்கூர் துறைமுகப்பட்டினத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அங்கு நடைபெற விருக்கும் முந்நீர் பெருவிழாவின்போது பாண்டிய இளவலின் உயிருக்கு ஆபத்தான சதிவேலை களைச் செய்யவிருப்பதாகவும் உள்ளதால், இளவலை அங்கு அழைத்துச் சென்றுவிட வேண்டாமென்றும், அப்படி அழைத்துச் சென்றிருந்தால் இளவலைச் சுற்றிலும் நம்பிக்கை மிகுந்த மெய்க்காப்பாளர் களைக்கொண்டு இளவலுக்குத் தேவை யான முழு பாதுகாப்பைக் கொடுக்குமாறும்' அதில் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், இந்தக் காதறுந்த வணிகன் சொன்ன வார்த்தைகள், அதைவிட ஆபத்தானதாக இருந்தது என்பதால், மாறன் மிகுந்த மனக் கலக்கத்திற்கு உள்ளானான். அவன் சொன்னது என்னவெனில், சோழநாட்டுக் கப்பலில் "எம்மன்னன் "எவ்வி' வந்திருக்கின்றான்'' என்பதே. இங்கு எவ்வியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும். எவ்வி என்பவன் ஒரு வேளிர் மன்னன். இங்கு வேளிர் என்றால் என்னவென்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
நம் மனித இனம் வேட்டைக் குழுக்களாக இருந்து பயிர்த்தொழில் செய்ய ஆரம்பித்த பெருங்கற்காலத்திற்கு அடுத்த காலகட்டம். ஓரிடத்தில் நிலையாக இருந்து வேளாண் தொழில் செய்துவந்த தொல்குடிகளின் இரத்த உறவிலிருந்து வந்த அனுபவமும் ஆற்றலும் மிக்க அக்குடித்தலைவனுக்கு வேள் என்றும் வேளிர் என்றும் பெயர். சங்க காலத்திற்கு முன்பே வேளிர்கள் உருவாகியிருந்தனர். தமிழகம் முழுமையும் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்துவந்த ஒவ்வொரு தொல்குடிகளுக்கும் ஒரு "வேள்' இருந்தான். இவர்கள்தான் வேளாண் தொழிலில் பல்வேறுபட்ட பயிர்முறை, உழவுமுறை, பல்லியாடுதல், தாளியடித்தல், ஊடடித்தல், மடைபாசனம், ஆற்றுப்பாசனம், இயற்கை வேளாண்முறை, ஓரிடத்தின் நீர்மேலாண்மை, வணிகம், பானைமுடைதல், சுட்ட செங்கற்களால் மனை கட்டுதல் போன்றவற்றை உருவாக்கியவர்கள்.
இவர்கள் மிகுந்த செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவர்கள். இவர்களிடமிருந்து புதிய கலைகளும் தமிழர் பண்பாடும் வளர்ச்சியடைந்தது. இவர்கள் வீரம், மானவிறல், கொடைவள்ளல் தன்மை, விருந்தோம்பல், மடம்படாமை போன்ற உயர்வான தமிழ்ப் பண்பாட்டைக் கடைப்பிடித்துவந்தனர். இவர்கள்தான் திட்டமிடப்பட்ட நகர நாகரிகத்திற்கு அடித்தளமிட்டவர்கள். தற்சமயம் கீழடி அகழாய்வு இடத்தில் கிடைத்தது வேளிர்குழு வாழ்ந்த ஒரு வாழிடம்தான். இவ்வாறிருக்கும் ஒரு வேளிர் வாழிடத்திற்கும் மற்றொரு வேளிர் வாழிடத் திற்குமிடையே நிரந்தரமான போக்கு வரத்து வழித்தட சாலைகளை முதன் முதலில் உருவாக்கியவர்கள் இவர்கள் தான். தமிழகத்தில் முதன்முதலில் வாணிபத் தொழிலை உருவாக்கியவர் களும் இவர்கள்தான். இப்படிப்பட்ட வேள் ஆனவர்கள் ஒரு பெரும் நிலப் பகுதிக்கு தலைவனாகும்போது குறுநில மன்னன் ஆகிறான். இவர்களிடம் செல்வச் செழிப்பு அதிகரித்தபோது அயல்நாட்டு வாணிபத்தை உருவாக்கத் தொடங்கினார்கள்.
இவ்வாணிபத்திற்காகவும், தம் வாழ்வியலைப் பிறருக்கு விளக்குவதற்காகவும், தமிழ் பிராமி எழுத்து முறையை வடிவமைக்கக் கற்றுக்கொண்டனர். அந்தக் கால கட்டத்தில் செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம், தந்தம், முத்து, பவளம், மணிமாலைகள் போன்ற உயர்தர கலைப்பொருட்கள் உருவாக்கும் தொழில் மேம்பட்டது. மக்கள் புழக்கத்திற்கும் இவை எளிதாகக் கிடைக்கப் பெற்றன.
தமிழகத்தில் வாழ்ந்த முக்கிய வேளிர்கள், வேள்பாரி, ஆய், ஓரி, தகடூர் அதியமான், உறந்தையை ஆண்ட தித்தன் வெளியன், கரூரை ஆண்ட சாத்தவேள், விச்சிகோ, ஆந்தை, அந்துவன், இயக்கன் மாவேள், ஏகன் ஆதன், ஆதனழிசி, ஆய்வேள், அழுந்தூர்வேள், கூடல்வேள் ஆகுதை, அழும்பில் வேள், மையூர்கிழான், வேள்மான், வெளியன், தத்தன்வேள், புள்ளன்வேள், புடவூர் வேள்மான், அதியர் பெருமகன், அண்டர் மகன் குறுவழுதி, அகநானூற்றில் குறிப்பிடும் ஐம்பெரும்வேளிர் நெடுவேள், மாவேள், பெருவேள் போன்ற இன்னும் பலர். முருகப்பெருமானுக்கும் பெருவேள் என்ற ஆதித்தமிழ்ப் பெயருண்டு.
இவ்வாறு தமிழகம் முழுவதும் வேளிர் களின் பொற்காலமாக இருந்தபோது. தற்போதுள்ள மதுரையைச் சுற்றியிருந்த வயலக வேளாண்குடி வேள்களும், காராள வேளாண்குடி வேள்களும், நாட்டாற்றுப்புற வேளாண்குடி வேள்களும் கூடி ஒரு மிகப் பெரிய நகர அமைப்பை உருவாக்கினார்கள்.
சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட நான்கு மாடங்கள் உள்ள உயரமான வீடுகளைக் கொண்ட வாழிடப் புரட்சி செய்து, தமிழகமே வியக்கத்தக்க மிகப்பெரிய வாணிப நகரத்தை உருவாக்கினர். வேளிர்கள் ஒன்றுகூடி இந்நகரை உருவாக்கியதால், இதற்கு கூடல் மாநகர் எனப் பெயரிட்டனர். அனைத்து வீடுகளும் நான்கு மாடங்களைக்கொண்டு உருவாக்கப்பட்டதால், இது நான்மாடக் கூடல் என்றும் புகழப்பட்டது. ஆகவே, மதுரைக்கு கூடல் நகர் என்ற பெயர் உருவான தற்குக் காரணம் இதுதானொழிய, புலவர்கள் கூடியதால் இது கூடல் நகர் என்று அழைக்கப் படவில்லை. பாண்டியர் இதைத் தலை நகராக ஆக்குவதற்கு முன்பே, இது மிகச் சிறந்த வாணிபச் சந்தையூராகவும், பல பெரு வழிப்பாதைகள் வந்து கூடும் நகரமாகவும் இருந்தது.
இதேபோல் பாண்டியர்கள், சேரர்கள், சோழர்கள் ஆகியோர்களின் முன்னோர்கள், பெருநிலப் பரப்பையுடைய வேளாண்குடி வேளிர்களாக இருந்து, பின் தங்களது நிலப் பரப்பை விரிவுபடுத்தி, தங்களது செல்வ வளத்தால் தமிழர் சமுதாயத்தில் அவர்கள் இருந்த பகுதிக்கு, அரசியல் தலைவன் என்ற பொருளில் மன்னர் ஆனார்கள். அதன்பிறகு, தங்களது அரசை மேலும் விரிவுபடுத்த, தங்களைச் சுற்றியிருந்த வேளிர் அரசுகளைத் தங்கள் உடைமையாக்கி, மாமன்னன் அல்லது பேரரசன் எனப் பட்டம் சூட்டிக்கொண்டனர்.
இம்மூவரில் பாண்டியர்கள்தான் தமிழர் வரலாற்றில் முதன்முதலில் ஒரு நிலையான அரச அமைப்பை உருவாக்கியவர்கள்.
அன்றைய காலத்தில் இவர்கள் பெருவேள், நெடுவேள், நெடியோன் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர். முருகப்பெருமானுக்கு பெருவேள் என்ற பெயரும் உண்டு எனப் பார்த்தோம். அப்போதே ஔவை என்ற பேரறிவாளள் இருந்திருக்கின்றாள் என்பது வரலாறு.
அக்காலம்தொட்டே தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து தமிழறிஞர்களையும், கலை மற்றும் தொழில் அறிஞர்களையும், பல்வேறுபட்ட போர்த்திறன் கற்றவர்களை யும் அழைத்து, அவர்களுக்கு அவையங்கள் அமைத்து ஆய்வு செய்தவர்கள். குறிப்பாக தமிழ்மொழிக்காக தொன்றுதொட்டு அவையங்கள் அமைத்துப் பெருந்தொண்டு செய்தவர்கள். தமிழர்களின் வாழ்வியலையும் அவர்கள் வாழ்வியலோடு பிணைந்திருந்த நிலப்பரப்பு வகைகளையும் ஒன்றிணைத்து, அதைத் தமிழ் மொழியோடு இணைத்து, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வாழ்வியலை ஐந்தினைக்குள் வகைப்படுத்திய பேரறிவாளர்கள். தமிழர்களது போர்முறை களை, ஆதிகுடிகளாக வாழ்ந்த காலம்தொட்டு ஆய்வுசெய்து, அதனடிப்படையில் போர் முறைகளை இலக்கணப்படுத்தியவர்கள். ஒவ்வொரு பகுதிகளிலும் இசைத்த இசை யைப் பண்படுத்தி பண்களுக்கான இலக்கண மும் கொடுத்தவர்கள். அவர்கள் தமிழினம் முழுமைக்கும் 34 துறைகளிலும் ஒரே மாதிரி யான வாழ்வியலைக் கட்டமைக்க முயற்சித்த வர்கள்.
உதாரணமாக முல்லை நில மக்கள் "அருப் பம்' என்று அழைக்கப்படும் வட்ட வடிவ முற்செடியாலான அகன்ற வேலியை அமைத்து, அவற்றிற்குள் தங்கள் வீடுகளை அமைத்து, தங்களது குழந்தைகளையும், ஆடு, மாடுகளையும் பாதுகாத்துவந்தனர். இவ்வாறான வாழ்விட அமைப்பிற்கு அருப்புக் கோட்டை என்று பெயர். இப்படிப்பட்ட இடங்களிலிருந்து பிற கூட்டத்தார் ஆடு, மாடுகளைக் கவர்ந்து செல்லும் பழக்கமும், அவற்றை மீட்டெடுக்க, அது போராக இரண்டு அருப்புக்கோட்டைகளுக்கிடையே நடந்தது. இன்று விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை என்ற ஊர்ப்பெயர், சங்க காலத்திலிருந்த பழமையான பெயர்.
இதேபோல், "இளை' அல்லது "மிளை' என்று அழைக்கப்பட்ட காவற்காடுகளை மிகப்பரந்த வாழிட நிலப்பரப்பைச் சுற்றி உருவாக்கி, அவற்றிற்குள் இருக்கும் விளைநிலங்கள், மக்கள், வளர்ப்பு மிருகங்கள் போன்றவற்றை பிற பகுதியினர் கவர்ந்து சென்றுவிடா வண்ணம் கடுங்காவல் புரிபவர்களை இளையர் அல்லது மிளையர் எனப் பெயரிட்டு அழைத்தனர். இவர்களைப் பாண்டியர் அழைத்து, தகுந்த வெகுமதியளித்து, தங்கள் போர்த்திறன்களை மேம்படுத்தப் பயன்படுத்திக்கொண்டனர்.
ஊகம்புற்களால் வேயப்பட்டு அமைத்த வாழிடங்களைச் சுற்றி நெருக்கமாக வேற்கம்பு களைக் கொண்டு வேலி அமைக்கப்பட்ட குறும்புகளில் காவல்புரியும் குறும்பர்களை, தங்களின் காலாட்படை வீரர்களாகப் பணியமர்த்தி, அதற்கான வெகுமதி அளித்தனர். முதன்முதலில் அயல்நாட்டிலிருந்து குதிரைகளையும் அதற்கான குதிரை வீரர்களையும், குறிப்பாக யவன வீரர்களை யும் இறக்குமதி செய்திட்டவர்களும் பாண்டியர் களே.
அரணம் என்று சொல்லக்கூடிய வேற்கம்பு களாலும். விற்களாலும் வட்ட வடிவில் சூழப்பட்டு, அவற்றை அரணாகக்கொண்ட வாழ்விடங்களில் வாழ்ந்துவந்த தமிழ் முதுகுடியினர்களுக்கு அரணர் என்று பெயர். வேல் எறிதல், அம்பு எய்வதில் சிறந்த திறன் உள்ளவர்களைக் கண்டறிய, அவர்கள் வருடத்திற்கு ஒருமுறை "பூந்தொடை விழா' என்று அழைக்கப்பட்ட போட்டித் திருவிழாவை நடத்திவந்தனர். அவ்விழாவில் வெற்றியடைந்த அனைவரையும் பாண்டியர் தத்தெடுத்து, தங்களது யானைப் படை களில் யானைகள் மீதமர்ந்து போரிடப் பயன்படுத்திக்கொண்டனர். பொதிகை மலையிலிருந்து பாண்டியர் எல்லையிலிருந்த மேற்கு மலைத்தொடர்களில் பிடிக்கப்பட்ட யானைக் குட்டிகளுக்குப் பயிற்சி கொடுத்து, தங்களது போர் உத்திகளுக்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொண்டனர். மூவேந்தர்களில் முதன்முதலில் யானைப்படையை உருவாக்கிய வர்கள் பாண்டியர்களே.
அன்றைய தமிழகத்தில் சீறூர் என்று அழைக்கப்பட்ட ஓங்குநிலை மனைகள் அமைந்த ஊர்களும் இருந்தன. ஒழுங்கான தெருக்கள் அமைந்து பார்ப்பதற்கு அழகான சிற்றூராக உள்ள இவ்வூரில் வாழ்ந்த மக்களுக்குச் சொந்தமான கால்நடைகளை, மேய்ச்சல் முடிந்து தங்க வைப்பதற்கும், வாழ்வியல் சார்ந்த பண்டங்களை பாதுகாப்பாக வைப்பதற் கும் அவ்வூர் நிலப்பரப்பிற்கு வடகிழக்கு திசையில் பெரிய முனை என்று சொல்லக்கூடிய காப்பகம் (ஏஞஉஞரச) அமைத்திருப்பார்கள். அதில் காவல்புரியும் வீரர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஆடவர், மறவர் என்று பெயர். அவர்களைப் பாண்டியர் தங்களது கருவூல வெளிக்காவலர்களாக் கினர்.
மேலும், பாண்டியர்கள் முதற்சங்க காலத்திலிருந்தே துறைமுகப் பட்டினங்களும், கப்பற்கலன்களும் அமைத்து, கிரேக்க நாட்டிற்கு இணையான நாகரிக வளர்சியில் நிலைப்பெற்றிருந்தனர்.
அதனால், செல்வச்செழிப்பு அதிகளவு உருவாகி, இவற்றையெல்லாம் பயன்படுத்தி, தமது பேரரசை விரிவுபடுத்தத் துடித்த னர். அவர்களது கவனம் வளமான கூடல் நகர்மீது திரும்பியது. தம் முன்னோர் களின் மரணத்திற்குக் காரணமான கடல் கோள்கள் (சுனாமிப் பேரலை) தாக்கமுடியாத கூடல் நகரைத் தம் தலைநகரமாக வைத்துக்கொள்ள முடிவுசெய்தனர்.
அப்போது கூடல் மாநகர வேள், அதாவது அதன் தலைவனாக இருந்தவன் ஆகுதை. மிகுந்த கொடைத்தன்மை உடையவன். இவன், கூடல் மாநகரை செல்வச் செழிப்புமிக்க புகழுடைய நகரமாகவும், அனைத்துத் திசைகளிலிருந்து வரும் வணிகப் பெருவழிப் பாதை களின் மைய நகரமாகவும் உருவாக்கியதால், இந்நகருக்கு பேராபத்து சூழத் தொடங்கி யது.
நாகரிகம் தொடர்ந்து விரியும்.
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்