மாறுபட்ட சிந்தனைகள், எழுத்தாற்றல், பேச்சாற்றல் போன்ற பன்முகத் திறன் களோடு, தொலைநோக்குப் பார்வையுடன் வித்தியாசமான செயல்பாடுகளுடன் திகழ்கிறார் ஆர். ராஜேந்திரன்.
இளைய சமுதாயத்தை நல்வழியில் கொண்டுசெல்லும் மோட்டிவேஷன் ஸ்பீக்கராக இருப்பது இவரது தனிச் சிறப்பு.
முதியோர் இல்லம் நடத்திவரும் இவர் புதிய சிந்தனைகளை உருவாக்க இளைஞர்கள், இளம்பெண்கள் கொண்ட ஆராய்ச்சி மையம் ஒன்றையும் நடத்தி அதில் தலைமை ஆலோசகராக இருக்கிறார்.
இவற்றுக்கு எல்லாம் சிகரமாக ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி ஒன்றை கோவை அன்னூரில் நடத்திவருகிறார்.
ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி என்றாலும் திருக்குறள் ஒப்புவிக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி, தமிழ்மொழிப் பற்றை மாணவ- மாணவிகளிடம் மேலோங்கச் செய்து எல்லார்க்கும் உயர்தர கல்வி என்ற உன்னத லட்சியத்தோடு கல்விப்பணியில் ஈடுபட்டு மக்கüடம் நன்மதிப்பைப் பெற்று வருகிறார்.
சிந்தனையை மேம்படுத்தும் நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கும் இவரை நேரில் சந்தித்தபோது "எல்லாப் புகழும் எங்கள் குலதெய்வம் கோவை சூலூர் பெருமாள் கோவிலில் கம்பீரமாக வீற்றிருக்கும் திருவேங்கடநாதப் பெருமாளையே சேரும்' என்று அடக்கத்தோடு கூறிய ஆர். ராஜேந்திரன் தனது இளமைக்கால ஏழ்மை நிலையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
"பெருமாளின் பெரும்பல அருளோடுதான் எத்தனையோ வேதனை சோதனைகளைத் தாண்டி இன்று சாதனை கள், சந்தோஷம் அடைந்து வருகிறேன். பெருமாளின் அற்புதங்கள் என் வாழ்வில் பல உண்டு. என் வாழ்வு முழுக்கவே அற்புதங்கள் நிறைந்ததுதான். கண்கண்ட தெய்வங்களாக திகழும் மறைந்த என் பெற்றோர் சரஸ்வதி- இராமசாமி இருவரையும் தினமும் மனமார வேண்டி வணங்கிய பிறகே என் பணிகளை இன்றும் செய்துவருகிறேன்.
சிறுவயதில் ஒரு நாளைக்கு ஒருவேளை சாப்பாடு கிடைப்பதே பெரிய விஷயமாக இருந்தது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களைத் தூக்கிவிட்டதே குலதெய்வ பெருமாüன் அருள்தான்.
அம்மா சரஸ்வதி எங்கள் எதிர்கால நல்வாழ்விற்காக பல கோவில்களுக்கு நெடுந்தூரம் நடந்தே கால் வலிக்க சென்று வேண்டிவந்ததும், விரதங்கள் இருந்து பூஜையறையில் பெருமாளை வணங்கிய பிரார்த்தனைதான் நான் இன்று உயர்ந்த நிலையில் இருக்க உறுதியான காரணமாக இருக்கிறது.
பெருமாள் கருணை அருளால்தான் கஷ்டப்பட்டு படித்து நான் எம்.காம் பட்டதாரி ஆனேன்.
வறுமையை, பசியை முழுமையாக அனுபவித்தவன் நான். பள்ளிக்கு செல்லும் முன் சாப்பிட இரண்டு இட்லி மட்டுமே கிடைக்கும். அடிமட்டத் தில் இருந்துதான் முன்னுக்கு வந்தோம். சின்னஞ்சிறிய ஒரே அறையுள்ள வீட்டில்தான் நானும் என் உடன்பிறந்த சகோதரர்கள் மூவரும் தாய்- தந்தையும் குடி இருந்தோம்.
அம்மா சரஸ்வதியின் தீவிர பக்தியும், என் குழந்தைகள் நிச்சயம் எதிர்காலத்தில் நன்றாக வருவார்கள் என்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கையும், செயல்பாடுகளும், குலதெய்வ அருளும்தான் இன்று வரை எங்களுக்குத் துணை நிற்கிறது.
சுற்றுப்புறச் சூழல்கள் சிறிதும் பாதிக்காத படி எங்கள் தாய் வளர்த்தது பெரும் சாதனை! அதனால்தான் எங்களது பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு "சரஸ்வதி நகர்' என்று பெயரிட்டுள்ளோம்.
கொரோனா நேரத்தில் நானும் பலருடன் பேசிப் பழகிய காரணத்தால் கொரோனா பாதிப்பு வந்து உயிருக்குப் போராடி குலதெய்வ பெருமாள் அருளால் உயிர் பிழைத்தேன்.
தவறுகள் செய்யாமல் நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொண்டு, எண்ணங்கள் நன்றாக இருந்தால் நல்லதே நடக்கும் என்பேன்.''
"நாம் உண்மையான பக்தியுடன் கோவிலுக்குப் போகிறோமா அல்லது பயத்துடன் செல்கிறோமா என்ற தெளிவு முதலில் வேண்டும். தவறுகள் செய்துவிட்டு கோவில்களுக்கு சென்று வழிபட்டால் போதும் என்று நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். நம் எண்ணங்களை ஒழுங்குபடுத்தும் வரம் தெய்வம் நமக்குத் தந்துள்ளது. கோவிலுக்கு சென்றால் நாம் செய்வதில் எது சரி? எது தவறு? என்று நினைக்கவேண்டும். ஏமாற்றுவது, சூழ்ச்சி செய்வது, கபட நாடகம் ஆடுவது போன்ற எண்ணங்கள் நம்மிடம் உள்ளதா என்று சிந்திக்க வேண்டும். பொய் சொல்வதே சூழ்ச்சிதான். நமக்கு நம் காரியம் மட்டுமே நிறைவேறப் பேசுகிறோம் என்றால் நம் குழந்தைகளே நம்மை மதிக்காது. நமக்கு உள்ளே உள்ள எதிர்மறையான தீய எண்ணங்களை வெளியே கொண்டுவந்து விட்டுவிடும் இடமாக கோவில்கள் இருக்க வேண்டும். எப்படியெல்லாம் பிறரைப் பார்த்து பொறாமைப்படுகிறோம். நம்மிடமுள்ள குறைகள், தவறுகள் என்ன என்று கோவிலில் குறைந்தது இருபது நிமிடங்களாவது அமர்ந்து சிந்திக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் நம் எண்ணங்கள், செயல்பாடுகள் தூய்மையாகி கடவுளுடன் ஐக்கியமாகி விடுவோம். ஆகாயத்தில் பறப்பதைப் போன்ற சந்தோஷமான நிலைக்குப் போய்விடுவோம்'' என்றார் ஆர். ராஜேந்திரன் அற்புதமான அவரின் தெய்வீக வழிகாட்டும் சிந்தனைகளைக் கேட்டு மகிழ்ந்து விடைபெற்றோம்.
தொடர்புக்கு கைபேசி எண்: 95666 55804
-பேட்டி, படங்கள்: கண்ணபிரான்