கிராமப்புற தெய்வங்களில் முதன்மை தெய்வமாக மக்கள் வழிபடுவது பெண் தெய்வங்களைத்தான். மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதியம்மன், அங்காளம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், பச்சையம்மன், காளியம்மன், சோலையம்மன், எல்லையம்மன் இப்படி ஏகப்பட்ட பெண் தெய்வங்களை காலம் காலமாக நமது முன்னோர்கள் வழிபட அதை நாமும் பின்பற்றி வருகிறோம். நமது முன்னோர்கள் வாழ்ந்த காலம்முதல் பெண் தெய்வ வழிபாட்டுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர் என்பது நமது பலதமிழ் இலக்கியங்களில் நிறைந்து காணப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணங்கள் மனித உயிர்கள் அனைத்தையும் பெற்றெடுத்தவள் பெண் என்ற அடிப்படையிலும் அவளை தாயாகவும் என்றும் மாறாத- அழியாத கன்னித்தன்மை உடையவள் என்ற அடிப்படையில் கன்னி தெய்வமாகவும் பெண் தெய்வங்களை வழிபட்டுவருகிறோம். இந்த மரபு இந்திய தமிழகத்தில் மட்டுமல்ல; உலகில் பல்வேறு நாடுகளிலும் இருந்துவருகிறது.
மேலும் அம்மன் என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படும் பெண் தெய்வங்களை முதன்மைப்படுத்தியே ஒவ்வொரு குடும்பத்திலும் முதன்மை வழிபாடு செய்யப்படுகிறது. இதுவே தாய் தெய்வ வழிபாடு உருவானதற்கு காரணமாக அமைந்துள்ளது. மழை பொழிந்து மண்ணிலுள்ள உயிர்களை காப்பவள் மாரியம்மா, நதியாக ஓடி நஞ்சை புஞ்சைகளை செழிக்கவைத்து மக்களின் பசியை போக்குபவர் கங்கை அம்மன். தீமைகள் அண்டாதவாறு காப்பவள் எல்லையம்மா. இப்படி பெண் தெய்வங்களின் பெருமை கிராம மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒன்று. அதன் எடுத்துக்காட்டாக தான் நதிகளுக்குகூட காவிரி, கங்கை. யமுனை, சரஸ்வதி, கோதாவரி, துங்கபத்ரா, நர்மதா என பெயர்கள் உள்ளன. தமிழகத்தில் மாரியம்மனுக்கு அடுத்த நிலையிலுள்ள தெய்வம் காளியம்மன். இந்த தெய்வத்தையும் பரவலாக வழிபட்டு வருகிறார்கள். காளி என்று வேதங்களில் குறிப்பிடப்படும் தெய்வம் கோபா வேஷம் கொண்ட தெய்வமாக கருதி பணிந்து வணங்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பெண் தெய்வத்தை கொற்றவை என்றும் செல்லியம்மன் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இதில் கன்னி தெய்வ வழிபாடு சிறுதெய்வ வழிபாடு ஆக கருதப்படுகிறது. கன்னி என்ற சொல்லிற்கு பூப்படைந்து திருமணமாகாத கன்னித்தன்மை இழக்காத பெண் என்று அர்த்தம். இப்படிப்பட்ட பெண்கள் அகால மரணம் அடைந்துவிட்டால் அவர்களை கன்னித்தெய்வமாக வைத்து வழிபட்டு வருகிறார்கள். இறந்த கன்னிப்பெண் வழிபாடுகள்மூலம் தங்கள் குடும்பத்தினருக்கு வளர்ச்சியையும் பாதுகாப்பையும் அந்த தெய்வம் அளிப்பதாக அசைக்க முடியாத நம்பிக்கை கிராமப்புற மக்களிடம் உள்ளது. பொதுவாக ஒரு வீட்டில் 4 மூலைகளிலும் தென்மேற்கு பகுதியை கன்னிமூலை என்றும் தென்கிழக்கு பகுதியை அக்னி மூலையில் என்றும் வடகிழக்கு பகுதியை ஈசானி மூலையில் என்றும் வடமேற்கு மூலை வாயு மூலை என்றும் வாஸ்து சாஸ்திர முறையில் கூறப்படுகிறது. இதில் கன்னிமூலை (கணபதி) பகுதியை தெய்வத்திற்கு உரிய இடமாக கருதி வழிபட்டுவருகிறார்கள். இதுவும் மரபு சார்ந்த பழக்கமாக இருந்துவருகிறது.
இப்படிப்பட்ட கன்னி தெய்வங்கள் ஏழு. இந்த தெய்வங்களுக்கு குடும்பத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் முதலில் அம்மனுக்கு பங்களிப்பு செய்து வழிபட்டபிறகே குடும்ப சுப நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட பெண் தெய்வங்களின் பெயர்களை தங்கள் குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு சூட்டுகிறார்கள். செல்லியம்மன், மாரியம்மன், பச்சையம்மன், பூவாயி அம்மன் இப்படிப்பட்ட பெயர்களைவைத்து அழைப்பதன்மூலம் தங்கள் தெய்வத்தை சதா நேரமும் தங்கள் மனதில் நிலைநிறுத்திகொண்டு இருப்பதாக கருதுகிறார்கள். இப்படிப்பட்ட கிராமப்புற தெய்வங்களை தங்கள் குலதெய்வமாக வழிபடும் மக்கள் மிக அதிகம். இதற்கு பல்வேறு காரண காரியங்கள் அடங்கியுள்ளன. தங்கள் மூதாதையரின் வழித்தோன்றல்கள். இவர்கள் இளம் வயதில் மன்னர்கள் படைப்பிரிவில் சேர்ந்து போரில் வீரமரணம் அடைந்திருப்பார்கள்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களை நினைவுகூறும் வகையில் தெய்வமாக வைத்து வழிபடுகிறார்கள். இதுபோன்ற தெய்வங்களை ரத்த கலப்பு உள்ளவர்கள் அவர்களது வாரிசுகள் பல தலைமுறை தாண்டிய சொந்தங்கள் பல குடும்பங்களாக கிளைகளாக பிரிந்துசென்று பல பகுதிகளில் பறந்து பிரிந்துவாழ்ந்தாலும்கூட ஆண்டுக்கு ஒருமுறை ஒன்றுகூடி குலதெய்வ கோவிலில் கூடி வழிபாடு நடத்துகிறார்கள் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, சிரித்து பேசி, சந்தோஷமாக இருப்பதற்கும் ஒற்றுமைக்கும் வழிவகுக்கிறது குலதெய்வ வழிபாடு.
இப்படிப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்திற்குள் பெண் எடுக்கவோ- கொடுக்கவோமாட்டார்கள். காரணம் பங்காளிமுறை, தென் மாவட்டங்களில் இப்படிப்பட்ட பங்காளிமுறை குலதெய்வ வழிபாடு செய்யும் சில சமூகத்தினர் ஆண்டுக்கு ஒருமுறை மகா சிவராத்திரியின்போது குலதெய்வக் கோவில்களில் ஒன்றுகூடி சிறப்பு வழிபாடு செய்யும் பழக்கம் தற்போதும் வழக்கத்திலுள்ளது. இப்படி வழிபடுபவர்கள் "மாசிப்பிச்சை கும்பிடு'' என அதற்கு பெயர் குறிப்பிடப்படுவதுண்டு. இப்படிப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தில் நடத்த உள்ள சுபநிகழ்ச்சிகளுக்கு குலதெய்வத்திடம் உத்தரவு கேட்பார்கள். அதற்காக துண்டு சீட்டு எழுதி அதை குலுக்கி போட்டு சிறு குழந்தைகளை விட்டு சீட்டை எடுத்து அதன்மூலம் கிடைக்கும் உத்தரவையே நடைமுறைப்படுத்துகி றார்கள்.
ஊரில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு உரிய எல்லை தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட தெய்வங்கள் வடக்கு திசையினை நோக்கி அமர்ந்திருப்பது அதிகம். இப்படிப்பட்ட கிராமப்புற தெய்வங்களுக்கு நிச்சயம் பல உண்மையான கதை சம்பவங்கள் இருக்கும். இவை காலப்போக்கில் வளரும் சமுதாயத்தினர் தெரிந்துவைத்து கொள்ளாததினால் அவை மறைந்து வருகின்றன. இதனால் அந்த தெய்வங்களுக்கு உரிய உண்மையான கதைகள் வழிபாட்டுமுறைகள் வரும்கால சந்ததிகளுக்கு தெரியாமல் மறைந்து போய்விடுகின்றன. எனவே ஒவ்வொரு சமூகத்தினரும் தங்கள் தங்கள் குலதெய்வ வழிபாடு, அந்த தெய்வங்கள், சம்பந்தப்பட்ட கதைகள், செவிவிழி கதைகள் ஆகியவற்றை தங்கள் முன்னோர்களிடம் கேட்டு அவசியம். தெரிந்து வைத்திருப்பது மிகமிக அவசியம். அப்போதுதான் வருங்கால சந்ததிகள் நமது முன்னோர் கள் இந்த தெய்வத்தை எதற்காக கும்பிட்டார்கள் அதன்மூலம் என்ன பலன்வழிபாட்டுமுறை எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ளமுடியும் பெரும்பாலும் எல்லை தெய்வங்களின் கைகளில் கூர் தீட்டிய ஆயுதங்கள் இருக்கும்.
இதற்கு காரணம் ஆதி தமிழர்கள் முக்கிய தொழிலாக இருந்தது வேட்டையாடுவது அதன் வெளிப்பாடாக இந்த தெய்வங்களுக்கு வேல், அறிவாள், கத்தி, சூலம், ஈட்டி ஆகிய கூர்மையான ஆயுதங்களைக்கொண்டு சிலைகளை வடித்துள்ளனர். கிராமப்புறங்களிலுள்ள நமது தெய்வ வழிபாடுகளின்போது அடுத்தடுத்த வீட்டில் உள்ளவர்கள் பக்கத்து வீட்டுக்காரர் இப்படி பேசாமல் இருப்பவர்களைகூட உறவு பெயர் சொல்லி அழைக்கும் இணைக்கும் பாலங்களாக கிராம குலதெய்வங்கள் இருந்துவருகின்றன. குலதெய்வ வழிபாட்டில் ஒருவருக்கு ஒருவர் ஏற்பட்டுள்ள பகைமையை மறந்து ஒன்று கூடும் பழக்கம் தமிழக குடும்பங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது. பெண் தெய்வங்கள் அரக்கர்களை, அசுரர்களை அழித்தவர்கள். அப்படிப்பட்ட பெண் தெய்வங்களுக்கு யுத்தத்தில் உதவியாக இருக்க அவர்கள் உடலில் இருந்து வெளிப்பட்ட ஏவல் படை தெய்வங்கள். கருப்பையா, முத்தையா, பூமலையப்பா. செம்மலையப்பா, முனியப்பா என ஏவல் தெய்வங்கள் எண்ணிக்கை நீண்டுகொண்டே செல்லும்.
பெரும்பாலான பெண் தெய்வங்களின் பூஜையின்போது ஆராதனைகள் 90 சதவீத பெண் தெய்வங்களைப் பற்றியே இருக்கும். பெண் தெய்வங்களின் சக்தி அபிராமிதமானது. அவற்றில் சில தெய்வங்கள் ஆகம வழிமுறையில் வழிபடப்படுகின்றன சில தெய்வங்கள் ஆகம முறையில் வழிவிடாமல் தங்கள் இஷ்டப்படி வழிபடுகிறார்கள். கிராம கோவில்களுக்கும் குலதெய்வ கோவில்களுக்கும் கால நேரம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் அந்த தெய்வங்களை வழிபடலாம். காரணம் அவர்கள் நமது முன்னோர்கள் வழிவந்தவர்கள். நமது குடும்பத்திலுள்ள முன்னோர்கள் நாம் செய்யும் தவறுகளை பொருட்படுத்த மாட்டார்கள்; மன்னிப்பார்கள். அவர்கள் நாம் நன்றாக வாழவேண்டும். நம் சந்ததிகள் செழிக்கவேண்டும் என்பதற்காக எதையும் விட்டுக் கொடுப்பார்கள். தவறுகளை பெரிது படுத்தமாட்டார்கள். அந்த வகையில்தான் கிராம தெய்வம் குலதெய்வம் ஆகியவற்றை வழிபட விதிமுறை வழிமுறை நல்ல நாள், நல்ல நேரம், கெட்ட நேரம் எதையும் பார்க்கவேண்டியது இல்லை என்கிறார்கள் முன்னோர்கள். கிராம தெய்வ குலதெய்வ வழிபாடு செய்தால்தான் பெரும் தெய்வங்களின் ஆசியும் அருளும் கிடைக்கும்.
இப்படிப்பட்ட கிராமபுர தெய்வங்களின் வழிபாட்டு மரபுகளை சிலர் மூடத்தனமான பழக்க வழக்கங்கள் என்று கூறுகிறார்கள். அது மிகப்பெரிய தவறு. குலதெய்வத்தை வழிபடுபவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இன்பங்கள் துன்பங்கள், அழிவுகள் ஆகியவற்றைக் கண்டு நொறுங்கிப் போய்விடாமல் தங்களை தற்காத்துக் கொள்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள் தற்போதய அறிவியல் வெளிப்பாடுகள் தாக்கங்கள் இல்லாமல் தங்கள் வாழ்வியலை மகிழ்ச்சி படுத்திக்கொள்ளும் விதமாக குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் இனக்குழு மக்களிடையே நிகழ்ந்துவரும் வழிபாட்டு முறைகளும் மரபுகளும் அவர்களது நம்பிக்கைகளும் சமூக பண்பாட்டின் வரலாற்றின் பதிவுகள் என்பது மறுக்க முடியாத உண்மை.
இறைவனையும் மனிதர்களையும் இணைப்பது கோவில். ஒரு கோவிலில் அம்மன் தின்று கோலத்தில் இருந்தபடி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருந்தார். விதவிதமான கோரிக்கைகளோடு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர் இந்த அம்மன் கோவிலை காவல் பணி செய்வதற்காக ஒரு காவலாளி இருந்தார். அவர் தினசரி 24 மணி நேரமும் நின்று கொண்டே இருக்கிறாளே.
அம்மன் அவளுக்கு கால்கள் வலிக்குமே என்று காவலாளி கவலைப்பட்டார். ஒருநாள் கோவில் நடை சாத்தப்பட்ட பிறகு அம்மனிடம் சென்று வணங்கிய காவலாளி அம்மா தாயே 24 மணி நேரமும் நின்றுபடியே பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறாயே, உனக்கு கால்கள் வலிக்குமே, சற்று அமர்ந்து ஓய்வெடுக்க கூடாதா என்று மிகுந்த கவலையோடு கேட்டார். கால் வலிக்கத்தான் செய்கிறது இருந்தாலும் என்னை தேடிவரும் பக்தர்களை. நான் பாதுகாக்கவேண்டும் அல்லவா. அதற்காக கால்வலியை பொறுத்துக்கொண்டு நிற்கிறேன் என்றாள் அம்மன். அப்போது காவலாளி அம்மா உன் கால்கள் வலிப்பது கண்டு என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது.
ஒருநாள் உனக்கு பதிலாக என்னை உருமாற்றி மூலவராக நிற்கவை. அதற்கு பதில் நீ என்னை போன்ற காவலாளியாக அமர்ந்து இளைப்பாறலாமே என்று காவலாளி கேட்க, உடனே அம்மன் பக்தா எனக்கு பதில் நீநிர்ப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் சிலை வடிவில் எனக்கு பதில் நீ ஆடாமல், அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களுக்கு புன்னகையுடன் ஆசி வழங்கினால் மட்டும் போதும். பக்தர்கள் என்னவிதமான கோரிக்கைகள், விருப்பங்களை கேட்டாலும் நீ வாய் திறந்து பதில் சொல்லக்கூடாது. சாமி விக்ரகம் என்பதை மனதில் வைத்துக்கொள்ள மறந்துவிடக்கூடாது. நான் கூறியபடி ஆடாமல் அசையாமல் இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தது அம்மன்.
நிபந்தனையை ஏற்றுக்கொண்ட காவலர் அம்மனுக்கு பதிலாக கோவில் கற்பகிரகத்துக்குள் அம்மனாக மாறி நின்றபடியே ஆசி வழங்க ஆரம்பித்தார் காவலர். முதலில் வந்தவர், செல்வந்தரான ஒரு பக்தர். அவர் அம்மனிடம் என் வியாபாரம் மேலும் மேலும் பெருக வேண்டும். மிக அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று கூறியபடி தன் கக்கத்தில் வைத்திருந்த பணப்பையை அருகில் வைத்துவிட்டு ஒரு சிறு தொகையை அம்மன் உண்டியலில் காணிக்கையாக செலுத்திவிட்டு கீழே வைத்த பையை எடுப்பதற்கு மறந்துவிட்டுவிட்டு சென்றார்.
அம்மன் வேடத்தில் நின்றுகொண்டிருந்த காவலர் இதைபார்த்துக் கொண்டே இருந்தார். அம்மன் போட்ட நிபந்தனை காரணமாக வியாபாரியிடம் நீ பணப்பையை மறந்துவிட்டு செல்கிறாயே என்று கூற முடியவில்லை.
சற்று நேரம் கழித்து ஒரு வறுமை நிலையிலுள்ள ஒரு ஏழை பக்தர் அங்கு வந்தார். அவரும் அம்மனை வேண்டிக்கொண்டு நான் பெரும் கஷ்டத்தில் இருக்கிறேன் அம்மா. என்னை எப்படியாவது வாழவை வசதி வாய்ப்பைகொடு. எனக்கு வசதியை அதிகப்படுத்தி கொடுத்தால் உனக்கு பெருந்தொகையை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறேன் என்றும் உன் நன்றியை மறக்கமாட்டேன் என்று கோரிக்கை வைத்துவிட்டு தன்னிடமிருந்து ஒரு ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டு அம்மனை நினைத்தபடி மனமுருக வேண்டி கண்களை மூடி பிரார்த்தனை செய்துவிட்டு அந்த ஏழை கண்ணை திறந்து பார்த்தபோது அவர் அருகில் செல்வந்தர் தவறவிட்ட பணப்பை அவரது கண்களில் பட்டது. பையை எடுத்து திறந்து பார்த்ததும் உள்ளே பணம் மற்றும் தங்க காசுகள் என நிறைய இருந்தன. உடனே அந்த பக்தர் அம்மன் தன் பிரார்த்தனைக்கு செவிமடுத்து இதை தனக்கு கொடுத்திருப்பதாக எண்ணி அதை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
இதையும் அம்மன் இடத்தில் நின்ற காவலர் பார்த்துக்கொண்டு நின்றார். சிறிது நேரம் கழித்து ஒரு கப்பல் வியாபாரி அங்கே வந்தார். அவர் அம்மனிடம் நான் நீண்ட தூரம் கப்பல் பயணம்செய்ய இருக்கிறேன். எனக்கு எந்த ஆபத்து நேராமல் நீதான் தாயே என்னை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அம்மனை வணங்கினார். அதே நேரம் பணப்பையை கோவிலில் தொலைத்த செல்வந்தர் காவலர்களுடன் அங்கு வந்தார். கப்பல் வியாபாரி அம்மனிடம் பிரார்த்தனை செய்வதை பார்த்து இவர்தான் என் பணப்பையை எடுத்திருக்கவேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள் என்று காவலர்களிடம் கூற காவலர்களும் அந்தக் கப்பல் வியாபாரியை அழைத்துச்செல்ல முயன்றனர். அப்போது செல்வந்தர் அம்மாதாயே என் பணத்தை எடுத்த நபரை அடையாளம் காட்டியதற்கு நன்றி என்று கூற அம்மனுக்குப் பதில் மூலவராக நின்ற காவலாளி இதற்குமேல் என்னால் பொறுக்கமுடியாது.
அப்பாவியான ஒரு மனிதரை தண்டிக்கவிடலாமா கூடாது என முடிவுசெய்த காவலர் செல்வந்தரிடம் பக்தரே உனது பணப் பையை எடுத்தது வேறு ஒரு நபர். கப்பல் வியாபாரி எடுக்கவில்லை என்று கூற அம்மனே நேரடிசாட்சியாக கூறியதைக்கேட்டு கப்பல் வியாபாரியும் செல்வந்தரும் மெய்சிலித்து போனார்கள். நடந்த உண்மைகளை அவர்களிடம் அம்மன் உருவத்தில் இருந்த காவலாளி கூற அவர்கள் அம்மனுக்கு நன்றி கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
அன்றைய பூஜைகள் நிறைவடைந்து கோவில் நடை சாத்தப்படுகிறது. அம்மன் கருவறைக்குள் வந்தார். அம்மனாக நின்ற காவலாளியிடம் இன்றைய பொழுது எப்படி இருந்தது. என்று கேட்க, காவலர் மிகவும் கடினமாக இருந்தது. தாயே உன் வேலை எவ்வளவு கடினமானது என்பதை நான் புரிந்துகொண்டேன். பல விஷயங்களை கற்றுக்கொண்டேன் ஆனால் தாயே நான் ஒரு நல்ல காரியம் செய்தேன் என்று அன்று காலைமுதல் கோவிலில் நடந்ததை காவலர் அம்மனிடம் கூறினார். இதைக்கேட்டு அம்மன் கடும் அதிர்ப்பு அடைந்தார். என்னம்மா நான் செய்த விஷயங்களை கேட்டு என்னை நீங்கள் பாராட்டுவீர்கள் என்று பார்த்தால் என்மீது கோபப்படுகிறீர்களே என்று காவலர் கேட்க, அப்போது அம்மன் நான் போட்ட நிபந்தனைப்படி நீயே நடந்து கொள்ளவில்லை. ஆடாமல், அசையாமல் நின்றபடி பக்தர்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என்றுதானே. கூறியிருந்தேன்.
அதை நீ மீறலாமா. என்மீது உனக்கு நம்பிக்கை இல்லை. இங்கு என்னை வணங்க வரும் பக்தர்கள் ஒவ்வொருவரின் மனநிலையை அறியாதவளா நான். செல்வந்தன் எனக்கு உண்டியலில் அளித்த காணிக்கை அவன் தவறான வழியில் சம்பாதித்த பணம். அவன் சேர்த்து வைத்துள்ள செல்வத்தில் ஒரு துளிதான் எனக்கு காணிக்கையாக கொடுத்தான். ஆனால் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்ற செல்வத்தை நான் தரவேண்டும் என்று என்னிடம் வேண்டுகிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் இருந்த ஒரே ஒரு ரூபாய். இருப்பினும் என்மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அவன் கொடுத்து ஒரு ரூபாயை அன்போடு ஏற்றுக்கொண்டேன்.
மேலும் இந்த சம்பவத்தில் கப்பல் வியாபாரிமீது தவறு எதுவும் இல்லை. இருந்தாலும் இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி அவன் கப்பலில் பயணம் செய்தால் விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போய்விடுவார்கள். அதிலிருந்து அவனைக் காப்பாற்றவே தற்காலிகமாக திருட்டுப்பட்டும் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அதையும் கெடுத்துவிட்டாய். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரிதான். அதை அவன் நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான். இதன்மூலம் அந்த செல்வந்தனின் கர்மா பாவப்பலன் ஓரளவாவது குறையும். அதையும் கெடுத்துவிட்டாயே. இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் எப்படி ரட்சிக்கிறேன். ஆனால் நீயோ என் எண்ணங்களை அறியாமல் உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்தி விட்டாய் என்று அம்மன் கூற காவலர் அம்மனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து தாயே என் தவறுக்கு மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார். காவலாளியிடம் இப்போது புரிந்துகொள். நான் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் நிகழ்வுகளுக்கும் வேறு வேறு காரணங்கள் இருக்கும். அதை உன்னைப் போன்ற மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது அவர்களது நலன் வேண்டியே நான் ஒவ்வொரு பொழுதையும் கழிக்கிறேன் அவர்கள் செய்த நல்வினை தீவினைகளின்படி அவர்களுக்கான பலன்களை அளித்துவருகிறேன். நான் பக்தர்களுக்கு கொடுப்பதிலும் கருணை இருக்கும். கொடுக்க மறுப்பதிலும் காரணம் இருக்கும் என்று அம்மன் புன்னகைத்தபடியே காவலாளிக்கு விளக்கம் அளித்தாள்.
இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க செல்லியம்மன் அதன் பரிவார தெய்வங்களும் குடிகொண்டிருந்த தங்கள் கிராம கோவில் சிதிலமடைந்து இருந்ததை கண்டு வேதனை அடைந்த தி. இளமங்கலம் கிராம மக்கள் ஊர் முக்கியஸ்தர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமசாமி அவர்கள் தலைமையில் பல லட்சங்கள் செலவு செய்து தங்கள் ஊர் தெய்வமான விநாயகர், செல்லியம்மன், பூரணி பொற்க்கலையுடன் அய்யனார், மாரியம்மன், சப்த கன்னிமார்கள், கருப்புசாமி, சங்கிலி வீரன், நாக கன்னியம்மன், ராகு- கேது ஆகிய தெய்வங்களுக்கு புதிய ஆலயங்கள் எழுப்பி பல ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள கடந்த 24-5-2023 அன்று மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப் பாக நடத்தினார்கள்.
இது குறித்து ஆலயம் உருவாக காரணமாக இருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி தசரத மன்னனின் குலகுரு வதிர்ஷ்ட முனிவர் அவர் எங்கள் பகுதியில் வாழ்ந்துள்ளார். அவர் உருவாக்கிய வைத்தியநாத ஈஸ்வரர் கோவில் அவரது அடையாளமாக திட்டக்குடி நகரின் மைய பகுதியில் திகழ்கிறது. நகரத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது எங்கள் இளமங்கலம் கிராமம். இங்கு கிராம தெய்வமாகவும் இங்கிருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஆத்தூர், சிங்கிலியன் கோம்பை, சேலம் வரகூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றவர்கள் எங்கள் கிராம தெய்வத்தை குலதெய்வமாக வந்து வழிபட்டு செல்கிறார்கள். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒப்புதலோடும் எங்கள் திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சிவி கணேசன் அவர்களின் வழிகாட்டுதல்படியும் திட்டக்குடி அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவப்பிரகாசம், ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, பணியாளர்கள் புருஷோத்தமன், ராஜசேகர் இவர்களின் முழுஒத்துழைப்போடு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழா குழுவில் இடம்பெற்ற கவுன்சிலர் மகேஸ்வரி பழனிச்செல்வம், புலேந்திரன், கூத்தப்பன் குடிக்காடு சசிகுமார், இளமங்கலம் முன்னாள் எம்எல்ஏ குமாரர் செல்வகுமார், பிரபாகரன், ராதாகிருஷ்ணன், ஆண்டாள், கொளஞ்சி, பன்னீர்செல்வம், முருகேசன், கலாமணி, ரகு, ராதாகிருஷ்ணன், பரமசிவம், செல்லப்பெருமாள், முத்துவேல், வெங்கடேசன், அரவிந்தன், ரங்கராஜ், கொரக்கை கிராம நிர்வாக அலுவலர் தங்கவேலு மற்றும் எங்கள் இளமங்கலம், கூத்தப்பன் குடிக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆன்மிக பக்தர்கள் பொதுமக்கள் ஆதரவும் பொருளாதார ஒத்துழைப்பும் அளித்து கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற பேருதவி புரிந்துள்ளனர். கோவில் திருப்பணிக்கு மேலும் பலர் உதவி புரிந்துள்ளனர். சிற்ப வேலைகளை சிறப்பாக செய்துகொடுத்த கீரப்பாளையம் சிற்பி கார்த்திகேயன் குழுவினர், சிறப்பான வகையில் ஆச்சாரியார்கள் யாகம் வளர்த்து கும்பாபிஷேகம் நடத்தி கொடுத்த புவனகிரி அர்ச்சகர் ஆனந்தகுமார் சிவா குழுவினர். இவர்கள் அனைவருக்கும் எங்கள் கிராமத்தின் சார்பாக நன்றி தெரிவித்துகொள்கிறோம். இக்கோவில் தெய்வங்களின் அருளாசி அவர்களுக்கு எப்போதும் உண்டு என்கிறார் ஆசிரியர் ராமசாமி.
ஆனால் சராசரி மனிதர்கள் தங்கள் வேண்டியதை தெய்வங்கள் கொடுக்கவில்லையே என்று சிலர் வருந்து வார்கள். தெய்வம் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு நன்றி மறப்பவர்களும் அதிகம். ஆனால் எல்லாவற்றையும் சமநோக்கில் இருந்து தெய்வங்கள் அருளாட்சி செய்கிறார்கள். அப்படிப்பட்ட சக்திவாய்ந்த செல்லியம்மன், பூரணி பொற்கலையுடன் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் அமர்ந்து பக்தர்களை காத்து அவர்களுக்கு வேண்டிய பலன்களை அளித்துவருகிறார்கள். இவ்வாலய தெய்வங்கள் நியாயமான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவும், குழந்தை வரம் வேண்டி, திருமணத் தடை நீக்ககோரி, கடன் பிரச்சனையிலிருந்து மீண்டுவர, நீண்டநாள் நோய் நொடியால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கி நலம்பெற, இவ்வாலயம் வந்து வழிபட்டு நிவர்த்தி அடைகிறார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இங்குள்ள அரச மரத்தையும் விநாயகர் ராகு- கேது பகவானை தினசரி காலை 108 முறை சுற்றிவந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு. இப்படிப்பட்ட சக்திவாய்ந்த செல்லியம்மன் அய்யனார் பரிவார தெய்வங்கள் அமைந்துள்ள இடம் கடலூர் மாவட்டம் ராமநத்தம் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் திட்டக்குடியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் மேற்கில் நீதிமன்றம் அரசு பணிமனை தீயணைப்புத்துறை வற்றுக்கு எதிரே அமைந்துள்ளது. திட்டக்குடியில் இருந்து அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன எஸ். பி.சேகர், ஆலய தொடர்புக்கு: 94426 95 877.