"உலகப் பொது மறை' என போற்றப் படுகிறது "தமிழ்த் தெய்வப்புலவர்' திரு வள்ளுவர் சிந்தித்த "திருக்குறள்'. எங்கும் ஒலித்துக் கொண்டிருக் கிற இந்தக் குறளின் குரல்; அறத்துப்பாலில் "கடவுள்வாழ்த்து' என பத்துப்பாக்களில் "இறைச் சிந்தனையை'ப் பேசியிருக்கிறது.
ஆதியில் இருந்த தெய்வம்!
ஆதியில் இருந்து இருக்கிற தெய்வம்!
ஆதியில் இருந்து இருக்கப் போகிற தெய்வம்!
என முக்காலத்திற் கும் பொருந்துகிற; எக் காலத்திற்கும் பொருந்து கிற இறைவனைப் பற்றி வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
அவர் விவரிக்கும் தெய்வம் எது?
.
"அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு'.
உலகப் பொதுமறை திருக்குறளின் முதல் குறளாக வள்ளுவப் பெருந்தகையின் குரல் என்னவாக ஒலிக்கிறது?
"அ' என்றால் அகரம்!
மொழிகளின் எழுத்துக்களுக்கெல்லாம் முதல் எழுத்தாகத் திகழ்வது "அ.' தமிழின் தலைமையெழுத்தும் "அ'தான்.
"எழுத்துக்களுக்கெல்லாம். "அகரம்' முதலாக இருப்பதுபோல்; இந்த உலகத்தின் "அகரமாக' முதலாவதாக இறைவன் இருக்கி றான்'' என்பதே.
"கற்றதனால் ஆன பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்'.
"ஒருவன் கல்வி கற்பதன் நோக்கம் என்ன? என்பதை வரையறுக்கிறார்.
"கற்பதன் நோக்கம் அறிவு பெறுதலே. அந்த அறிவைக்கொண்டு ஆய்ந்து, இந்த உலகம் படைக்கப்பட்ட விதம் எண்ணி; நம் அறிவுக்கு எட்டாத ஒரு பொருள் இருக்கிறது என்பதை உணர்ந்து, அப்பொரு ளைப் போற்றாவிட்டால் நாம் கற்ற கல்வியினால்;
கல்வியினால் பெற்ற அறிவினால் என்ன பயன் இருக்கப்போகிறது?'' என்பது இக்குறளின் குரல்.
உலகில் இறைவனே "முதல்' என்ற வள்ளுவர்; அந்த இறைவன் கோவிலில் இருப்பதாகச் சொல்லவில்லை. பலப் பல உருவங்களில் இருப்ப தாகச் சொல்லவில்லை.
அப்படியானால் பகவான் எங்கிருப்ப தாகச் சொல்கிறார்?
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்'.
"அறிவுக்கு அப்பாற்பட்டு இருக்கும் பொரு ளான இறைவன் நம் மனம் எனும் தாமரையில் வீற்றிருக்கிறார். கற்றறிவைக்கொண்டே இறைவனைக்காண வேண்டும். அதை அறிந்து வணங்குபவர், இந்த உலகில் நிம்மதியாக நீண்டகாலம் வாழ்வார்கள்'' என்கிறார் திருவள்ளுவர்.
ஒருவன் தன் மனதில் வீற்றிருக்கும் இறைவனை எப்படி வணங்கவேண்டும்? என்பதை யும் தெய்வப்புலவர் தெளிவுறச் சொல்கிறார்.
"வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல'.
வேண்டப்பட்டவணை கொஞ்சம் விசேஷ மாக கவனிப்பது; வேண்டப் -படாதவனை கண்டுகொள்ளாமல் விடுவது மனித இயல்பு! ஆனால் "வேண்டியவை- வேண்டாதவை' "விருப்பு- வெறுப்பு' என்கிற பாகுபாடு அந்த இறைவனிடம் இல்லை.
"விருப்பு- வெறுப்பு இல்லாத; அவரவர் மனதிலிருக்கும் இறைவனை, விருப்பு- வெறுப் பற்று அவனடி வணங்கினால் துன்பமின்றி வாழலாம்'' என்பது இந்தத் குறளின் பொருள்.
.
இன்பம் வரும் வேளையில் ஆர்ப்பரித்து இருப்பதும், துன்பம் வரும் வேளையில் துவண்டு போய் கிடப்பதும் குறைகுடக் கூறுகள். அவற் றிற்கு மனதில் ஆட்படாமல் இருக்கவேண்டும்.
"அறியாமையால் உண்டாகிற நல்வினை மற்றும் தீவினை எனும் இருவித வினைகளுக் கும் அப்பாற்பட்டவன் இறைவன். அவனின் தளும்பாத்தனம் கொண்ட பொருளின் புகழுணர்ந்து, பெருமையறிந்து, அவனை வணங்குபவரை இன்பத்தாலும் அசைத்துவிட முடியாது; துன்பத்தாலும் அசைத்து விடமுடியாது'' என்பது வள்ளுவர் வாக்கு.
அதைத்தான் கீழ்கண்ட குறளில் சொல்கிறார்...
"இருள்சேர் இருவினையும் சேர; இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு'.
"பஞ்சேந்திரியம்' எனப்படுவது பஞ்சபூதங்கள் எனப்படும் ஐவகை பூதங்களைக் குறிக்கிறது. பிரபஞ்சத்தில் நீர், நிலம், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களாக, இயங்கு சக்திகளாக இருக்கிறது.
பிரபஞ்ச சக்தியில் இருக்கும் இந்த பஞ்ச பூதங்கள் ஒவ்வொரு உயிர்களிடத்தும் இருப்ப தாக ஒப்பிடப்படுகிறது.
நிலம்: உடலின் தசை, நரம்புகள், எலும்புகள், தோல், ரோமம்.
நீர்: ரத்தம், பித்தம், கொழுப்பு சிறுநீர் உள்ளிட்ட கழிவுகள்.
நெருப்பு: உணவை ஜீரணிக்கும் சக்தியும், ரத்தத்தின் வெப்பமும்!
காற்று: உடல் இயங்குதல், சுருங்குதல், விரிதல் மற்றும் சுவாசம்!
ஆகாயம்: இதயம் (மனம்) மூளை ஆகியவை உடலைத்தாண்டி விரிவடைந்து சிந்திப்பவை!
இந்த ஐம்பூதங் களுக்கும், ஐம்பு லன்களுக்கும் சம்பந்தம் உண்டு!
உடல்
கண்
மூக்கு
செவி
வாய்
இந்த ஐந்து பொறிகளால் உணரப்படும், அறியப்படும் புலன்களே ஐம்புலன்கள்.
தொடு உணர்ச்சிமூலம் உடல் நல்ல- தீய உணர்ச்சிகளைப் பெறுகிறது.
கண் பல்வேறு வகையான காட்சி களைக்கண்டு, காட்சிக்கேற்ற விளைவை புத்தியில், உடலில் உண்டாக்குகிறது.
மூக்கு சுவாசிப்பதுடன் நறுமணம்- துர்மணங்களை நுகருகிறது.
செவி நல்ல கேள்வி ஞானத்தையும், இச்சையூட்டும் பேச்சுக்களையும் கேட் கிறது.
வாய் வாய்மையையும் பேசுகிறது; கயமையையும் பேசுகிறது.
ஆக, இந்த ஐம்புலன்களும் மனிதனி டம் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி, நல்ல வனாகவோ- கெட்டவனாகவே மாற்று கிறது. அவனது நடத்தையில் தாக்கம் ஏற்படுத்துகிறது. அதனால் ஐம்புலன் களின் பொறிகளையும் ஒழுக்க நெறிப்படுத்த வேண்டும்!
"இறைவன் இந்த ஐம்புலன்களையும் அவித்துவிட்டு; அழித்துவிட்டு நிற்சலனமாய் இருக்கிறான்' என திருவள்ளுவர் தீர்க்கமாகச் சொல் கிறார்...
"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்'.
ஐம்புலன் களால் உண்டாகும் ஆசைகள்- பலன் கள் என எதுவு மில்லா இறைவனை; நம் மனத் தில் இருக்கும் கடவுளை உணர வேண்டு மானால் ஐம்பொறிகளால் உண்டாகும் ஆசை களை ஒழுங்கு செய்து, நெறிப்படுத்தி நடக்க வேண்டும். இதனால் மெச்சத்தகுந்த வாழ்க் கையை நாம் பெறமுடியும்'' என்கிறார் பொதுமறை தந்த பெருங்கவி.
"தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது'.
"இப்படிப்பட்ட இறைவன்'; "இதுபோன்ற இறைவன்' என உவமைகளால்- உதாரணங் களால் சுட்டிக்காட்ட முடியாது இறைவனை.
காரணம் தனக்கு நிகரில்லாதவன் இறைவன். ஆசைகளற்ற அந்தக்கடவுள் ஆசைகளை அவசியமின்றி வைத்துக்கொள்ளாதவன்;
அவனை வணங்கினால் நலமுடன் வாழலாம். இல்லையென்றால் அடையமுடியாத ஆசை களாலும், அடைந்துவிட்ட தவறான ஆசை களாலும் கவலை உண்டாகி அது அரிக்கத் துவங்கிவிடும். அதன்பின் மனக்கவலைகளை விரட்டுவது என்பது எளிய செயலல்ல'' என்பது இக்குறளின் எண்ணப்போக்கு.
"அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு
அல்லால்
பிற ஆழி நீந்தல் அரிது'.
"இறைவன் அறத்தின் கடலாக இருக்கிறான்;
பகவான் தர்மத்தின் சமுத்திரமாக இருக் கிறான்; அந்தக் கடவுளை- பக வானை- இறை வனை சரணடைந் தால்தான் தர்மத்தின் அருமை புரியும். இறைவனைத் தஞ்மமடையாதவன் அதர்மக் கடலை; அதாவது அவ் வளவு நீண்டு பரந்து விரிந்த உலகியல் வாழ்வின் துன்பக் கடலை கடக்க இயலாது; உன் மனதிற்குள் வீற்றிருக்கும் பக வானைச் சரணடை!''
என்கிறார் வள்ளுவர்.
.
உங்கள் எதிரில் ஒருவர் வருகிறார்.
அவர் நேர்மையான, நெஞ்சுரம் கொண்ட, பொதுநல நோக்கமுள்ள, தியாக மனப் பான்மையுள்ள உங்களைவிட பலமடங்கு ஆற்றலில் உயர்ந்தவர் என்று வைத்துக் கொள்வோம். அவரைக் கண்டுவிட்டபோது குறைந்தபட்சம் அவருக்கு மரியாதை- வணக்கம் செய்யாமல் போனால், நீங்கள் உங்களாலேயே கேலி செய்யப்படுவீர்கள்.
உங்களுக்குள்ளேயே இருக்கிற இறைவனை வணங்காதவனை, அக்கடவுளின் பாதம் பணியாதவனை வள்ளுவர் என்னை சொல்கிறார் என்று கவனியுங்கள்...
"கோள்இல் பொறியில் குணமிலவே; எண்குணத்தான்
தாளை வணங்காத்தலை'.
"போற்றுதலுக்கு எல்லாவகை குணங் களும்கொண்ட இறைவனை உணர்ந்து, வணங்காத மனிதன் தனக்கு புலன்பொறிகள் இருந்தும் இல்லாதவனாகிறான். செவி இருந்தும் கேட்புத்தன்மை இழந்தவன்; விழி இருந்தும் பார்க்கும் தன்மை இழந்தவன்; இறைவனுக்கு "தாழ்த்தா சிரம்' கொண்ட அம்மனிதன் தலை இருந்தும்- மூளை இருந்தும் சிந்திக்கும் ஆற்றலை இழத்தவன் போலத்தான்!'' என்பது இக்குறளின் பொருளோட்டம்.
.
மனிதன் பிறக்கை யிலேயே அழுது கொண்டு தான் பிறக்கிறான். இறக்கை யில் மற்றவர்கள் அழுகிறார் கள்.
சுய அழுகைக்கும்- பிறர் அழுகைக்கும் இடையே பயணப்படுகிறது அவனது வாழ்க்கை!
இதற்கு மத்தியில் எத்தனை துன்பங்கள்- துயரங்கள் அவனுக்கு.
'ஏண்டா பிறந்தோம்' எனச் சலிப்பவர் களுக்கும் "எனக்கு இனி பிறவி வேண்டாம்' எனத் துடிப்பவர்களுக்கும். அத்துன்பத்திலிருந்து விடுபட வழிசொல்கிறார் வள்ளுவர்.
"பிறவிப் பெருங்கடல் நீந்துவார்; நீந்தார்!
இறைவன் அடிசேரா தார்'.
"பிறவித்துன்பம் என்கிற பெருங்கடலிலிருந்து கரை காணும் சக்தியும், சாத்தியமும் இறைவனை முழுமை யாகச் சரணடைகிறவர் களுக்கே கிட்டும்.
அவனைச் சரணடையாத வர்கள் பிறவித் துன்பப் பெருங்கடலேயே கரை காணமுடியாமல் தத்தளித்துக் கொண்டே இருப்பார்கள்!'' என்கிறது வள்ளுவம்.
ஆக;
"ஒவ்வொரு உயிரின் மனத் தாமரையில் இருக்கும் இறைவனை கற்றறிவால் உணர்ந்து வணங்கவேண்டும்' என்பதே வள்ளவரின் குறள் வலியுறுத்தும் இறைச் சிந்தனை.
கற்ற கல்வியின்
மூலம், அனுபவ அறிவின்
மூலம் ஆதிப்பொருளாகிய பகவன் ஒவ்வொருவரின் மனதினுள்ளும் இருப்பதைக் கண்டு வணங்கச் சொன்ன வள்ளுவர்;
அந்தத் தெய்வத்தால் ஆகாத காரியத்தைக் கூட உன் முயற்சியால்; உடல் வருந்தி உழைத் தால்... அக்காரியத்தை ஈடேற்றலாம் என்றார்..
"தெய்வத்தால் ஆகா தெனிலும்
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்'.
என்பதே வள்ளுவரின் அவ்வாக்கு!
சுயநலம் உடையவன் ஒருகட்டத்தில் தன்னாலேயே வெறுக்கப்படுவான். பிறர்நலம் பேணும் மனிதர், அவனிடம் உதவி பெறாத மனிதரால்கூட பெரிதும் நேசிக்கப்படுவான்.
பிறரால் நேசிக்கப்படும் மனிதன் மற்ற மனிதர்களிடமிருந்து உயர்ந்தவனாகிறான். "கடவுள் மாதிரி வந்து காப்பாத்துனீங்க' என்பதன் வேறு வடிவம்தான் சுயநலமற்ற மனிதன்.
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு'.
"அன்பில்லா மனிதர் எல்லாப் பொருளை யும் தன்உரிமை என்பார். அன்புடை மனிதர் தன் உடல்- பொருள்- ஆவியை பிறருக்கு பயன்டும்படி வாழ்வார்' என்கிறது இக்குறள்!
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின், நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும்சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே.'
இது திருமூலரின் திருமந்திரப் பாடல் களில் ஒன்று.
"கடவுள் மறுப்பு' கொள்கையிலிருந்து சற்றே விலகிய அறிஞர் அண்ணா அவர்கள் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்கிற கொள்கையைக் கைக் கொண்டார்.
வள்ளுவர் சொன்ன "ஆதி கடவுளும்' ஒன்றே!
-திருமூலரின் "ஒருவனே தேவனும்' ஒன்றே;
அன்புதான் கடவுள்;
பிறருக்கு உழைப்பவனே மனித நிலையிலிருந்து உயர்ந்தவன்;
தெய்வத்தால் ஆகாததும் முயற்சியால் ஆகும்;
-இப்படியாக வள்ளுவர் சொன்னதையும்,
"ஒன்றே குலம்- ஒருவனே தேவன்' என திருமூலர் சொன்னதையும் அறிந்து அந்தப் பொருள் கொண்டு "பல்லாண்டு வாழ்க' படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் கே.ஜே. யேசுதாஸ் குரலில் எம்.ஜி.ஆர் பாடுவதாக புலவர் புலமைப்பித்தன் எழுதிய அருமையான பாடல் இதோ.
"அன்பிலார் எல்லாம் தமுக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறக்கு
தெய்வத்தால் ஆகாததெனினும்
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.'
-என இரு குறள்கள் தொகையறாவாகவும்.
"ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்'
என திருமூலர் மந்திரத்தின் வரிகளை பாடலின் பல்லவியில் தொடக்க வரிகளாகவும் அமைத்தவர்
"நல்ல மனசாட்சியே
தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒருபோதும் மறையாது
அவன் சாட்சியாம்'
என முதல் சரணத்தில் எழுதினார்.
தெய்வம் நம் மனங்களில்; உண்டு;
மனசாட்சியில் உண்டு;
அதைக் கண்டுணர்வோம்;
கண்டு தொழுவோம்!